Friday, August 28, 2015

பீஷ்மர் எப்படிக் கொல்லப்பட்டார்? - பீஷ்ம பர்வம் பகுதி - 014

How was Bhishma slained? | Bhishma-Parva-Section-014 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 2)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கொல்லப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரன் துயர் அடைந்தது; பீஷ்மர் கொல்லப்பட்டது எப்படி என்றும், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு இடையிலான அந்தப் போர் எப்படி நடந்தது என்றும் திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்டது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "குருக்களில் காளையான பீஷ்மர், எப்படிச் சிகண்டியால் கொல்லப்பட்டார்? வாசவனை {இந்திரனை} நிகர்த்த என் தந்தை {பெரிய தந்தை}, எப்படித் தனது தேரில் இருந்து கீழே விழுந்தார்? தனது தந்தைக்காகப் {தந்தை சந்தனுவிற்காக} பிரம்மச்சரிய வாழ்வை நோற்றவரும், தேவனைப் போன்றவருமான அந்தப் பலமிக்கப் பீஷ்மரை இழந்த போது, ஓ! சஞ்சயா, எனது மகன்கள் [1] எப்படி இருந்தார்கள்? பெரும் அறிவுடையவரும், முயற்சியில் பெரும் திறமும், பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்ட அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்} வீழ்ந்த போது, நமது வீரர்களின் உணர்வுகள் எப்படி இருந்தன?


[1] முதல் வரியின் முதல்பாதி, வங்காள உரைகளில், 'Kathamascha me putra' என்றிருக்கிறது. அதுவே பம்பாய் உரைகளில் "Kathamascha me Yoddha' என்றிருக்கிறது. பின்னதை {பம்பாய் உரையை} பின்பற்றினால் அதன் பொருள், "எனது வீரர்கள் எப்படி இருந்தார்கள்?" என்றாகும் என்கிறார் கங்குலி.

குருக்களில் காளையும், மனிதர்களில் முதன்மையானவருமான அந்த நடுக்கமில்லா வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்டார் என்பதைக் கேட்டு, பெரிதான துயரம் எனது இதயத்தைத் துளைக்கிறது. (பகைவருக்கு எதிராக) முன்னேறிச் செல்கையில், அவரைப் {பீஷ்மரைப்} பின்தொடர்ந்தவர்கள் யார்? அவருக்கு முன் சென்றவர்கள் யார்? அவர் அருகே இருந்தவர்கள் யார்? அவருடன் சென்றவர்கள் யார்? எதிரியின் படைப்பிரிவுகளுக்குள் ஊடுருவிச் சென்ற அந்த அற்புத வில்லாளியை, அந்த க்ஷத்திரியர்களில் காளையை, அந்தத் தேர்வீரர்களில் புலியை {பீஷ்மரை} (அவரது பின்புறத்தைப் பாதுகாத்தப்படி) பின்தொடர்ந்த சென்ற வீரப் போராளிகள் யார்? நமது மக்களின் {நம்மவரின்} மனநிலை எப்படி இருந்தது? [2]

[2] {இந்த இடத்தில், அதாவது} மூன்றாம் சுலோகத்தின் இரண்டாம் வரியில், {வங்காள உரையில்} 'kim na asinmanastada' (நமது மக்களின் {நம்மவரின்} மனநிலை எப்படி இருந்தது?) என்பதற்குப் பதிலாக, பம்பாய் உரையில் (உனது மனநிலை எப்படி இருந்தது?) என்று இருப்பதாகக் கங்குலி சொல்கிறார்.

ஆயிரம் கதிர்களைக் கொண்ட ஒளிக்கோளைப் {சூரியனைப்} போன்றவரும், இருளை அழிக்கும் சூரியனைப் போல அவர்களின் அணிகளை அழித்து எதிரியின் மத்தியில் பயங்கரத்தைப் பரப்புபவரும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} படையணிகளுக்கு மத்தியில் அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளை அடைந்தவருமான அவர், அந்தப் பகையணியினரைப் பீடித்தபோது, அந்த எதிரிகளைக் கொல்பவரை {பீஷ்மர்} எதிர்த்த வீரர்கள் யார்?

