Sunday, September 03, 2017

தேவசேனாதிபதியானான் கந்தன்! - சல்லிய பர்வம் பகுதி – 45

Skanda became the celestial generalissimo! | Shalya-Parva-Section-45 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 14)


பதிவின் சுருக்கம் : ஸ்கந்தனை தேவர்களின் படைத்தலைவனாக முடிசூட்டிய பிருஹஸ்பதி, ஸ்கந்தனுக்குத் துணைவர்களைக் கொடுத்த தேவர்கள்; அந்தத் துணைவர்களின் பெயர்கள், தன்மைகள் மற்றும் உடற்கூறுகள்; அவர்கள் பேசிய மொழிகள்; அந்தத் துணைவர்களின் மகிழ்ச்சிக்கூத்து...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிருஹஸ்பதி, பதவியேற்பு விழாவுக்கெனச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேகரித்து, சுடர் மிக்க நெருப்பில் ஆகுதிகளை முறையாக ஊற்றினார்.(1) இமவான் {இமயமலை}, விலைமதிப்புமிக்க ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஒன்றைக் கொடுத்தான். சிறந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மங்கலமானதுமான அந்தச் சிறந்த ஆசனத்தில் கார்த்திகேயன் அமர வைக்கப்பட்டான்.(2) தேவர்கள், அவ்வகை விழாவுக்குத் தேவையான அனைத்து மங்கலப் பொருட்களையும் உரிய சடங்குகள் மற்றும் மந்திரங்களுடன் அங்கே கொண்டு வந்தனர்.(3)

