Friday, June 14, 2013

யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன் பிறப்பு! - ஆதிபர்வம் பகுதி 123

The Births of Yudhishthira, Bhima and Arjuna! | Adi Parva - Section 123 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 59)

பதிவின் சுருக்கம் : குந்தி தர்மதேவனின் மூலமாக யுதிஷ்டிரனையும், வாயு தேவனின் மூலமாக பீமனையும், இந்திரனின் மூலமாக அர்ஜுனனையும் ஈன்றெடுத்தல்; ஒவ்வொருவர் பிறக்கும் போதும் சொன்ன அசரீரியின் வாக்குகள்; நான்காவது பிள்ளை பெற்றுக் கொள்ளுமாறு குந்தியிடம் வேண்டிய பாண்டு; அதை மறுத்த குந்தி...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா! காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, "ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்?" என்று கேட்டான். குந்தி பதிலுக்குப் புன்னகைத்து, "நீர் எனக்குப் பிள்ளைப்பேறு தர வேண்டும்" என்றாள்.(4) அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.(5)



பிற்காலத்தில் பெரும் புகழை அடையப்போகும் அந்த அற்புதமான குழந்தையை, அபிஜித் என்று அழைக்கப்படும் எட்டாவது முகூர்த்தத்தில், நடுப்பகல் வேளையில், ஏழாவது {ஐப்பசி} மாதத்தின் மிகுந்த அதிர்ஷ்டமான நாளான, ஐந்தாவது வளர்பிறையில் {பஞ்சமி திதியில்}, ஜேஷ்ட (கேட்டை) நட்சத்திரம் சந்திர லக்னத்தில் கலந்திருந்தபோது {விருச்சிக ராசி} பெற்றெடுத்தாள்[1].

[1] கும்பகோணம் பதிப்பில், "குந்தி, ஸூர்யன் துலாராசிலிருக்கும் போது, நல்ல லக்ஷணங்களோடு கூடிய பூர்ண திதியாகிய பஞ்சமியில், இந்தினைத் தேவதையாகவுடைய கேட்டை நக்ஷத்திரம், சந்திரனோடு சேர்ந்திருக்கையில், அபிஜிட் என்று சொல்லப்பட்ட எட்டாவது முகூர்த்தத்தில் நிறைந்த புகழுள்ள சிறந்த பித்திரனைப் பெற்றாள்" என்றிருக்கிறது.

அக்குழந்தை பிறந்தவுடன், ஓர் அசரீரி,(6,7) "இக்குழந்தை மனிதர்களில் சிறந்தவனாகவும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனுமாகவும் இருப்பான். பெரும் ஆற்றலும், பேச்சில் உண்மையும் கொண்டு, நிச்சயமாக இவன் இந்தப் பூமியை ஆள்வான்.(8) பாண்டுவின் இந்த முதல் குழந்தை யுதிஷ்டிரன்[2] என்ற பெயரால் அறியப்படுவான். இவன், வீரமும் நேர்மையும் கொண்டு, மூவுலகத்தாலும் அறியப்பட்ட, புகழ் நிறைந்த மன்னனாக இருப்பான்" என்றது.

[2] யுதிஷ்டிரன் என்றால் போரில் ஓடாமல் நிற்பவன் என்று பொருளாம்.

அறம்சார்ந்த மகனை {யுதிஷ்டிரனை} அடைந்த பாண்டு, மறுபடியும் தனது மனைவியிடம்,(9,10) "க்ஷத்திரியர்கள் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையெனின் அவன் க்ஷத்திரியன் இல்லை என்பது ஞானமுள்ளோர் தீர்மானம். எனவே, ஒரு பெரும் பலம் நிறைந்த குழந்தையைக் கேட்பாயாக" என்றான். இப்படித் தனது தலைவனால் {பாண்டுவால்} பணிக்கப்பட்ட குந்தி வாயு தேவனை அழைத்தாள்.(11) இப்படி அழைக்கப்பட்ட அந்தப் பெரும் வலிமை கொண்ட காற்றுத் தேவன் {வாயு}, மானை வாகனமாகக் கொண்டு அவளிடம் வந்து, "ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்? உனது இதயத்தில் இருப்பதை என்னிடம் சொல்வாயாக" என்று கேட்டான்.(12) அவள் அடக்கத்துடன் புன்னகைத்து, "ஓ தேவர்களில் சிறந்தவரே, எனக்குப் பெரிய உடலுறுப்புகளும் பெரும் பலமும் கொண்டு, அனைவரின் செருக்கையும் சிறுமைப்படுத்தக்கூடிய ஒரு பிள்ளை வேண்டும்" என்று கேட்டாள்.(13)

