Sunday, August 28, 2016

கௌரவர்கள் ஐவரைக் கொன்ற பீமன்! - துரோண பர்வம் பகுதி – 134

Bhima killed five kauravas! | Drona-Parva-Section-134 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 50)

பதிவின் சுருக்கம் : கர்ணன் மற்றும் அவனை நம்பிய துரியோதனன் ஆகியோரைக் குறித்து சஞ்சயனிடம் புலம்பி, பீமனின் ஆற்றலை வியந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்; கர்ணனின் தோல்வியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத துரியோதனின் தம்பிகள் ஐவர் பீமனை எதிர்த்துச் சென்றது; அவர்களைக் கண்ட கர்ணன் மீண்டும் திரும்பிப் பீமனுடன் போரிட்டது; கர்ணனைத் தடுத்துக் கொண்டே அந்தக் கௌரவர்கள் ஐவரையும் கொன்ற பீமன்; கர்ணனைக் கோபத்துடன் வெறித்துப் பார்த்த பீமன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன். அதிரதன் மகன் {கர்ணன்} தீர்மானத்துடன் போரிட்டாலும், பாண்டுவின் மகனை {பீமனை} வெல்ல முடியாததால், அந்தப் பயனற்ற முயற்சிக்கு ஐயோ.(1) கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்கள் அனைவரையும் போரில் வெல்லத்தக்கவனாகக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்கிறான். "கர்ணனைப் போன்ற மற்றொரு போர்வீரனை இவ்வுலகில் நான் கண்டதில்லை" என்று துரியோதனன் பேசுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். (2)

உண்மையில், ஓ! சூதா {சஞ்சயா}, முன்னர்த் துரியோதனன் என்னிடம், "கர்ணன், வலிமைமிக்க வீரனும், உறுதிமிக்க வில்லாளியும், களைப்பனைத்திற்கும் அப்பாற்பட்டவனுமாவான். அந்த வசுசேனனை {கர்ணனை} நான் என் கூட்டாளியாகக் கொண்டால், தேவர்களே எனக்கு ஈடாகமாட்டார்கள் எனும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பலவீனமானவர்களும், கொடூரர்களுமான பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?" என்று {துரியோதனன்} சொல்வது வழக்கம். எனவே, ஓ! சஞ்சயா, தோற்கடிக்கப்பட்டு, விஷத்தை இழந்த பாம்பைப் போலத் தெரிந்த கர்ணன், போரில் இருந்து ஓடியதைக் கண்ட துரியோதனன் என்ன சொன்னான் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உணர்வுகளை இழந்தவனான துரியோதனன், சுடர்மிக்க நெருப்புக்குள் அனுப்பப்படும் ஒரு பூச்சியைப் போல, போரை அதிகம் அறியாதவனும், உதவியற்றவனுமான துர்முகனை அந்தப் பயங்கர மோதலுக்குள் அனுப்பினானே.


ஓ! சஞ்சயா, அஸ்வத்தாமன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோர் ஒன்றுசேர்ந்தாலும், பீமசேனனின் எதிரே நிற்க முடியாதே. பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான பயங்கர வலிமை மற்றும் மருத்தனின் சக்தி ஆகியவற்றைக் கொண்ட பீமனையும், அவனது கொடூர நோக்கங்களையும் அவர்களும் {அஸ்வத்தாமன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகியோரும்} அறிவார்கள். பீமனின் வலிமை, கோபம், சக்தி ஆகியவற்றை அறிந்த அந்தப் போர் வீரர்கள், யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பானவனும், கொடூர செயல்களைச் செய்பவனுமான அந்த வீரனின் {பீமனின்} கோபத்தைத் தூண்டுவார்களா? சூதனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கர்ணன் மட்டுமே, தன் கரங்களின் ஆற்றலை நம்பி, பீமசேனனை அலட்சியமாகக் கருதி அவனுடன் போரிட்டதாகத் தெரிகிறது.(3-10)