பெருஞ்சக்தி கொண்ட இந்திரன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும், சூரியன், சந்திரமாஸ், தாத்ரி, விதாத்ரி, வாயு, அக்னி,(4) பூஷன், பகன், அர்யமான், அம்சன், விவஸ்வான், பெரும் நுண்ணறிவைக் கொண்ட ருத்திரன், மித்திரன்,(5) (பதினோரு) ருத்திரர்கள், (எட்டு) வசுக்கள், (பனிரெண்டு) ஆதித்தியர்கள், (இரட்டையர்களான) அஸ்வினிகள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள் ஆகிய பல்வேறு தேவர்களும், சாத்யர்கள், பித்ருக்கள்,(6) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள் ஆகியோரும், எண்ணற்ற தெய்வீக முனிவர்களும்,(7) வைகானஸர்கள், வாலகில்யர்கள் ஆகியோரும், பிற முனிகளில் காற்றை மட்டுமே உண்டு வாழ்வோர் மற்றும் சூரியக்கதிர்களை மட்டுமே உண்டு வாழ்வோருமாகிய பிருகு மற்றும் அங்கீரஸின் வழித்தோன்றல்களும், உயர் ஆன்ம யதிகள் பலரும்,(8) வித்யாதர்கள் அனைவரும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட அனைவரும்,(9) பெரும்பாட்டன் {பிரம்மன்}, புலஸ்தியர், பெரும் தவத்தகுதியைக் கொண்ட புலஹர், அங்கிரஸ், கசியபர், அத்ரி, மரீசி, பிருகு, கிரது, ஹரன், பிரசேதஸ், மனு, தக்ஷன் ஆகியோரும்,(10) காலங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவையும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வடிவமேற்றுக் கொண்ட ஆறுகள் அனைத்தும், நித்திய வேதங்களும்,(11) கடல்கள், தடாகங்கள், பல்வேறு தீர்த்தங்கள், பூமி, வானம், முக்கிய மற்றும் துணைத்திசைகள் ஆகியவையும், மரங்கள் அனைத்தும், ஓ! மன்னா {ஜனமேஜயா},(12) தேவர்களின் தாயான அதிதி, ஹ்ரீ, ஸ்ரீ, சுவாஹா, சரஸ்வதி, உமை, சச்சி, சினீவாலி, அனுமதி, குஹு ஆகியோரும்,(13) புதுநிலவின் நாள் {அமாவாசையின்} வடிவமும், முழு நிலவின் நாள் {பௌர்ணமியின்} வடிவமும், சொர்க்கவாசிகளின் மனைவியரும், இமவான் {இமயமலை}, விந்தியம், பல முகடுகளைக் கொண்ட மேரு ஆகியவையும், தன் தொண்டர்களுடன் கூடிய ஐராவதனும், கலை, காஷ்டை, மாதம், அரைமாதம் {பிறைநாட்கள்}, ருது, இரவு, பகல் என்றழைக்கப்படும் காலத்தின் பிரிவுகளும், ஓ! மன்னா,(15) குதிரைகளின் இளவரசனான உச்சைஸ்ரவம், பாம்புகளின் மன்னனான வாசுகி, அருணன், கருடன் ஆகியோரும், மரங்கள் மற்றும் மூலிகைகளும்,(16) போற்றுதலுக்குரிய தர்மன் ஆகியோர் அனைவரும் ஒன்றாக அங்கே வந்தனர். காலன், யமன், மிருத்யு மற்றும் யமனின் தொண்டர்களும் அங்கே வந்தனர்.(17) பட்டியல் இன்னும் பெருகும் என்ற அச்சத்தால், அங்கே வந்த இன்னும் பல்வேறு தேவர்களைக் குறித்து நான் இங்கே சொல்லவில்லை. படைத்தலைவனாகக் கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவ்விழாவிற்கு இவர்கள் அனைவரும் வந்தனர்.(18)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, சொர்க்கவாசிகள் அனைவரும், அவ்விழாவுக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் அனைத்தையும் அங்கே கொண்டு வந்தனர்.(19) மகிழ்ச்சியால் நிறைந்த சொர்க்கவாசிகள், அக்காரியத்திற்குத் தேவையான புனிதமான பொருட்களுடன் கூடிய தங்கக் குடங்களில், சரஸ்வதியின் சிறந்த, புனிதமான நீரை, அசுரர்களுக்குப் பயங்கரனான அந்த உயர்ஆன்ம இளைஞனின் {ஸ்கந்தனின்} தலையில் ஊற்றி, அவனைத் தேவர்களின் படைத்தலைவனாக்கினர்.(20,21) உலங்கங்களின் பெரும்பாட்டனான பிரம்மன், பெரும் சக்தி கொண்டவரான கசியபர், இங்கே (குறிப்பிடப்பட்ட மற்றும்) குறிப்பிடப்படாத வேறு சிலர் ஆகியோர் அனைவரும், நீர்நிலைகளின் தலைவனாக வருணனை அமர்த்துவதற்காக, அவனது தலையில் நீரை ஊற்றியதுபோலவே ஸ்கந்தனின் தலையிலும் நீரை ஊற்றினர்.(22) அப்போது இதயம் நிறைந்தவனான தலைவன் பிரம்மன், பெரும் வலிமையைக் கொண்டவர்களும், காற்றின் வேகத்துடன் கூடியவர்களும், தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், நினைத்தமாத்திரத்தில் பெருகும் சக்தியைக் கொடையாகக் கொண்டவர்களுமான நான்கு துணைவர்களை ஸ்கந்தனுக்கு அளித்தான்.(23) அவர்கள் நந்திசேனன், லோஹிதாக்ஷன், கண்டாகர்ணன், குமுதமாலி என்ற பெயர்களைக் கொண்டவர்களாவர்.(24)

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தலைவன் ஸ்தாணு, நூறு மாயைகளை உண்டாக்கவல்லவனும், பெரும் வேகம் கொண்டவனும், பெருகக்கூடியவையான பெரும் வலிமையும், சக்தியும் கொண்டவனுமான ஒரு துணைவனை[1] ஸ்கந்தனுக்குக் கொடுத்தான். அவன், அசுரர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துபவனாக இருந்தான்.(25) தேவர்களுக்கும், அசுரர்களுக்குமான பெரும்போரில், ஸ்தாணுவால் கொடுக்கப்பட்ட இந்தத் துணைவன், கோபத்தால் நிறைந்து, கடுஞ்செயல்களைப் புரிபவர்களான பதினான்கு லட்சம் {14,00,000} தைத்தியர்களைத் தன் வெறுங்கரத்தினாலேயே கொன்றான்.(26) அதன்பிறகு தேவர்கள், வெல்லப்பட முடியாததும், தெய்வீகத் துருப்புகள் நிறைந்ததும், தேவர்களின் எதிரிகளை அழிக்கவல்லதும், விஷ்ணுவைப் போன்ற வடிவங்களைக் கொண்டதுமான தேவர்களின் படையை ஸ்கந்தனிடம் ஒப்படைத்தனர்.(27) அப்போது, வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களும், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், முனிவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவரும், "(ஸ்கந்தனுக்கு} வெற்றி" என்று கூச்சலிட்டனர்.(28)

[1] கும்பகோணம் பதிப்பில் இவனது பெயர் காமன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குலி, மன்மதநாததத்தர் ஆகியோரின் பதிப்புகளில் இந்தப் பெயர் குறிப்பிடப்படவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் இவன் கிரது என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான்.

