Saturday, May 11, 2013

அறம் வளர்க்கும் குல வரலாறு! - ஆதிபர்வம் - பகுதி 95

The History that increases virtue! | Adi Parva - Section 95 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 31)

பதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு நீட்சி; நாட்டை இழந்து மீண்டும் அடைந்த சம்வர்ணனின் வரலாறு; பாரதம் அறிவதால் உண்டாகும் பலன்...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே! நான் இதுவரை எனது மூதாதையர்களின் பெரும் வரலாறுகளைக் கேட்டறிந்தேன். இந்தக் குலத்தில் பிறந்த பெரும் ஏகாதிபதிகளைப் பற்றியும் அறிந்தேன்.(1) இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை. அந்தப் பெரும் வரலாறுகள் சுருக்கமாகவே உரைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, ஓ பிராமணரே! அந்த வரலாறுகளைப் படைப்புத் தலைவனான மனுவில் தொடங்கி விரிவாகச் சொல்வீராக. இந்த வரலாறுகளை யார் தான் புனிதமாகக் கருதமாட்டார்கள்?(2,3) அவர்கள் கடைப்பிடித்த அறங்கள், சாதனைகள், உயர்ந்த பண்புகள் ஆகியவற்றால் அந்த ஏகாதிபதிகளின் புகழ் மூவுலகங்களுக்கும் பரவும்படி உயர்ந்தது.(4) அவர்களின் ஈகை, ஆற்றல், உடல் பலம், மனோ பலம், சக்தி, விடாமுயற்சி ஆகியவற்றைத் தேன் போன்ற இனிமையான உங்கள் சொற்களால் கேட்டேன். இருப்பினும் நான் மனநிறைவு கொள்ளவில்லை" என்றான்.(5)



வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}! உனது சொந்தக் குலத்தின் நற்பேறுள்ள வரலாறைத் துவைபாயனரிடம் {வியாசரிடம்} முன்பு நான் கேட்டவாரே உரைக்கிறேன் கேட்பாயாக.(6) தக்ஷன் அதிதியைப் பெற்றான். அதிதி விவஸ்வானைப் பெற்றாள். விவஸ்வான் மனுவைப் பெற்றான். மனு ஹா {ஐலன்} என்பவனைப் பெற்றான். ஹா {ஐலன்} புரூரவஸைப் பெற்றான். புரூரவஸ் ஆயுஸைப் பெற்றான், ஆயுஸ் நகுஷனைப் பெற்றான். நகுஷன் யயாதியைப் பெற்றான். யயாதிக்கு உசானஸின் மகள் தேவயானி மற்றும் விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை என்று இரு மனைவியர் இருந்தனர். இங்கே இது குறித்து (யயாதியின் பரம்பரை குறித்து) ஒரு சுலோகம் சொல்லப்படுகிறது.(7,8)

'தேவயானி யது மற்றும் துர்வசு என்ற இரு மகன்களைப் பெற்றாள். விருஷபர்வனின் மகளான சர்மிஷ்டை திருஹ்யு, அனு மற்றும் பூரு என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்களானார்கள். பூருவின் வழித்தோன்றல்கள் பௌரவர்களானார்கள்.(9) பூருவுக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்தாள். அந்த மனைவியின் மூலம் அவன் மூன்று குதிரை வேள்விகளையும், விஸ்வஜித் என்ற வேள்வியையும் செய்தவனான ஜனமேஜயன் என்ற மகனைப் பெற்றான். பிறகு அவன் {பூரு} காட்டுக்குள் நுழைந்தான்.(10) ஜனமேஜயன், மாதவனின் மகள் ஆனந்தையை மணந்து கொண்டான். அவளிடம் பிரசின்வத் {பிரசினதன்} என்ற மகனைப் பெற்றான். கிழக்கு நாடுகளில் சூரியன் உதிக்கும் தேசம் வரை சென்று அவற்றை வென்று வந்ததால் அவன் அந்தப் பெயரைப் பெற்றான்.(11)