அந்த வாயு தேவன், பிற்காலத்தில் பீமன்[3] என்று அழைக்கப்பட்டவனும், வலிமையான கரங்களும், முரட்டுத்தனமான ஆற்றலை கொண்டவனுமாக ஒரு குழந்தையை அவளிடம் பெற்றான். ஓ பாரதா! அந்தக் குழந்தை பிறந்ததும், முன்பைப் போலவே ஓர் அசரீரி,(14) "இந்தக் குழந்தை பலம் நிறைந்தவர்களில் முதன்மையானவனாக, இயல்புக்குமிக்க பலம் கொண்டவனாக இருப்பான்" என்றது. ஓ பாரதா, உனக்கு நான் விருகோதரனின் {பீமனின்} பிறப்பை ஒட்டிய ஓர் அற்புதமான நிகழ்ச்சியை நிச்சயம் சொல்ல வேண்டும்.(15)

[3] பீமன் என்றால் அனைவருக்கும் அச்சத்தை ஊட்டுபவன் என்று பொருளாம்

அவன் பிறந்ததும் தனது தாயின் மடியில் இருந்து மலையின் சாரலில் விழுந்தான். அவன் விழுந்த வேகத்தில் கீழே இருந்த பெரும்பாறையானது சுக்குநூறாக உடைந்து சிதறியது. ஆனால், அவனுக்கு உடலில் சிறு காயமும் ஏற்படவில்லை. ஒரு புலியைக் கண்டு பயம் கொண்ட குந்தி, தனது மடியில் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதை மறந்து எழுந்ததாலேயே அவன் கீழே விழ நேர்ந்தது. அவள் அப்படி எழுகையில், இடியைப் போன்ற உறுதியுடன் இருந்த அக்குழந்தை, மலையின் மார்பில் {சாரலில்} விழுந்து, அங்கே இருந்த கற்பரப்பை சுக்குநூறாக்கியது. இதைக் கண்ட பாண்டு பெரும் ஆச்சரியமடைந்தான்[4].(16-18)

[4] கும்பகோணம் பதிப்பில், "விருகோதரன் பிறந்த மாத்திரத்தில் மற்றோர் அதிக ஆச்சரியமுண்டாயிற்று. அதாவது, அவன் தாயாரிடுப்பிலிருந்து விழுந்து தன் அங்கம்பட்டதினால் கருங்கல்லைப் பொடியசாகச் செய்தான். யதுபுத்திரியாகிய குந்தியோ பத்தாவது நாள் புத்திரனுடன் கூட மிக்க அழகான தடாகத்தில் போய் ஸ்நானஞ்செய்து பிள்ளையை எடுத்துக் கொண்டு, தேவதாபூஜை செய்வதற்காக ஆச்ரமத்திலிருந்து புறப்பட்டாள். பரதஸ்ரேஷ்டரே! அப்போது அவள் மலையினோரமாகப் போகையில் ஒரு பெரும்புலி அவளைக் கொல்ல எண்ணங்கொண்டு மலையின் குகையிலிருந்து புறப்பட்டது. தேவதைக்கொப்பான பராக்ரமுள்ள பாண்டு உயர்ந்த வில்லை வளைத்து மூன்று பாணங்களினால் ஓடிவரும் அந்தப் புலியைப் பிளந்தான். பேரிரைச்சலினால் அம்மலைக்குகையை நிரப்புகின்ற அந்தப் புலியைக் கண்டு பயத்தினால் குந்தி மலைமேலேற ஆரம்பித்தாள். பரதஸ்ரேஷ்டரே! அப்போது அவள் பயந்ததனால் அவள் இருப்பிலிருந்து குழந்தை விழுந்தது. அவள் பருவதத்தின் மேலிருக்கையில் குழந்தை கீழே விழுந்தது. அந்தச் சிசு இந்தினால் விடப்பட்ட வஜ்ராயுதம் போலக் கல்லைத் தூளாக்கிற்று. பிறகு, பாண்டு புத்ரனிடமுள்ள நேசத்தினால் மலையின் சரிவுக்கு ஓடினான். விழுந்த அந்தக் குழந்தையின் அங்கம்பட்டு அந்தப் பாறை நூறுசுக்காகப் பொடிக்கப்பட்டிருந்தது. பொடியாகச் செய்யப்பட்ட சிலையைக் கண்டு பாண்டு மிக்க வியப்படைந்தான். புலிக்கொப்பான பராக்ரமமுள்ள பாண்டு, பீமன் பிறந்தபோது மலைமேலிருந்து பெருங்கத்தல் கத்தின  ஒரு புலியைக் கண்டான். கௌரவபுத்ரனாகிய பாண்டு தன் மனைவியைக் காப்பதற்காகவும், மைந்தனைக் காப்பதற்காகவும் எப்போதும் கையில் அம்பும் வில்லுமாக இருந்தான். ஸிம்மத்தில் குருவும், துலாத்தில் சூர்யனும், மக நக்ஷத்திரத்தில் சந்திரனும் சேர்ந்தபோது சுபமான திரயோதசிதிதியில் பிதிர்களின் முகூர்த்ததில் அந்தக் குந்தி உறுதியான பராக்கிரமமுள்ள பீமனைப் பெற்றாள்" என்றிருக்கிறது. பீமன் பிறந்த நாள், நட்சத்திர, ராசிக் குறிப்புகள் கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை.