யமன், பெரும் சக்தி, பெரும் காந்தி ஆகியவற்றைக் கொண்டவர்களும், காலனுக்கே ஒப்பானவர்களுமான உன்மாதன் மற்றும் பிரமாதன் ஆகிய இருவரையும் அவனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(29) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சூரியன், தன் தொண்டர்களான சுப்ராஜன் மற்றும் பாஸ்வரன் என்ற பெயர்களைக் கொண்ட இருவரை, நிறைந்த இதயத்துடன் கார்த்திகேயனுக்குக் கொடுத்தான்.(30) சோமன் {சந்திரன்}, கைலாச மலைச் சிகரங்களைப் போலத் தெரிந்தவர்களும், எப்போதும் வெண்மாலைகளையும், வெண்களிம்புகளையும் {சந்தனத்தையும்} பயன்படுத்துபவர்களான மணி மற்றும் சுமணி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாக அளித்தான்.(31) அக்னி, பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவர்களும், ஜ்வாலாஜிஹ்வன், ஜோதி {ஜ்யோதிஸ்} என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வீரத் துணைவர்கள் இருவரை அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுத்தான்.(32) அம்சன், பயங்கரப் பலத்தைக் கொண்டவர்களான பரிகன், வடன், பீமன் ஆகியோரையும், கடுஞ்சீற்றமும், பெரும் சக்தியும் கொண்டவர்களான தஹதி, தஹனன் ஆகிய இருவரையும் சேர்த்து, அந்த ஐவரையும் பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான ஸ்கந்தனுக்குத் துணைவராக கொடுத்தான்.(33) பகைவீரர்களைக் கொல்பவனான வாசவன் {இந்திரன்}, முறையே வஜ்ரத்தையும், கதாயுதத்தையும் ஆயுதங்களாகக் கொண்டவர்களான, உத்கிரோசன் மற்றும் பஞ்சகன் {ஸ்தகரன்} ஆகியோர் இருவரையும் அக்னியின் மகனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(34) சிறப்புமிக்க விஷ்ணு, பெரும் வலிமையைக் கொண்டவர்களான சக்ரன், விக்ரமன், சங்கிரமன் என்ற மூன்று துணைவர்களை ஸ்கந்தனுக்குக் கொடுத்தான்.(35)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அஸ்வினிகளோ, அறிவியல்கள் அனைத்திலும் திறம்பெற்றவர்களான வர்த்தனன் மற்றும் நந்தனன் ஆகிய இருவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாக இதய நிறைவுடன் கொடுத்தனர்.(36) சிறப்புமிக்கத் தாத்ரியோ {பிரம்மனோ}, குந்தன், குசுமன், குமுதன், டம்பரன், ஆம்பரன் ஆகிய ஐவரையும் ஸ்கந்தனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(37) தாஷ்டிரி {விஸ்வகர்மன்}, பெரும் பலம் கொண்டவர்களான {ஆட்டு முகத்தைக் கொண்டோரான} சக்ரன் {வக்ரன்} மற்றும் அனுசக்ரன் {அனுவக்ரன்} ஆகியோர் இருவரையும், அந்த உயர் ஆன்மாவுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(38) தலைவன் மித்ரன், பெரும் கல்வி, தவத் தகுதி, ஏற்புடைய குணங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களும், வரங்களை அருளவல்லவர்களும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவர்களுமான சுவிரதன், சத்தியசந்தன் ஆகிய இருவரையும் அந்த உயர்ஆன்ம குமாரனுக்கு {ஸ்கந்தனுக்குத்} துணைவர்களாகக் கொடுத்தான்.(39) விதாத்ரி, பெரும்புகழைக் கொண்டவர்களான உயர் ஆன்ம சுப்பிரபன் மற்றும் சுபகர்மன் ஆகிய இருவரையும் அந்தக் கார்த்திகேயனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(40)

