Proverb of Duryodhana | Sabha Parva - Section 54 | Mahabharata In Tamil
(தியூத பர்வத் தொடர்ச்சி)
திருதராஷ்டிரனுக்கு துரியோதனன் சொல்லும் நீதிகள்
துரியோதனன் சொன்னான், "அறிவாற்றல் இல்லாமல், பல பொருட்களைப் பற்றி கேள்வியறிவு மட்டுமே கொண்டிருக்கும் ஒருவன், கறியைத் தொடும் அகப்பையானது அந்தக் கறிச்சுவையை அறியாததைப் போல சாத்திரங்களின் கருத்தை அறியமாட்டான். நீர் அனைத்தையும் அறிந்தும் என்னைக் குழப்புகிறீர் {திகைக்க வைக்கிறீர்}. ஒரு படகில் கட்டப்பட்ட மற்றொரு படகு போல, நானும் நீரும் கட்டப்பட்டிருக்கிறோம். உமது சொந்த காரியங்களையே கவனிக்காமல் இருக்கிறீரா? அல்லது என் மீதான பகைமை உணர்ச்சியை ஊக்குவிக்கிறீரா? தற்காலத்தில் செய்யப்பட வேண்டியதை எதிர்காலத்தில் அடையலாம் என்று சொல்லும் உம்மை ஆட்சியாளராகப் பெற்ற, உமது மகன்களும் கூட்டாளிகளும் அழிந்து போய் விடுவார்கள். பிறர் சொல் கேட்கும் ஒருவனை வழிகாட்டியாகக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வழி தவறுவார்கள். அவனைப் பின் தொடர்பவர்கள் எப்படி சரியான பாதையை அடைவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, நீர் முதிர்ந்த ஞானம் உடையவர்; முதிர்ந்தவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் பெற்றவரும், உமது உணர்வுகளை உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவரும் ஆவீர். நமது விருப்ப காரியங்களைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களைக் குழப்பாதீர். மன்னர்களின் நடத்தை சாதாரண மக்களிலிருந்து வேறுபட்டது என்று பிருஹஸ்பதி {தேவ குரு} சொல்லியிருக்கிறார். ஆகையால் மன்னர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் தங்கள் சுய நலனை கவனித்துக் கொள்ள வேண்டும். வெற்றி அடைதலே க்ஷத்திரியர்களின் நடத்தைக்கு வழிகாட்டும் ஒரே பிரமாணமாக இருக்க வேண்டும். ஆகையால், அவை அறம் சார்ந்ததோ அல்லது பாவகரமானதோ, எதுவாக இருப்பினும், தனது சொந்த ஒழங்குக்கு {தனது வகைக்கு} ஏற்ற கடமைகளைச் செய்யும்போது அது எப்படி பழி பாவத்திற்கு உட்பட்டதாக இருக்க முடியும்?
தனது எதிரியின் பிரகாசமிக்க செல்வத்தை பறிக்க விரும்பும் ஒருவன், ஓ பாரத குலத்தின் காளையே {தந்தை திருதராஷ்டிரரே}, சாட்டை கொண்டு குதிரைகளைப் பழக்கும் ரதசாரதி போல, அனைத்து திசைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஆயுதம் வெறும் வெட்டும் கருவி மட்டுமல்ல, மறைவான அல்லது வெளிப்படையான எதிரியை வீழ்த்துவதாகும் என்று ஆயுதங்கள் கையாள்வதை வழக்கமாகக் கொண்டோர் சொல்கின்றனர். எதிரியாகவோ நண்பனாகவோ அறியப்பட்ட ஒருவனது உருவமோ அங்க லட்சணமோ அவசியமல்ல. ஒருவனுக்கு வலியை உண்டாக்கும் மற்றொருவன், ஓ மன்னா, வலியை உணர்பவனுக்கு எதிரியாவான்.
