Monday, April 04, 2016

உணர்வுகளை இழந்த திருதராஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 009

Dhritarashtra lost his senses! | Drona-Parva-Section-009 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : துரோணரின் பெருமைகளைச் சொல்லி வருந்திய திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து மயங்கியது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் அதிகமாக ஆயுதங்களை அறிந்த துரோணரைப் பாண்டவர்களும் சிருஞ்சயர்களும் போரில் எவ்வாறு கொன்றனர்? (போரிடும் சமயத்தில்) அவரது தேர் உடைந்ததா? (எதிரியைத்) தாக்கும்போது அவரது வில் ஒடிந்ததா? அல்லது, துரோணர் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் அவர் தனது மரண அடியைப் பெற்றாரா?


ஓ! குழந்தாய் {சஞ்சயா}, எதிரிகளால் அவமதிக்கத் தகாத வீரரும், தங்கச் சிறகுகள் கொண்ட அடர்த்தியான கணைகளின் மாரியை இறைப்பவரும், கர நளினம் {லாகவம்} கொண்டவரும், பிராமணர்களில் முதன்மையானவரும், அனைத்தையும் சாதித்தவரும், போர்க்கலையின் அனைத்து வகைகளையும் அறிந்தவரும், பெரும் தூரத்திற்குத் தன் கணைகளை ஏவவல்லவரும், தற்கட்டுப்பாடு கொண்டவரும், ஆயுதங்களின் பயன்பாட்டில் பெரும் திறம்பெற்றவரும், தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவரும், மங்காத புகழ் கொண்டவரும், எப்போதும் கவனம் நிறைந்தவரும், போரில் கடுஞ்சாதனைகளை அடைந்தவருமான அந்த வலிமைமிக்க வீரரை {துரோணரைப்} பாஞ்சால இளவரசனான அந்தப் பிருஷதன் மகன் (துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்) எவ்வாறு கொன்றான்?

நால்வகை ஆயுதங்களைக் கொண்டவரான அந்த வீரர், ஐயோ!, வில்லாளித்தன்மை கொண்ட அந்தத் துரோணர் கொல்லப்பட்டார் என்று நீ சொல்வதாலும், உயர் ஆன்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, துணிச்சல்மிக்கத் துரோணரே கொல்லப்பட்டாரென்பதாலும், முயற்சியை விட விதியே வலிமையானது என வெளிப்படையாக எனக்குத் தெரிகிறது. புலித் தோல்களால் மூடப்பட்டதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது பிரகாசமான தேரில் செல்லும் அந்த வீரர் {துரோணர்} கொல்லப்பட்டதைக் கேட்டு என்னால் துயரைப் போக்க முடியவில்லை.

ஓ! சஞ்சயா, இழிந்தவனான நான், துரோணர் கொல்லப்பட்டதைக் கேட்டும் உயிரோடிருப்பதால், பிறரின் துன்பத்தில் விளைந்த துயரத்தால் எவனும் இறப்பதில்லை என்பதில் ஐயமில்லை. விதியே அனைத்திலும் வலியது என்றும், முயற்சி கனியற்றது {பலனற்றது} என்றும் நான் கருதுகிறேன். துரோணரின் மரணத்தைக் கேட்டும், நூறு துண்டுகளாக என் இதயம் உடைந்து போகாததால் கடுமையாக இருக்கும் அது {என் இதயம்} நிச்சயம் இரும்பாலானதே. வேதங்கள், எதிர்காலத்தை அறியும் உளவியல், வில்லாளித்தன்மை ஆகியவற்றின் கல்வியைப் பெற விரும்பி எவருக்காகப் பிராமணர்களும், இளவரசர்களும் காத்திருந்தார்களோ, ஐயோ, அவர் {துரோணர்} எவ்வாறு காலனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்?

பெருங்கடல் வறண்டு போவதைப் போலவோ, மேரு அதன் இடத்தில் இருந்து பெயர்க்கப்படுவதைப் போலவோ, அல்லது ஆகாயத்தில் இருந்து சூரியன் வீழ்வதைப் போலவோ ஆன துரோணரின் வீழ்ச்சியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தீயோரை ஒடுக்குபவராகவும், நல்லோரைக் காப்பவராகவும் அவர் இருந்தார்.

