Saturday, November 19, 2016

படைகளை உறங்க அனுமதித்த அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 184

Arjuna permitted the armies to sleep! | Drona-Parva-Section-184 | Mahabharata In Tamil

(துரோணவதப் பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : துரோணரைத் தடுக்க, திருஷ்டத்யும்னனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; துரோணரை எதிர்த்து பாண்டவத் தலைவர்கள் அனைவரும் விரைவது; துரியோதனனும், பிறரும் துரோணரைக் காக்க வருவது; இரு படைகளுக்கும் இடையிலான கடும் போர்; போர்வீரர்களைத் தூங்க அனுமதித்த அர்ஜுனன்; அர்ஜுனனின் இந்தக் கருணைக்கு அவனை வாழ்த்திய கௌரவத் துருப்புகள்; போராளிகள் அனைவரும் போர்க்களத்திலேயே உறங்குவது; சந்திரன் உதித்து இருளை விலக்கியது; உறக்கத்தில் இருந்து எழுந்த இரு படைகளும் போருக்குத் தயாராவது…


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வியாசரால் இப்படிச் சொல்லப்பட்டவனும், நீதிமானுமான வீர மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கர்ணனைத் தானே சென்று கொல்லும் முயற்சியில் இருந்து விலகினான்.(1) எனினும், அவ்விரவில் சூதன் மகனால் {கர்ணனால்} கடோத்கசன் கொல்லப்பட்டதன் விளைவால், துயராலும், கோபத்தாலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்} நிறைந்தான்.(2)


உமது பரந்த படையானது பீமனால் தடுக்கப்பட்டதைக் கண்ட யுதிஷ்டிரன், திருஷ்டத்யும்னனிடம், "குடத்தில் பிறந்தவரை {துரோணரைத்} தடுப்பாயாக.(3)  ஓ! எதிரிகளை எரிப்பவனே, கவசம்பூண்டவனாக, வில், கணைகள் மற்றும் வாள் தரித்தவனாகத் துரோணரின் அழிவுக்காகவே நீ நெருப்பில் இருந்து உதித்தாய்.(4) உற்சாகத்துடன் போரிட விரைவாயாக, உனக்கு எந்த அச்சமும் தேவையில்லை. ஜனமேஜயன்[1], சிகண்டி, துர்முகனின் மகன், யசோதரன்[2] ஆகியோர்(5) குடத்தில் பிறந்தவரை {துரோணரை} எதிர்த்து அனைத்துப்பக்கங்களிலும் விரையட்டும். நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள்,(6) மகன்கள் மற்றும் சகோதரர்களுடன் கூடிய துருபதரும், விராடரும், சாத்யகி, கைகேயர்கள், பாண்டவர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்},(7) ஆகியோர் அனைவரும் பரத்வாஜர் மகனை {துரோணரைக்} கொல்லும் விருப்பத்தோடு அவரை எதிர்த்து வேகமாக விரையட்டும். நமது தேர்வீரர்கள் அனைவரும், நாம் கொண்டுள்ள யானைகள் மற்றும் குதிரைகள் அனைத்தும், நமது காலாட்படைவீரர்கள் அனைவரும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரைப் போரில் வீழ்த்தட்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

[1] இவன், இந்நிகழ்வுகளை வைசம்பாயனரிடம் கேட்டுக் கொண்டிருக்கும் பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் அல்லன்.

[2] வேறொரு பதிப்பில் "துர்முகனின் மகனான யசோதரன்" என்றிருக்கிறது. கங்குலியில் இப்பெயர்கள் வெவ்வேறான இருவருடைய பெயர்களாகச் சுட்டப்படுகின்றன. எனினும் துர்முகனின் மகனான யசோதரன் என்பதே சரியாக இருக்க வேண்டும்.

