Thursday, June 27, 2013

ஏகலவ்யன், துரோணர், அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 134

Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 70)

பதிவின் சுருக்கம் : தமது மகனுக்கும், சீடர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டிய துரோணர்; அஃதை அறிந்து கொண்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு இரவில் உணவிட வேண்டாம் என்று சமயற்காரனிடம் சொன்ன துரோணர்; இரவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுனன்; துரோணரின் அன்பைப் பெற்ற அர்ஜுனன்; ஏகலவ்யனைச் சீடனாக ஏற்காத துரோணர்; ஏகலவ்யனின் திறமையைக் கண்ட இளவரசர்கள்; கட்டைவிரலைக் கூலியாகக் கேட்ட துரோணர்; துரோணர் தன் சீடர்களுக்கு வைத்த சோதனை...

Ekalavya_Adi Parva - Section 134 | Mahabharata In Tamil

வைசம்பாயனர் சொன்னார், "இப்படிப் பீஷ்மரால் வழிபடப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான துரோணர், குரு குலத்தவரின் வசிப்பிடத்திலேயே தங்கி, அங்கேயே புகழுடன் வாழ ஆரம்பித்தார்.(1) அவர் சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின், பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளான கௌரவர்களை அழைத்து, அவருக்குச் சீடர்களாகக் கொடுத்தார். துரோணருக்குப் பல மதிப்புமிக்கப் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தார் பீஷ்மர்.(2) அந்தப் பெரும்பலசாலி (பீஷ்மர்) பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நெல் மற்றும் பலவித செல்வங்கள் நிறைந்ததும், அழகானதும், தூய்மையானதுமான வீடு ஒன்றையும் கொடுத்தார்.(3) அதன்பின், வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன், பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களான அந்தக் கௌரவர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(4)

அப்படி அவர்கள் அனைவரையும் சீடர்களாக ஏற்றுக் கொண்ட துரோணர், ஒரு நாள் அவர்களை அழைத்து, தனது காலில் விழுந்து வணங்கச் செய்து, கனத்த இதயத்துடன்,(5) "நான் எனது இதயத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்தை வைத்திருக்கிறேன். ஓ! பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதங்களில் நிபுணத்துவம் பெற்றதும், அந்தக் காரியத்தை நிறைவேற்றித் தருவதாக எனக்கு உண்மையாக உறுதியளிப்பீர்களாக" என்று சொன்னார்".(6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு இளவரசர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் அர்ஜுனன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் காரியம் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறினான்.(7) மகிழ்ச்சியடைந்த துரோணர், அர்ஜுனனை மார்புறத் தழுவி, அவன் தலையின் நறுமணத்தை மறுபடி மறுபடி முகர்ந்து, அந்தப் பொழுது முழுவதும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.(8)

பெரும் பலம் கொண்டவரான துரோணர், பாண்டுவின் மகன்களுக்குத் தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களில் பயிற்சி கொடுத்தார்.(9) ஓ! பாரதக் குலத்தில் காளையே, அந்த பிராமணர்களில் சிறந்தவரான துரோணரிடம் ஆயுதப் பயிற்சி பெற வேறு பிற நாட்டு இளவரசர்களும் அந்த இடத்தில் குழுமினர்.(10)

Adi Parva - Section 134 | Mahabharata In Tamil

விருஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் பல்வேறு நிலங்களில் உள்ள இளவரசர்கள், சூத குலத்தவனான ராதையின் மகன் (கர்ணன்) ஆகியோர் அனைவரும் துரோணருக்குச் சீடர்களானார்கள்.(11) ஆனால் அவர்கள் அனைவரிலும், சூதப் பிள்ளையான கர்ணன், பொறாமையால் அடிக்கடி அர்ஜுனனை எதிர்த்தும், துரியோதனனை ஆதரித்தும் பாண்டவர்களை அவமதித்து வந்தான்.(12) எனினும், ஆயுத அறிவியலில் தனக்கிருக்கும் அர்ப்பணிப்பாலும், நிபுணத்துவத்தாலும், கரங்களின் பலத்தாலும், விடாமுயற்சியாலும் எப்போதும் குருவின் அருகே இருந்து, அனைவரைக் காட்டிலும் (சக மாணவர்களுடன் ஒப்பிடுகையில்) அர்ஜுனன் மேம்பட்டு இருந்தான். குரு எடுக்கும் பாடமானது அனைவருக்கும் ஒன்றாக இருப்பினும், அர்ஜுனன், தனது கரங்களின் நளினத்தாலும், நிபுணத்துவத்தாலும் சக மாணாக்கரில் முதன்மையானவனாகத் திகழ்ந்தான். துரோணர் தனது மாணாக்கர்களில் எவரும் இந்திரனின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} நிகராக (எக்காலத்திலும்) வர முடியாது என்ற நம்பிக்கைக்கு வந்தார்.(13-15)

