Monday, October 16, 2017

துரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள்! - ஸ்திரீ பர்வம் பகுதி – 23

Jackals dragged Drona's feet! | Stri-Parva-Section-23 | Mahabharata In Tamil

(ஸ்திரீவிலாப பர்வம் - 08) [ஸ்திரீ பர்வம் - 14]


பதிவின் சுருக்கம் : சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி ...


காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ! கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)


மத்ர அரசக் குடும்பத்தின் மங்கையர், யுதிஷ்டிரனால் உயிரை இழக்கச் செய்யப்பட்டவனும், சபைகளின் ரத்தினமுமாமான அம்மன்னனின் {சல்லியனின்} உடலைச் சுற்றி அமர்ந்து கொண்டு துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(6) அந்தப் பெண்கள், பருவகாலத்தில் இருக்கும் பெண்யானைக் கூட்டமானது, சகதியில் மூழ்கும் தங்கள் தலைவனைச் சுற்றி இருப்பதைப் போல வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(7,8) துணிச்சல்மிக்கவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், அந்தச் சல்லியன், கணைகளால் உடல் சிதைக்கப்பட்டு, வீரர்களுக்கான படுக்கையில் நீண்டு கிடக்கிறான்.(9)

பேராற்றலைக் கொண்டவனும், மலை நாட்டு ஆட்சியாளனும், யானை அங்குசம் தரிப்போர் அனைவரில் முதன்மையானவனுமான மன்னன் பகதத்தரும், உயிரை இழந்து அங்கே தரையில் கிடக்கிறார்.(10) அவர் தலையில் அணிந்திருக்கும் தங்கமாலை இன்னும் பிரகாசமாக இருப்பதைப் பார். இரைதேடும் விலங்குகளால் அவனது உடல் உண்ணப்பட்டாலும், அந்த மாலையானது இன்னும் அவரது தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.(11) இந்த மன்னனுக்கும் {பகதத்தனுக்கும்} பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போரானது, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் விருத்திரனுக்கும் இடையில் நடந்ததைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகக் கடுமையானதாக இருந்தது.(12) அந்த வலிய கரத்தோன், பிருதையின் மகனான தனஞ்சயனுடன் போரிட்டு, அவனைப் பெருஞ்சிக்கலில் ஆழ்த்தி, இறுதியில் தன் எதிராளியால் கொல்லப்பட்டார்.(13)

வீரத்திலும், சக்தியிலும் இவ்வுலகத்தில் ஒப்பில்லாதவரும், போரில் பயங்கரச் சாதனைகளை அடைந்தவருமான பீஷ்மர் உயிரை போகக் கிடக்கிறார்.(14) ஓ! கிருஷ்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, யுகத்தின் முடிவில் ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பதைப் பார்.(15) ஓ! கேசவா, போரில் தன் ஆயுதங்களின் நெருப்பால் எதிரிகளை எரித்தவரும், வீரமிக்கவரும், மனிதர்களில் சூரியனுமான அந்த வீரர், உண்மையான சூரியனைப் போலவே மாலையில் மறைந்தார்.(16) ஓ! கிருஷ்ணா, கடமையறிவில் {தன் பெரியப்பாவான} தேவாபிக்கு இணையான அந்த வீரர் {பீஷ்மர்}, வீரர்களுக்குத் தகுந்த கணைகளின் படுக்கையில் இப்போது கிடப்பதைப் பார்.(17) நாணற்கட்டில் கிடக்கும் தெய்வீக ஸ்கந்தனைப் போல, முள்பதித்த மற்றும் முள் பதிக்கப்படாத கணைகளாலான {கர்ணிகள் மற்றும் நாளீகங்களாலான} அவரது சிறந்த படுக்கையில் நீண்டு கிடக்கிறார்.(18) உண்மையில், கங்கையின் மைந்தன், தன் படுக்கைக்கான அன்பளிப்பாகக் காண்டீவதாரியால் கொடுக்கப்பட்டதும், மூன்று கணைகளாலானதுமான சிறந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்துக் கிடக்கிறார்.(19) தன் தந்தையின் {சந்தனுவின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக {தன் தந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்காக} இந்தச் சிறந்தவர் தன் உயிர்நீரை மேலெழுப்பினார். ஓ! மாதவா, போரில் ஒப்பற்றவரான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} இதோ இங்கே கிடக்கிறார்.(20)

அற ஆன்மா கொண்டவரும், ஈருலகங்கள் சம்பந்தமான தன் அறிவின் துணையுடன் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவருமான அந்த வீரர், இறப்புக்குரிய மனிதராக இருந்தும், இறவாதவரைப் போலத் தன் உயிரை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.(21) கணைகளால் தாக்கப்பட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடக்கும் இன்று, கல்வி, ஆற்றல் மற்றும் போரில் அடையத்தக்க பெருஞ்சாதனைகளைக் கொண்ட வேறு எந்த மனிதனும் இவ்வுலகில் இல்லை என்று தெரிகிறது.(22) பேச்சில் உண்மையுள்ளவராக இருந்த இந்த அறமும், நீதியும் மிக்க வீரர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதும், தன் மரணத்திற்கான வழியைத் தானே சொன்னார்.(23) ஐயோ, அருகிக் கிடந்த குரு பரம்பரையை எவர் மீட்டாரோ, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவர், குருக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இவ்வுலகைவிட்டுச் செல்கிறார்.(24) ஓ! மாதவா, தேவனுக்கு ஒப்பானவரும், மனிதர்களில் காளையுமான தேவவிரதர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, குருக்கள் அறம் குறித்தும், கடமை {நீதிகள்} குறித்தும் யாரிடம் கேட்பார்கள்?(25)

