Saturday, December 23, 2017

எவன் சிறந்த மன்னன்? - சாந்திபர்வம் பகுதி – 57

Who is the best of kings? | Shanti-Parva-Section-57 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 57)


பதிவின் சுருக்கம் : மன்னன் என்பவன் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்; குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; அரச காரியங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் பண்புகள்; சிறந்த மன்னனுக்குரிய அடிப்படை தேவைகள்; எவன் ஆளத்தகுந்த மன்னன்; தவிர்க்கப்பட வேண்டிய ஆறு மனிதர்கள் ஆகியன குறித்து யுதிஷ்டிரனிடம் உரையாடிய பீஷ்மர்....


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் எப்போதும் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணைப் போல முயற்சியற்றிருக்கும் மன்னன் புகழத்தகாதவனாவான்.(1) ஓ! ஏகாதிபதி, இது தொடர்பாக, புனிதமான உசனஸ் {சுக்கிரன்} ஒரு சுலோகத்தைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அதை நான் உரைக்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.(2) "போரில் வெறுப்புள்ள மன்னன், மனைவியர் மற்றும் பிள்ளைகளிடம் பெரும்பற்றுக் கொண்ட பிராமணன் ஆகிய இருவரையும், எலியை விழுங்கும் பாம்பைப் போலப் பூமியானவள் விழுங்குகிறாள்".(3) ஓ! மன்னர்களில் புலியே இதை நீ எப்போதும் உன் இதயத்தில் தாங்குவதே உனக்குத் தகும். (விதிப்படி) யாருடன் அமைதி பேணப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, யாருடன் போர்தொடுக்கப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் போர் தொடுப்பாயாக.(4) ஏழு அங்கங்களுடன்[1] கூடிய உன் நாட்டிடம் பகைமை பாராட்டுபவன் உன் ஆசானோகவோ, உன் நண்பனாகவோ இருந்தாலும் கூட, அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(5)


[1] "மன்னன், அமைச்சர்கள், நண்பர்கள், கருவூலம், நாட்டுக்கு உரிமைப்பட்ட நிலப்பகுதி, கோட்டைகள் படைகள் ஆகியனவே நாட்டின் ஏழு அங்கங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மன்னர்களின் கடமை குறித்து, பிருஹஸ்பதியின் கருத்துக்கு ஏற்புடைய வகையில் மன்னன் மருத்தனால் பாடப்பட்ட பழைய சுலோகம் ஒன்று இருக்கிறது.(6) "ஓர் ஆசான், அகந்தையுடனும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் அலட்சியத்துடனும் இருந்து வரைமுறைகள் அனைத்தையும் மீறினால் அழிவில்லா வரைமுறைகளின்படி அவருக்கும் தண்டனையுண்டு".(7) பாஹுவின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் சகரன், தன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் மூத்த மகனான அசமஞ்சனை நாடு கடத்தினான்.(8) ஓ! மன்னா, அந்த அசமஞ்சன், குடிமக்களின் பிள்ளைகளைச் சரயுவில் {சரயு ஆற்றில்} மூழ்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். எனவே அவனது தந்தை {மன்னன் சகரன்} அவனை {அசமஞ்சனை} நிந்தித்து, நாடு கடத்தினான்.(9) முனிவர் உத்தாலகர், தனக்குப் பிடித்தமான மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுவேதகேது, பிராமணர்களை மகிழ்விப்பதாக வஞ்சகமாக உறுதி கூறி, அவர்களை அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் அவரைக் கைவிட்டார்.(10)