பூஷன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெரும் மாயசக்திகளைக் கொண்டவர்களான பாணீத்ரகன், காலிகன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(41) வாயு, ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பெரும் பலம் கொண்டவர்களும், மிகப் பெரிய வாயைக் கொண்டவர்களுமான பலன், அதிபலன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(42) உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனான வருணன், திமியின் வாயைப் போன்ற வாய்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களுமான கூடியவர்களான கசன், அதிகசன் ஆகிய இருவரையும் துணைவர்களாகக் கொடுத்தான்.(43) இமவான் {இமயமலை}, ஓ! மன்னா, சுவர்ச்சஸ், அதிவர்ச்சஸ் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(44) மேரு, ஓ! பாரதா, காஞ்சனன், மேகமாலி ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(45) மனுவும், பெரும் பலத்தையும் ஆற்றலையும் கொண்டவர்களான ஸ்திரன், அஸ்திரன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(46) விந்தியன் {விந்திய மலை}, பெரும் கற்களைக் கொண்டு போரிடுபவர்களான உச்சிருங்கன், அக்னிசிருங்கன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(47) சமுத்திரன் {பெருங்கடல்}, பெரும் வலிமைமிக்கவர்களும், கதாயுதம் தரித்தவர்களுமான சங்கிரஹன், விக்ரஹன் ஆகிய இருவரையும் அவனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(48) அழகிய பண்புகளைக் கொண்டவளான பார்வதி, அந்த அக்னியின் மகனுக்கு, உன்மாதன், புஷ்பதந்தன், சங்குகர்ணன் ஆகிய மூவரைத் துணைவர்களாகக் கொடுத்தாள்(49) பாம்புகளின் மன்னனான வாசுகி, ஓ! மனிதர்களில் புலியே, ஜயன், மஹாஜயன் ஆகிய இருவரையும் அந்த அக்னியின் மகனுக்குத் துணைவர்களாகக் கொடுத்தான்.(50)

அதேபோலவே, பெரும் வலிமை கொண்டவர்களான சாத்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், பித்ருக்கள் ஆகியோரும், கடல்கள், ஆறுகள், மலைகள் ஆகியவையும், வேல்கள் மற்றுப் போர்க்கோடரிகளைத் தரித்தவர்களும், பல்வேறு வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான துணைவர்களை அந்தப் படைத்தலைவனுக்குக் கொடுத்தனர்.(52) ஸ்கந்தனால் அடையப்பட்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களும், பல்வேறு வகை ஆடைகள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களுமான வேறு போராளிகளின் பெயர்களை இப்போது கேட்பாயாக.(53) அவர்கள், சங்குகர்ணன், நிகும்பன், பத்மன், குமுதன், பனிரெண்டு கைகளுடன் கூடிய அநந்தன், கிருஷ்ணன், உபகிருஷ்ணன்,(54) கிராணஸ்வரன், கபிஸ்கந்தன், காஞ்சனாக்ஷன், ஜலந்தமன், அக்ஷசந்தர்ஜனன், குணதீகன், தமோந்தக்ருதன்,(55) ஏகாக்ஷன், துவாதசாக்ஷன், ஏகஜடன், சஹஸ்ரபாகு, விகடன், வியாக்ராக்ஷன், க்ஷிதிகம்பனன்,(56) புண்யநாமன், சுநாமன், சுசக்ரன், பிரயதர்சனன், பரிஸ்ருதன், {யவனான} கோகநதன், பிரியமால்யானுலேபணன்,(57) அஜோதரன், கஜசிரன், ஸ்கந்தாக்ஷன், சதலோசனன், ஜ்வாலாஜிஹ்வன், கராளன், சிதகேசன், ஜடி, ஹரி,(58) {பரிஸ்ருதன், கோகநதன்}, கிருஷ்ணகேசன், ஜடாதரன், சதுர்த்தம்ஷ்டிரன், அஷ்டஜிஹ்வன், மேகநாதன், பிருதுஸ்ரவன்,(59) வித்யுதாக்ஷன், தனுர்வக்தரன், ஜாதரன், மாருதாசனன், உதாராக்ஷன், ரதாக்ஷன், வஜ்ரநாபன், வசுப்பிரபன்,(60) சமுத்திரவேகன், சைலகம்பி, விருஷன், மேஷப்பிரவாஹன், நந்தன், உபநந்தகன்,(61) தூம்ரன், சுவேதன், கலிங்கன், சித்தார்த்தன், விரதன், பிரயகன், நந்தன், கோநந்தன்,(62) ஆநந்தன், பிரமோதன், சுவஸ்திகன், திருவகன், க்ஷேமவாஹன், சுவாஹன், சித்தபாத்திரன்,(63) கோவ்ரஜன், கனகாபீடன், {மஹாபாரிஷதேஸ்வரன்}, காயனன், ஹஸனன், பாணன், கட்கன்,(64) வைதாலி, அதிதாலி, கதகன், வாதிகன், ஹம்ஸனன், பக்ஷதிக்தாங்கன், சமுத்ரோன்மாதனன்,(65) ரணோத்கடன், பிரஹாஸன், சுவேதசித்தன், நந்தகன், காலகண்டன், பிரபாஸன், கும்பாண்டகன்,(66) காலகக்ஷன், சிதன், பூதலோன்மதனன், யஜ்ஞவாஹன், பிரவாஹன் {சுவாஹன்}, தேவயாஜி, சோமபன்,(67) மஜ்ஜானன், {மஹாதேஜன்}, கிரதன், கிராதன், துஹரன், துஹாரன், சித்திரதேவன்,(68) மதுரன், சுப்ரசாதன், கிரீடி, {மகாபலன்}, வத்சலன், மதுவர்ணன், கலசோதரன்,(69) தர்மதன், மன்மதகரன், சூசீவக்தரன், சுவேதவக்தரன், சுவக்தரன், சாருவக்தரன், பாண்டுரன்,(70) தண்டபாகு, சுபாகு, ரஜன், கோகிலகன், அசலன், கனகாக்ஷன், பாலகரக்ஷகன்,(71) சஞ்சாரகன், கோகநதன், கிருதபத்திரன், ஜம்புகன், லோஹஜவக்தரன், ஜவனன், கும்பவக்தரன், கும்பகன்,(72) முண்டக்ரீவன் {சுவர்ணக்ரீவன்}, கிருஷ்ணௌஜஸ், ஹம்சவக்திரன், சந்திரபன், பாணிகூர்ச்சன், சம்பூகன், பஞ்சவக்தரன், சிக்ஷகன், சாஷவக்தரன், ஜாம்பூகன், காரவக்தரன் {சாகவக்தரன்}, குஞ்சகன், {யோகயோக்தன்} ஆவர்.(73)