இப்படியே துரோணர், ஆயுத அறிவியல் குறித்த தனது பாடங்களை இளவரசர்களுக்குப் போதித்தார். மாணவர்கள் நீர் நிரப்பும் போது, அனைவருக்கும் நேரம் அதிகமாக வேண்டும் என்று எண்ணி அவர்களுக்குக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கமண்டலம்} கொடுப்பார் துரோணர்.(16) ஆனால், தனது மகனான அஸ்வத்தாமனுக்கு மட்டும், வேகமாக நீர் நிரப்பி, விரைவாகத் தன்னிடம் அவன் வர வேண்டும் என்று எண்ணி, அகன்ற வாய்க் கொண்ட பாத்திரத்தைக் {கும்பத்தைக்} கொடுத்து அனுப்புவார்.

அஸ்வத்தாமன் விரைவாக வந்து விட்டால், மற்றவர்கள் வருவதற்குள் கிடைக்கும் இடைவேளையில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் மேன்மையான, நுட்பமான முறைகளைத் தனது மகனுக்குக் கற்பித்தார். ஜிஷ்ணு (அர்ஜுனன்) இதை அறியவந்தான். எனவே, வாருணாயுதத்தைக் {வாருணாஸ்திரத்தைக்} கொண்டு அந்தக் குறுகிய வாய்க் கொண்ட பாத்திரத்தில் வேகமாக நீர் நிரப்பி, தனது குருவின் மைந்தன் செல்லும் அதே நேரத்திற்குக் குருவிடம் அவனும் சென்றான்.  ஆயுதங்களில் ஞானம் கொண்டவனும், அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனும், புத்திசாலியுமான அந்தப் பிருதையின் மைந்தன் {அர்ஜுனன்}, தனது குருவின் மைந்தனை விடச் சிறப்பில் எந்த வகையிலும் தாழ்வடையவில்லை.(17-19)

அர்ஜுனன், தான் மேற்கொண்ட ஆயுதப் பயிற்சிக்கு ஒப்பாகத் தனது குருவுக்குச் செய்த சேவையால், விரைவிலேயே அவன் குருவுக்குப் பிடித்தமான மாணவனானான். (20) துரோணர், தனது மாணவனுக்கு ஆயுதப் பயிற்சியில் இருக்கும் அர்ப்பணிப்பைக் கண்டு, தனது சமையற்காரனை அழைத்து ரகசியமாக,(21) "அர்ஜுனனுக்கு ஒருபோதும் இருளில் உணவிடாதே. இதை நானே சொன்னேன் என்றும் அவனிடம் சொல்லி விடாதே" என்றார்.(22) சில நாள் கழித்து, அர்ஜுனன் விளக்கொளியில் உணவு அருந்திக்கொண்டிருக்கும்போது, காற்றால் விளக்கு அணைந்தது.(23) ஆனால், சக்தி கொண்ட அர்ஜுனன், உணவருந்துவதைத் தொடர்ந்தான். வழக்கமான பழக்கத்தால் அவனது கை, வாய்க்கு செல்வதைக் கண்டான்.(24) பழக்கவழக்கத்தின் சக்தியை உணர்ந்தவனும், பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டு மைந்தன் {அர்ஜுனன்}, இரவில் விற்பயிற்சி செய்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(25) ஓ! பாரதா {ஜனமேஜயா}, இரவில் வில்லிலிருந்து புறப்படும் நாணொலியைக் கேட்ட துரோணர், அவனிடம் வந்து அவனை வாரியணைத்துக் கொண்டு,(26) "நான் உண்மையில் சொல்கிறேன். நான் உனக்குக் கற்பிக்கப் போகும் வித்தையால் உனக்கு நிகரான வில்லாளி ஒருவனும் இவ்வுலகத்தில் இருக்க மாட்டான்" என்றார்".(27)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு துரோணர் அர்ஜுனனுக்குக் குதிரை, யானை, தேர் போன்றவற்றில் அமர்ந்தும், தரையிலும் போர் செய்யும் பயிற்சியைப் போதித்தார்.(28) பெரும்பலம் கொண்ட துரோணர், அர்ஜுனனுக்குக் கதாயுதம், வாள், வேல், ஈட்டிகள், கணைகள் கொண்டு போரிடும் பயிற்சிகளையும் போதித்தார். அவனுக்குப் பல ஆயுதங்களில் பயிற்சியும், ஒரே நேரத்தில் பல மனிதர்களிடம் போரிடும் பயிற்சியும் கொடுத்தார்.(29) அவரது நிபுணத்துவத்தைக் கேள்விப்பட்ட பல நாட்டு மன்னர்களும், இளவரசர்களும், ஆயுத அறிவியல் படிக்கும் ஆர்வத்தில், துரோணரிடம் ஆயிரக்கணக்கில் வந்து குழுமினர்.(30)

