Saturday, December 20, 2014

துரோணர் விலக வாய்ப்பளித்த பார்த்தன்! - விராட பர்வம் பகுதி 58

Partha gave a chance for Drona to leave! | Virata Parva - Section 58 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 33)






பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் துரோணருக்கும் இடையில் நடந்த மோதல்; அவர்களுக்குள் நடந்த மோதலில் இடைமறித்த அஸ்வத்தாமன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருபர் இப்படி அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சிவப்புக் குதிரைகள் கொண்ட ஒப்பற்ற துரோணர், ஏற்கனவே நாணில் கணை பொருத்தப்பட்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு, வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனை நோக்கி விரைந்தார். தனது தங்கத் தேரில் முன்னேறி வரும் ஆசானை சிறிது தொலைவில் கண்ட வெற்றி வீரர்களில் முதன்மையான அர்ஜுனன், உத்தரனிடம், “ஓ! நண்பா, நீ அருளப்பட்டிருப்பாயாக. சுடர்விடும் நெடும் நெருப்பைப் போன்ற தங்க பலிப்பீடத்தைத் தனது உயர்ந்த பதாகையின் தலைப்பில் கொண்டவரும், {தேரைச்} சுற்றிலும் நிறையக் கொடிகள் கொண்டவரும், அமைதியான இனிய முகமும், பவளம் மற்றும் தாமிர வண்ணமும், உயர்ந்த பயிற்சியும் கொண்ட, மிக அழகான பெரிய குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் வருபவரான துரோணரிடமே நான் போரிட விரும்புகிறேன்.


நீண்ட கரங்களும், பெரும் சக்தியும், பலமும், அழகான மேனியும் கொண்ட அவர் {துரோணர்}, உலகங்களால் தனது பராக்கிரமத்திற்காகக் கொண்டாடப்படுபவரும், புத்திக்கூர்மையில் உசானஸைப் {சுக்கிராச்சாரியாரைப்} பிரதிபலிப்பவரும், அறநெறி அறிவில் பிருகஸ்பதியைப் போன்றவரும், நான்கு வேதங்களையும் அறிந்து, பிரம்மச்சரிய அறங்களைப் பயின்று வருபவராவார். ஓ! நண்பா {உத்தரா}, தெய்வீக ஆயுதங்களை ஏவுதல் மற்றும் திரும்ப அழைத்தல் ஆகியவையும், மொத்த ஆயுத அறிவியலும் அவருள் எப்போதும் வசிக்கின்றன. பொறுமை {மன்னிக்கும் தன்மை}, தற்கட்டுப்பாடு, உண்மை {சத்தியம்}, ஊறிழைக்காமை {அகிம்சை}, நடத்தையில் ஒழுங்கு ஆகியவையும் எண்ணற்ற பிற பண்புகளும் அந்த மறுபிறப்பாளரிடம் {பிராமணரிடம்_துரோணரிடம்} எப்போதும் வசிக்கின்றன. போர்க்களத்தில் இருக்கும் அந்த உயர்ந்த அருள் பெற்றவருடன் நான் போரிட விரும்புகிறேன். எனவே, ஓ! உத்தரா, அங்கே ஆசானின் முன்பு என்னை அழைத்துச் செல்” என்றான் {அர்ஜுனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனால் இப்படிச் சொல்லப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தனது குதிரைகளை, பரத்வாஜரின் மகனுடைய {துரோணரின்} தேர் நோக்கிச் செலுத்தினான். தேர்வீரர்களில் முதன்மையானவரான துரோணரும், கோபமுற்ற யானை போல், தன்னைப் போலவே கோபங்கொண்டு அவசரமாக முன்னேறிக் கொண்டிருந்த பாண்டுவின் மகனான பார்த்தனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தார். பிறகு அந்தப் பரத்வாஜரின் மகன் {துரோணர்}, நூறு எக்காளங்களின் ஒலிக்கு நிகரான தனது சங்கொலியை எழுப்பினார். கடலைக் கலங்கடிக்கும் புயல் போல அவ்வொலி மொத்த படையையும் கலங்கடித்தது. அவரது {துரோணரது} செந்நிறக் குதிரைகளும், மனோவேகம் கொண்டவையும், அன்னம் போன்ற வெண்மையானவையுமான அர்ஜுனனின் குதிரைகளும் போரில் கலப்பதைக் கண்ட பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பராக்கிரமம் மிக்கவர்களும், ஒப்பற்றவர்களும், நன்கு பயிற்சிபெற்றவர்களும், பெரும் சக்தியும் பலமும் படைத்தவர்களுமான அவ்விரு தேர்வீரர்களான ஆசான் துரோணரும், அவரது சீடன் பார்த்தனும் {அர்ஜுனனும்} ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போர்க்களத்தில் நிற்பதைக் கண்ட பாரதர்கள் கூட்டம் அடிக்கடி நடுங்கத் தொடங்கின. பெரும் பராக்கிரமம் கொண்ட பலமிக்கத் தேர்வீரனான பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணரின் தேரைத் தனது தேர் மூலம் அடைந்து, மகிழ்ச்சியில் நிறைந்து, தனது ஆசானை {துரோணரை} வணங்கினான். எதிரி வீரர்களைக் கொல்பவனும், வலிய கரங்கள் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரிடம் எளிமையான மற்றும் இனிமையான தொனியில், “எங்கள் வனவாசத்தை முடித்த நாங்கள், எங்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளுக்குப் பழிதீர்க்க விரும்புகிறோம். போரில் ஒப்பற்றவரான நீர் எங்களிடம் கோபம் கொள்ளுதல் தகாது. ஓ! பாவமற்றவரே, என்னை நீர் முதலில் தாக்காமல், நான் உம்மைத் தாக்க மாட்டேன். இதுவே எனது நோக்கம். நீர் விரும்பிய செயலைச் செய்வீராக” என்றான் {அர்ஜுனன்}.

