Wednesday, May 22, 2013

காசியில் நடந்த சுயம்வரம்! | ஆதிபர்வம் - பகுதி 102

The Swyamvara held at Kasi! | Adi Parva - Section 102 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 38)

பதிவின் சுருக்கம் : காசியில் நடந்த சுயம்வரம்; விசித்திரவீரியனுக்காக மூன்று பெண்களைக் கவர்ந்து வந்த பீஷ்மர்; அம்பைக்கு அனுமதி கொடுத்த பீஷ்மர்; சால்வனை நோக்கிச் சென்ற அம்பை...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ குரு பரம்பரையில் வந்தவனே {ஜனமேஜயா}, சித்திராங்கதன் கொல்லப்பட்டபிறகு, விசித்திரவீரியன் சிறுவனாக இருந்தாலும் அரியணை ஏறினான். பீஷ்மர் தன்னைச் சத்தியவதியின் கட்டளைக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, அந்த அரசாங்கத்தை நடத்தினார்.(1)



புத்திசாலிகளில் முதன்மையானவனான தனது தம்பிக்குத் {விசித்திரவீரியனுக்குத்} தக்க வயது வந்ததும், பீஷ்மர் அவனுக்குத் திருமணத்தைச் செய்துவைப்பதில் இதயம் கொண்டார்.(2) அந்நேரத்தில், அழகில் அப்சரஸ்களுக்கு இணையானவர்களான காசி மன்னனின் மூன்று மகள்களும், ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு சுயம்வரத்தில் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகின்றனர் என்பதைக் கேள்விப்பட்டார்.(3) தேர்வீரர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிப்பவருமான அந்தப் பீஷ்மர், தனது தாயின் கட்டளையை ஏற்று, வாரணாசிக்குத் தனித்தேரில் சென்றார்.(4) அனைத்துத் திசைகளிலிருந்தும் எண்ணற்ற ஏகாதிபதிகள் அங்கே வந்திருப்பதைக் கண்டார். தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் மூன்று மங்கையரையும் கண்டார்[1].(5) (அங்கே கூடியிருந்த) மன்னர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பீஷ்மர் (தன் தம்பியின் சார்பாக) அந்தக் கன்னிகைகளைத் தேர்ந்தெடுத்தார்.(6)

[1] கும்பகோணம் பதிப்பில் இங்கே இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, "அவ்விடத்தில் சந்தனுபுத்ரரான பீஷ்மர் எல்லாத் தேசங்களினின்றும் வந்து கூடியிருக்கின்ற அரசர்களையும் அந்தப் பெண்களையும் கண்டார். அந்தப் பெண்கள் மீது ஆசையோடு கர்வித்துக் காசி தேசத்தவரும், கோசல தேசத்தவரும், வங்கதேசத்தவரும், புண்ட்ரதேசத்தவரும், கலிங்க தேசத்தவருமாகிய அரசர்கள் கூட்டமாக அந்நகரத்திற்குப் போயினர். எல்லா அரசர்களின் பெயர்களும் சொல்லப்படும்போது சந்தனு புத்திரரும் வயதில் முதிர்ந்தவருமாகிய பீஷ்மர் தனித்திருக்கக்கண்டு மிக்க அழகான அந்தக் கன்னிகைகள் அனைவரும் கிழவரென்ற எண்ணத்தினால் பயந்தவர்களைப் போல் விலகிப் போயினர். பாரதரே அங்கிருந்த அற்பர்களான அரசர்கள், "முதர்ந்தவரும், மிக்க தர்மாத்மாவும் மடிப்பையும் நரையையும் தரித்தவரும், பரதஸ்ரேஷ்டருமாகிய பீஷ்மர் லஜ்ஜையைவிட்டு இங்கு ஏன் வந்திருக்கிறார்? இந்தப்பாரதர் பிரதிஜ்ஞையைப் பொய்யாகச் செய்துவிட்டு ஜனங்களுக்கு என்ன சொல்லுவார்? இவர் பிரம்மச்சாரியென்று பூமியில் வீண்புகழ்பெற்றார்?" என்று பேசிக் கொண்டு சிரித்தனர். ஜனமேஜயராஜரே! அந்த அரசர்களின் சொல்லைக் கேட்டுப் பீஷ்மர் கோபித்தார். ஸமர்த்தரான பீஷ்மர் அப்போது அந்தக் கன்னிகைகளைத் தாமாகவே வரித்தார். ஜனமேஜய ராஜாவே! அந்தப் பெண்களைத் தமது தேரின் மேல் ஏற்றிக் கொண்டு போர் செய்கிறவரிற் சிறந்த பீஷ்மர் மேககர்ச்சனத்திற்கொப்பான குரலுடன் அவ்வரசர்களை நோக்கிச் சொல்லலானார்" என்றிருக்கிறது.

