Thursday, September 05, 2013

இந்திரன் அர்ஜுனன் மோதல்! - ஆதிபர்வம் பகுதி 229

The fight between Indra and Arjuna! | Adi Parva - Section 229 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும் அர்ஜுனனுக்கு நடந்த மோதல்; இந்திரன் அர்ஜுனனை நினைவை இழக்கச் செய்தது; தக்ஷகன் மனைவியின் தந்திரம்; இந்திரன் தனது நண்பனின் மகனைக் காக்க நினைப்பது; தக்ஷகன் மகன் தப்பிப்பது; நாகர்கள், கருடர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதியது; தேவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணனுடன் அர்ஜுனனுடனும் மோதியது; தேவர்கள் இந்திரனிடம் தஞ்சம் புகுந்தது; இந்திரன் மீண்டும் தாக்கியது...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, அற்புதமான ஆயுதங்களை அழைத்து, இந்திரனால் உண்டாகப்பட்ட மழையைத் தடுத்தான்.(1) உயர் ஆன்ம அர்ஜுனன், சந்திரன் மூடுபனியால் சுற்று வட்டாரத்தை மறைப்பதைப் போலத் தனது ஆயுதங்களால் காண்டவ வனத்தை மறைத்தான்.(2) அந்தக் கானகத்திற்கு மேலிருந்த வானம் இப்படி அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்ட பிறகு, கீழே இருந்த எந்த உயிரினத்தாலும் தப்ப முடியவில்லை.(3) அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருக்கும்போது, நாகர்கள் தலைவனான தக்ஷகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றிருந்தான்.(4)

ஆனால், தக்ஷகனின் பெரும் பலம் வாய்ந்த மகன் அஸ்வசேனன் {Aswasena} அங்கிருந்தான். அவன் நெருப்பில் இருந்து தப்பிக்கப் பெரும் முயற்சிகளை எடுத்தான்.(5) ஆனால் அர்ஜுனனின் கணைகளால் அடைக்கப்பட்டதால், எந்த வழியையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பாம்பின் மகளாகிய அவனது தாய், அவனை முதலில் விழுங்கி அவனைக் காக்க நினைத்தாள்.(6) அவனது தாய் முதலில் அவனது தலையை விழுங்கினாள். பிறகு அவனது வாலை விழுங்கினாள். தனது மகனின் வாலை விழுங்கிக் கொண்டிருக்கும்போதே அந்தக் கடற்பாம்பு {அஸ்வசேனனின் தாய்} (பூமியில் இருந்து} ஆகாயத்தில் எழுந்தாள்.(7) ஆனால் அவள் தப்புவதைக் கண்ட அர்ஜுனன், தனது கூரிய நுணுக்கமான கணையால் அவளது உடலில் இருந்து தலையைக் கொய்தான். இவற்றையெல்லாம் கண்ட வஜ்ரதாரியான இந்திரன், தனது நண்பனின் மகனைக் காக்க எண்ணிக் கடும் காற்றை எழுப்பி, அர்ஜுனனை நினைவு தவறச் செய்தான். கிடைத்த அந்தக் கணநேரத்தில் அஸ்வசேனன் தப்புவதில் வெற்றியடைந்தான்[1].(8,9)


[1] இங்கு தப்பிய அந்த அஸ்வசேனன், கர்ணனின் இறுதிப் போரில் அவனுக்கு உதவ முன்வருகிறான். கர்ணன் மறுக்கிறான். இருப்பினும் தானாக எதிர்த்துச் சென்று அர்ஜுனனிடம் அழிவை அடைகிறான். இந்தச் செய்தியைக் கர்ண பர்வத்தின் 90ம் பகுதியில் காணலாம்.