பிரசின்வத், யாதவர்களின் மகள் அஸ்மகியை மணந்து கொண்டு, அவளிடம் சன்யாதி என்ற மகனைப் பெற்றான்.(12) சன்யாதி, திருஷத்வதனின் மகள் வாராங்கியை மணந்து அஹயந்தி என்ற மகனைப் பெற்றான்.(13)  அஹயந்தி, கிருதவீரியனின் மகள் பானுமதியை மணந்து, அவளிடம் சர்வபௌமன் என்ற மகனைப் பெற்றான். (14) சர்வபௌமன், கேகய நாட்டு இளவரசனின் மகள் சுனந்தையை அபகரித்து வந்து மணந்து கொண்டு, அவளிடம் ஜெயத்சேனன் என்ற மகனைப் பெற்றான்.(15)

ஜெயத்சேனன் விதரப்ப நாட்டு மன்னனின் மகள் சுஸ்ரவையை மணந்து அவளிடம் அவசினன் என்ற மகனைப் பெற்றான்.(16) அவசினன், மீண்டும் ஒரு விதர்ப்ப நாட்டு இளவரசியான மர்யாதையை மணந்து, அவளிடம் அரிஹன் என்ற மகனைப் பெற்றான்.(17) அரிஹன் அங்கி என்பவளை மணந்து மஹாபௌமன் என்ற மகனைப் பெற்றான்.(18) மஹாபௌமன் பிரசேனஜித்தின் மகள் சுயஜனாவை {சுயஜையை} மணந்து அவளிடம் அயுதநயி என்ற மகனைப் பெற்றான். அயுத என்றால் பத்தாயிரம் என்று பொருள். அவன் நடத்திய ஒரு வேள்விக்குப் பத்தாயிரம் ஆண் உயிரினங்களின் கொழுப்பு தேவைப்பட்டதால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது.(19) அயுதநயி பிருதுஸ்ரவஸின் மகள் காமாவை மணந்து, அவளிடம் அக்ரோதனன் என்ற மகனைப் பெற்றான்.(20) அக்ரோதனன் கலிங்க மன்னனின் மகள் கரம்பையை மணந்து, தேவதிதி என்ற மகனைப் பெற்றான்.(21)

தேவதிதி, விதேஹ நாட்டு இளவரசனின் மகள் மர்யாதையை மணந்து அவளிடம் அரிஹன் என்ற மகனைப் பெற்றான்.(22) அரிஹன் அங்கதேசத்து இளவரசனின் மகள் சுதேவாவை மணந்து, அவளிடம் ரிக்ஷன் என்ற மகனைப் பெற்றான்.(23) ரிக்ஷன், {பாம்பு மன்னன்} தக்ஷகனின் மகள் ஜ்வாலாவை மணந்து, அவளிடம் மதினாரன் என்ற மகனைப் பெற்றான்.(24) அந்த மதினாரன் சரஸ்வதி நதிக்கரையில் பனிரெண்டு வருட வேள்வியை வெற்றிகரமாகச் செய்தான். அந்த வேள்வியின் முடிவில், சரஸ்வதியே அந்த மன்னன் முன்பு வந்து, அவனைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தாள். மதினாரன் அவளிடம் தன்சு என்ற மகனைப் பெற்றான்.(25)