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, போரில் தாக்குபவர்களில் முதன்மையானவரான பீஷ்மர் அவர்களைத் தேரில் ஏற்றிக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அந்த மன்னர்களிடம்,(7) "சாதனையாளன் ஒருவனை அழைத்து, மதிப்புமிக்க பல பரிசுகளுடன் சேர்த்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னிகையை அவனுக்கு அளிக்கலாம் என ஞானிகள் வழிகாட்டியிருக்கின்றனர்.(8) மேலும் சிலர் இரு பசுக்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர், சிலர் பலத்தைப் பயன்படுத்தி கன்னிகைகெளைக் கவர்ந்து செல்கின்றனர்.(9) சிலர் கன்னிகையரின் சம்மதம் பெற்றும், சிலர் அவர்களுக்குப் போதையூட்டி சம்மதிக்கவைத்தும், சிலர் அந்த கன்னிகையரின் பெற்றோரிடம் சென்று, அவர்களின் சம்மதம் பெற்றும் மணக்கின்றனர். சிலர் வேள்வியில் தாங்கள் துணை புரிந்ததற்கான பரிசாகத் தங்கள் மனைவிகளைப் பெறுகின்றனர்.(10)


இத்திருமணங்களில் கல்விமான்கள் எப்போதும் எட்டாவது வகையையே புகழ்கின்றனர்.  இருப்பினும் மன்னர்கள் (ஐந்தாவது வகையான) சுயம்வரத்தையே தங்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு சுயம்வரத்தில் கூடியிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில், எதிரிகளை அழித்துப் பலம் கொண்டு அபகரிக்கப்பட்ட மனைவியே ஒருவனுக்குப் பரிசைப் போன்றவள் என்று பல முனிவர்கள் சொல்கின்றனர். எனவே, ஏகாதிபதிகளே, நான் இந்த மங்கையரை பலத்தால் அபகரித்துச் செல்கிறேன். உங்களால் முடிந்தவரைச் சிறப்பாகப் போராடிப் பாருங்கள். ஒன்று என்னை அழியுங்கள் அல்லது என்னால் அழியுங்கள். (11,12) ஓ ஏகாதிபதிகளே, நான் இங்கே போருக்குத் தயாராக இருக்கிறேன்" என்று சொல்லி அம்மங்கையரை தேரில் ஏற்றி, அங்கே கூடியிருந்து மன்னர்கள் மற்றும் காசி மன்னன் முன்னிலையில் இவ்வாறு சொன்னார் {பீஷ்மர்}.(13)

அந்தக் குருக்களின் இளவரசர் {பீஷ்மர்}, மங்கையரை அபகரித்து, மன்னர்களுக்குப் போர் அழைப்பு விடுத்துத் தனது தேரைச் செலுத்தினார்.(14) இப்படி அறைகூவியழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் தங்கள் தோள்களைத் தட்டிக் கொண்டு, கோபத்தால் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு எழுந்து நின்றனர்.(15)

பெரும் அவசரத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் ஆபரணங்களைத் துறந்து, போர் உடை தரித்தனர். அங்கே ஏற்பட்ட பெருங்கூச்சல் பேரொலியாக இருந்தது.(16) ஓ ஜனமேஜயா! அவர்கள் அப்படித் தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போர் உடை தரிக்கும்போது, அந்த ஆபரணங்களில் இருந்து எழுந்த ஒளி, வானத்தில் மின்னல் கீற்றுகளைப் போல இருந்தது.(17) கோபத்தால் புருவங்கள் சுருங்கி, கண்கள் சிவந்து இருந்த அந்த ஏகாதிபதிகள், பொறுமையைத் துறந்து, எழுந்து நடந்ததால் அவர்களது நடைக்கு ஏற்றாற்போல் அவர்களது ஆபரணங்களும் ஆடின.(18) அவர்கள் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அழகான தேர்களைச் செலுத்திக் கொண்டு விரைவாக வந்தனர். அந்தச் சிறந்த போர்வீரர்கள் அனைத்து விதமான ஆயுதங்களையும் தரித்துத் தங்கள் தேர்களைச் செலுத்திக் குருக்களின் தலைவனை {பீஷ்மரை} நோக்கித் தங்கள் ஆயுதங்களை ஏந்தினர்.(19,20) ஓ பாரதா {ஜனமேஜயா}, ஒரு புறத்தில் கணக்கிலடங்காதவர்களான அந்த அற்புதமான ஏகாதிபதிகளும், மறுபுறத்தில் குருக்களின் வீரர் {பீஷ்மர்} தன்னந்தனியாகவும் அணிவகுத்தனர். அப்படிக் கூடியிருந்த அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் எதிரியை நோக்கிப் பத்தாயிரம் கணைகளைச் செலுத்தினர்.  இருப்பினும், பீஷ்மர் கணக்கிலடங்காதவையான அக்கணைகளைத் தனது கணக்கிலடங்காக் கணைகளால் மிக விரைவாக தடுத்தார்.(21,22)