உண்மையில், ஓ! சஞ்சயா, சாதனைகளைக் கொண்டவரும், ஒப்பற்ற வீரருமான சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அவர்களை {பாண்டவர்களை} அடிப்பதற்கு அணுகிய போது, அந்தப் பாண்டவர்கள் அவரை எப்படிப் போரில் எதிர் கொண்டார்கள்? கணைகளைத் தன் பற்களாகவும், வில்லை விரிந்து திறந்த தனது வாயாகவும், பயங்கர வாளைத் தன் நாக்காகவும் கொண்டு (பகை) அணிகளைக் கொன்றவரும், சக்தி நிறைந்தவரும், ஒப்பற்றவரும், மனிதர்களில் புலியேயானவரும், பணிவுடையவரும், இதற்கு முன் வெல்லப்படாதவரும், ஐயோ! இத்தகு விதியை அடையத் தகாதவருமான அந்த வெற்றிகொள்ளப்படாதவரை {பீஷ்மரை}, தனது அற்புதத் தேரில் இருந்து, எதிரிகளின் தலையைக் கொய்பவரும், கடுங்கணைகளை அடிப்பவருமான அந்தக் கடும் வில்லாளியை {பீஷ்மரை} [3], போரில் ஈடுபடும் எவரைக் கண்டு பாண்டவர்களின் பெரும்படை எப்போதும் நடுங்குவது வழக்கமோ, யுகநெருப்பைப் போன்று கட்டுக்கடங்காத அந்த வீரரை {பீஷ்மரைக்} குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} எப்படிப் போரில் வீழ்த்தினான்?

[3] "இங்கே பர்துவான் பண்டிதர்களால் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அது சரி என்றே நான் நினைக்கிறேன். (அருகில் இருந்து அடித்தல் அல்லது கணைகளை அடித்தல் என்று பொருள் படும்) 'Asyaram antike' என்பதற்குப் பதில், நீலகண்டர் உரையில் (நீ அருகில் இருந்தாய் என்று பொருள்படும்) 'Asya twama antike' என்று இருக்கிறது" என்கிறார் கங்குலி.

எதிரித் துருப்புகளைப் பத்து {10} இரவுகள் சிதைத்த அந்தப் படையணிகளைக் கொல்பவர் {பீஷ்மர்}, ஐயோ, சாதிப்பதற்குக் கடினமான சாதனைகளை அடைந்து சூரியனைப் போல மறைந்துவிட்டாரே. சக்ரனைப் {இந்திரனைப்} போல வற்றாத கணைமாரியைப் பொழிபவரும், பத்து நாட்களில் பத்து கோடி வீரர்களைப் {hundred millions of warriors} போரில் கொன்றவருமான அந்தப் பாரதக் குலக் கொழுந்து {பீஷ்மர்}, இந்த நிலைக்குத் தகாதவராக இருப்பினும், எனது தீய ஆலோசனைகளின் விளைவால், காற்றால் வேருடன் சாய்க்கப்பட்ட வலிமைமிக்க மரத்தைப் போல, உயிரை இழந்து போர்க்களத்தில் வெறுந்தரையில் கிடக்கிறாரே. பயங்கர ஆற்றல் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டும், உண்மையில், பாண்டவர்களின் படையால் அவரை அடிப்பதில் அங்கே எப்படி வெல்ல முடிந்தது? பாண்டுவின் மகன்கள் பீஷ்மருடன் எப்படிப் போரிட்டனர்?

ஓ! சஞ்சயா, துரோணர் உயிருடன் இருக்கும்போது, பீஷ்மரால் எப்படி வெல்ல முடியவில்லை? மேலும், கிருபர், துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்) ஆகியோரும் இருக்கையில் அடிப்பவர்களில் முதன்மையான பீஷ்மர் எப்படிக் கொல்லப்பட முடியும்? தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவரும், அதிரதராக அறியப்பட்டவருமான பீஷ்மர், பாஞ்சால இளவரசன் சிகண்டியால் போரில் எப்படிக் கொல்லப்பட முடியும்?

