What present did Cholas and Pandyas made? | Sabha Parva - Section 51 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
ராஜசூய வேள்விக்காக யுதிஷ்டிரனுக்கு காணிக்கையாக வந்த விலை உயர்ந்த பொருட்களைக் குறித்து துரியோதனன் விரிவாக திருதராஷ்டிரனுக்கு உரைத்தது;
துரியோதனன் சொன்னான், "ஓ பாவமற்றவரே {தந்தை திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரனுக்கு பூமியின் மன்னர்கள் கொடுத்த பலதரப்பட்ட காணிக்கைகளான பெரும் செல்வத்தை நான் சொல்கிறேன் கேளும். மேருவுக்கும் மந்தர மலைக்கும் நடுவில் பாயும் சைலோதா நதிக்குப் பக்கத்தில் கிசாக என்ற மூங்கில்களின் நிழலில் வசிக்கும் கஷர்கள், ஏகசானாக்கள், அர்ஹர்கள், பிரதரர்கள், தீர்க்கவேணுகள், பாரடாக்கள், குலிந்தர்கள், தங்கனர்கள் ஆகியோர் எறும்புப்புற்றிலிருந்து வெளிக்கொணரும் சிறந்த தங்கத்தைக் காணிக்கையாகக் குவியல் குவியல்களாகக் கொண்டு வந்தனர். அவை துரோணங்களில் (பாத்திரங்களில்) {மரக்கால் என்கிறது ம.வீ.ரா பதிப்பு} அளக்கப்பட்டன.
பெரும் பலம் வாய்ந்த மலைவாழ் பழங்குடிகள் எண்ணிலடங்கா மென்மையான சாமரங்களைக் (நீண்ட தூரிகைகள்) கொண்டு வந்தனர். அவை கருப்பாகவும், சில சந்திரபிம்பத்தைப் போன்று வெள்ளையாகவும் இருந்தன. மேலும் அவர்கள் இமயத்தில் விளையும் பூக்களிலிலும், மிஷாலி சம்பகம் என்ற பூக்களிலும் எடுக்கப்பட்ட இனிமையான தேனையும், வடகுருக்கள் பகுதியிலிருந்து மலர் மாலைகளையும், இன்னும் வடக்கே கைலாசத்தில் இருந்து கூட வித்தியாசமான செடிகளையும் கொண்டு வந்து உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகை வாசலில் தலையைக் கவிழ்ந்தவாறு காத்திருந்தனர். இமய மலைக்குப் பின்புறத்திலும், சூரியன் உதயமாகிற மலைச்சாரலிலும், கடற்கரையிலும், லோகித்ய மலைகளின் இருபுறத்தில் இருந்தும் வந்திருந்த கொடும் ஆயுதங்கள் தாங்கி, கொடுஞ்செயல்களைச் செய்து, பழங்களும் கிழங்குகளும் உண்டு, தோலாடை உடுத்தும் எண்ணிலடங்க கிராதர்களின் தலைவர்களையும் நான் அங்கு கண்டேன்.
ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, அவர்கள் பெரும் அளவிலான சந்தனத்தையும், பல வகை கற்றாழைகளுடன், கருப்பு கற்றாழையும், குவியல் குவியலாக மதிப்பு மிக்க தோல்களும், தங்கங்களும், நறுமணப்பொருட்களும், தங்கள் குலத்தைச் சார்ந்த பத்தாயிரம் பணிப்பெண்களையும், பல தொலைதூர நாடுகளில் இருந்து பல அழகான விலங்குகள் மற்றும் பறவைகளையும், மலைகளில் இருந்து கொணரப்பட்ட பெரும் பிரகாசமுள்ள தங்கத்தையும் கொண்டு வந்த அந்த கிராதர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.
கைராதர்கள், தரதர்கள், தர்வர்கள், சூரர்கள், வையாமகர்கள், அவுதும்பரர்கள், துர்பிபகர்கள், குமாரர்கள், பாரடர்களுடன் கூடிய பால்ஹீகர்கள், காஷ்மீரர்கள், கோரகர்கள், ஹம்சகயணர்கள், சிவிக்கள், திரிகார்த்தர்கள், யௌதேயர்கள், மத்ர நாட்டு ஆட்சியாளன், கைகேயர்கள், அம்வஸ்தர்கள், கௌகுரர்கள், தர்க்ஷியர்கள், வஸ்திரபர்கள், பால்ஹவர்கள், வஷதயர்கள், மௌலேயர்கள் க்ஷுத்ரகர்கள், மாளவர்கள், பௌந்திரயர்கள், குக்குரர்கள், சகர்கள், அங்கர்கள், வங்கர்கள், பூனர்கள், சனவத்ஸயர்கள், கயர்கள் ஆகிய ஆயுதங்களில் நல்ல பயிற்சியுடைய நற்குடியில் பிறந்த க்ஷத்திரியர்கள், மன்னர் யுதிஷ்டிரனுக்கு நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான காணிக்கைகளைக் கொண்டு வந்தனர்.
வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், தம்ரலிப்தர்கள், சுபுந்திரகர்கள், தௌவாஇகர்கள், சகரகர்கள், பட்ரோர்னர்கள், சைசவர்கள், எண்ணிலடங்கா கர்ணபிரவாரணர்கள் ஆகியோர் வாயில் முன் திரண்டனர். அவர்களை மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், காக்க முடிந்தவர்களும், நல்ல காணிக்கை கொண்டு வருபவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று வாயில் காப்போர் கூறினர். பிறகு அந்த நாடுகளின் மன்னர்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, உயர்ந்த விரிப்புகளால் மூடப்பட்டு ஏர் போன்ற தந்தங்களை உடைய யானைகளைக் ஆளுக்கு ஆயிரம் {1000} என கொடுத்தனர். அவை தாமரையின் வண்ணத்தில் இருந்தன. பாறைகள் போன்று கருமையாகவும், எப்போதும் மந்தமாகவும் இருக்கும் அவை, காம்யக ஏரியின் பக்கத்திலிருந்து பெறப்பட்டு கவசங்கள் பூட்டப்பட்டவை ஆகும். அந்த யானைகள் அதிக பொறுமை உடையனவாகும், உயர்ந்த வகையாகவும் இருந்தன. இந்தக் காணிக்கைகளைக் கொடுத்த பிறகு, அந்த மன்னர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
ஓ மன்னா, இவர்களும், பலதரப்பட்ட பகுதிகளிலிருந்து வந்த இன்னும் பலரும், இன்னும் எண்ணிலடங்கா சிறப்பு மிகுந்த மன்னர்களும், வேள்விக்காக நகைகளையும் ரத்தினங்களையும் கொண்டு வந்தனர். இந்திரனின் நண்பனும் கந்தர்வர்களின் மன்னனுமான **சித்திரரதன் காற்றின் வேகம் கொண்ட நானூறு {400} குதிரைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான். தும்புரு என்ற கந்தர்வன் மாவிலை நிறம் கொண்டு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட நூறு {100} குதிரைகளை மகிழ்ச்சியாக கொடுத்தான். ஓ குரு குலத்தவரே {தந்தை திருதராஷ்டிரரே}, மிலேச்ச பழங்குடிகளால் கொண்டாடப்படும் மன்னன் சுகராஸ், பல நூற்றுக்கணக்கான அற்புதமான யானைகளைக் கொடுத்தான். மத்ஸ்ய நாட்டு மன்னன் விராடன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான். பாம்சு நாட்டைச் சேர்ந்த மன்னன் வசுதானன், பாண்டுவின் மகனுக்கு இருபத்தாறு{26} யானைகளையும், இருநூறு குதிரைகளையும் காணிக்கையாகக் கொடுத்தான். ஓ மன்னா, அவை அனைத்தும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இளமையுடன் பெரும் வேகம் செல்லக்கூடியதாகவும் இருந்தது. அவன் இன்னும் பல செல்வங்களையும் கொடுத்தான்.
யக்ஞசேனன் அந்த வேள்வியில் பாண்டுவின் மகன்களுக்கு, பதினாலாயிரம் {14000} பணிப்பெண்களையும், அவரவர் மனைவிகளுடன் பத்தாயிரம் {10000} ஆண் பணியாட்களையும், பல நூறு அற்புதமான யானைகளையும், யானைகளால் இழுக்கப்பட்ட இருபத்தாறு {26} தரதங்களையும், மேலும் தனது முழு நாட்டையும் கொடுத்தான். பிறகு விருஷ்ணி குலத்தின் {யாதவ குலத்தின்} வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் பெருமையை உயர்த்த, பதினாலாயிரம் {14000} அற்புதமான யானைகளைக் கொடுத்தான். உண்மையில், கிருஷ்ணனின் ஆன்மாவாக அர்ஜுனன் இருக்கிறான். அர்ஜுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருக்கிறான். அர்ஜுனன் செய்யும் எதையும் கிருஷ்ணன் சாதிப்பான். கிருஷ்ணன், அர்ஜுனனுக்காக சொர்க்கத்தையே கூட புறக்கணிக்கும் தகுதி படைத்தவனாவான். அர்ஜுனன், கிருஷ்ணனுக்காகத் தனது உயிரையே கொடுப்பான்.
சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள், தங்கப்பாத்திரங்களில் நிரப்பப்பட்ட மலைய {Malaya} மலைகளில் மட்டுமே விளையும் சந்தனச் சாறையும், பெரும் அளவிலான சந்தனத்தையும், தர்துரா {Dardduras hills} மலைகளிலிருந்து கற்றாழைக் கட்டைகளையும், அதிக பிரகாசமுடைய ரத்தினங்களையும், தங்கத்தால் பிண்ணபட்ட அற்புதமான ஆடைகளையும் கொண்டு வந்தும், அவர்களுக்கு {சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு} உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. கடலில் விளையும் சிறந்த ரத்தினங்களையும் கொண்டு வந்த சிங்கள மன்னன், கூடவே குவியல் குவியலாக முத்துகளையும், யானைகளுக்கான நூற்றுக்கணக்கான விரிப்புகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் உடுத்தி, கண்களின் ஓரம் தாமிரம் போலச் சிவந்த எண்ணிலடங்கா கருநிற மனிதர்களையும் கொண்டு வந்து அந்தக் காணிக்கைகளுடன் வாயிலில் காத்திருந்தான். எண்ணிலடங்கா அந்தணர்களும், வீழ்த்தப்பட்ட க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சேவகம் செய்யும் சூத்திரர்களும், யுதிஷ்டிரன் மீதிருந்த அன்பால் அந்தப் பாண்டுவின் மகனுக்காகக் {யுதிஷ்டிரனுக்காகக்} காணிக்கைகள் கொண்டு வந்தனர். பல குலங்களுக்குச் சொந்தமான சிறந்த, மத்திம, தாழ்ந்த எல்லாதரப்பு மக்களும், பலதரப்பட்ட நிலங்களில் இருந்து வந்து, யுதிஷ்டிரனின் வசிப்பிடதையே மற்றொரு உலகமாக மாற்றினர்.
பூமியின் மன்னர்கள் இப்படி அற்புதமான மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளைக் கொடுப்பதைக் கண்ட நான் துக்கத்தால் மரணத்தை விரும்பினேன். ஓ மன்னா, நான் இனி பாண்டவர்களின் பணியாட்களையும், யுதிஷ்டிரன் சமைத்த மற்றும் சமைக்காத உணவு கொடுக்கும் மக்களையும் பற்றிச் சொல்கிறேன் கேளும். அங்கே நூறு லட்சம் கோடி {கோடி கோடி_ hundred thousand billion 10000000,0000000} {மூன்று கோடியே பதினாயிரவர் என்று சொல்கிறது ம.வீ.ரா பதிப்பு} யானையும், குதிரைகளும், பத்து கோடி {hundred million 10,0000000} ரதங்களும், எண்ணிலடங்கா காலாட்படை வீரர்களும் இருக்கின்றனர். ஒரு இடத்தில் சமைக்கப்படாத மூலப்பொருட்கள் அளக்கப்பட்டன; மற்றொரு இடத்தில் அவை சமைக்கப்பட்ட; மற்றொரு இடத்தில் அவை பரிமாறப்பட்டன. அந்தக் கோலாகல விழாவின் இசை எல்லா இடங்களிலும் கேட்கப்பட்டது. யுதிஷ்டிரனின் மாளிகையில் இருந்த அனைத்து வகை மனிதர்களிலும் ஒருவர் கூட உணவில்லை என்றோ ஆபரணங்கள் இல்லை என்றோ யாரையும் நான் காணவில்லை. குடும்ப வாழ்வு வாழும் எண்பத்தெட்டாயிரம் {88000} ஸ்நாதக அந்தணர்கள் யுதிஷ்டிரனால் தாங்கப்பட்டனர். அவன் {யுதிஷ்டிரன்} அவர்கள் ஒவ்வொருக்கும் முப்பது {30} பணிப்பெண்களைக் கொடுத்து திருப்திப்படுத்தினான். அப்படித் திருப்தியடைந்த அவர்கள் {அந்தணர்கள்}, அவனது {யுதிஷ்டிரனது} எதிரிகளின் அழிவுக்கு இதயத்தால் வேண்டி நிற்கிறார்கள். ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே} யக்ஞசேனி {திரௌபதி}, தான் உண்ணவில்லை என்றாலும், அனைவரும் உண்டுவிட்டார்களா என்பதைத் தினமும் பார்க்கிறாள். அதில் அங்கஹீனர்களும் குள்ளர்களும் அடக்கம். ஓ பாரதரே {தந்தை திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்கள் திருமணத்தாலான அவர்களது உறவு நிலையாலும் மற்றும் அந்தக விருஷ்ணிக்கள் {யாதவர்கள்} நட்பு நிலையாலும் என அந்த இரு குலங்கள் மட்டுமே எதையும் கப்பமாகக் கொடுக்கவில்லை" என்றான் {துரியோதனன்}.
** சித்திரரதன் என்பவன் அர்ஜுனனுடன் போரிட்ட கந்தர்வனாவான் - மேலும் விவரங்களுக்கு : அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172 காண்க
--------------------------------------------------------------
** சித்திரரதன் என்பவன் அர்ஜுனனுடன் போரிட்ட கந்தர்வனாவான் - மேலும் விவரங்களுக்கு : அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172 காண்க
![]() |
![]() |
![]() |