அச்சம் தரும் மாயசக்தியின் வெளிப்பாட்டைக் கண்ட அர்ஜுனன், பாம்பால் ஏமாற்றப்பட்டதால் பெரும் கோபம் அடைந்தான். முன்னும் பின்னுமாக உடன் சென்று வான் வழியாகத் தப்பிக்க நினைத்த அனைத்து விலங்குகளையும், இரண்டாகவும், மூன்றாகவும், பல துண்டுகளாகவும் வெட்டிப் போட்டான்.(10) கோபம் கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, அக்னியும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, வஞ்சகமாகத் தப்பிய அந்தப் பாம்பை, "நீ ஒருபோதும் புகழையோ, நிலையையோ அடைய மாட்டாய்" என்று சபித்தனர்.(11) தன்னை ஏமாற்றிய அந்த நிகழ்வை நினைத்த ஜிஷ்ணு {அர்ஜுனன்} மிகுந்த கோபம் கொண்டு கணைகள் எனும் மேகத்தால் வானத்தை மறைத்து, ஆயிரம் கண்கள் உடையவனிடம் {இந்திரனிடம்} மோத முற்பட்டான்.(12) தேவர்கள் தலைவனும் அர்ஜுனனின் கோபத்தைக் கண்டு, அவனுடன் மோத முற்பட்டுத் தனது கடும் ஆயுதங்களை வீசி, வானத்தின் பெரும் பகுதியை மறைத்தான்.(13) பெரும் முழக்கத்தோடு இருந்த காற்று, பெருங்கடல்களைக் கலக்கி, வேகமான நீர்த்தாரைகளை கொண்ட பெரும் மேகத் திரள்களை மொத்தமாகக் கொண்டு வந்தது.(14)

அந்த மேகத்திரள்கள் இடியையும், பயங்கரமான மின்னற்கீற்றுகளையும் வெளியிட்டன. காரணங்களின் அறிவைக் கொண்ட அர்ஜுனன், அந்த மேகங்களை விலக்க,(15) வாயவ்யா என்ற அற்புதமான ஆயுதத்தை அதற்கு உரிய மந்திரங்களுடன் செலுத்தினான். அந்த ஆயுதத்தால், இந்திரனுடைய இடியின் சக்தியும், அந்த மேகங்களும் அழிக்கப்பட்டன. வேகமான நீர்த்தாரைகளாலான மழையால் நிறைந்த அந்த மேகங்கள் அனைத்தும் வற்றச் செய்யப்பட்டன. அங்கே விளையாடிக் கொண்டிருந்த மின்னலும் அகற்றப்பட்டது.(16,17) சிறிது நேரத்திலேயே வானம் புழுதி மற்றும் இருள் அற்றுக் காணப்பட்டது. அருமையான குளிர்ந்த தென்றல் அங்கு வீசியது. சூரிய வட்டில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.(18) தெளிந்த நெய்யை உண்பவன் {அக்னி}, தடை செய்ய யாரும் இல்லாததால், பல வடிவங்களை ஏற்று, உயிரினங்களின் உடலில் இருந்து கசிந்த கொழுப்புகளைத் தெறிக்க வைத்து, அவனது அனைத்துச் சுடர்களையும் வெளியிட்டுப் பிழம்பாக எரிந்து, அண்டத்தையே தனது முழக்கத்தால் நிறைத்தான்.(19)

அற்புதமான இறகுகள் கொண்ட கருட குலத்தைச் சேர்ந்த எண்ணிலடங்காப் பறவைகள், அந்தக் காடு கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் பாதுகாக்கப்படுவதைக் கண்டு, அந்த வீரர்களைத் தங்கள் இடிபோன்ற இறக்கைகளாலும், அலகுகளாலும், கூரிய நகங்களாலும் அடிக்க விரும்பிப் பெருமையுடன் வானில் இருந்து கீழிறங்கின.(20,21) நெருப்பைக் கக்கும் முகம் கொண்ட எண்ணிலடங்கா நாகர்களும் மேலிருந்து கீழிறங்கி அர்ஜுனனை அணுகி, எந்நேரமும் கொடும் விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தன.(22) அவர்கள் அணுகுவதைக் கண்ட அர்ஜுனன் தனது கோபத்தால் உண்டான நெருப்பில் வாட்டப்பட்ட கணைகளைக் கொண்டு அவர்களைத் துண்டுகளாக வெட்டிப் போட்டான். உயிரிழந்த அந்தப் பறவைகளும், பாம்புகளுடன் கீழே எரிந்து கொண்டிருந்த பூதத்தில் {ஐம்பூதத்தில் ஒன்றான நெருப்பில்} விழுந்தன.(23) அங்கே போர்புரிய விரும்பி எண்ணற்ற அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், நாகர்களும் அச்சத்தையூட்டும்படி உரக்கக் கதறிக் கொண்டே வந்தனர்.(24) அவர்கள் பெரும் கோபத்தால் தங்கள் சக்தியும் வீரமும் தூண்டப்பட்டுத் தமது தொண்டைக்குழியில் இருந்து (வாயிலிருந்து) இரும்புக் குண்டுகளையும், வெடிகுண்டுகளையும் கக்கும் இயந்திரங்களையும், பெரிய கற்களை உந்தித் தள்ளும் கவண்களையும், ஏவுகணைகளையும் எடுத்துக் கொண்டு, கிருஷ்ணனையும் பார்த்தனையும் தாக்க வந்தனர்.(25)