போரில் ஜமதக்னியின் வலிமைமிக்க மகனுக்கு {பரசுராமருக்கு} இணையாக எப்போதும் தன்னைக் கருதியவரும், ஜமதக்னியின் மகனாலேயே {பரசுராமராலேயே} வீழ்த்தப்பட முடியாதவரும், ஆற்றலில் இந்திரனைப் போன்றவரும், ஐயோ, ஓ! சஞ்சயா, மகாரதர்களின் குலத்தில் பிறந்தவருமான அந்த வீரர் பீஷ்மர் போரில் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதை எனக்குச் சொல்வாயாக. அனைத்து விபரங்களையும் அறியாமல் என்னால் மன அமைதியை மீண்டும் அடைய முடியாது.

ஓ! சஞ்சயா, மங்கா புகழ் கொண்ட அந்த வீரரைக் {பீஷ்மரை}, கைவிடாதிருந்த எனது படையின் பெரும் வில்லாளிகள் யார்? மேலும், துரியோதனனின் உத்தரவின் பேரில், (அவரைப் பாதுகாப்பதற்காக) அந்த வீரரைச் சூழ்ந்திருந்த வீரப் போராளிகள் யார்? தங்களுக்கு முன்னணியில் சிகண்டியை அமர்த்திக்கொண்டு, பீஷ்மருக்கு எதிராகப் பாண்டவர்கள் அனைவரும் முன்னேறியபோது, அந்த மங்கா புகழ் கொண்ட வீரரின் {பீஷ்மரின்} அருகில் குருக்கள் அனைவரும் இருக்கவில்லையா? [4]

[4] "இதில் வரும் இரண்டாவது வரியின் வடிவம், "குருக்கள் அவரைக் கைவிடவில்லை என நம்புகிறேன்" என்பதன் எதிர்மறைக் கேள்வியாக இருக்கிறது" என்கிறார் கங்குலி.

மனிதர்களில் புலியான பீஷ்மர் கொல்லப்பட்டதைக் கேட்டும் பிளக்காமலிருப்பதால், வன்மையான என் இதயம் வஜ்ரத்தால் ஆனது என்பது நிச்சயம். அந்தப் பாரதக் குலத்துக் காளையிடம் {பீஷ்மரிடம்}, உண்மை, புத்திக்கூர்மை, கொள்கை ஆகியன அளவிலாமல் இருந்ததே. ஐயோ, போரில் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்?

உயரத்தில் இருக்கும் வலிமைமிக்க மேகத்தைப் போல, தனது வில்லின் நாணொலியை அதன் {அந்த மேகத்தின்} முழக்கமாகவும், தனது கணைகளை அதன் மழைத்துளிகளாகவும், தனது வில்லொலியை அதன் இடியாகவும் கொண்ட அந்த வீரர் {பீஷ்மர்}, தங்கள் பக்கத்தில் பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் கொண்டவர்களான குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்} மீது கணைகளைப் பொழிந்தபடி, தானவர்களை அடிக்கும் வலனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலப் பகைவரின் தேர்வீரர்களை அடித்துக் கொண்டிருந்தாரே. கணைகளையும் ஆயுதங்களையும் கொண்ட பயங்கரக் கடல் போன்றவரும், கணைகளைத் தடுக்கப்பட முடியாத முதலைகளாகவும், விற்களை அலைகளாகவும் கொண்ட வற்றாத கடலைப் போன்றவரும், தீவுகளற்றதும், கலங்கிக் கொண்டிருப்பதும், கடப்பதற்கு எந்தப் படகும் அற்றதும், கதாயுதங்களைத் தன் சுறா மீன்களாகவும், வாள்களையும் கொண்டதும், குதிரைகளையும் யானைகளையும் அதன் நுரைகளாகக் கொண்டதும், காலாட்படை வீரர்களை அதன் அபரிமிதமான மீன்களாகக் கொண்டதும், சங்குகள் மற்றும் துந்துபியின் ஒலிகளை அதன் முழக்கமாகக் கொண்டதுமான கடலைப் போன்றவரும், குதிரைகள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியவற்றை விரைவில் விழுங்கும் கடலைப் போன்றவரும், யாதவ நெருப்பை உள்ளடக்கி கோபத்துடனும் சக்தியுடனும் பொங்கிவருவதும், எதிரி வீரர்களை விழுங்குவதுமான கடலைப் போன்றவருமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவரை {பீஷ்மரை} ஆர்ப்பரிக்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தடுத்த வீரர்கள் யார்? [5]