அதன்பின், அந்த மன்னர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு பெருமேகங்கள் கூடி மலையின் சாரலில் மழையைக் கொட்டுவதைப் போல, அனைத்துத் திசைகளிலிருந்தும் மழையெனத் தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(23) ஆனால், பீஷ்மர் அவர்கள் தொடுத்த அனைத்துக் கணைகளையும் தடுத்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு ஏகாதிபதியையும் மும்மூன்று கணைகளால் தைத்தார்.(24) பதிலுக்கு அந்த ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் ஐந்து கணைகளைத் தொடுத்தனர்.  ஆனால், அவை அனைத்தையும் பீஷமர் தடுத்து, மேலும் இரு கணைகளால் அவர்களைத் தைத்தார்.(25) போர் மிக உக்கிரமானது, அடர்த்தியான கணைகள் மழையெனப் பொழிந்தன. அந்தப் போரைப் பார்ப்பதற்குத் தேவாசுரப் போர் நடப்பது போலத் தெரிந்தது. இந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான வீரர்கள்கூட, இந்தக் காட்சியைக் கண்டு அஞ்சினர்.(26) பீஷ்மர் பலரின் விற்கள், கொடிக் கம்பங்கள், மார்புக் கவசங்கள் ஆகியவற்றையும், எதிரிகளின் தலைகளையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அறுத்தெறிந்தார்.(27) பயங்கரமான ஆற்றலினாலும், இயல்புக்கு மிக்கத் தனது கரநளினத்தாலும் அவர் தன்னைக் காத்துக் கொண்டார். இதைக் கண்ட எதிரி வீரர்களும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.(28) ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அவர், அனைத்து ஏகாதிபதிகளையும் வீழ்த்தி, அந்த மங்கையரை அழைத்துக் கொண்டு பாரதர்களின் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்.(29)

ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சால்வன்[2], சந்தனுவின் மைந்தனான பீஷ்மருக்குப் பின்னாலிருந்து போருக்கு அழைப்பு விடுத்தான்.(30)  யானைக்கூட்டங்களுக்குத் தலைமையான யானை ஒன்று, பெண் யானையைக் கண்டதும், தனது தந்தங்களால் மற்ற யானைகளின் குடலைக் கிழித்தெரிய வருவது போல, அந்த மங்கையரை அடைவதில் விருப்பம் கொண்ட அவன் பீஷ்மரிடம் வேகமாக வந்தான். அப்படி வந்த சால்வன் கோபத்துடன், "நில், நிற்பாயாக" என்றான்.(31,32) எதிரிகளை அழிக்கும் மனிதர்களில் புலியான பீஷ்மர், இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டு, சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்ற கோபத்துடன், வில்லைத் தனது கையில் தாங்கிப் புருவம் சுருங்கி எதிரியின் வரவுக்காகத் தனது தேரில் காத்து நின்றார்.(33,34) அவர் நிற்பதைக் கண்ட அனைத்து ஏகாதிபதிகளும், அங்கே சல்லியனுக்குப் பீஷ்மருக்கும் இடையில் நடக்கப்போகும் பெரும்போரைக் காணும் பார்வையாளர்களாக நின்றனர்.(35)

[2] கங்குலியில் பதிப்பில் இங்கே சல்லியன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இவன் சால்வராஜன் என்று குறிப்பிடப்படுகிறான். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே சல்லியன் என்றே குறிப்பிடப்படுகிறான். பிபேக்திப்ராயின் பதிப்பில் இவன் சால்வ மன்னன் என்று குறிப்பிடப்படுகிறான். கங்குலியிலும், மன்மதநாதத்ததரின் பதிப்பிலும் ஏற்பட்டிருக்கும் பிழையாக இஃது இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் Shalva என்பதற்கு Shalya என்பதற்கு ஒரெழுத்தே வேறுபாடு. இதனால் ஏற்பட்ட குழப்பமாகவே இருக்க வேண்டும். இஃது சால்வனாகவே இருக்க வேண்டும். மத்ர மன்னன் சல்லியனாக இருக்க முடியாது. எனவே நாம் இது முதல் இந்தப் பகுதியில் இம்மன்னனைச் சால்வன் என்றே வழங்குவோம்.