ஆனால், அவர்கள் ஆயுதங்களை மழையெனச் சரியாகப் பொழிந்தாலும், பீபத்சு {அர்ஜுனன்} அவர்களுக்கு நிந்தனை செய்யும் வகையில் பதில் சொல்லி, அவர்களது தலையைத் தனது கூரிய கணைகளால் அடித்தான்.(26) எதிரிகளைக் கொல்லும், பெரும் சக்தி கொண்ட கிருஷ்ணனும் தைத்தியர்களையும், தானவர்களையும் தனது சக்கரத்தால் படுகொலை செய்தான்.(27) அளவிலாப் பலம் கொண்ட பல அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் துளைக்கப்பட்டும், சக்கரத்தின் வலுவால் தாக்கப்பட்டும், தனித்து விடப்பட்டு வழி தவறிக் கிடக்கும் அனாதைக் குழந்தையைப் போல அலைகளின் கடுமையைக் கொண்ட கரையில் அசைவற்றுக் கிடந்தனர்.(28) தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, தனது வெள்ளைக் குதிரையில் ஏறி, அந்த வீரர்களிடம் விரைந்து, பொய்க்காத தனது இடி ஆயுதத்தை {வஜ்ராயுதத்தை} எடுத்துப் பெரும் பலத்துடன் ஏவினான்.(29) பிறகு அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தேவர்களிடம், "இந்த இருவரும் கொல்லப்பட்டனர்" என்று சொன்னான்.(30)

கடுமையான வஜ்ர ஆயுதத்தை இந்திரன் ஏவப்போவதைக் கண்ட தேவர்கள் ஆளாளுக்கு அவர்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர்.(31) ஓ மன்னா {ஜனமேஜயா}, யமன்  மரணத்தைக் கொடுக்கும் கதாயுதத்தையும், குபேரன் முள் பதித்த கதாயுதத்தையும் {பரிகத்தையும்}, வருணன் சுருக்கு {பாசக்} கயிற்றையும், அழகிய ஏவுகனையையும்,(32) ஸ்கந்தன் (கார்த்திகேயன்) {முருகன்} தனது சக்தி ஆயுதத்தையும் {வேலையும்} எடுத்துக் கொண்டு மேரு மலையென அசையாது நின்றார்கள். அஸ்வினி தேவர்கள் தங்கள் கரங்களில் பிரகாசமிக்கச் செடிகளுடன் நின்றனர்.(33) தாத்ரி {படைப்பாளன்} தனது கையில் வில்லுடனும், ஜெயா தனது கையில் கதையுடனும், பெரும் பலம் கொண்ட துவஷ்திரி கோபம் கொண்டு பெரும் மலையைத் தூக்கிக் கொண்டும்,(34) சூரியன் பிரகாசமான கணையுடனும், மிருத்யு போர்க்கோடரியுடனும், ஆர்யமான் கூர்முனை கொண்ட கனத்த தண்டத்துடனும்,(35)

மித்ரன் கத்தி போன்ற கூர்மையுடைய சக்கரத்துடனும் நின்றனர்.  ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பூஷன், பகன், சாவித்ரி {ஸவிதா} ஆகியோர்,(36) கைகளில் விற்களும், வளைந்த பட்டா கத்திகளும் கொண்டு, கோபத்துடன் கிருஷ்ணனிடமும் பார்த்தனிடம் {அர்ஜுனனிடமும்} விரைந்தனர். ருத்ரர்களும், வசுக்களும், பலம்வாய்ந்த மருத்துகளும்,(37) விஸ்வதேவர்களும், சத்யஸ்களும் தங்கள் சக்தியாலேயே பிரகாசமாக இருக்கும் பல தேவர்களும் கைகளில் பல ஆயுதங்களுடன் அந்த உயர்ந்த மனிதர்களான கிருஷ்ணனிடமும் பார்த்தனிடமும் {அர்ஜுனனிடமும்} அவர்களை அடித்து வீழ்த்த விரைந்தனர். விரைவில் ஏதோ நிகழப் போவதை முன்னறிவிக்குமாறு அந்தப் பெரும் மோதல் இருந்தது.(38,39)