இப்படிப் பாண்டுவின் சிறப்புமிக்க மகனால் {யுதிஷ்டிரனால்} ஆணையிடப்பட்ட அவர்கள் அனைவரும்,(9) குடத்தில் பிறந்தவரை {துரோணரைக்} கொல்ல விரும்பி, அவரை எதிர்த்து மூர்க்கமாக விரைந்தனர். எனினும் ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன்னை நோக்கித் திடீரெனப் பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் விரைந்து வந்த அந்தப் பாண்டவப் போர்வீரர்கள் அனைவரையும் போரில் எதிர்கொண்டு வரவேற்றார். அப்போது துரோணரின் உயிரைக் காக்க விரும்பியவனும், கோபத்தால் நிறைந்தவனுமான மன்னன் துரியோதனன், பெரும்பலத்துடனும், விடாமுயற்சியுடனும் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தான். அப்போது ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கிய குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது. இரு படைகளின் விலங்குகளும், போர்வீரர்களும் மிகவும் களைத்திருந்தனர். போர் முயற்சியால் களைத்துப் போய் உறக்கத்தால் கண்கள் மூடும் நிலையில் இருந்த பெரும் தேர்வீரர்களும் கூட, அப்போது என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். ஒன்பது மணி நேரம்[3] கொண்ட அந்த இரவானது மிகப் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும், உயிரினங்களுக்கு அழிவைத் தருவதாகவும், நீடித்துக் கொண்டே[4] இருந்தது.(10-14)

[3] "திரையாமா Triyaamaa என்பது மூன்று ஜாமங்களைக் கொண்டது. ஒரு ஜாமம் Yaamaa என்பது மூன்று மணி நேரங்களைக் கொண்டது. இரவின் முதல் ஒன்றைரை மணிநேரமும், இரவின் கடைசி ஒன்றரை மணிநேரமும் சந்திப் பொழுதுகளாகப் கருதப்படுகின்றன. புராதன இந்துக்களின் இரவு ஒன்பது சாமங்களைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "ஆயிரம் ஜாமங்கள் அளவுக்கு நீடித்துக் கொண்டே இருப்பவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் [3] மற்றும் [4] அடங்கிய இவ்வரி, "மூன்று சாமநேரமுள்ள அவ்விரவு கோரமாகவும், பயங்கரமாகவும் ஆயிரம் சாமங்களுள்ள இரவுக்குச் சமமாகவும், பிராணன்களை அபகரிக்கின்றனதாகவும் இருந்தது.

இப்படி அவர்கள் ஒருவரையொருவர் சிதைத்துக் கொன்று வருகையில்,(15) அவர்களது கண்களில் உறக்கம் கனமாக குடிகொண்ட போது நடு இரவு ஆகிவிட்டது. க்ஷத்திரியர்கள் அனைவரும் உற்சாகமற்றவர்களாகவும், இதயமற்றவர்களாகவும் {இரக்கமற்றவர்களாகவும்} ஆகிவிட்டனர்.(16) உமது துருப்புகளிடமும், எதிரியுடையவைகளிடமும் மேலும் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பணிவும், சக்தியும் கொண்டு, தங்கள் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்று வந்த (இரு படைகளின் பெரும்பாலான) போர்வீரர்களும், இப்படியே தங்கள் நேரத்தைக் கடத்தினாலும் தங்கள் படைப்பிரிவுகளைக் கைவிடவில்லை. உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கத்தில் இருந்த} பிறர், தங்கள் ஆயுதங்களைக் எறிந்துவிட்டு படுத்துக் கொண்டனர்.(17,18) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} சிலர் யானைகளின் முதுகிலும், சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளின் முதுகிலும் படுத்தனர். உறக்கத்தால் குருடான {தூக்க மயக்கமடைந்த} அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முற்றிலும் அசைவற்றவர்கள் ஆனார்கள்.(19) அந்தப் போரில் (விழித்திருந்த) பிற போர்வீரர்கள், அவர்களை யமனுலகு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிறர், தங்கள் புலனுணர்வுகளை இழந்து, குறை தூக்க நிலையில் கனவு கண்டு, அனைவரையும் தங்கள் எதிரிகளாக நினைத்துக் கொண்டு தங்கள் எதிரிகளைப் போலவே தங்கள் சொந்த தோழர்களையே கொல்லத் தொடங்கினர். உண்மையில் அவர்கள் அந்தப் பயங்கரப் போரில் பல்வேறு கூச்சல்களை எழுப்பிக் கொண்டே போரிட்டனர்.(20,21) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நமது படையின் வீரர்கள் பலர், எதிரியோடு தொடர்ந்து போரிட விரும்பி, உறக்கத்தால் மயங்கிய கண்களுடனேயே நின்றிருந்தனர்.(22) கருக்கிருட்டான அந்தப் பயங்கர வேளையில், சில துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், உறக்கத்தால் குருடாகியிருந்தாலும், அந்தப்போரில் களத்தில் திரிந்து ஒருவரையொருவர் கொன்று வந்தனர்.(23) எதிரிக்கு மத்தியில் பலர், உறக்க மயக்கத்தால் முழுதாக மலைப்படைந்து (தங்களை நித்தியத்திற்குள் அழைத்துச் சென்ற ஆயுத வெட்டுக்களை உணராமல்) சுயநினைவில்லாத நிலையிலேயே கொல்லப்பட்டனர்.(24)