இப்படிச் சொல்லப்பட்ட துரோணர், அவன் மீது இருபதுக்கும் மேற்பட்ட கணைகளை அடித்தார். ஆனால், இலகுவான கரங்கள் படைத்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவை தன்னை அடையுமுன்பே வெட்டிப் போட்டான். இதைக் கண்ட பலமிக்கத் துரோணர், தனது கரங்களின் இலகுத்தன்மையை வெளிக்காட்டும்படி, ஆயிரம் {1000) கணைகளால் பார்த்தனின் தேரை மூடினார். பார்த்தனைக் கோபமூட்ட விரும்பிய அந்த அளவிடமுடியா ஆன்மா கொண்டவர் {துரோணர்}, வெள்ளி போன்ற வெண்மையான அவனது குதிரைகளை, கல்லில் கூராக்கப்பட்டவையும் கங்கப் பறவையின் இறகுகள் படைத்தவையுமான தனது கணைகளால் மூடினார். துரோணருக்கும், கிரீடிக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர் தொடங்கியது. அந்த மோதலில் சுடர்மிகும் பிரகாசம் கொண்ட கணைகளை இருவரும் அடித்தனர். தங்கள் சாதனைகளுக்காக இருவரும் அறியப்பட்டவர்களாக இருந்தனர். காற்றின் வேகம் கொண்ட அந்த இருவரும் தெய்வீக ஆயுதங்களை அறிந்திருந்தனர். இருவரும் பெரும் சக்தி படைத்திருந்தனர். அப்படிப்பட்ட அந்த இருவரும் அரசகுல க்ஷத்திரியர்கள் அழியும் வண்ணம் மேகங்கள் போலக் கணைகளை அடிக்கத் தொடங்கினர்.

அங்கே கூடியிருந்த வீரர்கள் அனைவரும் இக்காட்சிகள் அனைத்தையும் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். அவர்கள் அனைவரும் கணைமேகங்களை அடித்த துரோணரைக் கண்டு “நன்று செய்தீர்! நன்று செய்தீர்!” என்று போற்றினர், “போர்க்களத்தில் துரோணரிடம் போரிட பல்குனனை {அர்ஜுனனைத்} தவிரத் தகுந்தவன் வேறு எவன்?” “அர்ஜுனன் தன் சொந்த ஆசானிடமே போரிடுகிறானே. நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகள் கண்டிப்பானவை” என்றும் உரைத்தனர். அந்தப்போர்க்களத்தில் நின்றவர்கள் இப்படியே தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் வெல்லவல்லவர்களும், வலிய கரங்கள் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கணைமழையால் மூடினர்.