இவர்களைத் தவிரக் கடுந்தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், உயர் ஆன்மா கொண்டோருமான மதிப்பிற்குரிய பிராமணர்கள் பலரும் பெரும்பாட்டனால் அவனுக்கு {ஸ்கந்தனுக்குக்} கொடுக்கப்பட்டனர். அவர்களில் சிலர் இளைஞர்களாகவும், சிலர் முதிர்ந்தவர்களாகவும், ஓ! ஜனமேஜயா, சிலர் வயதால் மிக இளையவர்களாகவும் இருந்தனர். இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அந்தக் கார்த்திகேயனிடம் வந்தனர்.(75)

அவர்கள் பல்வேறு வகைகளிலான முகங்களைப் பெற்றிருந்தனர். ஓ! ஜனமேஜயா, அவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவர்களில் சிலர் ஆமைகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர், சிலர் சேவல்களைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலரின் முகங்கள் மிக நீளமானவையாக இருந்தன.(76) மேலும் சிலரின் முகங்கள், நாய்கள், ஓநாய்கள், முயல்கள், ஆந்தைகள், கழுதைகள், ஒட்டகங்கள், காட்டுப்பன்றிகளைப் போலிருந்தன.(77) சிலருக்கு மனித முகங்களும், சிலருக்கு, ஆடுகள் மற்றும் நரிகளைப் போன்ற முகங்களும் இருந்தன. சிலர் மகரங்கள் மற்றும் முள்ளம்பன்றிகளின் முகங்களுடன் மிகப் பயங்கரமாக இருந்தனர்.(78) சிலருக்குப் பூனைகளைப் போன்ற முகங்கள் இருந்தன, சிலர் பூச்சிகளைப் போன்ற முகத்தைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் மிக நீண்டவையாக இருந்தன. சிலர், கீரிப்பிள்ளை, ஆந்தை மற்றும் காக்கைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(79) சிலர், எலி, மயில், மீன், செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(80)

