Tuesday, June 25, 2013

துரோணரின் திறமை - ஆதிபர்வம் பகுதி 133

The talent of Drona | Adi Parva - Section 133 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 69)

பதிவின் சுருக்கம் : இளவரசர்கள் விளையாடிக் கொண்டிருக்கிம்போது கிணற்றில் விழுந்த பந்து; இளவரசர்களுக்கு அறிமுகமான துரோணர் தனது திறமையைக் காட்டியது; துரோணரை அறிந்து கொண்ட பீஷ்மர்; துரோணரைக் குறித்து அவரிடம் விசாரித்த பீஷ்மர்; தன் வரலாற்றைச் சொன்ன துரோணர்; துரோணரை இளவரசர்களின் ஆசானாக நியமித்த பீஷ்மர்...

Adi Parva-133_Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "ஹஸ்தினாபுரத்துக்கு வந்த அந்த பிராமணர்களில் சிறந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் (கிருபரின்) இல்லத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.(1) அவரது பலம் பொருந்திய மகன் (அஸ்வத்தாமன்), கிருபர் எடுக்கும் வகுப்புகளின் இடைவெளிகளில், குந்தியின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆயுதப் பயிற்சியைப் போதித்தான். இருப்பினும் அஸ்வத்தாமனின் ஆற்றலைக் குறித்து யாரும் அறிந்திலர்.(2)

துரோணர் இப்படியே தனிமையில் தலைமறைவாகக் கிருபரின் இல்லத்தில் வசித்து வரும்போது, ஒரு நாள், அந்த வீர இளவரசர்கள் ஒன்றுசேர்ந்து, ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியே வந்தனர்.(3) நகரத்தைவிட்டு வெளியே வந்து, ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டும், மகிழ்ச்சியான இதயத்துடன் உலவிக் கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த இளவரசர்கள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பந்து, ஒரு கிணற்றுக்குள் விழுந்தது.(4) அந்த இளவரசர்கள் தங்களால் இயன்றவரை பந்தை கிணற்றிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த இளவரசர்களின் முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போயின.(5) அவர்கள் பந்தை எப்படி மீட்பது என்பதை அறியாமல் வெட்கத்துடன் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கவலையோடிருந்தனர்.(6)


சரியாக அத்தருணத்தில் அவர்களின் அருகே, வறுமையால் தளர்ச்சியுற்று, மெலிந்து, அக்னிஹோத்ரம் செய்வதால் மேனி காய்ந்து, தனது அன்றாடச் சடங்குகளையும் வழிபாடுகளையும் முடித்து வந்திருந்த, கறுத்த நிறம் கொண்ட முதுமையான ஒரு பிராமணரைக் கண்டனர்.(7) வெற்றியில் நம்பிக்கையிழந்திருந்த அந்த இளவரசர்கள், அந்தச் சிறப்புமிகுந்த பிராமணரைக் கண்டதும், உடனடியாக அவரைச் சூழ்ந்து கொண்டனர்.(8) நம்பிக்கையிழந்த அந்த இளவரசர்களைக் கண்ட துரோணர் (அவரே அந்தப் பிராமணர்; வேறு யாரும் அல்லர்), தனது திறமையை நினைத்துப் பார்த்து புன்னகைத்து அவர்களிடம்,(9) "உங்கள் க்ஷத்திரிய பலத்திற்கு இது அவமானம். உங்கள் ஆயுத நிபுணத்துவத்திற்கு இது அவமானம்! நீங்கள் பாரதக் குலத்தில் பிறந்தவர்களாயிற்றே! உங்களால் ஏன் அந்தப் பந்தை மீட்க முடியவில்லை?(10) இன்று எனக்கு இரவு உணவைத் தர நீங்கள் வாக்களித்தால், நான் இந்தப் புற்குச்சிகளினால் பந்தையும், நான் கீழே தூக்கி எறிந்து தொலையப்போகும் இந்த மோதிரத்தையும் வெளியே எடுக்கிறேன்" என்றார்.(11)