இழிந்த துரியோதனனுக்காகத் தன் உயிரை எவர் கொடுத்தாரோ, எவருடைய ஆற்றலால் என் தீய மகன்களுக்கு வெற்றியில் விருப்பம் உண்டானதோ, எவருடைய புத்திக்கூர்மை பிருஹஸ்பதி அல்லது உசனஸுக்கு {சுக்ராச்சாரியருக்கு} இணையானதோ, ஐயோ, அந்த எதிரிகளை எரிப்பவர் {துரோணர்} எவ்வாறு கொல்லப்பட்டார்? [1].

[1] வேறொரு பதிப்பில் இங்கே விடுபட்ட ஒரு பத்தியும் இருக்கிறது. அது பின்வருமாறு: “பெரும் மகிமை கொண்ட எவர், தனக்குக் கீழ் இருந்த போர்வீரர்கள் அனைவரும் நிலைத்திருக்கக் காரணமாக இருந்தாரோ, எவருக்குக் காலன் வசப்பட்டிருந்தானோ, அந்தத் துரோணர் எவ்வாறு கொல்லப்பட்டார்?” என்று அதிக வரி இருக்கிறது.

சிவப்பு நிறத்தாலானவையும், தங்க வலையால் மூடப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், போரில் எந்த ஆயுதத்தாலும் தாக்கப்பட முடியாதவையும், பெரும் பலம் கொண்டவையும், உற்சாகமாகக் கனைப்பவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், அவரது {துரோணரின்} தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், அந்த வாகனத்தைச் சிறப்பாக இழுத்தவையும், போர்க்களத்தின் மத்தியில் எப்போதும் பாதுகாப்பாக இருந்தவையுமான அவரது பெரிய குதிரைகள் பலவீனமடைந்து மயக்கமுற்றனவா? போரில், சங்கொலிகள் மற்றும் பேரிகையொலிகளைக் கேட்டு முழங்கும் யானைகளின் பிளிறல்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டு, விற்களின் நாணொலி, கணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் மழை ஆகியவற்றால் நடுங்காது, தங்கள் தோற்றத்தாலேயே எதிரியின் வீழ்ச்சியை முன்னறிவித்துக் கொண்டு, (கடும் உழைப்பின் விளைவால்) எப்போதும் பெருமூச்சு விடாமல், களைப்பு மற்றும் வலிகள் அனைத்திற்கும் மேலாக இருந்தவையான பரத்வாஜர் மகனின் {துரோணரின்} தேரை இழுத்த அந்த வேகமான குதிரைகள் எவ்வாறு வீழ்த்தப்பட்டன? அத்தகு குதிரைகளே அவரது தங்கத் தேரில் பூட்டப்பட்டிருந்தன. அத்தகு குதிரைகளே அந்த நரவீரர்களில் {human heroes} முதன்மையானவரால் {துரோணரால்} அதில் {அந்தத் தேரில்} பூட்டப்பட்டது.

பசுந்தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவரால் {துரோணரால்}, ஓ! மகனே {சஞ்சயா}, ஏன் பாண்டவப் படை எனும் கடலைக் கடக்க முடியவில்லை? எந்த வீரர், பிற வீரர்களிடம் எப்போதும் கண்ணீரை வரவழைப்பாரோ, எவருடைய (ஆயுத) அறிவை உலகின் வில்லாளிகள் அனைவரும் நம்பி இருந்தனரோ, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} போரில் அடைந்த சாதனை என்ன? உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்று கொண்டவரும், பெரும் வலிமை கொண்டவருமான துரோணர், உண்மையில் போரில் என்ன செய்தார்?

சொர்க்கத்தில் உள்ள சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவரும், வீரர்களில் முதல்வரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், கடும் சாதனைகளை அடைந்தவருமான அவருடன் {துரோணருடன்} மோதிய தேர்வீரர்கள் யாவர்? தங்கத் தேரைக் கொண்டவரும், பெரும் வலிமையும் பலமும் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை இருப்புக்குத் தூண்டி அழைப்பவருமான அவரை {துரோணரைக்} கண்டதும் பாண்டவர்கள் தப்பி ஓடினார்களா? அல்லது நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் கூடி, பாஞ்சால இளவரசனை (திருஷ்டத்யும்னனைத்) தன் கட்டுக் கயிறாகக் கொண்டு [2] அனைத்துப் பக்கங்களிலும் தன் துருப்புகளால் துரோணரைச் சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்கினானா?