சிலரின் முகங்கள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலர் யானைகள் மற்றும் முதலைகளின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(81) சிலரின் முகங்கள் கருடன், காண்டாமிருகம், ஓநாய்கள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர், பசுக்கள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், பூனைகள் ஆகியவற்றின் முகங்களைக் கொண்டிருந்தனர்.(82) வயிறு, கால்கள் மற்றும் அங்கங்கள் பெருத்தவர்களான சிலரின் கண்கள் நட்சத்திரங்களைப் போல இருந்தன. சிலரின் முகங்கள் புறாக்கள் மற்றும் காளைகளைப் போல இருந்தன.(83) சிலரின் முகங்கள் கோகிலங்கள் {குயில்கள்}, பருந்துகள், தித்திரிகள், பல்லிகள் ஆகியவற்றைப் போல இருந்தன. சிலர் வெள்ளுடை உடுத்தியிருந்தனர்.(84) சிலர் பாம்புகளைப் போன்ற முகங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் முகங்கள் முள்ளம்பன்றிகளுக்கு ஒப்பானதாக இருந்தன. உண்மையில், சிலர் பயங்கர முகங்களையும், சிலர் இனிய முகங்களையும் பெற்றிருந்தனர். சிலர் பாம்புகளையே தங்கள் ஆடையாக உடுத்தியிருந்தனர். சிலரின் முகங்களும், மூக்குகளும் மாடுகளுக்கு ஒப்பானவையாக இருந்தன.(85)

சிலர் துருத்திக் கொண்டிருக்கும் பெரிய வயிறுகளையும், ஆனால் மிக மெலிந்த அங்கங்களையும் கொண்டிருந்தனர். சிலர் பெரிய அங்கங்களையும், ஆனால் மிக மெலிந்த வயிற்றையும் கொண்டிருந்தனர். சிலரின் கழுத்துகள் குட்டையாக இருந்தன. சிலரின் காதுகள் மிகப் பெரியனவாக இருந்தன. சிலர் பல்வேறு வகைப் பாம்புகளைத் தங்கள் ஆபரணங்களாகக் கொண்டிருந்தனர்.(86) சிலர் பெரிய யானைகளின் தோல்களையும், சிலர் கருப்பு மான்தோல்களையும் உடுத்தியிருந்தனர். சிலரின் வாய்கள் அவர்களின் தோள்களில் இருந்தன.(87) சிலருக்குத் தங்கள் வாய்களை வயிற்றிலேயேயும், சிலர் முதுகிலேயும், சிலர் கன்னங்களிலேயும், சிலர் தங்கள் கணுக்கால்களிலும், சிலர் இடையிலேயும், கொண்டிருந்தனர். மேலும் பலரின் வாய்கள் அவர்களின் உடலுடைய பிற பகுதிகளில் இருந்தன.(88) அந்தத் துருப்புகளின் தலைவர்களுக்கு மத்தியில் பலரின் முகங்கள் புழு மற்றும் பூச்சிகளைப் போல இருந்தன. அவர்களில் பலரின் வாய்கள், இரைதேடும் பல்வேறு விலங்குகளின் வாய்களைப் போல இருந்தன. சிலர் பல கரங்களையும், சிலர் பல தலைகளையும் பெற்றிருந்தனர்.(89) சிலரின் கரங்கள் மரங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன, சிலரின் முகங்கள் சிங்கங்களின் முகங்களுக்கு ஒப்பானவையாக இருந்தன. சிலரின் முகங்கள் பாம்புகளின் உடல்களைப் போல வழுவழுப்பானவையாக இருந்தன. அவர்களில் பலரின் வசிப்பிடங்கள் பல்வேறு வகைச் செடிகள் மற்றும் மூலிகைகளில் இருந்தன.(90)

சிலர் மரவுரியை உடுத்தியிருந்தனர், சிலர் பல்வேறு வகை எலும்புகளை உடுத்தியிருந்தனர், பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்தனர். சிலர் பல்வேறு வகை மாலைகளாலும், பல்வேறு வகைச் சந்தனங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனர்.(91) பல்வேறு வகைகளில் ஆடையுடுத்தியிருந்த அவர்களில் சிலர் தோல்களையே தங்கள் ஆடையாகக் கொண்டிருந்தனர். சிலர் தலைக்கவசங்களை அணிந்திருந்தனர். சிலரின் புருவங்கள் சுருங்கி நெற்றியில் கோடுகள் இருந்தன. சிலரின் கழுத்துகளில் சங்குகளில் காணப்படும் குறிகள் தென்பட்டன. சிலர் பெரும் பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(92) சிலர் கிரீடங்களைத் தரித்திருந்தனர். சிலர் தங்கள் தலைகளில் ஐந்து குடுமிகள் வைத்திருந்தனர், சிலர் முரட்டு மயிரைக் கொண்டிருந்தனர். சிலர் இரண்டு குடுமிகளையும், சிலர் மூன்றையும், சிலர் ஏழு குடுமிகளையும் கொண்டிருந்தனர்.(93) சிலரின் தலைகளில் இறகுகளைக் கொடிருந்தனர், சிலர் மகுடங்களைக் கொண்டிருந்தனர். சிலரின் தலைகள் முற்றிலும் வழுக்கையாக இருந்தன. சிலர் சடாமுடி தரித்திருந்தனர். சிலர் அழகிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். சிலரின் முகங்களில் மயிர் அடர்த்தியாக இருந்தது.(94) போர் ஒன்றே அவர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் தேவர்களில் முதன்மையானோராலும் வெல்லப்பட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களில் பலர், பல்வேறு வகைத் தெய்வீக ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் போரில் விருப்பம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(95)