புரந்தரன் {இந்திரன்} ஓர் அசுரனை வென்றதைப் போலக் கர்ணனைப் போரில் வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, போரில் வேறு எவராலும் வெல்லப்பட முடியாதவனாகவே இருக்கிறான். துரோணரையே கலங்கடித்து, அர்ஜுனனைத் தேடி என் படைக்குள் தனியாக நுழைந்த அந்தப் பீமனை, உயிர்வாழும் நம்பிக்கை கொண்ட எவன் அணுகுவான்? உண்மையில், ஓ! சஞ்சயா, பீமனின் முகத்துக்கு நேராக நிற்கும் துணிவு கொண்ட வேறு எவன் இருக்கிறான்?(11-13) கையில் உயர்த்தப்பட்ட வஜ்ரத்துடன் கூடிய பெரும் இந்திரனின் முன்பு நிற்க அசுரர்களில் எவன் துணிவான்? [1] ஒரு மனிதன், இறந்தவர்களின் மன்னனுடைய {யமனின்} வசிப்பிடத்தில் நுழைந்த பிறகும் திரும்பலாம்.(14) ஆயினும், எவனாலும் பீமசேனனிடம் மோதிவிட்டு திரும்ப முடியாது. பலவீனமான ஆற்றலுடனும், அறிவில்லாமலும், கோபக்கார பீமசேனனை எதிர்த்துச் செல்வோர் சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போன்றவராவர்.

[1] "இரு மொழிகளின் மாண்புகளும் முற்றிலும் வேறாக இருப்பதால், பதினாலாம் சுலோகத்தின் முதல் வரியின் பொருளை, பதிமூன்றாம் சுலோகத்தின் இரண்டாம் பாதியுடன் உறுதியான வடிவத்தில் இணைக்க முயலாமல் தனியாகவே கொடுத்திருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "சஞ்சய, வஜ்ராயுதத்தைக் கையில் பிடித்த மகேந்திரனுக்கு எதிரில் அசுரன் போலப் பீமனுக்கெதிரில் எவன் நிற்க சக்தியுள்ளவன்?" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரிலும் மேற்கண்ட பதிப்பில் உள்ளதைப் போலவே உள்ளது.

கோபமும், மூர்க்கமும் கொண்ட பீமன், என் மகன்களைக் கொல்வது குறித்துக் குருக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சபையில் சொன்னதை நினைவுகூர்ந்தும், கர்ணனின் தோல்வியைக் கண்டும், அச்சத்தாலேயே துச்சாசனனும், அவனது தம்பிகளும் பீமனுடன் மோதவில்லை என்பதில் ஐயமில்லை.(15-17) ஓ! சஞ்சயா, "கர்ணனும், துச்சாசனனும், நானும் போரில் பாண்டவர்களை வெல்வோம்" என்று (இவ்வார்த்தைகளை) மீண்டும் மீண்டும் சபையில் சொன்ன அந்த என் தீய மகன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்குப் பொருத்தமானதை [2] மறுத்ததன் விளைவால், பீமனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதையும், அவனது தேரை இழக்கச் செய்ததையும் கண்டு துயரால் எரிக்கப்படுகிறான் என்பதில் ஐயமில்லை.(18, 19) கவசம்பூண்ட தனது தம்பிகள், தன் குற்றத்தின் விளைவால் போரில் பீமசேனனால் கொல்லப்படுவதைக் கண்டு, என் மகன் {துரியோதனன்} துயரால் எரிகிறான் என்பதில் ஐயமில்லை.(20)