ஓ பாரதர்களில் சிறந்தவனே, முழுப் பூமியையும் ஆண்ட துரியோதனுக்கும், விருகோதரன் {பீமன்} பிறந்த அந்த நாளே, பிறந்த நாளாக அமைந்தது.(19) விருகோதரன் பிறந்த பிறகு, பாண்டு மறுபடியும் சிந்திக்க ஆரம்பித்தான், 'உலகப் புகழ் பெறும் மிகச் சிறந்த மகனை நான் எப்படி அடையப் போகிறேன்?(20) உலகின் அனைத்துப் பொருட்களும் விதியையும் விடாமுயற்சியையும் சார்ந்தே இருக்கின்றன. ஆனால் காலத்திற்கேற்ற முயற்சியில்லாமல் விதியால் வெற்றியடைய முடியாது.(21) இந்திரனே தேவர்களுக்குத் தலைவன் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். நிச்சயமாக, அவனே அளவிடமுடியாத பலமும், சக்தியும், அற்றலும், மகிமையும் கொண்டவனாவான்.(22) எனது துறவால் அவனை மனநிறைவு கொள்ளச் செய்து, அவனைப் போன்ற பெரும் பலம் கொண்ட மகனை நான் பெறுவேன். நிச்சயமாக அவன் தரும் மகன், எல்லோரினும் சிறந்தவனாக, எல்லா மனிதரையும், மனிதரல்லாதவரையும் போர்க்களத்தில் வெல்பவனாக இருப்பான். எனவே, நான் எனது இதயத்தாலும், செயலாலும், பேச்சாலும் கடும் துறவை மேற்கொள்ளப் போகிறேன்.' என்ற மனதிற்குள் தீர்மானித்தான்.(23,24)

அதன்பின்பு, குருக்களின் மன்னனான பாண்டு, பெரும் முனிவர்களுடன் ஆலோசனை செய்து, குந்தியை ஒரு முழு வருடத்திற்கு நோன்பிருக்கக் கட்டளையிட்டான்.(25) ஓ பாரதா, அதே நேரத்தில் அவனும் ஒற்றைக் காலில் நின்று கடுந்தவமும், நோன்பும் செய்யத் தொடங்கினான்.(26) காலையிலிருந்து மாலை வரை மனத்தை ஒருமுகப்படுத்தித் தேவர்களின் தலைவனை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக கடும் தவத்தைச் செய்தான். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திரன் பாண்டுவை அணுகி,(27) அவனிடம், "ஓ மன்னா! மூவுலகத்தாலும் கொண்டாடப்படும் மகனை நான் உனக்குத் தருவேன். அவன் பிராமணர்கள், பசுக்கள் மற்றும் நேர்மையான மனிதர்களின் நலனைக் காப்பான்.(28) நான் உனக்குக் கொடுக்கும் மகன், தீயவர்களை அழித்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பான். அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனாக இருந்து, எந்த எதிரிகளாலும் வென்றிட இயலாதவனாக இருப்பான்" என்றான்.(29)