இங்கே தன்சுவின் வழித்தோன்றல்கள் பற்றி ஒரு சுலோகம் வருகிறது. 'தன்சு, மதினாரன் மூலம் சரஸ்வதியிடம் பிறந்தவன் ஆவான்.  தன்சு, காளிங்கி என்ற இளவரசியை மனைவியாக அடைந்து, அவளிடம் இலினன் {இலிலன்} என்ற மகனைப் பெற்றான்.(26) இலிலன் தனது மனைவியான ரத்னதரியிடம் ஐந்து மகன்களைப் பெற்றான். அவர்களில் துஷ்யந்தன் மூத்தவனாக இருந்தான்.(27) துஷ்யந்தன், விஸ்வாமித்திரரின் மகள் சகுந்தலையை மனைவியாக அடைந்தான். அவளிடம் பரதன் என்ற மகனைப் பெற்றான்.'(28) இங்கே (துஷ்யந்தனின்) வழித்தோன்றல்களைப் பற்றி இரு சுலோகங்கள் வருகின்றன. "ஒரு தாயென்பவள், சதையைத் தாங்கும் உறையே, அங்கேயே தந்தையென்பவன் மகனைப் பெறுகிறான். நிச்சயமாகத் தந்தையான அவனே மகனாகப் பிறக்கிறான். எனவே, துஷ்யந்தா, உனது மகனை ஆதரிப்பாயாக சகுந்தலையை அவமதிக்காதே.(29) ஓ மனிதர்களில் தேவனைப் போன்றவனே, தந்தை என்பவன் தானே மகனாகப் பிறந்து, நரகத்திலிருந்து தன்னையே காத்துக் கொள்கிறான். நீயே இந்தக் குழந்தைக்குக் காரணமானவன் என்று சகுந்தலை உண்மையையே சொல்லியிருக்கிறாள்" என்று தேவதூதன் சொன்னான்.(30)

"இதற்காகவே (தேவ தூதனின் மேற்கண்ட பேச்சைக் கேட்டே, மன்னன் தனது குழந்தையை ஆதரித்தான்) சகுந்தலையின் மகன் (ஆதரிக்கப்பட்டவன், தாங்கப்பட்டவன் என்ற பொருளில்) பரதன் என்று அழைக்கப்பட்டான். பரதன் காசி நாட்டு மன்னன் சர்வசேனனின் மகள் சுனந்தையை மணந்து அவளிடம் பூமன்யு (இவன் வேள்வியில் பிறந்தவன், {பரதனுக்கு ஏற்கனவே ஒன்பது மகன்கள் இருந்து, அவர்களை அவர்களின் தாயார்களே கொன்றுவிட்டனர்}) என்ற மகனைப் பெற்றான்.(31) பூமன்யு தசார்ஹனின் மகள் விஜயாவை மணந்து அவளிடம் சுஹோத்ரனைப் பெற்றான்.(32) சுஹோத்ரன் இக்ஷவாகுவின் மகள் சுவர்ணாவை மணந்து அவளிடம் ஹஸ்தி என்ற மகனைப் பெற்றான். ஹஸ்தி என்ற அந்த மன்னனே ஹஸ்தினாபுரம் என்ற நகரத்தை  தன் பெயரால் நிறுவினான்.(33)

ஹஸ்தி திரிகர்த்த நாட்டின் இளவரசி யசோதரையை மணந்து அவளிடம் விகுந்தனன் என்ற மகனைப் பெற்றான். (34) விகுந்தனன், தசார்ஹ நாட்டின் இளவரசியான சுதேவாவை மணந்து, அஜமீடன் என்ற மகனைப் பெற்றான்.(35)

அஜமீடன், ராய்கேயி, காந்தாரி, விசாலை மற்றும் ரிக்ஷை என்ற நான்கு மனைவியரைக் கொண்டான். அவர்களிடம் இரண்டாயிரத்து நானூறு மகன்களைப் பெற்றான். அவர்களில் சம்வர்ணனே குலத்தைத் தழைக்கச் செய்தான்.(36) சம்வர்ணன், விவஸ்வானின் மகள் தபதியை மனைவியாக அடைந்து, அவளிடம் குரு என்ற மகனைப் பெற்றான்.(37) குரு, தசார்ஹ நாட்டு இளவரசி சுபாங்கியை மணந்து விதுரதன் என்ற மகனைப் பெற்றான்.(38)  விதுரதன், மாதவர்களின் மகளான சுப்ரியையை மனைவியாக அடைந்து அவளிடம் அனஸ்வான் என்ற மகனைப் பெற்றான்.(39) அனஸ்வான் மாதவர்களின் மகளான அமிர்தாவை மணந்து, அவளிடம் பரீக்ஷித் என்ற மகனைப் பெற்றான்.(40) பரீக்ஷித், பாகுதாசின் மகள் சுவாசையை மணந்து, அவளிடம் பீமசேனன் என்ற மகனைப் பெற்றான்.(41) பீமசேனன், கேகய நாட்டு இளவரசி குமாரியை மணந்து, அவளிடம் பிருதிஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றான்.(42)

