Sunday, October 13, 2013

ஹஸ்தினாபுரம் வந்த பாண்டவர்கள் - சபாபர்வம் பகுதி 57

Pandavas came to Hastinapore | Sabha Parva - Section 57 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 13)

பதிவின் சுருக்கம் : விதுரன் இந்திரப்பிரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை அழைப்பது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; விதுரன் அஃதை ஆமோதிப்பது; திருதராஷ்டிரன் கட்டளையை இருவரும் ஏற்று ஹஸ்தினாபுரம் வருவது; ஹஸ்தினாபுரம் வந்த பாண்டவர்கள் உறவினர்கள் அனைவரையும் சந்திப்பது...

Vidura and Yudhishthira

வைசம்பாயனர் சொன்னார், "தன் விருப்பத்திற்கு மாறாக மன்னன் திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட விதுரன், அதிக உறுதியும், பெரும் வேகமும், பலமும் கொண்ட குதிரைகள் உதவியுடன் அமைதியாகவும் பொறுமையாகவும், பாண்டுவின் ஞானமுள்ள மகன்கள் வசிப்பிடத்திற்குப் புறப்பட்டான்.(1)  பெரும் புத்திசாலித்தனம் கொண்ட விதுரன் பாண்டவர்த் தலைநகரம் போகும் பாதையில் முன்னேறிச் சென்றான். மன்னன் யுதிஷ்டிரனின் நகரத்தை அடைந்து, அதற்குள் நுழைந்து, எண்ணிலடங்கா பிராமணர்களால் வணங்கப்படும் அரண்மனையை நோக்கி முன்னேறினான்.(2) குபேரனின் மாளிகை போல இருந்த அந்த அரண்மனைக்கு வந்த அறம்சார்ந்த விதுரன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை அணுகினான்.(3) பூமியில் எந்த எதிரியும் இல்லாதவனும், வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான அந்த சிறப்புவாய்ந்த அஜமீடன் {யுதிஷ்டிரன்}, விதுரனை வணங்கி, திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்கள் குறித்து விசாரித்தான்.(4) 

யுதிஷ்டிரன், "ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே} மகிழ்ச்சியற்ற மனங்கொண்டவராகத் தெரிகிறீர். அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் தானே இங்கு வந்திருக்கிறீர்? திருதராஷ்டிரரின் மகன்கள், முதிர்ந்தவரான அவர்களின் தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள் என்று நம்புகிறேன். மக்கள், திருதராஷ்டிரரின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்றும் நம்புகிறேன்" என்றான்.(5)

விதுரன், "தமது மகன்களுடன் கூடிய சிறப்புமிக்க மன்னர் {திருதராஷ்டிரர்} நலமாகவும், தமது உறவினர்கள் சூழவும் இந்திரனைப் போல ஆண்டு வருகிறார். தமக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது மகன்கள் அனைவராலும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதி, தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்புடன் இருக்கிறார்.(6) குருக்களின் மன்னர் {திருதராஷ்டிரர்}, உன் {உள்ள} அமைதி {குறைவின்மை} மற்றும் செழிப்பை விசாரிக்குமாறும், திருதராஷ்டிரர் புதிதாகக் கட்டியிருக்கும் அரண்மனையானது, உன்னுடையதற்கு {உன் அரண்மனைக்கு} நிகராக இருக்கிறதா என்று காண்பதற்கு உன் தம்பிகளுடன் கூடிய நீ ஹஸ்தினாபுரத்திற்கு வருமாறு உன்னிடம் கேட்கவும் எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.(7) ஓ பிருதையின் மகனே, நீ உன் தம்பிகளுடன் அங்கே வந்து மகிழ்ந்திருந்து, நட்புரீதியிலான ஒரு பகடையாட்டத்தில் அமர்வாயாக. குருக்கள் ஏற்கனவே வந்துவிட்டனர் என்பதால் நீயும் அங்கே சென்றால் நாங்கள் மகிழ்வோம்.(8) சிறப்புமிக்க மன்னர் திருதராஷ்டிரர் அங்கே கொண்டு வந்திருக்கும் சூதாடிகளையும், வஞ்சகர்களையும் நீ காண வேண்டும். ஓ மன்னா, இதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். மன்னரின் ஆணையை நீ அங்கீகரிப்பாயாக." என்றான் {விதுரன்}[1].(9)