குடிமக்களின் மகிழ்ச்சி, உண்மையை நோற்கும் நோன்பு, நடத்தையில் உண்மை மற்றும் நேர்மை ஆகியவையே மன்னர்களின் நித்திய கடமைகளாகும்.(11) ஒரு மன்னன் பிறரின் செல்வத்தில் ஆசை கொள்ளக்கூடாது. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். ஒரு மன்னன் ஆற்றல் கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், உணர்வால் மன்னிக்கும் இயல்பு கொண்டவனாகவும் இருந்தால் அவன் ஒருபோதும் செழிப்பிலிருந்து வீழமாட்டான்.(12) தீமைகளிலிருந்து தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட மன்னன், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயன்றவனாகவும், சாத்திரங்களுக்கு ஏற்புடைய தீர்மானங்களை எடுப்பவனாகவும் இருப்பான். அவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவற்றை {தர்மார்த்தகாமமோக்ஷத்தை} (நீதியுடன்) பின்பற்ற வேண்டும்.(13) இவை மூன்றை (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைப்) பொறுத்தவரையில் ஒரு மன்னன் தன் ஆலோசனைகளை எப்போதும் மறைக்க வேண்டும். தன் ஆலோசனைகள் வெளிப்படுவதைக் காட்டிலும் ஒரு மன்னனுக்குப் பெரும் தீமை ஏதும் ஏற்பட முடியாது.(14) மன்னர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுகையில் நால் வகையினரையும் பாதுகாக்க வேண்டும். வேறுபட்ட வகையினரை {நால் வர்ணத்தாரைப்} பொறுத்தவரை கடமைகளில் குழப்பமேற்படாமல் தவிர்ப்பது மன்னர்களின் நித்திய கடமையாகும்.(15)

ஒரு மன்னன் (தன் பணியாட்களைத் தவிர வேறு யாரிடமும்) நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல (தன் பணியாட்களிடம் கூட) நம்பிக்கை இல்லாமலும் இருக்கக்கூடாது. அவன் தன் புத்தியால், அரசுரிமைக்குத் தேவைப்படும் முக்கியமான ஆறு ஆதாரங்களின்[2] தகுதிகளையும், குறைகளையும் கவனிக்க வேண்டும்.(16) தன் எதிரிகளின் கவனக்குறைவுகளைக் கவனிப்பவனும், அறம், பொருள், இன்பத்தில் நீதியைப் பின்பற்றுபவனும், இரகசியங்களை உறுதி செய்யப் புத்திக்கூர்மையுள்ள ஒற்றர்களை நியமிப்பவனும், தன் எதிரிகளுடைய அதிகாரிகளுக்குச் செல்வம் கொடுத்துக் கெடுக்க முயல்பவனுமான மன்னன் பாராட்டுக்குத் தகுந்தவனாவான்.(17) ஒரு மன்னன் யமனைப் போல நீதியை நிர்வகித்து, குபேரனைப் போலச் செல்வத்தைத் திரட்ட வேண்டும். தான் அடைந்தவை, இழந்தவை மற்றும் தன் ஆட்சிப்பகுதிகள் ஆகியவற்றின் நிறை குறைகளை அவன் கண்காணிக்க வேண்டும்.(18) உணவில்லாதவர்களுக்கு அவன் உணவளிக்க வேண்டும். உணவளித்த பிறகு அஃதை அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அவன் (கடுப்பில்லாத) புன்னகையுடன் கூடிய முகத்துடன் இனிமையாகப்பேச வேண்டும்.(19) அவன், வயதில் பெரியோருக்காக எப்போதும் காத்திருந்து, தன் தாமதத்திற்கு வருந்த வேண்டும். பிறரின் உடைமைகளில் அவன் ஒருபோதும் ஆசை வைக்கலாகாது.(20)