பிருதிஸ்ரவஸ், பிரதீபனைப் பெற்றான். பிரதீபன், சிபியின் மகள் சுனந்தையை மணந்து, அவளிடம், தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் என்ற மூன்று மகன்களைப் பெற்றான்.(43) தேவாபி இளவயதிலேயே கானகமேகி துறவியானான். எனவே சந்தனு மன்னனானான்.(44) இங்கு சந்தனுவைக் குறித்து ஒரு சுலோகம் வருகிறது. ’இந்த ஏகாதிபதியால் தொடப்பட்ட முதியவர்கள், விவரிக்கமுடியாத பெரும் இன்பத்தை அடைந்தது மட்டுமின்றி, தங்கள் இளமையையும் திரும்பப் பெற்றனர். எனவே இந்த ஏகாதிபதி சந்தனு என்று அழைக்கப்பட்டான்’.(45) சந்தனு கங்கையை மணந்து கொண்டான், அவள் தேவவிரதனைப் பெற்றுக் கொடுத்தாள்.  தேவவிரதன் பின்பு பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார்.(46) பீஷ்மர், தனது தந்தைக்கு நல்லது செய்ய நினைத்து, அவனுக்குக் காந்தகாளி என்று அழைக்கப்பட்ட சத்தியவதியைத் திருமணம் செய்து வைத்தார்.(47) அவள், முன்பொரு காலத்தில், தனது மங்கைப் பருவத்தில், பராசரரால் ஒரு மகனைப் பெற்றாள். அந்த மகன் துவைபாயனர் என்று அழைக்கப்பட்டார். சந்தனு சத்தியவதியிடம் சித்ராங்கதன், விசித்திரவீரியன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சித்ராங்கதன் இளவயதிலேயே கந்தர்வர்களால் கொல்லப்பட்டான். எனவே விசித்திரவீரியன் மன்னனானான்.(48,49) அவன், காசி நாட்டு மன்னனின் மகள்களான அம்பிகா, அம்பாலிகா என்ற இரு மங்கையரை மணந்தான்.(50) இருப்பினும் விசித்திரவீரியன், மகன் யாரும் இல்லாமலேயே இறந்து போனான். துஷ்யந்தனின் பரம்பரைத் தொடர்ச்சி இத்துடன் நிறைவுபெறப் போகிறதே என்று சத்தியவதி நினைக்கத் துவங்கினாள்.(51)

பிறகுதான் அவள் முனிவர் துவைபாயனரை நினைவுகூர்ந்தாள். அவர், அவள் முன்னிலையில் வந்து, "உன் கட்டளைகள் என்ன?" என்று கேட்டார்.(52) அவள், "உனது தம்பி விசித்ரவீரியன் பிள்ளையில்லாமலேயே சொர்க்கம் அடைந்தான். நீ அவனுக்காக அறம்சார்ந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பாயாக" என்றாள்.(53) துவைபாயனர் அஃதை ஏற்று, திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.(54) துவைபாயனரிடம் காந்தாரி பெற்ற வரத்தால் திருதராஷ்டிரன் அவள் மூலம் நூறு மகன்களைப் பெற்றான்.(55) திருதராஷ்டிரனின் அந்த நூறு மகன்களில் நால்வர் புகழடைந்தனர். அவர்கள் துரியோதனன், துச்சாசனன், விகர்ணன் மற்றும் சித்திரசேனன் ஆவர்.(56)