[1] கும்பகோணம் பதிப்பில் விதுரர், "ராஜாவே, மஹாத்மாவான திருதராஷ்டிர மஹாராஜா தம் புத்ரர்களாலும், குலத்தோராலும் சூழப்பெற்று இந்திரன் போல ஸுகமாக இருக்கிறார். அந்த மஹாத்மாவானவர், தம் புத்ரர்களுடைய குணங்களால் மாற்றப்பட்டவராய் வ்யஸனத்தைவிட்டுத் தம்மிலேயே ஸுகமடைந்து ஸந்தோஷமுற்றிருக்கிறார். கௌரவராஜாவான் திருதராஷ்டிரர் முதலில் உன்னுடைய க்ஷேமத்தையும், குறைவின்மையையும் விசாரித்து, பிறகு, "புத்ரனே, உன் ஸஹோதரர்களின் இந்த ஸபை உன் ஸபைக்குச் சமமான அழகுள்ளதாயிருக்கிறது. நீ வந்து பார்க்க வேண்டும். குந்தி புத்திரனே, ஸஹோதரர்களுடன் கூட நீ இந்தச் சபைக்கு வந்து ஸ்நேஹிதர்களுக்குள் சொக்கட்டானாட்டத்தை ஆடி மகிழ வேண்டும். நீங்கள் எல்லாரும் சேருவதில் நமக்கு விருப்பமிருக்கிறது. கௌரவர்களனைவரும் முன்னமே வந்து சேர்ந்திருக்கின்றனர்" என்று (உனக்குச் சொல்லும்படி) சொன்னார். ராஜாவே, மஹாத்மாவான திருதராஷ்டிர மஹாராஜாவினால் ஏற்படுத்தப்பட்டு அந்தச் சபையில் உட்கார்ந்திருக்கும் மோசக்காரர்களான சூதாட்டக்காரர்களை நீ பார்க்கக்கடவாயென்பதைச் சொல்வதற்காக நான் வந்தேன். இதை நீ செய்வாயாக" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "தமது மகன்களுடன் கூடிய சிறப்புமிக்க மன்னர் {திருதராஷ்டிரர்} நலமா இருக்கிறார். தமது உறவினர்கள் சூழ இந்திரனைப் போல அவர் ஆண்டு வருகிறார். ஓ மன்னா, தமக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது மகன்கள் அனைவராலும் அந்த ஏகாதிபதி மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் அவர் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்புடன் இருக்கிறார்.(6) குருக்களின் மன்னர் {திருதராஷ்டிரர்}, முதலில் உன்  அமைதி மற்றும் செழிப்பை விசாரிக்குமாறும், அதன் பிறகு அவரது சார்பில் பின்வருமாறு சொல்லவும் எனக்கு ஆணையிட்டிருக்கிறார். (அவர் உன்னிடம்) "(என்னால் கட்டப்பட்டிருக்கும்) உன் தம்பியின் சபா மண்டபம் உன் சபைக்கு இணையானதாக இருக்கிறது. எனவே, (வந்து) அதைப் பார்ப்பாயாக..(7) ஓ பிருதையின் மகனே, அங்கே வந்து அரண்மனையில் இன்புற்றிருந்து, உன் தம்பிகளுடன் {துரியோதனாதிகளுடன்} சேர்ந்து நட்புரீதியிலான ஒரு பகடையாட்டம் ஆடுவாயாக. உன் வருகையில் நாமும், அங்கே திரண்டிருக்கும் குருக்கள் அனைவரும் மகிழ்வோம்" {என்றும் சொல்லச் சொன்னார்}.(8) ஓ மன்னா, சிறப்புமிக்க மன்னர் திருதராஷ்டிரர் கொண்டு வந்திருக்கும் வஞ்சகச் சூதாடிகளை நீ அங்கே காண்பாய். இதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். மன்னரின் ஆணையை நீ அங்கீகரிப்பாயாக.(9)" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளது போன்றே இருக்கிறது. இந்த உரையாடலே சரியானதாகவும் தெரிகிறது. கங்குலியின் பதிப்பில் வாக்கியங்களின் அமைப்பில் வேறுபாடு தெரிகிறது.