பசுவின் பார்வையைப் பெற்ற காளைகள் போல உறுமிக் கொண்டு இருவரும் தங்கள் வீரத்தை ஒருவர் மேல் ஒருவர் காண்பிக்கத் துவங்கினர்.(36) மனிதர்களில் முதன்மையான சால்வன், இலகுவான இறகுகள் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கணைகளால் சந்தனுவின் மகனான பீஷ்மரை மறைத்தான்.(37) இவ்வாறு பீஷ்மரைச் சால்வன் மறைத்ததைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அவனை வெகுவாகப் பாராட்டினர்.(38) அவனது கரத்தின் நளினத்தைக் கண்ட அந்தக் கூட்டம் பெரிதும் மகிழ்ந்து சல்லியனை பேரொலியெழுப்பிப் பாராட்டியது.(39) எதிரிநாட்டு நகரங்களை அடக்கும் பீஷ்மர் அந்த க்ஷத்திரியர்களின் பேரொலி கேட்டு மிகவும் கோபம் கொண்டு, "நில், நிற்பாயாக" என்று சொல்லித்(40) தனது தேரோட்டியிடம், "கருடன் பாம்பைக் கொல்வது போல, உடனே அவனைக் கொல்லும் விதத்தில் சால்வன் இருக்கும் இடத்திற்கு தேரைச் செலுத்துவாயாக" என்றார்.(41)

பிறகு, அந்தக் குருக்களின் தலைவர் {பீஷ்மர்}, வாருண ஆயுதத்தைத் தனது வில்லின் நாணில் ஏற்றி, சல்லியனின் நான்கு குதிரைகளின் மீது ஏவினார்.(42) ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்தக் குருக்களின் தலைவர் {பீஷ்மர்} எதிரிகளின் கணைகளை முறித்துச் சல்லியனின் தேரோட்டியைக் கொன்றார்.(43) அந்த மங்கையருக்காகப் போரிடுபவரும், மனிதர்களில் முதன்மையானவரும் சந்தனுவின் மைந்தனுமான பீஷ்மர், ஐந்தராயுதத்தை ஏவி சல்லியனின் குதிரைகளைக் கொன்றார்.(44) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனை {சல்லியனை} வீழ்த்தினாலும், உயிருடன் மட்டுமே அவனை அங்கே விட்டுவிட்டு வந்தார். ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, சால்வன் இந்தத் தோல்விக்குப் பிறகு தனது நாட்டுக்குத் திரும்பித் தொடர்ந்து அறம்சார்ந்த நல்லாட்சி செய்தான். சுயம்வரத்திற்கு வந்த அனைத்து மன்னர்களும் தங்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.(45,46) பீஷ்மர் அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் வீழ்த்திவிட்டு, அம்மங்கையரைக் கவர்ந்து கொண்டு, ஏகாதிபதிகளில் சிறந்த சந்தனுவைப் போல குருக்களின் இளவரசன் விசித்திரவீரியன் அறம் சார்ந்து ஆண்டுகொண்டிருக்கும் ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார்.(47,48) ஓ மன்னா! வழியில் பல கானகங்களையும், நதிகளையும், மலைகளையும், மரங்கள் அடர்ந்த சோலைகளையும் கடந்து விரைவாகத் தலைநகர் வந்து சேர்ந்தார் பீஷ்மர்.(49)

போரில் அளவிலா ஆற்றல் கொண்டவரும், பெருங்கடலுக்குச் செல்பவளான கங்கையின் மைந்தனுமான அவர் {பீஷ்மர்}, தன் மேனியில் சிறு கீறலும் இன்றி போரில் எண்ணற்ற எதிரிகளைக் கொன்று, காசி மன்னனின் மகள்களை ஏதோ அவர்கள் தமது சொந்த மருமகள்கள், அல்லது தங்கைகள், அல்லது மகள்கள் என்பது போல மிக மென்மையாகக் கொண்டு வந்தார். பெரும் பலம் வாய்ந்த பீஷ்மர், தமது தம்பிக்கு நன்மை செய்ய விரும்பி, தகுதி வாய்ந்தவனான விசித்திர வீரியனுக்கு தம்மாற்றலால் கொண்டவரப்பட்ட அந்த மங்கையரைக் காணிக்கையாக அளித்தார்.(50-52)