தீச்சகுனங்கள் தோன்றின. பல உயிர்களின் உணர்வுகள் அங்கே கொள்ளை போவது தெரிந்தது. அண்டக் கலைப்புக்கான {பிரளயத்துக்கான} நேரம் வந்ததைப் போலக் காட்சியளித்தது. ஆனால், அச்சமற்ற போரில் தோல்வியுறாத அர்ஜுனனும் கிருஷ்ணனும், மோதத் தயாராக இருக்கும் சக்ரனையும் {இந்திரனையும்} தேவர்களையும் கண்டு, கைகளில் வில்லுடன் அமைதியாகக் காத்திருந்தனர். போரில் திறன் பெற்ற அந்த வீரர்கள், பெரும் கோபம் கொண்டு அந்தத் தேவர்களை நோக்கி முன்னேறி, இடியைப் போன்ற தங்கள் கணைகளைத் தொடுத்தனர்.(40-42) தொடர்ச்சியாகக் கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் தாக்கப்பட்ட அந்தத் தேவர்கள், கடைசியாக அச்சமுற்றுப் போர்க்களத்தை விட்டு அகன்று, இந்திரனின் பாதுகாப்பைக் கோரினர். மாதவனிடமும் {கிருஷ்ணனிடமும்} அர்ஜுனனிடமும் தோல்வியுற்ற தேவர்களைக் கண்டு,(43) வானில் சாட்சிகளாக நின்று கொண்டிருந்த முனிவர்கள் அச்சரியமடைந்தனர். அவர்களது ஆற்றலை சாட்சியாகத் தொடர்ந்து கண்ட சக்ரன் {இந்திரன்},(44) அவர்களிடம் பெரும் மனநிறைவு கொண்டு, மீண்டும் தாக்குதல் நடத்த விரைந்தான். பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} இடது கையாலும் வில்லின் நாண் இழுக்க வல்ல அர்ஜுனனின் வீரத்தை உறுதி செய்ய நினைத்து, கற்களை மிக அடர்த்தியான மழையாகப் பொழிந்தான். பெரும் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது கணைகளை அடர்த்தியான மழையாகப் பொழிந்து அவற்றை விலக்கினான்.(45,46)

ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, தனது கல் மழை தடுக்கப்பட்டதைக் கண்டு, இன்னும் அடர்த்தியாகக் கற்களைப் பொழிந்தான்.(47) ஆனால் பகனைத் தண்டித்தவனின் மகன் (அர்ஜுனன்) அந்தக் கல் மழையைத் தனது வேகமான கணைகளால் தடுத்துத் தன் தந்தையை {இந்திரனை} மனநிறைவு கொள்ளச் செய்தான்.(48) பாண்டுவின் மகனை அடிக்க நினைத்த சக்ரன் {இந்திரன்}, மந்தர மலையின் சிகரம் ஒன்றைத் தனது கையால் பெயர்த்தெடுத்து, அவன் {அர்ஜுனன்} மீது வீசினான்.(49) ஆனால், அர்ஜுனன், நெருப்பு வாய்க் கொண்ட தனது வேகமான கணைகளால், அந்த மலைச் சிகரத்தை ஆயிரம் துண்டுகளாகச் சிதறச் செய்தான்.(50) வானிலிருந்து விழுந்த அந்த மலைத்துண்டுகளைப் பார்ப்பதற்கு, ஏதோ சூரியனும், சந்திரனும், கோள்களும் தங்கள் இடத்திலிருந்து நகர்ந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.(51) அந்தப் பெரும் சிகரத்தின் துண்டுகள் கானகத்தில் விழுந்து, அந்தக் காண்டவ வனத்தில் வசித்த எண்ணிலடங்கா உயிரினங்களை அழித்தது" {என்றார் வைசம்பாயனர்}.(52)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்