யுதிஷ்டிரன், "ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே}, நாம் பகடையாட அமர்ந்தால், நமக்குள் சச்சரவு தோன்றக்கூடும். இதை அறிந்தும் எந்த மனிதன் சூதாட இணங்குவான்? எங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று நீர் நினைக்கிறீர்? நாங்கள் அனைவரும் உமது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து இருக்கிறோம்" என்றான்.(10)
விதுரன், "துயரங்கள் அனைத்திற்கும் வேரானது சூது என்பதை நான் அறிவேன். அந்த எண்ணத்தை மன்னர் {திருதராஷ்டிரன்} கைவிட என்னால் முடிந்த வரை போராடினேன். இருப்பினும், மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். இதையெல்லாம் அறிந்து கொண்டு, ஓ கற்றவனே, எது நன்மையோ அதைச் செய்வாயாக" என்றான்.(11) 
யுதிஷ்டிரன், "திருதராஷ்டிரரின் மகன்கள் தவிர, விளையாடத் தயாராக இருக்கும் வேறு நேர்மையற்ற சூதாடிகள் யார் யார்? ஓ விதுரரே, அவர்கள் யார்? எங்கள் நூற்றுக்கணக்கான உடைமைகளைப் பந்தையப் பொருளாக வைத்து நாங்கள் யாருடன் விளையாட வேண்டி வரும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்றான்.(12)
விதுரன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பகடையில் நிபுணனான காந்தார மன்னன் சகுனி, தனது கைகளின் நிபுணத்துவத்தால் பந்தயப் பொருளை அடைவதில் உறுதியாக இருக்கிறான். மேலும், விவிம்சதி, மன்னன் சித்திரசேனன், சத்தியவிரதன், புருமித்திரன், ஜயன் ஆகியோரும் அங்கே இருக்கின்றனர்" என்றான்.(13)

யுதிஷ்டிரன், "எப்போதும் வஞ்சகத்தையே நம்பியிருப்பவர்களும், உறுதிமிக்கவர்களுமான கொடும் சூதாடிகள் அங்கிருப்பது தெரிகிறது. இருப்பினும், இந்த முழு அண்டமும், படைத்தவனின் விருப்பத்தின்படியும், விதியின் கட்டுப்பாட்டிற்குள்ளும் நடக்கிறது. அது சுதந்திரமானதல்ல.(14) ஓ கற்றவரே {விதுரரே}, மன்னன் திருதராஷ்டிரரின் உத்தரவின் பேரில் நான் சூதாட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை. ஒரு தந்தை தனது மகனுக்கு நன்மையையே செய்வான். நீர் எங்கள் குரு, ஓ விதுரரே, எங்களுக்கு எது நன்மையானது என்பதை எனக்குச் சொல்வீராக.(15) சூதாட எனக்கு விருப்பமில்லை, எனவே நான் விளையாட மாட்டேன். ஆனால் அந்தச்சபையில் தீய சகுனி என்னை அழைத்தால்? அப்படி அவன் அழைத்தால், என்னால் மறுக்க முடியாது. அது தீர்மானிக்கப்பட்ட எனது நிலைத்த நோன்பாகும்" என்றான்.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னன் யுதிஷ்டிரன் விதுரனிடம் இப்படிச் சொல்லிவிட்டு, காலந்தாழ்த்தாமல் தனது பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டான். மறுநாள், மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது உறவினர்களுடனும், பணியாட்களுடனும், திரௌபதியை மையமாகக் கொண்டிருக்கும் வீட்டிலிருக்கும் மங்கையரையும் அழைத்துக் கொண்டு குருக்களின் தலைநகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(17) பகைவரைத் தண்டிப்பவனான மன்னன் யுதிஷ்டிரன், 'கண்ணுக்கு முன்னால் ஒளிரும் பொருட்கள் விழுவதைப் போல, ஏதோ மனிதன் கயிற்றால் கட்டப்பட்டு ஆடுவதைப் போல, விதி நமது மதியை மயக்கி இயற்கையின் ஆளுகைக்குள் நம்மைத் தள்ளுகிறது' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, திருதராஷ்டிரனின் ஆணை குறித்து மேலும் ஆராயாமல், க்ஷத்தனுடன் {விதுரனுடன்} புறப்பட்டான். (18,19)

பகை வீரர்களைக் கொல்பவனும், பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனுமான அவன் {யுதிஷ்டிரன்}, பாஹ்லீக நாட்டு மன்னன் கொடுத்த தேரில் ஏறி, அரச அங்கிகள் பூட்டிக் கொண்டு தனது தம்பிகளுடன் புறப்பட்டான்.(20) அரசப் பிரகாசத்துடன் கூடிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பிராமணர்கள் தனக்கு முன்பு நடக்க, தனது நகரத்தில் இருந்து புறப்பட்டு, திருதராஷ்டிர ஆணையின் பேரிலும், காலத்தின் உந்துதலாலும் {தன் நகரத்தில் இருந்து} புறப்பட்டுச் சென்றான்.(21) ஹஸ்தினாபுரத்தை அடைந்து, திருதராஷ்டிரனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே சென்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னனை {திருதராஷ்டிரனை} அணுகினான்.(22) பிறகு அந்த மேன்மையானவன் {யுதிஷ்டிரன்} பீஷ்மரையும், துரோணரையும், கர்ணனையும், கிருபரையும், துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} அணுகி ஆரத்தழுவினான். பதிலுக்கு அவர்களாலும் தழுவிக் கொள்ளப்பட்டான்.(23)

பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்தப் பேராற்றல் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, சோமதத்தனை அணுகினான், பிறகு துரியோதனன், சல்லியன், சுபலனின் மகன் {சகுனி},(24) மேலும் தனக்கு முன்பே அங்கு வந்திருந்த மன்னர்கள் அனைவரையும் அணுகினான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} வீரனான துச்சாசனனையும், பிறகு தனது (மற்ற) தம்பிகளையும்,(25) பிறகு ஜெயத்ரதனையும், பிறகு குருக்கள் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக அணுகினான். பெரும் பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனான அவன், தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனின் அறைக்குள் நுழைந்தான்.

பிறகு யுதிஷ்டிரன், எப்போதும் தனது தலைவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் மரியாதைக்குரிய காந்தாரி, தனது மருமகள்களால் சூழப்பட்டு ரோகிணி நட்சத்திரம் போல வீற்றிருப்பதைக் கண்டான். பிறகு காந்தாரியை வணங்கி, அவளால் ஆசி வழங்கப்பட்டு,(26-28) தமது கண்ணைப் போன்ற ஞானம் கொண்ட சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியான, முதிர்ந்த பெரியப்பாவை {திருதராஷ்டிரனை} மன்னன் {யுதிஷ்டிரன்} கண்டான்.(29) பிறகு மன்னன் திருதராஷ்டிரன், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவனது {யுதிஷ்டிரனது} தலையை முகர்ந்து பார்த்து, பீமசேனனை மூத்தவனாகக் கொண்டவர்களும், பாண்டுவின் மகன்களுமான மற்ற நான்கு இளவரசர்களின் தலைகளையும் முகர்ந்தான்.(30) மனிதர்களில் புலிகளான அழகான பாண்டவர்களைக் கொண்ட குருக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.(31) 

பிறகு மன்னனால் உத்தரவிடப்பட்டு, பாண்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரத்திரனங்களும் நகைகளும் நிறைந்த அறைக்குச் சென்றனர். அவர்கள் அறைகளுக்குள் சென்றதும், திருதராஷ்டிரனின் வீட்டுப் பெண்மணிகள் துச்சலையுடன் {திருதராஷ்டிரனின் ஒரே மகளுடன்} சென்று அவர்களைப் {பாண்டவர்களைப்} பார்த்து வந்தனர்.(32) பிரகாசமிக்கவளும், செழிப்பானவளும், அழகியுமான யக்ஞசேனியைக் {திரௌபதியைக்} கண்ட திருதராஷ்டிரனின் மருமகள்கள் மகிழ்ச்சியற்றுப் போய் பொறாமையால் நிறைந்தனர்.(33)

அந்தப் பெண்மணிகளுடன் உரையாடிய அந்த மனிதர்களில் புலிகள் பிறகு தங்கள் தினசரி உடற் பயிற்சிகளையும், அந்த நாளுக்குரிய தங்கள் சடங்குகளையும் செய்தனர்.(34) தங்கள் தினசரி வழிபாடுகளை முடித்து, வாசனை மிகுந்த சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசிக் கொண்டு, நற்பேறு பெற எண்ணி, பிராமணர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றனர். பிறகு சிறந்த சுவையுள்ள உணவை உண்டு இரவு ஓய்வுக்காகத் தங்கள் அறைகளுக்குள் சென்றனர்.(35) 
அந்த குருக்களின் காளைகள், அழகான பெண்களின் இசையால் உறங்க வைக்கப்பட்டனர். அந்த எதிரிகளின் நகரங்களை அடக்கும் வீரர்கள், அந்தப் பெண்களின் சுகத்தால் அந்த இரவை இனிமையாகக் கழித்தனர். இரவை இன்பமாகக் கழித்த அவர்கள், காலையில் பாடகர்களால் இனிமையான இசை இசைத்து எழுப்பப்பட்டு, தங்கள் படுக்கைகளில் இருந்து விடியலிலேயே எழுந்தனர்.(36,37) பிறகு தங்கள் தினசரி சடங்குகளை முடித்துக் கொண்டு சபா மண்டபத்துக்குள் நுழைந்தனர். அங்கே அவர்கள் {பாண்டவர்கள்}, சூதாடத் தயாராக இருந்தவர்களால் வணங்கப்பட்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்