கோபம் பெருகிய பரத்வாஜர் மகன் {துரோணர்}, பின்புறத்தில் தங்கத்தால் முலாமிடப்பட்டதும், வெல்லப்பட முடியாததுமான தனது பெரிய வில்லை உருவி, தனது கணைகளால் பல்குனனை {அர்ஜுனனைத்} துளைத்தார். சூரியப் பிரகாசம் கொண்ட எண்ணற்ற கூரிய கணைகளை அர்ஜுனனின் தேர் மீது அடித்து, {அர்ஜுனனுக்கு} முற்றிலுமாகச் சூரிய ஒளியை மறைத்தார். வலிய கரங்கள் கொண்ட அந்தப் பெரும் ரதவீரர் தனது கூரிய கணைகளைக் கொண்டு, மலையில் பொழியும் மேகம் போலப் பிருதையின் மகனைக் கடுமையாகத் துளைத்தார். பிறகு விற்களில் முதன்மையானதும், எதிரிகளை அழிக்க வல்லதும், பெரும் சிரமங்களைச் சமாளிக்கக்கூடிய திறம் கொண்டதுமான காண்டீவத்தை எடுத்த பாண்டுவின் மகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எண்ணற்ற கணைகளை விரைவாக அடித்தான். ஒரு நொடியில் அந்தப் பலமிக்க வீரனும் {அர்ஜுனனும்}, தனது வில்லில் இருந்து அடிக்கப்பட்ட பல்வேறு கணைகளின் மழையால், துரோணரை நிலைகுலையச் செய்தான். இதைக் கண்ட பார்வையாளர்கள் பெரிதும் ஆச்சரியமடைந்தனர்.

பிறகு, பிருதையின் {குந்தியின்} மகனான அந்த அழகிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது தேரில் உலவி, ஒரே நேரத்தில் பல பக்கங்களில் இருந்து தனது ஆயுதங்களை வீசினான். முழு ஆகாய விரிவும் அவனது கணைகளால் மூடப்பட்டதால், ஒரு பெரும் நிழல் பரப்பு அங்கே தோன்றிற்று. துரோணர், மலைமீதிருக்கும் நெருப்பு போல இருந்தார். பிருதையின் {குந்தியின்} மகனுடைய {அர்ஜுனனுடைய} கணைகளால் தனது தேர் முழுவதும் மறைக்கப்பட்டதைக் கண்ட போர்க்களத்தின் ரத்தினமான துரோணர், மேக கர்ஜனை புரியும் விற்களில் முதன்மையானதும், பயங்கரமானதுமான தனது வில்லை வளைத்தார். நெருப்பு வட்டம் போலிருந்த அந்த ஆயுதங்களில் முதன்மையானதை {அந்த வில்லை} இழுத்து, கூர்முனை கொண்ட கணைகளை அவர் {துரோணர்} அடித்தார்.

பிறகு, நெருப்பிலிடப்பட்ட மூங்கில்கள் பிளப்பது போல, போர்க்களமெங்கும் ஒலிகள் கேட்டன. அளவிலா ஆன்மா கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தங்க இறகுகள் கொண்ட கணைகளைத் தனது வில்லில் இருந்து அடித்து, அனைத்துப் புறங்களையும் மூடி, {துரோணருக்குச்} சூரிய ஒளியைத் தடுத்தான். துரோணரால் அடிக்கப்பட்ட கணைகள், ஒன்றின் இறகை மற்றொன்று தொட்டுக் கொண்டிருந்ததால், வானத்தில் செல்லும் முடிவிலா கோடு போல அவை தெரிந்தன. முடிச்சுகள் நன்றாக உரிக்கப்பட்ட {அழுந்திய கணுக்களுடைய} அந்தக் கணைகள், தங்க இறகுகள் கொண்ட பறவை கூட்டம் போல வானத்தில் தெரிந்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை அடித்த அந்த வீரர்கள், வானத்தை எறிகற்களால் நிறைப்பது போலத் தெரிந்தது. கங்கப் பறவையின் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கணைகள், இலையுதிர்கால வானில் உலவும் வரிசையான கொக்குகள் போலத் தெரிந்தன.