[5] இந்த இடத்தில், "நீண்ட வாக்கியங்களைச் செய்வதில் வழக்கமாகவே வெல்லும் வியாசரின் முழு ஆற்றலை இந்த நீண்ட ஒப்பீடு கொண்டிருக்கவில்லை. பல பகுதிகளில் தவறாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆங்காங்கே சில இடங்களில், பொருளைக் கெடுக்காத வகையில், உரைகளில் சிறு மாறுபாடும் தோன்றுகிறது" என்கிறார் கங்குலி. அதாவது, மேற்கண்ட வாக்கியம் கோர்வையில் தொடர்பற்றதாக இருப்பதாகக் கங்குலி கருதுகிறார்.

எதிரிகளைக் கொல்பவரான பீஷ்மர், துரியோதனனின் வெற்றிக்காகப் போர்க்களத்தில் (பயங்கர) சாதனைகளைச் செய்த போது, அவருக்கு முன்னணியில் இருந்தவர்கள் யார்? அளவிலா சக்தி கொண்ட அந்த வீரரின் வலது சக்கரத்தைப் பாதுகாத்தவர்கள் யார்? அவருக்குப் பின்னால் இருந்து, தங்கள் பொறுமையையும், சக்தியையும் திரட்டி பகை வீரர்களைத் தடுத்தவர்கள் யார்? அவரது முன்புறத்தில், அவருக்கு அருகிலேயே நின்று, அவரைப் பாதுகாத்தவர்கள் யார்? அந்தத் தணிச்சல்மிகு வீரர் (பகைவருடன்) போரிட்டுக் கொண்டிருந்தபோது, அவரது முன் சக்கரங்களைப் பாதுகாத்த வீரர்கள் யார்? அவரது இடது சக்கரத்திற்கு அருகில் நின்று கொண்டு சிருஞ்சயர்களை அடித்தவர்கள் யார்? தடுக்கப்பட முடியாத அவரது படையின் முன்னணியைப் பாதுகாத்தவர்கள் யார்? வலிநிறைந்த தனது இறுதிப் பயணத்தைச் செய்த அந்த வீரரின் {பீஷ்மரின்} சிறகுகளைப் {பக்கங்களைப்} பாதுகாத்தவர்கள் யார்? ஓ! சஞ்சயா, பொதுவான போரில், பகை வீரர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் யார்?

அவர் (நமது) வீரர்களால் பாதுகாக்கப்பட்டார் என்றால், அவர்கள் அவரால் பாதுகாக்கப்பட்டனர் என்றால், அந்தப் பாண்டவப்படை தடுக்க முடியாததாக இருந்தாலும் கூட, அவரால் {பீஷ்மரால்} அதைப் {அந்தப் பாண்டவப் படையை} போரில் விரைவாக வெல்ல முடியாதது ஏன்? உண்மையில், ஓ! சஞ்சயா, அனைத்து உயிர்களின் படைப்பாளனும், தலைவனும், பரமேஷ்டியும் {பிரம்மாவைப்} போன்ற அந்தப் பீஷ்மரை அடித்து, பாண்டவர்களால் எப்படி வெல்ல முடியும்? {பீஷ்மரை அடிப்பதற்குப் பாண்டவர்கள் எவ்வாறு சக்தியுடையவர்களானார்கள்?}

யாரை நம்பி குருக்கள் {கௌரவர்கள்} தங்கள் எதிரிகளுடன் போரிட்டார்களோ, யார் எங்களது புகலிடமாக இருந்தாரோ, யாருடைய சக்தியை நம்பி எனது மகன் பாண்டவர்களை மதிக்கவில்லையோ, அந்தப் பலம் நிறைந்த வீரரும் மனிதர்களில் புலியுமான பீஷ்மர் மறைந்தார் என்று நீ சொல்கிறாயே. ஐயோ, ஓ! சஞ்சயா, எதிரியால் அவர் எப்படிக் கொல்லப்பட்டார்?