பாண்டு, ரத்தினங்களைப் போன்றவர்களான பிருதை என்று அழைக்கப்பட்ட குந்தியையும், மாத்ரியையும் மனைவியராக அடைந்தான்.(57) ஒரு நாள் பாண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கையில், தனது துணையை அணைத்துக் கொண்டிருந்த மானைக் கண்டான். அஃது உண்மையில் மானுருவில் இருந்த ஒரு முனிவராகும். அவன், ஆசை தணியாமல் இருந்த மானை அந்தச் சூழ்நிலையில் தனது கணையால் கொன்றான்.(58) மன்னனின் கணையால் தாக்குண்ட அந்த மான், உடனே தனது உருவைக் களைந்து முனிவர் உருக் கொண்டு, பாண்டுவிடம், "ஓ பாண்டுவே, அறவோனாகவும், ஒருவனுடைய ஆசை நிறைவேறுவதால் கிட்டும் இன்பத்தை அறிந்தவனாகவும் இருக்கிறாய். ஆசை நிறைவேறாத நிலையில் நீ என்னைக் கொன்றுவிட்டாய். எனவே, நீயும் இதே நிலையில் இருக்கும்போது, நிறைவு கொள்ளும் முன்பே இறப்பாயாக" என்று சபித்தார்.  இந்தச் சாபத்தைக் கேட்ட பாண்டு முகம் வாடினான், அதுமுதல் அவன் தனது மனைவியரிடம் நெருங்கவில்லை.(59) அவன் அவர்களிடம், "எனது குற்றத்தால், நான் சபிக்கப்பட்டிருக்கிறேன். குழந்தையில்லாதவர்களுக்கு வேறு உலகங்கள் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லிக் குந்தியைத் தனக்காக வாரிசைப் பெறுமாறு கேட்டுக் கொண்டான். குந்தி, "அப்படியே ஆகட்டும்" என்றாள்.  எனவே அவள் வாரிசுகளைப் பெற்றாள். அவள் தர்மதேவன் மூலமாக, யுதிஷ்டிரனையும், மருதன் மூலமாகப் பீமனையும், சக்ரனின் {இந்திரனின்} மூலமாக அர்ஜுனனையும் பெற்றாள்.(60)

பாண்டு அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு, "உனது சக்காளத்தியும் குழந்தையில்லாமல் இருக்கிறாளே. எனவே, அவளையும் பிள்ளைகள் பெற வைப்பாயாக" என்றான்.(61) குந்தி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, அவளுக்கும் வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாள். மாத்ரி, அஸ்வினி இரட்டையர்கள் மூலம், நகுலன் மற்றும் சகாதேவனைப் பெற்றாள்.(62) ஒரு நாள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மாத்ரியைக் கண்டு, பாண்டு ஆசையால் தூண்டப்பட்டான். அவன் அவளைத் தீண்டியதும் இறந்து போனான்.(63) குந்தியிடம் மாத்ரி, "எனது இந்த இரட்டையர்கள், உன்னால் பாசத்துடன் வளர்த்து வரப்படட்டும்" என்று சொல்லித் தனது தலைவனுடன் தகன நெருப்பில் ஏறினாள்.(64)

சில காலத்திற்குப் பிறகு அந்தப் பாண்டவர்கள் ஐவரும் கானகத்தின் துறவிகளால் ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். பீஷ்மருக்கும், விதுரருக்கும் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.(65) அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு, அந்தத் துறவிகள், அனைவரும் கண்டுகொண்டிருக்கும் போதே மறைந்தனர்.(66) அத்துறவிகளின் பேச்சின் முடிவில், அந்த இடத்தில் பூமழை பெய்தது. தெய்வீக பேரிகைகள் வானத்தில் முழங்கின.(66) அதன் பிறகு பாண்டவர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.  அவர்கள் தங்கள் தந்தையின் இறப்பைப் பற்றிச் சொன்னார்கள். அதன்பிறகு பாண்டுவின் இறுதிச்சடங்கு முறையாகச் செய்யப்பட்டது. பாண்டவர்கள் அங்கேயே வளர்ந்து வந்தனர். துரியோதனன் அவர்களைக் கண்டு மிகவும் பொறாமை கொண்டான்.(67)