படைவீரர்களின் இந்நிலையைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, உரத்த குரலில் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(25) “உங்கள் விலங்குகளுடன் சேர்த்து நீங்கள் அனைவரும், களைத்துப் போய் உறக்கத்தால் குருடாகியிருக்கிறீர்கள் {தூக்க மயக்கத்தை அடைந்திருக்கிறீர்கள்}. வீரர்களே, நீங்கள் இருட்டாலும், புழுதியாலும் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள்.(26) எனவே, உங்களுக்கு விருப்பமுண்டானால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இங்கே இந்தப் போர்க்களத்திலேயே சற்று நேரம் உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.(27) குருக்களே {கௌரவர்களே}, பாண்டவர்களே, உறங்கி ஓய்வெடுத்த பிறகு, சந்திரன் உதயமாகையில் சொர்க்கத்தை அடையும் பொருட்டு நீங்கள் மீண்டும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளலாம்” என்றான் {அர்ஜுனன்}.(28)

அறம் சார்ந்த அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அறம் சார்ந்த அந்தப் போர்வீரர்கள், அந்தப் பரிந்துரையை ஏற்று, ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு,(29) “ஓ! கர்ணா, ஓ! கர்ணா, ஓ! துரியோதன மன்னா, போரை நிறுத்துவீர். பாண்டவப் படை நம்மைத் தாக்குவதை நிறுத்திவிட்டது” என்று உரக்கச் சொன்னார்கள்.(30) பிறகு பல்குனனால் {அர்ஜுனனால்} உரக்கச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையும், உமது படையும், போரில் இருந்து விலகின.(31) உண்மையில், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த உன்னத வார்த்தைகள், தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், மகிழ்ச்சி அடைந்த படைவீரர்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டன.(32) அந்த அன்பான வார்த்தைகளைப் பாராட்டிய அனைத்துத் துருப்புகளும், ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, களைத்துப் போய் {அங்கேயே} படுத்து உறங்கினார்கள்.(33)