[2] உண்மையில், "கிருஷ்ணனை அவமதித்ததால்" என்பதே இங்கே பொருளாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "மதிகேடனும், கௌரவச் சபையில் 'கர்ணனும், துச்சாசனனும், நானும் யுத்தத்தில் பாண்டவர்களை ஜயிப்போம்' என்று அடிக்கடி சொன்னவனுமான என்னுடைய இழிகுணமுள்ள புதல்வன், பீமனாலே கர்ணன் தோல்வியடைவிக்கப்பபட்டு ரதத்தை இழந்ததைக் கண்டும் (முன்பு தான்) கிருஷ்ணனை அவமதித்ததை நினைத்தும் நிச்சயமாக மிகுந்த மன வருத்தத்தை அடைவான்" என்றிருக்கிறது.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், பயங்கர ஆயுதங்களைத் தரித்தவனும், போரில் காலனைப் போலவே நிற்பவனும், பாண்டுவின் மகனுமான பீமனை உயிரில் விருப்பமுள்ள எவன்தான் பகைமையுடன் எதிர்த்துச் செல்வான்?(21) வடவாக்னியின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து ஒரு மனிதன் தப்பிவிடலாம், ஆனால், பீமனின் முகத்துக்கு எதிரில் இருந்து எவனாலும் தப்ப முடியாது என்றே நான் நம்புகிறேன்.(23) உண்மையில், பார்த்தனோ, பாஞ்சாலர்களோ, கேசவனோ, சாத்யகியோ போரில் கோபத்தால் தூண்டப்படும்போது, அவர்கள் (தங்கள்) உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா} என் மகன்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றவே" என்றான் {திருதராஷ்டிரன்}.(24)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, தற்போதைய பேரழிவைக் கருத்தில் கொண்டு இப்படித் துயருறும் நீரே இவ்வுலகத்தின் அழிவுக்கான வேர் {காரணம்} என்பதில் ஐயமில்லை.(25) உமது மகன்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த நீரே இந்தக் கடும் பகைமையைத் தூண்டியவராவீர். (நலம் விரும்பும் நண்பர்களால்) தூண்டப்பட்டாலும், மரணமடைய விதிக்கப்பட்ட மனிதனைப் போல உகந்த மருந்தை நீர் ஏற்க மறுத்தீர்.(26) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, செரிக்கப்பட முடியாத மிகக் கடுமையான நஞ்சைப் பருகிய நீர், இப்போது அதன் விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வீராக.(27) போராளிகள் தங்களால் முடிந்த வரை சக்தியுடன் போரிடுகின்றனர்; இருப்பினும் அவர்களை நீர் நிந்திக்கிறீரே. எனினும், போர் எவ்வாறு நடந்தது என்பதை விளக்கிச் சொல்கிறேன் கேளும்.(28)

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், உடன் பிறந்தவர்களுமான உமது ஐந்து மகன்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(29) அவர்கள், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆவர். அழகிய கவசங்களைப் பூண்டிருந்த அவர்கள் அனைவரும் பாண்டுவின் மகனை எதிர்த்து விரைந்தனர்.(30) அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலத் தெரிந்த தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தனர்.(31) எனினும், பீமன் அந்தப் போரில் இப்படித் திடீரெனத் தன்னை எதிர்த்து விரைபவர்களும், தெய்வீக அழகுடையவர்களுமான அந்த இளவரசர்களைச் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.(32)

பீமசேனனை எதிர்த்து முன்னேறும் உமது மகன்களைக் கண்டவனும், ராதையின் மகனுமான கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், கூர் முனை கொண்டவையுமான கணைகளை ஏவியபடியே அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(33) பீமன், உமது மகன்களால் தடுக்கப்பட்டாலும் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(34) பிறகு கர்ணனைச் சூழ்ந்து கொண்ட குருக்கள் {கௌரவர்கள்}, நேரான கணைகளின் மழையால் பீமசேனனை மறைத்தனர்.(35) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்த பீமன், மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரையும், அவர்களது, குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் சேர்த்து இருபத்தைந்து {25} கணைகளால் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான் [3].(36) தங்கள் தேரோட்டிகளுடன் தங்கள் தேர்களில் இருந்து விழுந்த அவர்களது உயிரற்ற வடிவங்கள் {உடல்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான கனமான மலர்களுடன் கூடியவையுமான பெரிய மரங்களைப் போலத் தெரிந்தன.(37)

[3] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும்,  துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை இப்போது இந்தப் பதிவில் {துரோண பர்வம் பகுதி 134ல்} அதே 14ம் நாள் போரில் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 42 பேரைக் கொன்றிருக்கிறான். {?} என்ற அடைப்புக்குறிகளுக்குள் மீண்டும் கூறப்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதிரதன் மகனை {கர்ணனைத்} தடுத்துக் கொண்டே உமது மகன்களைக் கொன்ற பீமசேனனின் ஆற்றலை நாங்கள் மிக அற்புதமானதாகக் கண்டோம்.(38) கூரிய கணைகளைக் கொண்டு பீமனால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனைப் பார்க்க மட்டுமே செய்தான்.(39) கோபத்தால் கண்கள் சிவந்த பீமசேனனும், உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே கர்ணனின் மீது தன் கோபப் பார்வைகளைச் செலுத்தத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.(40)
------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 134ல்  வரும் மொத்த சுலோகங்கள் 40


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்