பழங்காலத்தில், தேவர்கள் அனைவரும், தானவர்களைக் கொன்று கொண்டிருந்த போது, உயர்ந்த நோன்புகள் கொண்ட எனது தந்தையின், அந்த ஒப்பற்ற வீரரின் {பீஷ்மரின்} துணையை அவர்கள் {தேவர்கள்} நாடினர். பெரும் சக்தியைக் கொண்ட அந்த மகன்களில் முதன்மையானவரும், யாருடைய பிறப்பினால், உலகப் புகழ் கொண்ட சந்தனு, தனது வருத்தம், துக்கம், துன்பம் ஆகிய அனைத்தையும் கைவிட்டாரோ, அந்தக் கொண்டாடப்பட்ட வீரரும், வேதங்களையும், அதன் கிளைகளின் உண்மைகளையும் நன்கு அறிந்தவரும், அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருந்தவரும், தனது {க்ஷத்திரிய} வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவருமான அந்தப் புனிதமான ஞானி {பீஷ்மர்}, ஓ! சஞ்சயா, கொல்லப்பட்டார் என்று என்னிடம் உன்னால் எப்படிச் சொல்ல முடிகிறது?

அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவரும், பணிவும் மென்மையும் கொண்டவரும், ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரும், பெரும் சக்தி கொண்டவருமான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டால், ஓ! சஞ்சயா, எஞ்சிய எனது படைகள், ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகவே நான் கருதுகிறேன். அரசுரிமை மீது கொண்ட விருப்பத்தால், தங்களது மதிப்பிற்குரிய பெரியவரைப் பாண்டுவின் மகன்கள் கொன்றதால், அறத்தைவிட {தர்மத்தைவிட} மறம் {அதர்மம்} வலுவாகிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவரும், எவராலும் விஞ்சப்பட இயலாதவருமான ஜமதக்னியின் மகன் ராமர் {பரசுராமர்}, அம்பையின் சார்பாகப் பழங்காலத்தில் போரிட்ட போது, அவரால் கூடப் பீஷ்மரை வீழ்த்த முடியவில்லையே. நீயோ வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், தனது சாதனைகளால் இந்திரனுக்கு ஒப்பானவருமான அந்தப் பீஷ்மர் கொல்லப்பட்டார் என்று என்னிடம் சொல்கிறாயே. இதைவிடப் பெரிய துயரம் எனக்கு வேறு என்ன இருக்க முடியும்?

ஜமதக்னியின் மகன் ராமராலேயே {பரசுராமராலேயே} கொல்லப்பட முடியாதவரும், க்ஷத்திரியக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக வீழ்த்தியவருமான அந்தப் பெரும் புத்திக் கூர்மையுடையவர் {பீஷ்மர்} இப்போது சிகண்டியால் கொல்லப்பட்டார். அனைத்து ஆயுதங்களையும் அறிந்த போர்வீரரும், துணிச்சல்மிகுந்தவரும், உயர்ந்த ஆயுதங்களை நன்கு அறிந்தவருமான அந்தப் பாரதக் குலத்தின் காளையைக் {பீஷ்மரைக்} கொன்ற துருபதனின் மகன் சிகண்டி, உயர்ந்த சக்தி படைத்தவரும், ஒப்பற்றவருமான பார்கவரைவிட {பரசுராமரைவிட} சக்தி, ஆற்றல், பலம் ஆகியவற்றில் மேன்மையானவன் என்பதில் ஐயமில்லை. அந்த ஆயுத மோதலில் அந்த எதிரிகளைக் கொல்பவனைப் {சிகண்டியைப்} பின்தொடர்ந்த வீரர்கள் யார்? பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போர் எப்படி இருந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக.