[2] "இந்த ஆறும்: 1. (பலமிக்க எதிரியிடம்) அமைதியைப் பேணல், 2. (சமபலம் கொண்ட எதிரியிடம்) போருக்குத் தயாராக இருத்தல், 3. (பலவீனமானவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்கு அணிவகுத்து) படையெடுத்தல், 4. இடைத்தங்கல், 5.(பலவீனமாக இருந்தால், தன் கோட்டைக்குள்) பாதுகாப்பை நாடல், 6.(எதிரியின் தலைமை அதிகாரிகளுக்கு மத்தியில்) பிரிவினையைத் தூண்டல்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவன் நீதிமான்களின் நடத்தையை உறுதியாகப் பின்பற்றி, அந்நடத்தையைக் கவனமாக நோற்க வேண்டும். நல்லோரின் செல்வத்தை அவன் ஒருபோதும் கைப்பற்றக்கூடாது. நியாயமற்றவர்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றி நல்லோரிடம் அவன் கொடுக்க வேண்டும்.(21) ஒரு மன்னன் தானே தாக்குவதில் திறன்கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் ஈகை பயில வேண்டும். அவன் தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவன் பிரகாசமாக உடை உடுத்த வேண்டும். அவன் சரியான காலங்களில் கொடையளித்து, தன் உணவை முறையான நேரங்களில் உட்கொள்ள வேண்டும். அவன் நன்னடத்தைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(22) செழிப்பை அடைய விரும்பும் மன்னன், துணிவுமிக்கோர், அர்ப்பணிப்புமிக்கோர், எதிரிகளால் வஞ்சிக்கப்பட முடியாதோர், நற்குடியில் பிறந்தோர், உடல்நலம் கொண்டோர், நன்னடத்தைக் கொண்டோர், நன்னடத்தைக் கொண்ட குடும்பங்களுடன் தொடர்பிலிருப்போர், மரியாதைக்குரியோர், பிறரை அவமதிக்காதோர், அனைத்து அறிவியல்களையும் அறிந்தோர், உலகம் மற்றும் அதன் காரியங்களைக் குறித்த அறிவைக் கொண்டோர், நாட்டின் எதிர்காலம் குறித்து எப்போதும் கவனமாக இருப்போர், தங்கள் கடமைகளை எப்போதும் நோற்போர், நேர்மையானோர், மலைகளைப் போன்ற உறுதியைக் கொண்டோர் ஆகியோரை எப்போதும் தன் பணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். இன்ப நோக்கங்களைப் பொறுத்தவரையில் அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. தன் குடை மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவை மட்டுமே அவர்களுக்குள் ஒரே வேறுபாடாக இருக்க வேண்டும்.(23-25) அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவனுடைய நடத்தையானது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் மன்னன் ஒருபோதும் துயரடையமாட்டான்.(26)

அனைவரையும் சந்தேகப்பட்டு, தன் குடிமக்களுக்குக் கனமான வரிகளை விதித்து நேர்மையற்றவனாகவும், பேராசைக்காரனாகவும் இருக்கும் மன்னன், விரைவில் தன் பணியாட்கள் அல்லது உறவினர்களாலேயே தன் உயிரை இழப்பான்.(27) நன்னடத்தைக் கொண்டவனும், தன் மக்களின் இதயங்களைக் கவர்வதில் ஈடுபடுபவனுமான மன்னன், எதிரிகளால் தாக்கப்பட்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான். ஒருவேளை வெல்லப்பட்டாலும், அவன் வெகுவிரைவில் தன் நிலையை மீண்டும் அடைவான்.(28) ஒரு மன்னன் கோபம் நிறைந்தவனாக இல்லையென்றால், தீய நடைமுறைகளுக்கு அடிமையாகாமல் இருந்தால், கடும் தண்டனைகளை அளிக்காமல் இருந்தால், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவனாக இருந்தால், அவன் (அனைத்துயிர்களுக்கும் நம்பிக்கையளிக்கும்) இமய மலைகளைப் போல அனைவரின் நம்பிக்கைக்குரியவனாவான்.(29)

ஞானம், ஈகை, எதிரிகளின் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆயத்த நிலை, இனிய பண்புகள், நால்வகைசேர்ந்த தன் குடிமக்களுக்கான நன்மையையும், தீமையையும் அறிந்த நிலை, செயலூக்கம், கோபத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், பழியுணர்ச்சி இல்லாமை, உயர்ந்த மனம், கோபம் நிறைந்த மனோநிலை இல்லாமை, வேள்விகளிலும், பிற அறச் செயல்களிலும் ஈடுபாடு, தற்பெருமை பேசாமை, தன்னால் தொடங்கப்பட்ட அனைத்து வேலைகளை நிறைவு செய்யத் தீவிரச் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(30-32) தன் தந்தையின் வீட்டில் இருக்கும் மகனைப் போலத் தன் நாட்டில் உள்ள மக்கள் அச்சமில்லாமல் வாழும் வகைச் செய்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(33) தங்கள் செல்வத்தை மறைத்து வைக்கும் தேவையில்லாதவர்களும், தங்களுக்கான நன்மை தீமைகளை அறிந்தவர்களுமான குடிமக்களைக் கொண்டிருப்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(34)