[2] ஒருவேளை இது, பாதுகாப்பிற்குத் தயாராக திருஷ்டத்யும்னனை நிற்க வைத்தார் என்ற பொருளைக் கொண்டிருக்கலாம் என இங்கே கங்குலி விளக்குகிறார்.

பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் பிற தேர்வீரர்களைத் தடுத்திருக்க வேண்டும், அதன்பிறகே பாவச்செயல்களைப் புரியும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரைச் சூழ்ந்திருக்க வேண்டும். அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட மூர்க்கமான திருஷ்டத்யும்னனைத் தவிர அந்த வலிமைமிக்க வீரருக்கு {துரோணருக்கு} மரணத்தைக் கொடுக்கக்கூடிய வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. கேகயர்கள், சேதிகள், கரூசர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் பிற மன்னர்கள், பாம்பை மொய்க்கும் எறும்புகளைப் போல ஆசானை {துரோணரைச்} சூழ்ந்திருந்த போது, அவர் {துரோணர்} ஏதோ ஒரு கடுமையான சாதனையில் ஈடுபட்டிருக்கும்போதே இழிந்தவனான திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றிருப்பான் என்று தெரிகிறது. இதுவே என் எண்ணம்.

வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதான (ஐந்தாவது வேதமான) வரலாறுகளையும் {புராணங்களையும்} கற்று, ஆறுகளுக்குக் கடலைப் போலப் பிராமணர்களுக்குப் புகலிடமாக இருந்த அந்த எதிரிகளை எரிப்பவர் எவரோ, பிராமணர் மற்றும் க்ஷத்திரியர் என இருவகையில் வாழ்ந்தவர் எவரோ, ஐயோ! வயதால் முதிர்ந்த அந்தப் பிராமணர் {துரோணர்} ஆயுத முனையில் எவ்வாறு தன் முடிவைச் சந்தித்திருக்க முடியும்? பெருமைமிகுந்தவராக இருப்பினும், என் காரணமாக அவர் அவமானத்தையும், துன்பத்தையும் அடைய நேர்ந்ததே. தகாதவராக இருப்பினும் அவர் குந்தி மகனின் {அர்ஜுனனின்} கைகளால் தன் நடத்தைக்கான கனியை அடைந்தார் [3]. உலகத்தில் வில் தரிப்போர் அனைவரும் எவரது சாதனைகளை நம்பியிருக்கிறார்களோ, உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவரும், பெரும் திறன் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, ஐயோ, செல்வத்தை விரும்பும் நபர்களால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?

[3] அர்ஜுனனை ஆயுதப் பயிற்சியில் கவனமாக வளர்த்ததால், தன் அக்கறை மற்றும் உழைப்புக்கான கனியை {பலனை} மரணத்தின் வடிவில், அதுவும் தன் சீடனின் கைகளாலே மரணத்தைப் பெறும் நிலையைத் துரோணர் அடைந்தார் எனத் திருதராஷ்டிரன் சொல்வதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்டு சொர்க்கத்தில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போல உலகத்தில் முதன்மையான அவர் {துரோணர்}, ஐயோ, சிறுமீனால் கொல்லப்படும் திமிங்கலத்தைப் போலப் பார்த்தர்களால் {பாண்டவர்களால்} எவ்வாறு கொல்லப்பட முடியும்? வெற்றியை விரும்பும் எந்த வீரனும் எவரிடம் உயிரோடு தப்ப முடியாதோ, வேத அன்பை விரும்புவோரின் வேத ஒலி, வில்லாளித்தன்மையில் திறத்தை விரும்புவோரின் விற்களால் உண்டான நாணொலி ஆகிய இரண்டும் எவரிடம் நீங்காதிருந்ததோ, ஒருபோதும் உற்சாகமிழக்காமல் எவர் இருந்தாரோ, ஐயோ, செழிப்பைக் கொண்டவரும், போரில் வீழ்த்தப்பட முடியாதவருமான அந்த வீரர், சிங்கத்திற்கோ, யானைக்கோ ஒப்பான ஆற்றலைக் கொண்ட அந்த வீரர் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் இறந்தார் என்ற கருத்தையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை [4]. எவருடைய புகழ் மங்கவில்லையோ, எவருடைய வலிமை அவமதிக்கப்பட்டதில்லையோ அந்த வெல்லப்பட முடியாத வீரரை {துரோணரை}, மனிதர்களில் முதன்மையானோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} போரில் எவ்வாறு கொல்ல முடியும்?