சிலர் கரிய நிறம் கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் முகங்களில் சதையே இல்லாமல் இருந்தது. சிலர் மிக நீண்ட முதுகுகளைக் கொண்டிருந்தனர், சிலருக்கு வயிறுகளே இல்லை. சிலரின் முதுகுகள் பெரியனவாக இருந்தன, சிலருக்கு மிகக் குறுகியவையாக இருந்தன. சிலர் நீண்ட வயிறுகளையும், சிலர் நீண்ட அங்கங்களையும் கொண்டிருந்தனர்.(96) சிலரின் கரங்கள் மிக நீண்டவையாக இருந்தன, அதேவேளையில் சிலரின் கரங்கள் குட்டையாகவும் இருந்தன. சிலர் குட்டையான அங்கங்களையுடைய குள்ளர்களாக இருந்தனர். சிலர் கூன்முதுகு கொண்டவர்களாக இருந்தனர். சிலர் குறுகிய இடை கொண்டவர்களாக இருந்தனர். சிலரின் காதுகளும், தலைகளும் யானைகளைப் போல இருந்தன.(97) சிலர் ஆமைகளைப் போன்ற மூக்குகளைக் கொண்டிருந்தனர். சிலருக்கு {மூக்குகள்} ஓநாய்களைப் போல இருந்தன. சிலருக்கு நீண்ட உதடுகள் இருந்தன, சிலருக்கு நீண்ட இடை இருந்தது. சிலர் பயங்கரமான தோற்றத்துடனும், கீழ்நோக்கிய முகங்களைக் கொண்டவர்களாக இருந்தனர்.(98) சிலர் மிக நீண்ட பற்களைக் கொண்டிருந்தனர், சிலர் குட்டையான பற்களைக் கொண்டிருந்தனர். சிலருக்கு நாலே பற்கள்தான் இருந்தன. அவர்களில் ஆயிரக்கணக்கானோர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, மதங்கொண்ட பெருவடிவ யானைகளைப் போல மிகப் பயங்கரமாக இருந்தனர்.(99) நல்ல உடற்கட்டைக் கொண்ட சிலர், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுப் பெருங்காந்தியுடன் திகழ்ந்தனர். சிலருக்கு மஞ்சள் கண்கள் இருந்தன. சிலருக்கு அம்புகளைப் போன்ற காதுகள் இருந்தன. ஓ! பாரதா, சிலருக்குக் கங்கை நீர் முதலைகளைப் போன்ற {சிவந்த} மூக்குகள் இருந்தன.(100)