அப்போது உமது அந்தப் படையானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கிடைக்கப்போகும் ஓய்வு மற்றும் உறக்கத்தால் மகிழ்ந்து, {அர்ஜுனனிடம்}, “உன்னிடம் வேதங்களும், அனைத்து ஆயுதங்களும் உள்ளன. உன்னிடம் நுண்ணறிவும், ஆற்றலும் உள்ளன. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பாவமற்றவனே, உன்னிடம் நீதியும் {அறமும்}, அனைத்து உயிர்களிடம் கருணையும் உள்ளன. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் ஆறுதலளிக்கப்பட்டதால், நாங்கள் உனக்கு நன்மையை விரும்புகிறோம். செழுமை உனதாகட்டும். ஓ! வீரா, உன் இதயத்துக்கு விருப்பமான பொருள்கள் {நீ விரும்பும் நோக்கங்கள்} அனைத்தும் உனக்கு விரைவில் கிடைக்கட்டும்” என்று சொல்லி அர்ஜுனனை உண்மையாக வாழ்த்தினர்.(34-36) ஓ! மனிதர்களில் புலியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி அவனை {அர்ஜுனனை} வாழ்த்திய அந்தப் பெரும் தேர்வீரர்கள், உறக்கத்தால் மயக்கமடைந்து அமைதியடைந்தனர்.(37) சிலர் குதிரைகளின் முதுகுகளிலும், சிலர் தேர்க்கூடுகளிலும், சிலர் யானைகளின் கழுத்துகளிலும், சிலர் வெறுந்தரையிலும் படுத்துக் கொண்டனர்.(38) தங்கள் ஆயுதங்கள், கதாயுதங்கள், வாள்கள், போர்க்கோடரிகள், வேல்கள், ஆகியவற்றுடனும், தங்கள் கவசங்களுடனும் கூடிய பல மனிதர்கள் உறங்குவதற்காக அங்கே தனித்தனியாகப் படுத்துக் கிடந்தனர்.(39)

ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த யானைகள், புழுதி படிந்தவையும், பாம்பு போன்றவையுமான தங்கள் துதிக்கை நாசித்துளைகளின் மூச்சுக்காற்றால் பூமியைக் குளிரச் செய்தன.(40) உண்மையில், தரையில் மூச்சுவிட்டுக்கிடந்த அந்த யானைகள், சீறுகின்ற பெரும் பாம்புகளோடு கீழே சிதறிக் கிடக்கும் மலைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(41) தங்கப் பூட்டாங்கயிறுகளைக் கொண்டவையும், நுகத்தடிகளோடு தங்கள் பிடரி மயிர் கலந்தவையுமான குதிரைகள், சமமான தரையைத் தங்கள் குளம்படிகளால் சமமற்றவையாகச் செய்தன.(42) இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொருவனும் தான் ஏறி வந்த விலங்குடனே அங்கே உறங்கினான். இப்படியே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மிகவும் களைத்துப் போயிருந்த குதிரைகள், யானைகள் ஆகியனவும், போர்வீரர்களும் போரைத் தவிர்த்து உறங்கத் தொடங்கினர். (43) அப்படி உறங்கிக் கிடந்த படையானது, புலனுணர்வை இழந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காட்சி, ஓவியம் தீட்டும் திரைச்சீலையில் திறன்மிக்க ஓவியர்களால் வரையப்பட்ட அற்புதமான ஓவியத்தைப் போலத் தெரிந்தது.(44) காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், இளமையுடன் கூடியவர்களும், கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடையவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், அழகிய மங்கையரின் பருத்த முலைகளில் கிடப்பதைப் போல, யானைகளின் மத்தகங்களில் படுத்து உறக்கத்தில் மூழ்கினர்.(45)

கண்களுக்கு இனியவனும், அழகிய மங்கையின் கன்னங்களைப் போன்ற வெண்ணல்லிமலர்களின் {ஆம்பல் மலர்களின்} தலைவனுமான சந்திரன், இந்திரனால் ஆளப்படும் திசையை {கிழக்கை} அலங்கரித்தபடியே உதித்தான்[4].(46) உண்மையில், உதய மலைகளின் சிங்கம் ஒன்றைப் போல, பிரகாசமான மஞ்சள் பிடரிமயிர்களுடன் கூடிய தன் கதிர்களை, கிழக்கில் உள்ள தன் குகையில் இருந்து வெளியிட்ட அவன் {சந்திரன்}, யானைகளின் பெருங்கூட்டத்திற்கு ஒப்பான அந்த இரவின் அடர்த்தியான இருளைத் துண்டுகளாகக் கிழித்தெறிந்தான்[5].(47) மகாதேவனுடைய {சிவனுடைய} சிறப்புமிக்கக் காளையின் உடலைப் போன்ற பிரகாசமானவையும், காமனின் வில்லைப் போன்ற ஒளி பொருந்தியவையும், நாணமிக்க மணப்பெண்ணின் உதட்டுப் புன்னகையைப் போல அழகானவையுமான (உலகில் உள்ள) அல்லிக்கூட்டங்கள் அனைத்திற்கும் தலைவன் {சந்திரன்} ஆகாயத்தில் அப்போது மலர்ந்தான்.(48)