பாவம் நிறைந்த அந்த துரியோதனன் அவர்களை விரட்ட ஒரு ராட்சசனைப் போல நடந்து கொண்டான். துரியோதனன் எவ்வளவுக்கெவ்வளவு எரிச்சலடைகிறானோ அவ்வளவுக்கவ்வளவு, அவனது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.(68) திருதராஷ்டிரன் அவர்களை ஏமாற்றி வாரணாவதம் அனுப்பினான். அவர்களும் விருப்பத்துடன் அங்குச் சென்றனர்.(69) அங்கே அவர்களை எரித்துக் கொல்வதற்கான சதி வேலை செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஞானியான விதுரனின் அறிவுறுத்தலை ஏற்று, அதிலிருந்தும் அவர்கள் தப்பினர்.(70) பிறகு பாண்டவர்கள் ஹிடிம்பனைக் {இடும்பனைக்} கொன்று, ஏகச்சக்கரம் என்ற நகருக்குச் சென்றனர்.(71) அங்கே பகன் என்ற அசுரனைக் கொன்றுவிட்டு பிறகு பாஞ்சால நகருக்குச் சென்றனர்.(72)

அங்கே திரௌபதியைத் தங்கள் மனைவியாக அடைந்து ஹஸ்தினாபுரம் திரும்பினர்.(73) அங்கேயே அவர்கள் அமைதியாக வசித்துக் குழந்தைகளைப் பெற்றனர். யுதிஷ்டிரன் பிரதிவிந்தியனைப் பெற்றான், பீமன் சூதசோமனைப் பெற்றான், அர்ஜுனன் சுரூதகீர்த்தியைப் பெற்றான், நகுலன் சதானிகனைப் பெற்றான், சகாதேவன் சுரூதகர்மனைப் பெற்றான்.(74) இடையில், சைப்பிய பழங்குடியைச் சேர்ந்த கோவசனனின் மகள் தேவிகாவை யுதிஷ்டிரன் ஒரு சுயம்வரத்தில் மணந்தான். அவளிடம் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு யௌதேயன் என்று பெயரிட்டான்.(75) பீமனும் காசி நாட்டு மன்னனின் மகள் வலந்தரையை மனைவியாகக் கொண்டு, சார்வாகன் என்ற மகனைப் பெற்றான்.(76) அர்ஜுனன் துவாரகைக்குச் சென்று இனிமையான பேச்சைக் கொண்ட வாசுதேவனின் தங்கை சுபத்திரையைத் தனது பலத்தால் அபகரித்து ஹஸ்தினாபுரம் திரும்பினான். அவன் அவளிடம் அபிமன்யு என்ற மகனைப் பெற்றான். அந்த மகன் பெரும் தகுதிகளைப் பெற்று, வாசுதேவனின் அன்புக்குப் பாத்திரனாக இருந்தான்.(77) நகுலன் சேதி நாட்டு இளவரசி கரேணுமதியை மனைவியாக அடைந்து, அவளிடம் நிராமித்ரன் என்ற மகனைப் பெற்றான்.(78) சகாதேவன், மதுரா நாட்டு மன்னன் தியுதிமத்தின் மகளான விஜயாவை ஒரு சுயம்வரத்தில் மணந்து, அவளிடம் சுஹோத்ரன் என்ற மகனைப் பெற்றான்.(79)