ஒப்பற்ற துரோணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற அந்தக் கடுமையான, பயங்கரமான மோதல், பழங்காலத்தில் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல் போல இருந்தது. வில்லின் முழு நீளத்திற்கு இழுக்கப்பட்ட விற்களில் இருந்து கணைகளை அடித்த அந்த இருவரும், தந்தங்களால் மோதிக்கொள்ளும் இரு யானைகளைப் போல இருந்தனர். கோபக்கார வீரர்களும், போர்க்களத்தின் ரத்தினங்களுமான அந்த இருவரும், நிறுவப்பட்ட வழிமுறைகளின் படி கண்டிப்புடன் நடந்து கொண்டு, முறையான வரிசையில் பல்வேறு தெய்வீக ஆயுதங்களைக் காட்சிப்படுத்தினர். பிறகு அறம்சார்ந்த மனிதரில் முதன்மையான அர்ஜுனன், தனது கூரிய கணைகள் கொண்டு, ஆசான்களில் சிறந்தவர் {துரோணர்} அடித்த கூரிய கணைகளைத் தடுத்தான். பிறகு பார்வையாளர்கள் முன்னிலையில் பல்வேறு ஆயுதங்களைக் காட்டிய அந்தப் பயங்கரப் பராக்கிரமம் கொண்ட வீரன் {அர்ஜுனன்}, பல்வேறு வகையான கணைகளால் வானத்தை மூடினான்.

கடும் சக்தியுடன் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் இருந்த மனிதர்களில் புலியான அர்ஜுனனைக் கண்ட அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவரான ஆசான்களில் சிறந்தவர் {துரோணர்}, (பாசத்தால்) இலகுவான நேரான கணைகளைக் கொண்டு அவனுடன் {அர்ஜுனனுடன்} விளையாட்டுத்தனமாகப் போரிட ஆரம்பித்தார். முன்னவனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட தெய்வீக ஆயுதங்களைத் தனதைக் {தன் தெய்வீக ஆயுதங்களைக்} கொண்டு தடுத்தார். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளாமல், சீற்றமிக்க மனிதர்களில் சிங்கங்கள் போலப் போரிட்டுக் கொண்டிருந்த அவர்களது மோதல், தேவர்களுக்கும் தானவர்களுக்கும் {அசுரர்களுக்கும்} இடையில் நடைபெற்ற போரைப் போல இருந்தது. அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, துரோணர் அடித்த ஐந்திரம், வாயவ்யம், ஆக்னேயம் ஆகிய ஆயுதங்களை, தன்னிடம் இருந்த அதே
வகை ஆயுதங்களால் திரும்பத்திரும்பக் கலங்கடித்தான். கூரிய கணைகளை அடித்துக் கொண்டிருந்த அந்தப் பலமிக்க வில்லாளிகள், தங்கள் கணை மழையால் முழு வானத்தையும் மூடி, பெரும் நிழல் பரப்பை உண்டாக்கினார்கள்.

அர்ஜுனனால் அடிக்கப்பட்ட கணைகள், எதிரி வீரர்களின் மேல் பட்டு, இடியின் ஒலியை எழுப்பின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இரத்தத்தில் குளித்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியன மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பலாச மரங்களைப் போலத் தெரிந்தன. துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த அந்த மோதலின் போது, அந்தக் களத்தில் வளையங்களால் அலங்கரிக்கப்பட்ட கரங்களும், அழகாக உடுத்தியிருந்த தேர்வீரர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பலவண்ண கவசங்களும், கொடிகளும் என அனைத்தும் சிதறிக் கிடந்தன. பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்ட வீரர்களைக் கண்ட குரு படை பீதியடைந்தது. கடும் சிரமத்தைத் தாங்கவல்ல தங்கள் விற்களை அசைத்த அந்த  எதிராளிகள் இருவரும், தங்கள் கணைகளால் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்த தொடங்கினர்.

ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரோணருக்கும், குந்தியின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த அந்த மோதல், பலிக்கும் {மகாபலிக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற எல்லையற்ற பயங்கரம் நிறைந்த போரைப் போல இருந்தது. பிறகு, அவர்கள் {ஆசானும் சீடனும்} தங்கள் உயிரைப் பணயம் வைத்து, முழுதாக இழுக்கப்பட்ட தங்கள் வில்லின் நாண்களில் இருந்து நேரான கணைகளை அடித்து ஒருவரை ஒருவர் துளைத்தனர். அப்போது, வானத்தில் இருந்து ஒரு குரல், “எதிரிகளை அடிப்பவனும், பெரும் சக்தியுடைவனும், உறுதியான பிடி கொண்டவனும், போரில் ஒப்பற்றவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், தேவர்கள் மற்றும் தைத்தியர்களையே வீழ்த்தியவனுமான அர்ஜுனனுடன் போரிடும் துரோணரின் செயல் கடின
மானதாகும்” என்று துரோணரைப் பாராட்டியது.

பார்த்தனின் {அர்ஜுனனின்}, தவறற்ற தன்மை {குறி தவறாத்தன்மை}, பயிற்சி, கரங்களின் வேகம், அர்ஜுனனின் அம்பு வீச்சு ஆகியவற்றைக் கண்ட துரோணர் மிகவும் வியந்தார். ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, பிறகு, அற்புதமான வில்லான காண்டீவத்தை உயர்த்திய பார்த்தன் {அர்ஜுனன்}, இருகரங்களாலும் கணைகளை மழையாகப் பொழிந்தான். அம்மழை வெட்டுக்கிளிகள் பறப்பதைப் போலத் தெரிந்தது. பார்வையாளர்கள், அவனை {அர்ஜுனனை} பார்த்து, “அற்புதம்! அற்புதம்!” என்றனர். அவனுடைய {அர்ஜுனனுடைய} அம்புகளுக்கிடையில் காற்றும் புகுவதற்கு சக்தியற்றதாய் இருந்தது. அவன் {அர்ஜுனன்}, கணைகளைத் தொடுப்பதற்கும் விடுப்பதற்கும் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பார்வையாளர்கள் எவரும் காணவில்லை. கரங்களின் வேகத்தை வகைப்படுத்தும் வகையில் அந்தக் கடும்போரில் ஆயுதங்கள் அடிக்கப்பட்டன. பார்த்தன் {அர்ஜுனன்}, தனது கணைகளை முன்பை விட வேகமாக அடிக்கத் தொடங்கினான். பிறகு திடீரென நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான நேரான கணைகள் துரோணரின் தேரைத் தாக்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, காண்டீவத்தைத் தாங்கியவனுடைய {அர்ஜுனனுடைய} கணைகளால் முழுவதுமாக மறைக்கப்பட்ட துரோணரைக் கண்ட குரு படையினர், “ஓ” என்றும், “ஐயோ” என்றும், கதறினர். அங்கே கந்தர்வர்களுடனும் அப்சரஸ்களுடனும் வந்திருந்த மகவத் {இந்திரன்}, பார்த்தனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் வேகத்தைப் பாராட்டினான்.

பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான ஆசானின் {துரோணரின்} மகன் {அஸ்வத்தாமன்} பலமிக்கத் தேர்களின் வரிசையைக் கொண்டு, அந்தப் பாண்டவனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான். அர்ஜுனனிடம் கோபம் கொண்டிருந்தாலும், அஸ்வத்தாமன், அந்தப் பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகனுடைய சாதனையை மனதில் புகழ்ந்தான். பிறகு கோபம் பெருக, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்து சென்ற அவன் {அஸ்வத்தாமன்}, மேகத்தில் இருந்து பொழியும் பெரும் மழையைப் போல அவனை {அர்ஜுனனை} நோக்கி கணை மழையைப் பொழிந்தான். துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கித் திரும்பிய பார்த்தன் {அர்ஜுனன்}, துரோணர் களத்தை விட்டு அகல ஒரு வாய்ப்பை அளித்தான். அந்தப் பயங்கரப் போரில் காயம்பட்ட பின்னவர் {துரோணர்}, தனது கவசம் மற்றும் கொடியுடன், வேகமான குதிரைகளின் உதவியைக் கொண்டு விரைந்து சென்றார்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்