இப்படிச் சொன்னவரான எதிரிகளை ஒடுக்கும் துரோணர், தனது மோதிரத்தை எடுத்து அந்தக் காய்ந்த {நீரில்லாத} கிணற்றுக்குள் தூக்கி எறிந்தார். அப்போது, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் துரோணரிடம்,(12) “ஓ! பிராமணரே (நீர் அற்பப் பொருளைக் கேட்கிறீர்) கிருபரின் அனுமதியுடன், எங்களிடம் இருந்து உமது காலத்திற்கும் நீர் கேட்பதை {உணவை} அடைவீராக" என்றான்.(13) இதைக்கேட்ட துரோணர் பாரத இளவரசர்களைக் கண்டு புன்னகைத்து, "இந்த எனது கையில் நிறைந்திருக்கும் புற்களை {ஈக்குகளை}, எனது மந்திரங்களின் மூலம் ஆயுதங்களின் தன்மையை அடையச் செய்யப் போகிறேன். மற்ற எந்த ஆயுதங்களுக்கும் இல்லாத தகுதியை இந்தப் புற்கள் பெறப்போவதைப் பார்ப்பீராக.(14) நான் இந்தப் புற்குச்சிகளில் ஒன்றைக் கொண்டு பந்தைத் துளைக்கப் போகிறேன். அதன்பின் அந்தக் குச்சியை மற்றொரு குச்சியால் துளைத்து, மூன்றாவது குச்சியால் இரண்டாம் குச்சியைத் துளைப்பேன். இவ்வாறே ஒரு சங்கிலியை உருவாக்கி, பந்தை வெளியே கொண்டு வரப் போகிறேன்" என்றார்".(15)

Drona _Adi Parva-Section 133_Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரோணர் தாம் எதைச் சொன்னாரோ அஃதை அப்படியே செய்து காட்டினார். இதனால், அந்த இளவரசர்கள்  அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மகிழ்ச்சியால் அவர்களது விழிகள் அகன்றன. தாங்கள் கண்ட காட்சியை இயல்புக்குமிக்கதாகக் கருதிய அவர்கள், கல்விமானான அந்தப் பிராமணரிடம், "காலங்கடத்தாமல் மோதிரத்தையும் வெளியே கொண்டு வருவீராக" என்று சொன்னார்கள்.(16,17) சிறப்பு மிகுந்த துரோணர், ஒரு வில்லையும் அம்பையும் எடுத்து, அம்பால் மோதிரத்தைத் துளைத்து, அதை உடனே வெளியே எடுத்தார்.(18) அவர், அம்பால் துளைத்த மோதிரத்தை எடுத்து, ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த இளவரசர்களிடம் கொடுத்தார். அவரால் மோதிரம் மீட்கப்பட்ட விதத்தைப் பார்த்த இளவரசர்கள்,(19) “ஓ! பிராமணரே! நாங்கள் உம்மை வணங்குகிறோம். இப்படிப்பட்ட திறமை யாருக்கும் கிடையாது. நீர் யார் என்பதையும், யாருடைய மகன் என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறோம். நாங்கள் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.(20)

இப்படி இளவரசர்களால் கேட்கப்பட்ட துரோணர், "நீங்கள் பீஷ்மரிடம் சென்று என்னைப் பற்றியும் {எனது உருவத்தைப் பற்றியும்}, எனது திறமை பற்றியும் விவரியுங்கள். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர் என்னை அடையாளம் தெரிந்து கொள்வார்" என்றார்.(22)

அதற்கு அந்த இளவரசர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீஷ்மரிடம் சென்று அந்த பிராமணருடைய பேச்சின் கருப்பொருளையும், அவரது இயல்புக்குமிக்க நடத்தையையும் விவரித்தனர்.(23) இளவரசர்களிடம் இருந்து அனைத்தையும் கேட்டறிந்த பீஷ்மர், அந்தப் பிராமணர் துரோணரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து, இந்த இளவரசர்களுக்கு அவரே சிறந்த ஆசானாக இருக்க முடியும் என்பதையும் நினைத்து,(24) நேரடியாகச் சென்று வரவேற்று, அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தார். ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அந்த பீஷ்மர், அவர் ஹஸ்தினாபுரத்திற்கு வந்த காரணத்தைச் சாதுர்யமாகக் கேட்டார்.(25)