[4] வேறு பதிப்பில் இந்தப் பத்தியில் இதற்கு மேலும் இருக்கிறது. அது பின்வருமாறு: “அவர் உலகத்தையே எதிர்த்து போரிடக்கூடியவராயிற்றே? எவர் பிரம்மவர்ச்சஸில் நான்முகனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பானவரோ, க்ஷத்திரிய தர்மத்தில் நாராயணனுக்கு இணையானவரோ, முழுமையான பிரம்மக்ஷத்திரிய ஒளிகள் ஈஸ்வரனுக்கு வசப்பட்டிருந்தது போல எவருக்கு வசப்பட்டிருந்தனவோ, கீழ்ப்படுத்த முடியாத புகழும், பலமும் உள்ளவரான அந்தத் துரோணரைப் போரில் வெல்வதற்கு வல்லமையுள்ளவன் எவன்? யுதிஷ்டிரனின் தவத்தினால் என்னைச் சேர்ந்த குரு வீரர்கள் அனைவரும் குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு கொல்லப்பட்டார்கள் என நான் நினைக்கிறேன்”.

துரோணருக்கு முன்பும், அவருக்குப் பக்கத்திலும் நின்று அவரைப் பாதுகாத்தபடி போரிட்டவர்கள் யாவர்? அடைவதற்குக் கடினமான அந்த முடிவை அடையும்போது, அவருக்குப் பின்புறத்தில் சென்றவர்கள் யாவர்? துரோணரின் வலது மற்றும் இடது சக்கரங்களைப் பாதுகாத்த உயர் ஆன்ம வீரர்கள் யாவர்? போரில் அந்த வீரர் {துரோணர்} போராடிக்கொண்டிருந்த போது அவருக்கு முன்னிலையில் இருந்தவர் யாவர்? அந்தச் சந்தர்ப்பத்தில், தங்கள் உயிரையே விடத்துணிந்து, முகத்துக்கு முகமாக மரணத்தைச் சந்தித்தவர்கள் யாவர்? துரோணரின் போரில் இறுதிப் பயணத்தில் சென்ற வீரர்கள் யாவர்?

துரோணரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அந்த க்ஷத்திரியர்களில் எவராவது தங்களைப் பொய்யர்களாக நிரூபித்துக் கொண்டு அந்த வீரரை {துரோணரைப்} போரில் கைவிட்டனரா? அப்படிக் கைவிடப்பட்டுத் தனியாக இருந்தபோது எதிரியால் அவர் {துரோணர்} கொல்லப்பட்டாரா? பெரும் ஆபத்திலேயே இருந்தாலும் அச்சத்தால் போரில் எப்போதும் புறமுதுகிடாதவர் துரோணர். அப்படியிருக்கையில் எதிரியால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?

ஓ! சஞ்சயா, பெரும் துன்பத்தில் இருந்தாலும் கூட, ஒரு சிறப்பு மிகுந்த மனிதன் தன் வலிமையின் அளவுக்குத் தக்க தன் ஆற்றலைப் பயன்படுத்துவான். இவையாவும் துரோணரிடம் இருந்தன. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, நான் என் புலனுணர்வை இழக்கிறேன். இந்த உரையாடல் சிறிது நேரம் நிற்கட்டும். என் உணர்வுகள் மீண்ட பிறகு, ஓ! சஞ்சயா, மீண்டும் உன்னை நான் கேட்கிறேன்” {என்றான் திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்