ஓ! ஏகாதிபதியே, அப்படி வந்தவர்களில், (கலப்பு வர்ணங்களில் தாழ்ந்த) நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மகனான ஏகலவ்யன் என்ற இளவரசனும் இருந்தான்.(31) எனினும், அறநெறிகளின் விதிகள் அனைத்தையும் அறிந்தவரான துரோணர், (ஒரு காலத்தில்) உயர் பிறப்பாளர்களான தன் சீடர்கள் அனைவரையும் அந்த நிஷாத இளவரசன் {ஏகலவ்யன்} விஞ்சிவிடக் கூடும் என்பதைக் கண்டு, அவனை விற்பயிற்சியில் சீடனாக ஏற்றுக் கொள்ளவில்லை.(32)

ஆனால், ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, அந்த நிஷாத இளவரசன், துரோணரின் பாதத்தைத் தனது தலையால் தொட்டு வணங்கி, வந்த வழியே கானகத்திற்குள் சென்று, அங்கே துரோணரின் களிமண் வடிவத்தைச் செய்து,(33) அதுவே தனது உண்மையான ஆசானென என்று நினைத்து மரியாதையுடன் வணங்கி, மிகக் கடுமையான ஆயுதப் பயிற்சியை அதன் {அந்தப் பதுமையின்} முன்பு செய்யத் தொடங்கினான்.(34) தன் ஆசானிடம் அவன் கொண்ட ஒப்பற்ற மதிப்பினாலும், தன் நோக்கத்தில் அவன் கொண்டிருந்த அர்ப்பணிப்பினாலும், நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்துவது, இலக்கு நோக்குவது, விடுப்பது ஆகிய மூன்று செயல்முறைகளும் அவனுக்கு மிக எளிதானவையாக இருந்தன.(35)

ஒரு நாள், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, கௌரவ மற்றும் பாண்டவ இளவரசர்கள், துரோணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தங்கள் தேர்களில் ஏறி வேட்டைக்குச் சென்றனர்.(36) ஓ! மன்னா, அந்தக் குழுவினருடன் சென்ற ஒரு வேலைக்காரன், சில வழக்கமான பொருட்களுடன், தனது நாயையும் உடன் அழைத்துச் சென்றான்.(37) கானகத்திற்கு வந்த அவர்கள், தங்கள் வேட்டையைத் தேடி உலவிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், உடன் வந்த நாயும் தனியாகக் கானகத்தில் உலவி, நிஷாத இளவரசன் (ஏகலவ்யன்) இருக்குமிடத்திற்கு வந்தது.(38) கருப்பு நிறத் தோலுடையுடனும், உச்சந்தலையில் குடுமியுடனும், அழுக்கேறிய உடலுடனும் கருத்த நிறத்துடனும் இருந்த நிஷாதனைக் கண்ட அந்த நாய், சத்தமாகக் குரைத்தது.(39)