துரோணர் நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னார், "ஐயா, கடந்த காலத்தில் நான் பெரும் முனிவர் அக்னிவேசரிடம் ஆயுதங்களைப் பெறவும், ஆயுத அறிவியலைக் கற்கவும் விரும்பிச் சென்றேன்.(26) எனது குருவுக்கான சேவைக்காக என்னை அர்ப்பணித்து, அவருடன் பல வருடங்கள், தலையில் முடிந்த கூந்தலுடன் {ஜடா முடியுடன்} பிரம்மச்சாரியாக வாழ்ந்தேன்.(27) அந்த நேரத்தில், அதே காரணத்திற்காகப் பாஞ்சால இளவரசனான, பலம்வாய்ந்த யக்ஞசேனனும் {துருபதனும்} வந்து, அந்த ஆசிரமத்திலேயே தங்கினான்.(28) அவன் எனது நன்மையில் எப்போதும் விருப்பம் கொண்டு எனக்கு நண்பனானான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் பற்பல வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்தோம்.(29) ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நாங்கள் சிறு வயது முதல் ஒன்றாகவே கல்வி பயின்று வந்தோம். அந்தக் காலத்தில் அவன் எப்போதும் என்னிடம் இனிமையாகவே பேசுவான்.(30)

ஓ! பீஷ்மரே, அவன் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, “ஓ! துரோணா, எனது சிறப்புமிக்கத் தந்தைக்கு {பிருஷதருக்கு} நானே விருப்பமான மகனாவேன்.(31) அந்த மன்னர் என்னைப் பாஞ்சாலர்களின் ஏகாதிபதியாக நியமிக்கும்போது, அந்த நாடு உனதாகும். ஓ! நண்பா, இது சத்தியம்.(32) எனது நிலப்பகுதி, செல்வம், மகிழ்ச்சி என அனைத்தும் உனக்காகவே இருக்கும்" என்று சொன்னான்.  இறுதியாக நாங்கள் பிரிய வேண்டிய காலமும் வந்தது. கல்வி நிறைவு பெற்று, அவன் அவனது நாட்டுக்குத் திரும்ப அடியெடுத்து வைத்தான். அப்போது நான் அவனுக்கு எனது வாழ்த்துகளைச் சொன்னேன்.(33) உண்மையில், அவன் சொன்ன வார்த்தைகளையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருந்தேன்.

சில காலத்திற்குப் பிறகு, எனது தந்தையின் உத்தரவின் பேரிலும், பிள்ளைப்பேறில் எனக்கிருந்த விருப்பம் கொடுத்த மயக்கத்திலும், கடும் நோன்புகள் நோற்பவளும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவளும், எந்நேரமும் அக்னிஹோத்ரமும், மற்ற வேள்விகளும் செய்பவளும், கடும் தவமிருப்பவளும், குறுகிய கூந்தல் கொண்டவளுமான கிருபியை மணந்தேன். அந்தக் கௌதமி {கிருபி}, குறித்த காலத்தில், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவனும், பெரும் வீரனுமான அஸ்வத்தாமன் என்ற மகனை ஈன்றெடுத்தாள்.(34-36) என்னைப் பெற்ற போது எனது தந்தை எப்படி மகிழ்ந்தாரோ அப்படியே நான் அஸ்வத்தாமனைப் பெற்ற போது மகிழ்ந்தேன். ஒரு நாள், ஒரு செல்வந்தனின் மகன் பால் குடிப்பதைக் கண்ட அஸ்வத்தாமன் அழ ஆரம்பித்தான். அதைக் கண்ட எனக்குத் திசை குறித்த அறிவு மங்கிப் போனது. திசைகளை மறந்து நின்றேன். சில பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைக் கேட்கத் துணியாமல், பல பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைப் பெற எண்ணி, நாடு விட்டு நாடு திரிந்தேன்.(37-39) ஆனால் நான் ஒரு கறவைப் பசுவையும் அடையாததால் எனது அலைச்சல் பலனற்றதானது. எனது காரியத்தில் தோற்றுப் போய்த் திரும்பி வந்தேன்.