எவனுடைய குடிமக்கள் தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்கின்றனரோ, கடமைக்காகத் தங்கள் உடல்களைக் கைவிடவும் அஞ்சுவதில்லையோ; எவனுடைய மக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, அமைதி நிறைந்த நடத்தையுடன், கீழ்ப்படிந்தவர்களாக, அடக்கமானவர்களாக, கட்டுப்படுபவர்களாக, சச்சரவுகளில் ஈடுபட விரும்பாதவர்களாக, முற்போக்கானவர்களாக இருக்கின்றனரோ அவனே உண்மையில் மன்னனாவான். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதிகளில் தீமைகள், கள்ளநடத்தை, வஞ்சகம், பொறாமை ஆகியவை ஏதும் இல்லையோ அந்த மன்னன் அழிவில்லா தகுதியை ஈட்டுகிறான்.(35,36)

எவன் அறிவை மதிக்கிறானோ, எவன் சாத்திரங்களுக்கும், தன் மக்களுக்கான நன்மைக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் நீதியின் பாதையில் நடக்கிறானோ, எவன் முற்போக்காளனோ அந்த மன்னனே உண்மையில் ஆளத்தகுந்தவனாவான்.(37) எவனுடைய ஒற்றர்கள், ஆலோசனைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத செயல்கள் ஆகியன எதிரிகள் அறியாதனவாகவே இருக்கின்றனவோ அந்த மன்னனே ஆளத்தகுந்தவனாவான்.(38)

பின்வரும் வரியானது ராமசரிதம்[3] என்றழைக்கப்படும் உரையில் பிருகு குலத்தின் உசனஸால் {சுக்கிரனால்} மன்னர்களின் கடமைகள் என்ற கருத்தில் பாடப்பட்டுள்ளது.(39) "ஒருவன் முதலில் (எவனுடைய ஆட்சிப்பகுதியில் வாழ்வதெனத்) தன் மன்னனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அவன் ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிறகு செல்வம் ஈட்ட வேண்டும். ஒரு மன்னன் இல்லையென்றால் மனைவியும், உடைமைகளும் எவ்வாறு இருக்க முடியும்?"(40) நாட்டின் மீது ஆசை கொண்டோரைப் பொறுத்தவரையில், (குடிமக்களின்) பாதுகாப்பைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாடான நித்திய கடமையும் அவர்களுக்குக் கிடையாது. தன் குடிமக்களுக்கு மன்னன் அளிக்கும் பாதுகாப்பே உலகத்தைத் தாங்கிப் பிடிக்கிறது[4].(41)

[3] பரசுராமரின் வரலாறு என்பதாகும். கும்பகோணம் பதிப்பில் இது பரசுராமரால் பாடப்பட்ட சுலோகம் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் பார்க்கவர் என்று பரசுராமரே குறிப்பிடப்படுகிறார்.

[4] "அரச பாதுகாப்பு இல்லையென்றால் விரைவில் உலகம் துன்புறும் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பிசேதசின் மகனான மனு, மன்னர்களின் கடமைகளைக் குறித்து இரு வரிகளைப் பாடியிருக்கிறார். அவற்றைக் கவனமாகக் கேட்பாயாக.(42) கடலில் உள்ள ஓட்டைப் படகைத் தவிர்ப்பதைப் போல இந்த ஆறு மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்கள். பேசாத ஆசான், சாத்திரங்கள் பயிலா புரோகிதன்,(43) பாதுகாப்பை வழங்கா மன்னன், ஏற்பில்லாததைப் பேசும் மனைவி, கிராமத்திற்குள் திரிய விரும்பும் இடையன் மற்றும், காடுகளுக்குச் செல்ல விரும்பும் நாவிதன் ஆகியோராவர்[5]" {என்றார் பீஷ்மர்}.(44)

[5] "இடையனின் கடமை மேய்ச்சல் நிலங்களுக்குத் தன் மந்தையை ஓட்டிச் செல்லுதல். அங்கே செல்ல விரும்பாமல் அவன் கிராமத்திற்குள் திரிய விரும்பினால், அவனை அந்தத் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. அதே போல ஒரு நாவிதரின் கடமை கிராமத்திற்குள் இருப்பது. கிராமத்தில் இல்லாமல் அவன் காடுகளில் திரிந்து கொண்டிருந்தால் அவனை அப்பணியில் அமர்த்தக்கூடாது. இவ்விரண்டு வரிகளும் கல்விமான்களாலும், கல்விகற்காதவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 57ல் உள்ள சுலோகங்கள் : 44

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்