வாசவனால் (தேவர்கள் மன்னனால் {இந்திரனால்}) இவ்வாறு சொல்லப்பட்ட குரு பரம்பரையின் அறம்சார்ந்த மன்னன் {பாண்டு}, அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து, குந்தியிடம்,(30) "ஓ நற்பேறு பெற்றவளே, உனது நோன்பு வென்றது. தேவர்களின் தலைவன் மனநிறைவை அடைந்து, உனது விருப்பத்தைப்போலவே, தெய்வீக சாதனைகளையும் பெரும் புகழையும் அடையப் போகும் மகனை உனக்குக் கொடுக்க விரும்புகிறான்.(31) அந்த மகன் அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவனாகவும், பெரும் ஞானமுள்ளவனாகவும் இருப்பான். பெரும் ஆன்மாவைக் கொண்டவனாகும், கதிரவனுக்கு நிகரான பிரகாசத்துடன் கூடியவனாகவும், போர்க்களத்தில் நிகரற்றவனாகவும், பெரும் சாதனைகளைச் செய்பவனாகவும் அவன் இருப்பான். அவன் பேரழகனாகவும் இருப்பான். ஓ அழகிய இடையும் இனிய புன்னகையும் கொண்டவளே, தேவர்களின் தலைவன் உன்னிடம் கருணை கொண்டிருக்கிறான். அவனை அழைத்து, க்ஷத்திரிய அறங்களுக்கு இருப்பிடமான மகனைப் பெறுவாயாக" என்றான்.(32,33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், அந்தக் கொண்டாடப்படும் குந்தி, தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், சக்ரனை (தேவர்களின் மன்னன்) அழைத்தாள். அப்படி அழைத்ததால், அவன் அவளிடம் வந்து, அர்ஜுனன் என்று பின்பு அழைக்கப்பட்டவனை அவளிடம் பெற்றான்[5].(34) அக்குழந்தை பிறந்தவுடன், வானத்தை அடைத்து நிற்கும் மேகங்களின் ஆழமான பேரொலியுடன் ஓர் அசரீரி குந்தியிடம் பேசியது.(35) அஃது அந்த ஆசிரமத்தில் வசிக்கும் எல்லா உயிருக்கும் கேட்டது,(36) "ஓ குந்தி, இந்த உனது குழந்தை, சக்தியால் கார்த்தவீரியனுக்கும், ஆற்றலில் சிவனுக்கும் சமமானவன். சக்ரனை {இந்திரனைப்} போல வெல்லப்பட முடியாதவனாக இருக்கும் அவன், உன் புகழை எங்கும் பரப்புவான்.(37)  அதிதியின் மகிழ்ச்சியை அதிகரித்த விஷ்ணுவைப் (அதிதியின் இளைய மகன்) போல, இந்தக் குழந்தை உனது மகிழ்ச்சியைக் கூட்டுவான்.(38) மத்ரர்களையும், குருக்களையும், சோமகர்களையும், சேதி, காசி, கரூஷ நாட்டு மக்களையும் அடக்கிக் குருக்களின் வளமையை இவன் பாதுகாப்பான்.(39) (மன்னன் ஸ்வேதகேது நடத்தும் வேள்வியின் தெய்வீக பானம் அக்னிக்குத் தெவிட்டியதால் {செரிக்காமல் இருந்ததால், அஜீரணத்தைப் போக்க}) காண்டவ வனத்தில் வசிக்கும் விலங்குகளின் கொழுப்பை, இவனுடைய கரத்தின் பலத்தால் பெற்ற அக்னி பெரும் மனநிறைவு அடைவான்.(40)

[5] கும்பகோணம் பதிப்பில், "பூர்வபல்குனியும் {பூரம் நட்சத்திரமும்}, உத்தர பல்குனியுஞ்சேர்ந்த {உத்தர நட்சத்திரமும் சேர்ந்த} பகலில் பால்குன மாஸத்திற் {பங்குனி மாதத்தில்} பிறந்ததனால், அவன் பால்குனன் அல்லது பல்குனன் என்று பெயர் பெற்றான்" என்றிருக்கிறது.