Ekalavya | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil

அதனால் அந்த நிஷாத இளவரசன், தனது கரத்தின் நளினத்தை {லாகவத்தை} வெளிக்காட்டுவதற்காக, (அந்த நாய் வாயை மூடும் முன்பே) அதன் வாய்க்குள் ஏழு கணைகளைச் செலுத்தினான்.(40) ஏழு கணைகளால் துளைக்கப்பட்ட அந்நாய், பாண்டவர்களிடம் திரும்ப வந்தது. இக்காட்சியைக் கண்ட அந்த வீரர்கள், ஆச்சரியத்தில் மூழ்கினர்.(41) தங்கள் திறனில் வெட்கமடைந்த அவர்கள், தாங்கள் அறியாத ஒரு மனிதனின் நளினம் கொண்ட கரத்தையும், செவித்திறன் கொண்டு குறியைத் தவறாமல் சரியாக அடிக்கும் திறனையும் புகழ ஆரம்பித்தனர்.(42) பிறகு, இப்படிப்பட்ட திறமையைக் காட்டியிருப்பவனும், தங்களால் அறியப்படாதவனுமான அந்தக் கானகவாசியைத் தேடிச் சென்றனர். ஓ! மன்னா, பாண்டவர்கள் விரைவிலேயே தாங்கள் தேடிப் போன இலக்கை அடைந்னர். வில்லிலிருந்து நிறுத்தாமல் தொடர்ச்சியாகக் கணைகளைச் சரமாக அடித்துக் கொண்டிருந்த ஏகலவ்யனைக் கண்டனர்.(43)

முழுவதும் அந்நியமானவனாக இருந்த, அந்தக் கடும் முகம் கொண்டவனிடம் {எகலவ்யனிடம்}, "நீ யார்? யாருடைய மகன் நீ?" என்று கேட்டனர்.(44)

இப்படிக் கேட்கப்பட்ட அம்மனிதன், "வீரர்களே, நான் நிஷாத மன்னன் ஹிரண்யதனுசின் மைந்தன். ஆயுதக் கலையில் நிபுணத்துவம் பெற்றவரான ஆசான் துரோணரின் மாணாக்கனாக என்னை அறிவீராக" என்றான்".(45)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு, அந்த நிஷாதன் தொடர்பான அனைத்தையும் அறிந்து கொண்ட பாண்டவர்கள், நகரத்திற்குத் திரும்பி, துரோணரிடம் சென்று, கானகத்தில் அவர்கள் கண்ட அதிசயமான வில்வித்தைச் சாதனையைப் பற்றி அவரிடம் சொன்னார்கள்.(46) குறிப்பாக அர்ஜுனன், ஓ! மன்னா, அவ்வளவு நேரமும் ஏகலவ்யனைச் சிந்தனை செய்து கொண்டு, பிறகு துரோணரைத் தனிமையில் சந்தித்து, தனது குரு தன் மீது வைத்திருக்கும் அன்பில் நம்பிக்கை கொண்டு,(47) "நீர் என்னை அன்புடன் உமது மார்போடு அணைத்து, எனக்குச் சமமாக உமது மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொன்னீர்.(48) இப்போது உமது மாணவனான இந்த நிஷாத மன்னன் மைந்தன் {ஏகலவ்யன்} என்னைவிட மேம்பட்டவனாக இருப்பது எவ்வாறு?" என்று கேட்டான்".(49)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் சிறிது நேரம் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து, அர்ஜுனனை அழைத்துக் கொண்டு நிஷாத இளவரசனிடம் {ஏகலவ்யனிடம்} சென்றார்.(50) அங்கே, உடலெங்கும் அழுக்கேறி, தலையில் குடுமியுடன், கந்தலாடையுடன், கையில் வில்லேந்தித் தொடர்ச்சியாகச் சரம்போலக் கணையடித்துக் கொண்டிருக்கும் ஏகலவ்யனைக் கண்டார்.(51) ஏகலவ்யன் துரோணரைக் கண்டு, சில எட்டுகள் முன் வந்து, அவரது பாதத்தைத் தொட்டு, நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்தான்.(52) இப்படித் துரோணரை வணங்கிய நிஷாத மன்னனின் மைந்தன் {ஏகலவ்யன்}, தன்னை அவரது சீடனாகத் தெரிவித்து, மரியாதையாகக் கரங்குவித்து அவர் முன் நின்றான்.(53)  ஓ! மன்னா, துரோணர் அந்த ஏகலவ்யனிடம், “ஓ! வீரனே, நீ எனது சீடனாக இருப்பின், எனக்குரிய கூலியைக் {தட்சணையைக்} கொடுப்பாயாக!" என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்ட ஏகலவ்யன் பெரும் மனநிறைவுகொண்டு,(54) “ஓ! குருவே, நான் உமக்கு என்ன தரட்டும்? எனக்குக் கட்டளையிடுவீராக. வேதமறிந்த அனைத்து மனிதர்களைக் காட்டிலும் முதன்மையானவரே {துரோணரே}, எனது குருவுக்கு நான் தரமாட்டேன் என்று சொல்வதற்கு உலகில் எந்தப் பொருளும் இல்லை" என்றான்.(55)