அறத்தின் விதிகளை நன்றாக அறிந்த அந்தச் சந்தனுவின் மைந்தன் {பீஷ்மர்}, மன்னர் குலத்தின் வழக்கத்தின்படி செயற்கரிய செயல் செய்துவிட்டுத் தனது தம்பியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்தார். சத்தியவதியின் ஆலோசனையின்படித் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பீஷ்மரால் செய்யப்பட்ட பிறகு, காசி மன்னனின் மூத்த மகள் {அம்பை}, மெல்லிய புன்னகையுடன், அவரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினாள்,(53-55) "இதயத்தால் நான் மன்னன் சௌபரைக் {சால்வ மன்னனைக்} கணவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவரும், தனது இதயத்தால் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இஃது எனது தந்தையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.(56) அந்தச் சுயம்வரத்தில் நான் அவரையே எனது தலைவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தேன். அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவர் நீர், இஃதையும் அறிந்து, முறையாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக" என்றாள்.(57) பிராமணர்கள் முன்னிலையில் அந்த மங்கை இப்படிச் சொன்னதும், பீஷ்மர் என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்துச் சிந்தித்தார்.(58) அவர் அறத்தின் விதிகளை நன்கு அறிந்திருந்தார். வேதமறிந்த பிராமணர்களிடம் ஆலோசித்துக் காசி மன்னனின் மூத்த மகள் அம்பையை, அவள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதி கொடுத்தார்.(59) பிறகு மற்ற இரு மங்கையரான அம்பிகை மற்றும் அம்பாலிகையைத் தனது இளைய தம்பியான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.(60)

விசித்திரவீரியன் அறம்சார்ந்தவனாகவும், எதையும் அதிக அளவு உண்ணாதவனாக இருந்தாலும், தான் கொண்ட இளமையாலும், அழகாலும் பெருமிதம் கொண்டு, தனது திருமணத்திற்குப் பிறகு காமத்திற்கு அடிமையானான்.(61) அம்பிகையும், அம்பாலிகையும் நல்ல உயரமாகவும், புடம்போட்ட தங்கத்தின் நிறத்துடனும் இருந்தனர். அவர்களது சிரம் சுருள் முடியால் மறைக்கப்பட்டிருந்தது, அவர்களது விரல் நகங்கள் நீண்டு சிவப்பாக இருந்தன. அவர்களது இடுப்புகள் சதைப்பற்றுடன் உருளையாக இருந்தன. அவர்களது மார்புகள் பருத்து இருந்தன.(62) அனைத்து அதிர்ஷ்டக் குறிகளும் கொண்ட அந்த இனிமையான இளம் மங்கையர், தாங்கள் சரியான துணைக்கே மணம் செய்து கொடுக்கப்பட்டதாக நினைத்து அகம் மகிழ்ந்து விசித்திரவீரியனிடம் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.(63) தெய்வீக ஆற்றலையும், அசுவினி இரட்டையர்களின் அழகையும் பெற்றிருந்த விசித்திரவீரியனும் கூட, எந்த அழகான பெண்ணின் இதயத்தையும் களவாடவல்லவனாகவே இருந்தான்.(64) அந்த இளவரசன் ஏழு வருடங்கள் தடையில்லாமல் தன் மனைவியரின் நெருக்கத்தில் சுகமாக வாழ்ந்தான். ஆனால், இளமையின் தொடக்கத்திலேயே அவன் காச நோயால் தாக்கப்பட்டான்.(65) நண்பர்களும் உறவினர்களும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து இதற்கான தீர்வைக் கண்டறிய முயன்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் குருக்களின் இளவரசன் மறையும் சூரியனைப் போல இறந்து போனான்.(66) அறம் சார்ந்த பீஷ்மர் கவலையிலும் துயரத்திலும் மூழ்கிப் போனார். சத்தியவதியிடம் ஆலோசித்து குரு பரம்பரையினர் சூழ கல்விமான்களான பண்டிதர்களை வைத்துத் தனது தம்பியின் ஈமக்கடன்களைச் செய்தார்" {என்றார் வைசம்பாயனர்}.(67,68)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்