ஓ! சஞ்சயா, அந்த வீரரை {பீஷ்மரை} இழந்த எனது மகனின் {துரியோதனனின்} படை {தலைவனை இழந்த} பாதுகாப்பற்ற மங்கையைப் போன்றிருக்குமே. உண்மையில் எனது அந்தப் படை மேய்ப்பனை {இடையனை} இழந்து பீதியடைந்திருக்கும் பசு மந்தையைப் போன்றே இருக்கும். அனைவரிலும் மேன்மையான ஆற்றலைப் படைத்த அவர் {பீஷ்மர்}, போர்க்களத்தில் சாய்ந்த பிறகு, எனது படையின் மனநிலை எப்படி இருந்தது? ஓ! சஞ்சயா, வலிமையும் சக்தியும் மிக்க நமது தந்தையையும், உலகின் நீதிமான்களில் முதன்மையானவரையும் கொல்வதற்குக் காரணமாக அமைந்த நமது வாழ்வில் பலம் என்பது ஏது? {நாம் பிழைத்திருப்பதால் என்ன பயன்?}.

ஆழங்காண இயலாத நீரில், படகு மூழ்குவதைக் கண்டும், கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போல, ஐயோ, எனது மகன்கள் பீஷ்மரின் மரணத்தால் துயருற்று அழுவார்கள் என்றே நான் கருதுகிறேன். ஓ! சஞ்சயா, மனிதர்களில் புலியான அந்தப் பீஷ்மரின் மரணத்தைக் கேட்ட பிறகும், எனது இதயம் பிளக்காமல் இருப்பதால், நிச்சயம் அது வஜ்ரத்தாலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆயுதங்கள், புத்திக்கூர்மை, கொள்கை ஆகியவை யாரிடம் அளவிலாத அளவுக்கு இருந்ததோ அந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, ஐயோ, அந்த ஒப்பற்ற வீரர் போர்க்களத்தில் எப்படிக் கொல்லப்பட்டார்?

ஆயுதங்கள், வீரம், தவத்தகுதி, புத்திக்கூர்மை, உறுதி, தானம் ஆகியவற்றின் விளைவால் கூட ஒரு மனிதன் தன்னை மரணத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது. சந்தனுவின் மகன் பீஷ்மர் இறந்தார் என்று நீ சொல்வதால், ஓ! சஞ்சயா, பெரும் சக்தி படைத்த காலமானது, இவ்வுலகில் உள்ள எதனாலும் கடக்கப்பட முடியாதது என்பது உண்மையே ஆகும்.

எனது மகன்களின் நிமித்தமாகத் துயரத்தில் எரிந்து, பெரும் கவலையில் மூழ்கியிருந்த நான், சந்தனுவின் மகனான பீஷ்மர் நிவாரணத்தைத் தருவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். (ஆகாயத்தில் இருந்து விழுந்த) சூரியன் பூமியில் கிடப்பதைப் போல, சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடப்பதைக் கண்ட துரியோதனன், ஓ! சஞ்சயா, தனது புகலிடத்திற்காக வேறு என்ன ஏற்பாட்டைச் செய்தான்?

ஓ! சஞ்சயா, எனது அறிவின் துணை கொண்டு ஆலோசித்தாலும் கூட, எனது தரப்பிலும், எதிரியின் தரப்பிலும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதற்காகச் சேர்ந்திருக்கும் இந்த மன்னர்களின் முடிவு என்ன என்பதை நான் காணவில்லை. சந்தனுவின் மகனுக்கு {பீஷ்மருக்கு} மரணத்தை ஏற்படுத்தியாவது அரசுரிமையைப் பாண்டவர்கள் பெற விரும்புகின்றனர்; உயர்ந்த நோன்புகள் கொண்ட அந்த வீரரைத் தியாகம் செய்தாவது அரசுரிமையை நாங்களும் பெற விரும்புகிறோம் எனும்போது, ஐயோ, முனிவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரிய வகையினருக்கான கடமைகள் கொடூரமானவையே!

பிருதையின் {குந்தியின்} மகன்களும் {பாண்டவர்களும்}, எனது மகன்களும் என அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்கின்றனர். எனவே, அவர்கள் இதனால் (இதைச் செய்வதால்) எந்தப் பாவத்தையும் இழக்கவில்லை. நேர்மையானவன் கூட, ஓ! சஞ்சயா, அச்சம் தரும் ஆபத்துகள் நேரும்போது இதைச் செய்யவே வேண்டும். ஆற்றலை வெளிப்படுத்தலும், முடிந்த அளவுக்குப் பலத்தை வெளிப்படுத்தலும் க்ஷத்திரியர்களுக்கான கடமைகளாக விதிக்கப்பட்டுள்ளதே.