பிராமணர்களில் முதன்மையானவரும், அர்ஜுனன், சாத்யகி மற்றும் குருக்களின் ஆசானுமான துரோணர், தரையில் கிடப்பதைப் பார்.(26) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரோணர், பெருஞ்சக்தி கொண்டவராகவும், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்றோ, பிருகு குலத்தின் சுக்கிரனைப் போன்றோ நால்வகை ஆயுதங்களையும் அறிந்தவராக இருந்தார்.(27) அவரது அருளாலேயே, பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்} மிகக்கடுஞ்சாதனைகளை அடைந்தான். {அப்படிப்பட்ட} அவர் உயிரை இழந்து இப்போது தரையில் கிடக்கிறார். (இறுதியில்) ஆயுதங்கள் அவரது உத்தரவுக்கு ஏற்ப இருப்புக்கு வர மறுத்தன.(28) அவரைத் தலைமையில் கொண்டே கௌரவர்கள் பாண்டவர்களை அறைகூவியழைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அவர், இறுதியில் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டார்.(29) அனைத்துத் திசைகளிலும் தன் எதிரிகளை எரித்தபடியே போரில் அவர் திரிந்த போது, அவரது போக்கு காட்டுத்தீக்கு ஒப்பானதாக இருந்தது. ஐயோ, உயிரை இழந்த அவர் அணைந்த நெருப்பைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(30)

வில்லின் கைப்பிடி இன்னும் அவரது {துரோணரது} பிடியில் இருக்கிறது[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரது விரல்கள் இன்னும் தோலுரைகளுடன் இருக்கின்றன. கொல்லப்பட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பவரைப் போலே இருக்கிறார்.(31) ஓ! கேசவா, நான்கு வேதங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் எவ்வாறு தலைவன் பிரஜாபதியைக் கைவிடவில்லையோ அவ்வாறே இந்த வீரரையும் கைவிடவில்லை.(32) துதிகள் அனைத்திற்கும் தகுந்தவையும், பாணர்கள் மற்றும் துதிபாடிகளால் உண்மையில் துதிக்கப்படுபவையும், சீடர்களால் வழிபடப்படுபவையுமான அவரது {துரோணரது} மங்கலப் பாதங்கள், இப்போது நரிகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன.(33) ஓ! மாதவா, துயரால் புலனுணர்வுகளை இழந்த கிருபி, துருபதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட துரோணரைத் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(34) துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அந்த மங்கை {கிருபி}, கலைந்த கேசத்துடன், தலையைத் தொங்கப் போட்டப்படி பூமியில் விழுவதைப் பார்.(35) தலையில் சடாமுடி தரித்தவர்களான பிரம்மச்சாரிகள் பலர், திருஷ்டத்யும்னனின் கணைகளால் ஊடுருவி பிளக்கப்பட்ட கவசத்துடன் கூடிய துரோணரின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.(36)

[1] இறக்கும்போது ஆயுதங்களைக் கைவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருந்தார் துரோணர் எனும்போது, இறந்த பிறகும் அவரது கைப்பிடியில் வில் இருப்பது இங்கே பொருத்தமாக இல்லை. இந்தப் பகுதியின் இன்னும் கூடுதல் செய்தியாக, துரோணரின் இறுதி நிமிடங்களில் அவரது ஆணைக்கிணங்க அஸ்திரங்கள் வரவில்லை என்ற குறிப்பும் காணக்கிடைக்கிறது.

சிறப்புமிக்கவளும், மென்மையானவளுமான கிருபி, உற்சாகமற்றவளாக, துயரில் பீடிக்கப்பட்டவளாக, போரில் கொல்லப்பட்ட தன் தலைவனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முயல்கிறாள்.(37) சாமங்களை {சாமவேதத்தை} உரைப்பவர்கள், துரோணரின் உடலை ஈமச்சிதையில் நிறுத்தி, உரிய சடங்குகளுடன் நெருப்பை மூட்டி, (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(38) ஓ! மாதவா, தலையில் சடாமுடி தரித்திருக்கும் அந்தப் பிரம்மச்சாரிகள், அந்தப் பிராமணரின் {துரோணரின்} ஈமச்சிதையில் விற்கள், ஈட்டிகள், தேர்க்கூடுகள் ஆகியவற்றைக் குவிக்கின்றனர்.(39) பெருஞ்சக்திகொண்ட அந்த வீரர் {துரோணர்}, பல்வேறு வகைக் கணைகளைத் திரட்டிக் கொண்டு இருந்த அவற்றில் எரிக்கப்படுகிறார். உண்மையில் அவர்கள், சிதையில் அவரை அமர்த்தி, பாடவும், அழவும் செய்கின்றனர்.(40) வேறு சிலர், இத்தகு சூழ்நிலைகளில் உரைக்கப்படும் (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களை உரைக்கின்றனர். நெருப்பில் நெருப்பாக அந்நெருப்பில் துரோணரை எரித்தவர்களும்,(41) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சார்ந்தவர்களுமான அவரது {துரோணரது} சீடர்கள், அந்தச் சிதைக்கு இடப்புறமாக, கிருபியைத் தங்கள் தலைமையில் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் செல்கின்றனர்[2]" என்றாள் {காந்தாரி}.(42)

[2] துரோணரின் இறுதிச்சடங்கில் அஸ்வத்தாமன் பங்குபெறவில்லை என்பது இங்கே தெரிகிறது. பெண்ணான கிருபி, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள்.

ஸ்திரீ பர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்