பீமசேனன் சில காலங்களுக்கு முன்பே ஹிடிம்பையிடம் {இடும்பியிடம்} கடோத்கசன் என்ற மகனைப் பெற்றான்.(80) இவர்களே பாண்டவர்களின் பதினோரு மகன்களாவர். அவர்களில், அபிமன்யுவே குலத்தைத் தழைக்கச் செய்பவனானான்.(81) அவன் விராட நாட்டு மன்னனின் மகளான உத்தரையை மணந்தான். அவள் இறந்த குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். குந்தியிடம் அக்குழந்தையை மடியில் எடுத்துக் கொள்ளச் சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, "இந்த ஆறுமாத குழந்தையை நான் மீட்டெடுக்கிறேன்" என்றான்.(82) குறித்த காலத்திற்கு முன்பே பிறந்திருந்தும், அஸ்வத்தாமனின் ஆயுதத்தால் எரிக்கப்பட்டிருந்தும், தனது பலம், சக்தி அனைத்தையும் அஃது இழந்திருந்தும், வாசுதேவனால் அந்தக் குழந்தை மறுபடியும் சக்தியும், பலமும் பெற்று மீண்டெழுந்தது. அப்படி அவனை மீட்டெடுத்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, "இந்தக் குழந்தை அருகிப் போன ஒரு குலத்தில் பிறந்ததால், அவன் இன்றிலிருந்து பரீக்ஷித் என்று அழைக்கப்படட்டும்" என்றான்.(83) ஓ மன்னா! பரீக்ஷித் உனது தாயான மாத்ரவதியை மணந்து, உன்னைப் பெற்றான்.(84) ஓ ஜனமேஜயா! நீயும் உனது மனைவி வபுஷ்டமையிடம் சதானீகன் மற்றும் சங்குகர்ணன் என்ற இரு மகன்களைப் பெற்றிருக்கிறாய். சதானிகனும், விதேஹ நாட்டு இளவரசியை மனைவியாக அடைந்து அசுவமேததத்தன் என்ற மகனைப் பெற்றிருக்கிறான்.(85)

ஓ மன்னா! பூருவின் வழித்தோன்றல்கள் மற்றும் பாண்டவர்களின் வரலாறுகளை இப்போது உரைத்துவிட்டேன். சிறந்ததும், அறம் வளர்ப்பதும், புனிதமானதுமான இந்த வரலாற்றை, நோன்பு நோற்கும் பிராமணர்களும், தங்கள் வகைக்கான நடைமுறைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களும், தங்கள் குடிமக்களைப் பாதுகாக்க ஆயத்தமாக இருக்கும் க்ஷத்திரியர்களும், கவனமாக இருக்கும் வைசியர்களும், மரியாதையுடன் கூடியவர்களும், மூன்று பிற வகையினரிடமும் காத்திருப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டவர்களுமான சூத்திரர்களும் எப்போதும் கேட்க வேண்டும்.(86)

வேதங்களை அறிந்த பிராமணர்களும், பிற மனிதர்களும், இந்தப் புனிதமான வரலாற்றைக் கவனத்துடனும், மரியாதையுடனும் உரைத்தாலோ, உரைக்கப்படும்போது கேட்டாலோ, சொர்க்கங்களை வென்று, அருள் உலகங்களை அடைவார்கள். அவர்கள் தேவர்களாலும், பிராமணர்களாலும், பிற மனிதர்களாலும் எப்போதும் மதிக்கப்பட்டுப் புகழப்படுவார்கள்.(87)

பாரதம் என்ற இந்தப் புனித வரலாறானது, புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான வியாசரால் தொகுக்கப்பட்டதாகும். வேதம் அறிந்த பிராமணர்களும், பிற மனிதர்களும் கேடு நினைக்காமலும், மரியாதையுடனும் உரைக்கப்படுவதைக் கேட்டால், பெரும் அறத் தகுதிகளை ஈட்டி, சொர்க்கங்களை வெற்றி கொள்வர். அவர்கள் பாவிகளாக இருந்தாலும், எவராலும் அவர்கள் அவமதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள்.(88)

இங்கே ஒரு சுலோகம் சொல்லப்படுகிறது. ’இது (பாரதம்) வேதத்திற்கு நிகரானதாகும்; இது புனிதமானதும், அற்புதமானதும் ஆகும். இது செல்வம், புகழ், ஆயுள் ஆகியவற்றைக் கொடுக்கும். எனவே இது மனிதர்களால் மிகுந்த கவனத்துடன் கேட்கப்பட வேண்டியதாகும்’" {என்றார் வைசம்பாயனர்}.(89)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்