அப்போது எனது மகனின் நண்பர்கள் அவனுக்கு நீரில் அரிசி மாவைக் கலந்து கொடுத்தனர்.(40) அதைக் குடித்த எனது அப்பாவி மகன், தான் பால் குடித்துவிட்டதாக ஏமாந்து, "நான் பால் குடித்துவிட்டேன், நான் பால் குடித்துவிட்டேன்!" என்று சந்தோஷக் கூத்தாடினான்.(41) அவனது எளிமையைக் கண்டு புன்னகைக்கும் விளையாட்டுத் தோழர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியில் கூத்தாடும் அவனைக் கண்டு நாம் மிகவும் வருந்தினேன்.(42) "செல்வமீட்ட முயலாமல் வறியவனாக இருக்கும் துரோணனுக்கு ஐயோ. அவன் பிள்ளையோ பாலின் மேல் ஆசையினால் கரைத்த மாவைக் குடித்துவிட்டு, நானும் பால் குடித்தேனென ஆனந்தக் கூத்தாடுகிறான்" என்ற கேலிப்பேச்சுகளைக் கேட்டு நான் அமைதியாக இருந்தேன்.(43,44)

என்னையே கடிந்து கொண்ட நான், என் மனதுக்குள், "பிராமணர்களால் கைவிடப்பட்டு இகழப்பட்டாலும், செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால், நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன். அது எப்போதும் பாவகரமானது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து, ஓ! பீஷ்மரே, எனது பழைய நண்பனிடம் சென்றேன். அந்தச் சோமகர்களின் மன்னனிடம் {துருபதனிடம்}, எனது அன்பு மகனையும், மனைவியையும் அழைத்துச் சென்றேன்.(45-47) அவன் ஆட்சியில் அமர்த்தப்பட்டான் என்பதையறிந்தேன். அப்போது நான், என்னை நற்பேறு பெற்றவனாக எண்ணி மகிழ்ந்தேன்.(48)

அதே மகிழ்ச்சியுடன், அரியணையில் அமர்ந்திருந்த எனது நண்பனிடம் சென்று, “ஓ! மனிதர்களில் புலியே, என்னை உனது நண்பனாக அறிந்து கொள்வாயாக!" என்று சொல்லி, அவனை ஒரு நண்பன் எப்படி நம்பிக்கையுடன் அணுகுவானோ அப்படி அணுகினேன். ஆனால் துருபதன், என்னைக் காட்டுமிராண்டியாக நினைத்துக் கைவிட்டு, எள்ளி நகையாடினான்.
அவன் என்னிடம்,(49,50) "இப்படித் திடீரென்று என்னை நீர் அணுகுவதால், உமது புத்திக்கூர்மை உயர்ந்த வகையென கிஞ்சிற்றும் எனக்குத் தோன்றவில்லை.(51) ஓ! மங்கிய அறிவைக் கொண்டவரே, பெரும் மன்னர்களால் உம்மைப் போன்ற இத்தகு அதிர்ஷ்டமற்ற மனிதரிடம் நட்பு கொள்ள முடியாது.(52) இணையான சூழ்நிலை இருந்தபோது நமக்கிடையில் நட்பு இருந்தது. ஆனால் அனைத்தையும் வலுவிழக்கச் செய்யும் காலம், நட்பையும் வலுவிழக்கச் செய்யும் என்பதை அறிந்து கொள்வீராக.(53) நட்பானது எந்த மனிதனின் இதயத்திலும் தேயாமல் இருக்காது. காலம் அஃதை அரிக்கும், கோபமோ அஃதை அழித்துவிடும்.(54)