திருப்தியின்மையே செழிப்பின் வேராகும். ஆகையால், ஓ மன்னா {தந்தை திருதராஷ்டிரரே}, நான் அதிருப்தியுடன் இருக்கவே விரும்புகிறேன். செழுமை கையகப்படுத்தப்பட்ட பிறகும், கடுமையாக முயற்சி செய்யும் ஒருவனே, ஓ மன்னா, உண்மையான அரசியல்வாதியாவான். சம்பாதிக்கப்பட்ட செல்வம் பதுக்கப்படும்போதும் கொள்ளையடிக்கப்படலாம். ஆகையால், யாரும் செல்வத்திலும் செழுமையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. இதுவே மன்னர்கள் நடத்தையாக இருக்கிறது. சக்ரன் {இந்திரன்}, அமைதிக்கான வாக்கு கொடுத்த பிறகு நமுச்சியின் தலையைத் துண்டித்தான். இது எதிரிக்கு எதிரான இந்த நிலைத்த நடத்தையை அவன் {இந்திரன்} அங்கீகரிப்பதாக உள்ளது.
தவளைகளையும், வளையில் வாழும் விலங்குகளையும் விழுங்கும் பாம்பைப் போல, அமைதியுடன் இருக்கும் மன்னனையும், வீட்டை விட்டு வெளியே வராத அந்தணனையும் இந்தப் பூமி விழுங்கிவிடுகிறது. ஓ மன்னா, இயற்கையிலேயே எவனும் எவனுக்கும் எதிரியாக இருக்க முடியாது. பொதுவான நாட்டங்கள் உள்ளவனே ஒருவனுக்கு எதிரியாக இருக்கிறான். அவனே மற்ற நாட்டம் உள்ளவனுக்கு எதிரியாக இல்லை. வளரும் பகைவனை தனது மடத்தனத்தால் {அறியாமையால்} கவனிக்காதவன், சிகிச்சையற்ற நோயினால் உயிர்ப் பறிக்கப்படுவைப் போல அழிந்து போவான். அதிக முக்கியத்துவம் இல்லாத எதிரியாக இருப்பினும், அவன் வீரத்தில் வளர்ந்து வந்தால், மரத்தின் வேரருகே இருக்கும் வெள்ளை எறும்புகள் அந்த மரத்தையே உண்டுவிடுவதைப் போல விழுங்கிவிடுவான்.
ஓ பாரதரே {தந்தை திருதராஷ்டிரரே}, ஓ அஜமிதரே {அஜமித வம்சத்தவரே}, எதிரியின் செழிப்பு உமக்கு ஏற்புடையது அல்லாததாக இருக்கட்டும். இந்தக் கொள்கையை, சுமையைப் போல ஞானமுள்ளோர் எப்போதும் தலையில் சுமக்க வேண்டும். எப்போதும் தனது செல்வ வளர்ச்சியை விரும்பும் ஒருவன், தனது உறவினர்கள் மத்தியில், பிறப்பிலிருந்து இயல்பாக வளர்ந்து வருவது போல வளர்ந்து வருவான். வீரம் விரைவான வளர்ச்சியைக் கொடுக்கும். பாண்டவர்களின் செல்வத்தை நான் விரும்பினாலும், இன்னும் அதை எனது சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. தற்சமயம், நான் எனது திறமையில் இருக்கும் சந்தேகங்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த எனது சந்தேகங்களை தீர்க்க தீர்மானத்துடன் இருக்கிறேன். ஒன்று நான் அவர்களது {பாண்டவர்களது} செல்வத்தை அடைவேன். அல்லது போரில் மடிந்து வீழ்வேன். ஓ மன்னா, மனதின் நிலை இவ்வாறு உள்ள போது, பாண்டவர்கள் தினமும் செல்வ நிலையில் வளர்ந்து கொண்டும், நாம் வளராமலும் இருக்கும் நிலையில், நான் என் வாழ்வுக்காக ஏன் கவலைப்படுவேன்?" என்றான் {துரியோதனன்}.
![]() |
![]() |
![]() |