[4] “சூரியோதயத்தின் போது தாமரை மலர்வதன் காரணத்தால் சூரியன் தாமரைகளின் தலைவன் என்று அழைக்கப்படுவதைப் போல, சந்திரோதயத்தின் போது அல்லிமலர் {ஆம்பல்} மலர்வதால், சந்திரன் அல்லிகளின் தலைவன் என்று அழைக்கப்படுகிறான். இந்திரனால் ஆளப்படும் திசையானது கிழக்காகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] “தச தாக்ஷ ககுபம் Dasatakasha-kkupa, என்றால் ஆயிரம் கண்களைக் கொண்டோனால் ஆளப்படும் திசை என்பது பொருளாகும்; எனவே இது கிழக்குத் திசையைக் குறிக்கிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அப்போது, முயலைத் தன் அடையாளமாகக் கொண்ட அந்தத் தெய்வீகத் தலைவன் {சந்திரன்}, தன் பிரகாசமான கதிர்களைச் சுற்றிலும் பொழிந்தபடி சிவப்பாகத் தன்னை வெளிக்காட்டினான்.(49) உண்மையில், அதன் பிறகு சந்திரன், தங்கத்தின் காந்திக்கு ஒப்பானதும் நெடுந்தொலைவை அடைவதுமான பிரகாசமான ஒளிவட்டத்தைப் படிப்படியாக வெளியிட்டான்.(50) அப்போது அந்த ஒளிக்கோளின் கதிர்கள் தங்கள் காந்தியால் இருளை விலக்கி, மெதுவாக ஆகாயத்திலும், பூமியிலும், திசைப்பகுதிகள் அனைத்திலும் தங்களை மெதுவாகப் பரப்பிக் கொண்டன.(51) எனவே விரைவில் உலகம் ஒளியூட்டப்பட்டது. அனைத்தையும் மறைத்துவைத்திருந்த சொல்லப்பட முடியாத இருள் வேகமாக விலகியது.(52)

இப்படிக் கிட்டத்தட்ட பகல்வெளிச்சத்தைப் போலச் சந்திரனால் உலகம் ஒளியூட்டப்பட்டபோது [6], இரவில் உலவும் விலங்குகளில் சில தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தன; சில ஒதுங்கிச் சென்றன.(53) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்திரனின் கதிர்களால் விழிப்படைந்த அந்தப் படையினர், சூரியனின் கதிர்களால் விரிந்த தாமரைக்கூட்டங்களைப் போல (உயிர்ப்புடன்) மலர்ந்தனர்.(54) உண்மையில், சந்திரன் உதிக்கும்போது, ஆர்ப்பரிக்கும் அலைகளால் பொங்கும் கடலைப் போல அந்த ஒளிக்கோளின் {சந்திரனின்} உதயத்தால் அந்தக் கடல் போன்ற துருப்புகள் விழிப்பையடைந்தன.(55) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உலக மக்கள் தொகையை அழிப்பதற்காகச் சொர்க்கத்தை அடைய விரும்பிய மனிதர்களுக்கு இடையில் பூமியில் மீண்டும் போர் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}.(56)

[6] போர் அமாவாசையில் தொடங்கியது… 14 நாளாயிற்று…. இவ்விரவு பௌர்ணமியாக இருந்திருக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 184-ல் உள்ள சுலோகங்கள் : 56

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்