இந்தப் பலம்வாய்ந்த வீரன், உலகத்தின் பலவீனமான ஏகாதிபதிகளை அழித்து, தன் சகோதரர்களுடன் மூன்று பெரும் வேள்விகளைச் செய்வான்.(41) ஓ குந்தி, ஆற்றலில் இவன் ஜமதக்னேயனையோ {பரசுராமரையோ}, விஷ்ணுவையோ  போல இருப்பான். பெரும் பலம் மிக்க மனிதர்களில் முதன்மையான இவன், பெரும் புகழை அடைவான்.(42) போரில் இவன் தன் ஆற்றலால் தேவர்களுக்குத் தேவனான சங்கரனை (மகாதேவனை) மனநிறைவு கொள்ளச் செய்து அவனிடம் இருந்து பாசுபதம் எனும் ஆயுதத்தைப் பெறுவான்.(43) இந்தப் பலம்வாய்ந்த கரமுடையவன் இந்திரனின் கட்டளையால் தேவர்களுக்கு எதிரிகளான நிவாதகவசர்கள் எனும் தைத்தியர்களைக் கொல்வான். (44) இவன் அனைத்து வகையான தெய்வீக ஆயுதங்களையும் பெற்றுத் தனது குலத்தின் நற்பேறுகளை மீட்டெடுப்பான்" என்றது அந்த அசரீரி.(45)

குந்தி, தனது அறையில் படுத்திருக்கும்போது, இயல்புக்குமிக்க இந்த வார்த்தைகளைக் கேட்டாள். நூறு சிகரங்களைக் கொண்ட அந்த மலையில் வசித்த துறவிகளும், தத்தமது தேர்களில் அமர்ந்திருந்த இந்திரனுடன் கூடிய தேவர்களும் உரக்கச் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தனர்.(46,47) (அரூபமான) பேரிகை முழக்கங்கள் முழு ஆகாயத்தையும் நிறைத்தன. அங்கே கண்ணுக்குத்தெரியாத தூதுவர்கள் மகிழ்ச்சிக் கூச்சல்களுடன் அந்தப் பகுதி முழுவதும் மலர்மாரியைப் பொழிந்தனர்.(48) பல்வேறு தேவர் குழுக்களும் அங்கே கூடி பிருதையின் மைந்தனுக்குத் தங்கள் மரியாதையைப் செலுத்தினர். கத்ருவின் மைந்தர்களும் (நாகர்களும்), வினதையின் மைந்தனும், கந்தர்வர்களும்,(49) படைப்புத் தேவர்களும், பரத்வாஜர், கசியபர், கௌதமர், விஷ்வாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர் மற்றும் சூரியன் தொலைந்த போது உலகத்துக்கு ஒளியூட்டிய அத்ரி முனிவருடன் அடங்கிய ஏழு பெருமுனிவர்களும் (சப்த ரிஷிகளும்) அங்கே வந்தனர்.(50)

மரீசி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது, படைப்புத் தலைவனான தக்ஷன் மற்றும் கந்தர்வர்களும் அப்சரஸ்களும் அங்கே வந்தனர்.(51) தெய்வீக மாலைகளுடனும், அனைத்து ஆபரணங்களுடனும், அழகிய ஆடைகளுடனும் வந்த அப்சரஸ்களின் பல குழுக்கள் அங்கே வந்து மகிழ்ச்சியுடன் ஆடி, அந்தப் பீபத்சுவின் (அர்ஜுனனின்) புகழைப் பாடினர்.(52) பெரும் முனிவர்கள் வாழ்த்து மந்திரங்களை உச்சரித்தனர். கந்தர்வர்களுடன் கூடிய தும்புருவானாவன் அழகிய சந்தங்களுடன் பாடினான்.(53)

ஓ மன்னா! பீமசேனன், உக்ரசேனன், ஊர்ணாயுஸ், அனகன், கோபதி, திருதராஷ்டிரன், சூர்யவர்ச்சஸ், எட்டாவதாக யுகபன், திரணபன், கார்ஷிணி, நந்தி, சித்ரரதன், பதிமூன்றாவதாகச் சாலிசிரஸ், பதினான்காவதாகப் பர்ஜன்யன், பதினைந்தாவதாகக் கலி, பட்டியலில் பதினாறாவதாக நாரதர், பிருஹதன், விரிஹகன், பேரான்மாவானா கராளன், பிரம்மச்சாரி, பஹுகுணன், பெரும் புகழுடைய சுவணன்ணா, விஸ்வாவசு, புமன்யு, சுசந்திரன், சாம் மற்றும் அற்புதமான குரல் வளமிக்க ஹாஹா மற்றும் ஹூஹூவின் கொண்டாடப்பட்ட குழுக்களடங்கிய தெய்வீகக் கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரும் அங்கே வந்தனர்.(54-58) பெரிய கண்களையுடைய பல சிறப்பான அப்சரஸ்களும், அனைத்து ஆபரணங்களுடன் வந்து அங்கே ஆடிப்பாடினர்.(59)