அதற்குத் துரோணர், “ஓ! ஏகலவ்யா, உண்மையில் எனக்குப் பரிசு {தக்ஷிணை} கொடுக்கும் நோக்கம் உனக்கு இருக்குமானால், உனது வலக்கைக் கட்டை விரலைத் தருமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன்" என்றார்".(56)

Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், உறுதியை காக்க விரும்பியவனுமான அந்த ஏகலவ்யன், கூலியாகக் கட்டைவிரலைக் கேட்ட துரோணரின் கொடும் வார்த்தைகளைக் கேட்டும் கூட, மகிழ்ந்த முகத்துடன், இதயம் பாதிக்காமல், ஆரவாரமில்லாமல் தனது கட்டைவிரலை வெட்டியெடுத்துத் துரோணரிடம் கொடுத்தான். அதன்பிறகு, மீதம் இருந்த விரல்களுடன் கணையடித்த அந்த நிஷாத இளவரசன், ஓ! மன்னா, தனது கரநளினம் கெட்டிருந்ததை அறிந்தான்.(57,58)

இதனால் அர்ஜுனன், அவனிடம் இருந்த (பொறாமை எனும்) நோய் அகன்று மகிழ்ச்சியடைந்தான். {"அர்ஜுனனுக்கு எவனும் இணையாக முடியாது" என்ற துரோணரின் வார்த்தைகள் இப்போது உண்மையாகின}[1].(59)
[1] { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் வரி கங்குலியில் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் இருக்கின்றன.
துரோணரின் சீடர்களில் இருவர் கதாயுதத்தைப் பயன்படுத்துவதில் திறன்வாய்ந்தவர்களாக இருந்தனர்.  அவர்கள் துரியோதனனும், பீமனும் ஆவர். அவர்களிருவரும் ஒருவரிடமொருவர் பொறாமை கொண்டிருந்தனர்.(60) அஸ்வத்தாமன் ஆயுத அறிவியலின் புதிர்களில் {மந்திர ஆயுதங்களில்} அனைவரையும் விஞ்சி நின்றான். இரட்டையர்கள் (நகுலனும், சகாதேவனும்) வாட்போரில் அனைவரையும் விஞ்சி நின்றார்கள்.(61) யுதிஷ்டிரன் தேர்ப்போரில் அனைவரையும் விஞ்சி நின்றான். ஆனால் அர்ஜுனன், எல்லாவகையிலும் அனைவரையும் விஞ்சி நின்றான். புத்திக்கூர்மையில், இருப்பனவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதில், பலத்தில், விடாமுயற்சியில் என அனைத்திலும் அனைவரையும் விஞ்சி நின்றான் அர்ஜுனன். அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்த அவன், தேர் வீரர்களில் முதன்மையானவர்களுக்கும் முதன்மையானவனாக இருந்தான். அவனது புகழ் கடல் நுனி வரை உலகெங்கும் பரவியது.  அனைவருக்கும் ஒரேமாதிரியான கல்வியாக இருப்பினும், அர்ஜுனன் (நளினமான கரங்களைக் கொண்ட இளவரசனாக) அனைவரையும் மிஞ்சினான். குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதில், அனைவரிலும் முன்னவனாக இருந்தான். எல்லா இளவரசர்களிலும், அர்ஜுனன் மட்டுமே அதிரதனானான்[2].(62-64)
[2] அதிரதன்- தன்னந்தனி தேர்வீரனாக இருந்து, ஒரே நேரத்தில் அறுபதாயிரம்{60,000} எதிரிகளுடன் போர் புரிபவன்.
பீமசேனனின் பெரும்பலத்தையும், அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களிலும் தேர்ந்ததையும் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள், அவர்களிடம் பொறாமை கொண்டனர்.(65) ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவர்களது பயிற்சி முடிந்ததும், ஒருநாள், துரோணர் தனது சீடர்களின் ஆயுதப் பயன்களைச் சோதித்துப் பார்க்க விரும்பி, அவர்கள் அனைவரையும் ஒருங்கே கூட்டினார்.(66) அவர்களைத் ஒன்றாகத் திரட்டுவதற்கு முன்னர், அருகில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் அவர் ஒரு செயற்கைப் பறவையை நிறுவச் செய்து, அதையே இலக்காக வைத்தார். பிறகு துரோணர் அவர்களிடம்,(67) "உங்கள் விற்களை விரைவாக எடுத்துக் கொண்டு இங்கே வந்து நின்று, விற்களில் கணையைப் பொருத்தி, அந்த மரத்தில் இருக்கும் பறவைக்குக் குறி வையுங்கள்.(68) நான் உத்தரவிட்டதும், அந்தப் பறவையின் தலையைக் கொய்யுங்கள்.  குழந்தைகளே, நான் ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பைத் தருவேன், ஒவ்வொருவராக வாருங்கள்" என்றார்".(69)

Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அங்கீரஸின் மைந்தர்கள் அனைவரிலும் முதன்மையான துரோணர், முதலில் யுதிஷ்டிரனிடம், “ஓ! வெல்லப்பட முடியாதவனே, உனது கணையால் குறி வைத்து, நான் உத்தரவிட்டதும் அடி" என்றார்.(70) ஓ! மன்னா, யுதிஷ்டிரன் தனது ஆசான் விரும்பியபடியே முதலில் வில்லை எடுத்து, பறவையைக் குறிபார்த்தபடி நின்றான்.(71) ஆனால், ஓ! பாரதக் குலத்தவரில் காளையே, துரோணர், குறி பார்த்து நிற்கும் அந்தக் குரு இளவரசனிடம்,(72) “ஓ! இளவரசனே, அந்த மரத்தின் மேல் இருக்கும் பறவையைப் பார்" என்றார். யுதிஷ்டிரன் தனது குருவிடம், "பார்க்கிறேன்" என்றான். அடுத்த நொடியில் துரோணர்,(73) “ஓ! இளவரசனே, நீ என்ன பார்க்கிறாய்? மரத்தைப் பார்க்கிறாயா, என்னைப் பார்க்கிறாயா? அல்லது உனது சகோதரர்களைப் பார்க்கிறாயா?" என்று கேட்டார்.(74) அதற்கு யுதிஷ்டிரன், "நான் மரத்தைப் பார்க்கிறேன், என்னைப் பார்க்கிறேன், எனது சகோதரர்களைப் பார்க்கிறேன். அந்தப் பறவையையும் பார்க்கிறேன்" என்றான். துரோணர் மறுபடியும் அதே கேள்வியை அவனிடம் கேட்டார், மறுபடியும் அதே பதிலே வந்தது.(75) துரோணர் யுதிஷ்டிரனிடம் எரிச்சலடைந்து, "நீ தனியாகப் பிரிந்து நிற்பாயாக. அந்தக் குறியை அடிக்கப்போவது நீயல்ல" என்று கடிந்து கொண்டார்.(76)

துரோணர் அதே தேர்வை துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனின் மற்ற மைந்தர்களுக்கும் ஒருவர் பின் ஒருவராக வைத்தார். மற்ற சீடர்களான பீமன் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்திருந்த ஏனையோருக்கும் அதே தேர்வையே வைத்தார். ஆனால் யுதிஷ்டிரன் சொன்னது போலவே "மரம், தாங்கள், சக மாணவர்கள், பறவை ஆகியவற்றைக் காண்கிறேன்" என்றே அனைவரும் சொன்னார்கள். குருவால் கடிந்து கொள்ளப்பட்ட அவர்கள் தனியாக நிற்க வைக்கப்பட்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(77,78)

ஆதிபர்வம் பகுதி 134ல் உள்ள சுலோகங்கள் : 78

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்