சிலர் அகன்ற பற்களையும் சிலர் அகன்ற உதடுகளையும், சிலர் பச்சை மயிர்களையும் கொண்டிருந்தனர். பல்வேறு வகையான பாதங்கள், உதடுகள், பற்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அவர்கள், பல்வேறு வகைக் கரங்களையும், தலைகளையும் கொண்டிருந்தனர்.(101) ஓ! பாரதா {ஜனமேஜயா}, பல்வேறு வகைத் தோல்களை உடுத்தியிருந்த அவர்கள், பல்வேறு வகை மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பலமிக்கவர்கள் அனைத்து மாகாணங்களின் வட்டாரப் பேச்சுமொழிகளிலும் திறனுடன் கூடியவர்களாக ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர்.(102) வலிமைமிக்கவர்களான அந்தத் துணைவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, (கார்த்திகேயனைச் சுற்றிலும்) முட்செடிகளை வெட்டிக் கொண்டு, அங்கே குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். சிலர் நீண்ட கழுத்துகளையும், சிலர் நீண்ட நகங்களையும், சிலர் நீண்ட கால்களையும் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பெரிய தலைகளையும், சிலர் பெரிய கரங்களையும் கொண்டிருந்தனர்.(103) சிலரின் கண்கள் மஞ்சளாக இருந்தன, சிலரின் தொண்டைகள் நீலமாக இருந்தன, ஓ! பாரதா, சிலரின் காதுகள் மிக நீண்டவையாக இருந்தன. சிலரின் வயிறுகள் கரிய மைக்குவியலைப் போல இருந்தன.(104) சிலரின் கண்கள் வெண்மையாக இருந்தன, சிலரின் கழுத்துகள் சிவப்பாக இருந்தன, ஓ! மன்னா, சிலரோ பழுப்பு நிறக் கண்களைக் கொண்டிருந்தனர். கரிய நிறம் கொண்ட பலரும், ஓ!பாரதா, பல்வேறு நிறங்களைக் கொண்ட பலரும் அங்கே இருந்தனர்.(105) சிலர் வெண்சாமரங்களைப் போன்ற ஆபரணங்களைத் தங்கள் மேனியில் தரித்திருந்தனர். சிலர் தங்கள் உடல்களில் வெண்கோடுகளையும் {ரேகைகளையும்}, சிலர் சிவப்பு கோடுகளையும் கொண்டிருந்தனர். பல்வேறு நிறங்களில் சிலரும், தங்க நிறத்தில் சிலரும், மயில்களைப் போன்ற காந்தியுடன் கூடியவர்களாகச் சிலரும் இருந்தனர்.(106)

இறுதியாகக் கார்த்திகேயனிடம் வந்தோர் தரித்திருந்த ஆயுதங்களைக் குறித்துச் சொல்கிறேன். கேட்பாயாக.(107) சிலர் தங்கள் உயர்த்தப்பட்ட கரங்களில் சுருக்குக் கயிறுகளைக் கொண்டிருந்தனர். அவர்களது முகங்கள் புலிகளைப் போன்றும், கழுதைகளைப் போன்றும் இருந்தன. அவர்கள் கண்கள் கரியனவாகவும், அவர்களது தொண்டைகள் நீலமாகவும், அவர்களது கரங்கள் முள்பதித்த தண்டாயுதங்களுக்கு {பரிகங்களுக்கு} ஒப்பானவையாகவும் இருந்தன.(108) சிலர் சதக்னிகளையும், சக்கரங்களையும் கொண்டிருந்தனர், சிலர் கனத்த குறுங்கதாயுதங்களைக் கொண்டிருந்தனர். ஓ! பாரதா, சிலர் வாள்களையும், உலக்கைகளையும், தண்டாயுதங்களையும் கொண்டிருந்தனர்.(109) பெரும் வடிவமும், பெரும்பலமும் கொண்ட சிலர், வேல்களையும், வாள்களையும் கொண்டிருந்தனர். சிலர் தங்கள் கரங்களில் கதாயுதங்களையும், புசுண்டிகளையும், சிலர் சூலங்களையும் கொண்டிருந்தனர்.(110) உயர் ஆன்மாவும், பெரும்பலமும், பெரும் வேகமும், மூர்க்கமும் கொண்ட அந்த வலிமைமிக்கத் துணைவர்கள், தங்கள் கரங்களில் பல்வேறு வகையான பயங்கர ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்.(111)

வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், போரில் திளைப்பவர்களுமான அவர்கள், கார்த்திகேயனின் பட்டமேற்பைக் கண்டு, கிங்கிணி மணி வரிசைகளைத் தங்கள் மேனியில் தரித்துக் கொண்டு, அவனை {ஸ்கந்தனைச்} சுற்றிலும் ஆடிக் கொண்டிருந்தனர்.(112) ஓ! மன்னா, இவர்களும், இன்னும் பல வலிமைமிக்கத் துணைவர்களும், உயர் ஆன்மா கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கார்த்திகேயனிடம் வந்தனர்.(113) சிலர் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் வானத்தைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் பூலோகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் காற்றின் வேகத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான அவர்கள், தேவர்களால் ஆணையிடப்பட்டுக் கார்த்திகேயனின் துணைவர்களானார்கள்.(114) ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான இத்தகையோர் உயர் ஆன்ம கார்த்திகேயனின் பட்டமேற்புக்கு வந்து, அவனைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(115)
--------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 45 ல் உள்ள சுலோகங்கள் : 115

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்