அநூசானை, அநவத்யை, குணமுக்யை, குணாவரை, அத்ரிகை, சோமை, மிச்ரகேசி, அலம்புஷை, மரீசி, சுசிகா, வித்யுபர்ணை, திலோத்தமை, அம்பிகை, லக்ஷ்மணை, க்ஷேமை, தேவி, ரம்பை, மனோரமை, அஸிதை, சுபாஹு, சுப்ரியை, சுவபுஸ், புண்டரீகை, சுகந்தை, சுரசை, பிரமாதினி, கம்யை, சாரத்வதி ஆகிய அனைத்து அப்சரஸ்களும் சேர்ந்து ஆடினர். மேனகை, சஹஜன்யை, கர்ணிகா, புஞ்சிகஸ்தலை,(60-63) ருதுஸ்தலை, கிருடச்சி {கிருதாசி}, விச்வாசி, பூர்வசித்தி, கொண்டாடப்படும் உம்லோசை, பத்தாவதாகப் பிரம்லோசை, பதினோராவதாக ஊர்வசி ஆகிய பெரிய கண்களையுடைய தேவலோக மங்கையர் அங்கே வந்து கூட்டமாகப் பாடினர். தாத்ரி {தாதா}, அர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பகன்,(64,65) இந்திரன், விஸ்வஸ்வத் {விவஸ்வான்}, பூஷன், துவஷ்த்ரி {துவஷ்டா}, பர்ஜன்யன் அல்லது விஷ்ணு, ஆகிய பனிரெண்டு ஆதித்யர்களும் பாண்டுவின் மகனைப் பெருமைப்படுத்த அங்கே வந்தனர். ஓ மன்னா! மிருகவியாதன், சர்ப்பன், கொண்டாடப்படும் நிருருதி,(66,67) அஜைய்கபாதன், அஹிவிரதனா, பினாகின், தஹனன், ஈஸ்வவன், கபாலின் {கபாலி}, ஸ்தாணு மற்றும் சிறப்பு மிகுந்த பகன் ஆகிய பதினோரு ருத்ரர்களும் அங்கே வந்தனர்.(68)

அஸ்வினி இரட்டையர்களும், எட்டு வசுக்களும், பெரும்பலம் வாய்ந்த மருத்துகளும், விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் அங்கே வந்தனர்.(69) கார்க்கோடகன், வாசுகி, கச்சபன், குண்டன் மற்றும் பெரும் நாகனான தக்ஷகன் ஆகிய பெரும் பலம்வாய்ந்த உயர்ந்த அறத்தகுதி கொண்ட கோபக்காரப் பாம்புகளும் அங்கே வந்தனர்.(70,71) தார்க்ஷ்யன், அரிஷ்டநேமி, கருடன், அசிதத்வஜன் மற்றும் பல நாகர்களும் அங்கே வந்தனர். வினதையின் குலத்தில் வந்த அருணனும் ஆருணியும் அங்கே வந்தனர்.(72) தத்தம் ரதங்களிலோ, மலைச்சிகரங்களிலோ அமர்ந்திருந்த தேவர்களையும் மற்றவர்களையும் ஆன்ம வெற்றிக் கொண்ட பெரும் முனிவர்கள் மட்டுமே கண்டனர்.(73) இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்தச் சிறந்த முனிவர்கள் ஆச்சரியமடைந்து, பாண்டுவின் புதல்வர்களிடம் மேலும் அன்பும் பாசமும் கொண்டனர்.(74)

அந்தக் கொண்டாடப்பட்ட பாண்டு, மேலும் பிள்ளைகள் பெற எண்ணங்கொண்டு (வேறு தேவர்களை அழைக்க) தான் மணந்து வந்த மனைவியிடம் பேச விரும்பினான்.(75) ஆனால் குந்தி அவனிடம், "துயர் நிறைந்த காலத்தில்கூட, நான்காவது பிரசவத்தை ஞானமுள்ளோர் அனுமதிக்கவில்லை. நான்கு மனிதர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண் ஸ்வாரினி (தாழ்ந்தவள்) என்று அழைக்கப்படுகிறாள். அதே சமயம் ஐவருடன் உறவு வைத்தால் அவள் விலைமகளாகிறாள்.(76) எனவே, ஓ கற்றவரே, இது சம்பந்தமான சாத்திரங்களை நீர் அறிந்தும், ஏன் பிள்ளை பெறும் விருப்பத்தால், என்னிடம் நீதியை மறந்து பேசுகிறீர்?" என்று கேட்டாள்.(77)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்