எனவே தேய்ந்து போன அந்த நட்புடன் மீண்டும் ஒட்ட நினைக்காதீர். இனியும் அது போல நினைக்காதீர். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, உம்முடனான எனது நட்பு ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஆனது.(55) ஏழைகளால் செல்வந்தர்களுடன் நண்பனாக இருக்க முடியாது; கல்வியற்றவனால் ஒரு கல்விமானோடு நண்பனாக இருக்க முடியாது; ஒரு கோழையால் துணிச்சல் மிக்க (வீரர்களுடன்) நண்பனாக இருக்க முடியாது. பிறகு எப்படி நீர் நமது பழைய நட்பைத் தொட நினைக்கிறீர்.(56) செல்வத்திலும், ஆற்றலிலும் இணையானவர்களாக இருக்கும் இருவருக்கு மத்தியிலேயே நட்போ, பகையோ இருக்க முடியும். ஏழையும், செல்வந்தனும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவோ, பகைவர்களாகவோ இருக்க முடியாது.(57)

அசுத்தமான பிறவிகள் சுத்தமான பிறவிகளுக்கு நண்பனாக இருக்க முடியாது. தேர்வீரனாக இல்லாதவன், அப்படி இருப்பவனுக்கு {தேர்வீரனுக்கு} நண்பனாக முடியாது.  மன்னனா இல்லாத ஒருவனால் ஒரு மன்னனின் நண்பனாக இருக்க முடியாது.(58) நான் உமக்கு நாட்டைக் கொடுக்கிறேன் என்று எப்போதாவது சொன்னது போலக் கூட எனக்கு நினைவில்லை. ஆனால், ஓ! பிராமணரே, இப்போது என்னால் ஓர் இரவுக்கான உணவும், தங்கும் இடத்தையும் மட்டுமே உமக்குத் தர முடியும்" என்றான்.(59)

இப்படி அவனால் சொல்லப்பட்ட பிறகு, தாமதமில்லாமல் செய்யக்கூடிய ஒரு காரியத்தை என் மனத்தில் நிச்சயித்துக் கொண்ட நான், எனது மனைவியுடன் அவனருகில் இருந்து வேகமாக வந்துவிட்டேன்.(60) ஓ! பீஷ்மரே, இப்படித் துருபதனால் அவமதிக்கப்பட்ட நான், மிகுந்த கோபம் கொண்டேன். இப்போது நான் குரு குலத்தவரிடம், புத்திக்கூர்மையுள்ள, எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்கொண்ட சீடர்களை விரும்பி எதிர்பார்த்து வந்திருக்கிறேன்.(61) நான் உமது விருப்பங்களை நிறைவேற்ற ஹஸ்தினாபுரம் வந்திருக்கிறேன். இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டார் {துரோணர்}".(62)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பீஷ்மர் அவரிடம்,(63) "உமது வில்லில் நாணைத் தளத்துவீராக.  ஓ! பிராமணரே! குரு {கௌரவ} இளவரசர்களை ஆயுதச் சாதனை செய்யக் கற்பிப்பீராக. குருக்களால் வழிபடப்பட்டு, உமது வசிப்பிடத்தை உமக்கு நிறைவான வகையில் அனைத்து வசதிகளாலும் நிரப்பி இதயத்தில் மகிழ்வீராக.(64) ஓ! பிராமணரே! குரு குலத்தவர் கொண்டிருக்கும் அனைத்துச் செல்வத்திற்கும், அரசுக்கும், நாட்டுக்கும் நீரே உண்மையான தலைவராவீர். (இன்றிலிருந்து) குரு குலத்தவர் உம்மவரே.(65) இஃது ஏற்கனவே சாதிக்கப்பட்டுவிட்டதாக உமது இதயத்தில் குறித்துக் கொள்ளும். ஓ! பிராமணரே! எங்கள் நற்பேறின் கனியாக உம்மை இப்போது நாங்கள் பெறுகிறோம். உண்மையில், உமது வருகையால் எங்களுக்குச் செய்திருக்கும் உதவியானது மிகப் பெரியதே " என்றார்.(66)


ஆதிபர்வம் பகுதி 133ல் உள்ள சுலோகங்கள் : 66
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்