பணிவுடையவரும், வீழ்த்தப்பட முடியாத வீரரும், சந்தனுவின் மகனுமான எனது தந்தை {பெரியப்பா பீஷ்மர்} பகையணியை அழித்துக் கொண்டிருந்த போது, உண்மையில், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அவரை எப்படி எதிர்த்தார்கள்? துருப்புகள் எவ்வாறு அணிவகுக்கப்பட்டிருந்தன? அவர் {பீஷ்மர்} அந்த உயர் ஆன்ம எதிரிகளிடம் {பாண்டவர்களிடம்} எப்படிப் போரிட்டார்? ஓ! சஞ்சயா, எனது தந்தை பீஷ்மர் எப்படிக் கொல்லப்பட்டார்?

துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான வஞ்சகன் சகுனி, துச்சாசனன் ஆகியோர், பீஷ்மர் கொல்லப்பட்ட போது என்ன சொன்னார்கள்? மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் உடல்களைக் கொண்டதும், அம்புகள், வேல்கள், பெரிய வாள்கள், தோமரங்கள் ஆகிய பாச்சிகைகளைக் {பகடைக்காய்களைக்} கொண்டதுமான அழிவைத் தரும் போர் விளையாட்டு எனும் அந்தப் பயங்கர அறைக்குள் நுழைந்து, அந்தப் பகடைப் பலகையில், தங்கள் உயிர்களையே பணயமாக வைத்த இழிந்த சூதாடிகளான அந்த மனிதர்களில் காளைகள் யார்? யார் வென்றது? யார் வீழ்ந்தது? யார் பகடைக் காய்களை வெற்றிகரமாக வீசியது? சந்தனுவின் மகனான பீஷ்மரைத் தவிர வேறு யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள்? எனது தந்தையும் {பெரியப்பாவும்}, பயங்கரக் காரியங்களைச் செய்தவரும், பீஷ்மர் என்ற போர்க்களத்தின் ஆபரணமுமான {ரத்தினமுமான} தேவவிரதர் {பீஷ்மர்_பயங்கரமானவர்} கொல்லப்பட்டார் என்பதைக் கேட்ட எனக்கு அமைதி கிடைக்காது. எனவே எனக்கு அனைத்தையும் சொல்வாயாக.

எனது பிள்ளைகள் அனைவரும் இறந்து விடுவார்கள் என்ற சிந்தனையால் எனது இதயத்தை ஆழ்ந்த சோகம் துளைத்தெடுக்கிறது. ஓ! சஞ்சயா, நீயோ, நெருப்பில் தெளிந்த நெய்யை ஊற்றுவது போல, எனது அந்தத் துயரத்தை மேலும் அதிகரிக்கிறாய். பெரும் சுமையை ஏற்றுக் கொண்டவரும், அனைத்து உலகங்களிலும் கொண்டாடப்படுபவருமான பீஷ்மர் கொல்லப்பட்டதால் எனது மகன்கள் இப்போதும் துயரத்தில் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்.

துரியோதனனின் செயலால் எழுந்த அந்தத் துயரங்கள் அனைத்தையும் நான் கேட்பேன். எனவே, ஓ! சஞ்சயா, அங்கே நடந்த அனைத்தையும், அந்தப் போரில், எனது தீய மகனுடைய {துரியோதனனுடைய} முட்டாள் தனத்தின் விளைவால் நிகழ்ந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. {அவனால் இடப்பட்ட} தீய உத்தரவுகள், நல்ல உத்தரவுகள் என அனைத்தையும், ஓ! சஞ்சயா, எனக்குச் சொல்வாயாக. ஆயுதங்களை நன்கு அறிந்த வீரரும், வெற்றியில் விருப்பமுள்ளவருமான அந்தப் பீஷ்மர், தனது சக்தியின் உதவியால் அந்தப் போரில் சாதித்ததை முழுமையாகவும், விவரமாகவும் எனக்குச் சொல்வாயாக. குருக்களின் படைகளுக்குள் அந்தப் போர் எப்படி நடந்தது? அவை ஒவ்வொன்றும் நடந்த விதம் எப்படி இருந்தது?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்