Tuesday, March 27, 2018

குற்றமும், தண்டனையும் - சட்டம்! - சாந்திபர்வம் பகுதி – 121

Crime and Punishment - Law! | Shanti-Parva-Section-121| Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 121)


பதிவின் சுருக்கம் : தண்டனை என்பது யாது? அதன் தோற்றம், பண்புகள், விழிப்புநிலை ஆகியவற்றையும், தண்டனை சார்ந்திருக்கும் வியவஹாரம் {சட்டம்} என்பது யாது? அஃது எத்தனை வகைப்படும் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-121
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-121
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாட்டா, நீ இப்போது மன்னர்களின் கடமைகளைக் குறித்த உமது உரையை நிறைவு செய்துவிட்டீர். அனைத்தும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதால், தண்டனையே உயர்ந்த நிலையில் இருப்பதாகவும், அனைத்துக்கும் தலைவனாக இருப்பதாகவும் நீர் சொன்னவற்றிலிருந்து தெரியவருகிறது.(1) ஓ! பலமிக்கவரே, பெரும் சக்தி கொண்டதும், எங்கும் இருப்பதுமான தண்டனையானது, தேவர்கள், முனிவர்கள், உயர் ஆன்ம பித்ருக்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், சத்யஸ்கள், அல்லது இவ்வுலகின் உயிரினங்கள் ஆகிய அனைத்துக்கும் மத்தியில் முதன்மையானதாக இருப்பதாகத் தெரிகிறது.(2,3) தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அசைவன மற்றும் அசையாதன அடங்கிய மொத்த உலகமும் தண்டனையைச் சார்ந்தே இருப்பதாக நீர் சொன்னீர்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தத் தண்டனையானவன் எவன் என்பதை அறிய இப்போது நான் விரும்புகிறேன்.

அவன் என்ன வகையைச் சார்ந்தவன்?
அவனுடைய வடிவம் என்ன?
அவனுடைய நிலை என்ன?(5)
அவன் எதனால் செய்யப்பட்டவன்?
அவன் தோன்றியது எப்போது?
அவனது பண்புகள் என்னென்ன?
அவனது காந்தி என்ன?

வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் அவன் கவனமானவனாகவும், விழிப்புடனும் எவ்வாறு இருக்கிறான்?(6) இந்த அண்டத்தைப் பாதுகாத்துக் கொண்டு நித்திய விழிப்புடன் இருக்கும் அவன் எவன்? அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானதாக அறியப்படுபவனான அவன் எவன்? உண்மையில், தண்டனை என்றழைக்கப்படும் உயர்ந்தவன் எவன்? தண்டனையாவன் எதைச் சார்ந்து இருக்கிறான்? அவனது வழி என்ன?” என்று கேட்டான்.(7)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குருகுல வழித்தோன்றலே, தண்டனை என்பது யார்? அவன் ஏன் வியவஹாரம் என்றழைக்கப்படுகிறான் என்பதைக் கேள். அனைத்துப் பொருட்களும் எவனைச் சார்ந்திருக்கின்றனவோ, அவனே தண்டனை என்றழைக்கப்படுகிறான்.(8) அறம் எவனைக் கொண்டு நிலைநாட்டப்படுமோ அவனே தண்டனையாவான். அவன் சில வேளைகளில் வியவஹாரம் என்றும் அழைக்கப்படுகிறான். கவனமாக விழிப்புடன் இருக்கும் மன்னனின் அறம் கெடாமல் இருக்கக் காரணமாக இருப்பதால் (தண்டனையானவன்) அப்பெயரில் அழைக்கப்படுகிறான்.(9) இதன் காரணமாகவே, அதற்கு வியவஹாரம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது[1].

[1] "“வி”யும், "அவஹார”மும் சேர்ந்தது வியவஹாரமாகும். அதன் மூலமே முறையற்ற பறிமுதல்கள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. அது சட்டம் மற்றும் நீதி நிர்வாகத்தின் பெயராகும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், “வ்யவஹார = திருத்து முதலியவற்றை விலக்கும் தண்டம்: வி = இல்லை, அவஹாரம் = கெட்ட மார்க்கமாகப் பிறர் பொருளைத் திருடுவது” என்றிருக்கிறது.



ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மனு, ’அன்புக்குரியனவாகவும், அதே வேளையில் வெறுக்கத்தக்கனவாகவும் உள்ள உயிரினங்கள் அனைத்தையும், தண்டக்கோல் தரித்துப் பாரபட்சமில்லாமல் பாதுகாப்பவன் எவனோ, அவனே அறவடிவானவன் {அறவோன் = தர்மன்} என்று சொல்லப்படுகிறான்’ என்ற அனைத்திலும் முதன்மையான இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்.(10,11) ஓ! மன்னா, நான் சொன்ன இந்த வார்த்தைகள் முதன்முதலில் பழங்காலத்தில் மனுவால் சொல்லப்பட்டன. அவை பிரம்மனின் உயர்ந்த வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றன[2].(12) இந்த வார்த்தைகளே முதலில் பேசப்பட்டதால், அவை முதல் வார்த்தைகள் என்று அறியப்படுகின்றன. அடுத்தவரின் உடைமைகளை முறையில்லாமல் பறிப்பது தண்டனையால் தடுக்கப்படுவதால், தண்டனையானது, வியவஹாரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.(13) நன்கு செயற்படுத்தப்படும் தண்டனையைச் சார்ந்தே, {அறம், பொருள், இன்பம் ஆகிய} மூன்று தொகுப்புகளும் எப்போதும் இருக்கின்றன. தண்டனையானவன் பெருந்தேவனாவான். வடிவத்தில் அவன் ஒரு சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிகிறான்.(14) கருங்குவளை {நீலோத்பல} மலரின் இதழ்களைப் போல அவன் கரிய நிறம் கொண்டவனாவான். அவன், நான்கு பற்களையும், நான்கு கரங்களையும், எட்டு கால்களையும், கண்கள் பலவற்றையும் கொண்டவனாவான். அவனது காதுகள் கணைகளைப் போன்று கூர்மையானவை, அவனது மயிர் குத்திட்டு நிற்கிறது.(15) அவன் சடா முடியும், இரு நாவுகளையும் கொண்டவனாவான். அவனது முகம் தாமிரத்தின் வண்ணத்தைக் கொண்டதாகும், அவன் சிங்கத் தோலை உடுத்தியிருக்கிறான். {தண்டனையெனும்} அந்தத் தடுக்கப்பட முடியாத தேவன் இத்தகு கடும் வடிவையே ஏற்றிருக்கிறான்[3].(16)

[2] கும்பகோணம் பதிப்பில், “முன்காலத்திலேயே மனுவால் இது கூறப்பட்டதென்று நான் முன்னமே சொல்லிய வசனமானது வசிஷ்டரால் சொல்லப்பட்ட பிரம்மதேவருடைய பெரிய வசனமாகும்” என்றிருக்கிறது.

[3] இந்த வர்ணனைக்கு அடிக்குறிப்பாகக் கும்பகோணம் பதிப்பில் நீண்ட நெடிய விளக்கமிருக்கிறது. அது பின்வருமாறு: “நான்கு பற்கள்: பிராணிகளைத் துன்பப்படுத்துவதற்கு ஸாதனமாயிருப்பவை. அவை மானபங்கம், பொருளை அபகரித்தல், சரீரதண்டம், கொலை என நான்குமாம். இந்நான்கும் தண்டத்திற்குக் கோரப் பல்லைப் போன்றவை. நான்கு கரங்கள்: பொருளை எடுக்க ஸாதனமானவை. அவை, பிரஜைகளிடமும், ஸாமந்தராஜர்களிடமும் வரிவாங்குதலும், பொய்செல்லும் வாதிக்கு அவன் சொல்லும் பொருளுக்கு இரண்டு மடங்கு அபராதம் விதிப்பதும், பொய் சொல்லும் பிரதிவாதிக்கு ஸமமான பொருளை அபராதம் விதிப்பதும், பொருளுள்ளவனும் லோபியுமான பிராம்மணனிடமிருந்து பொருளையெல்லாம் கவர்வதும் என நான்குமாம். இவை தண்டத்திற்குக் கை போன்றவை. எட்டுக் கால்கள்: ஸஞ்சரிப்பதற்கு ஸாதனமாயிருப்பவை; அவை 1ஆவேதனம் = கையொப்பமிட்டு வழக்கிடுவது, 2பாஷா=ப்ரதிவாதியை அழைத்து அவன் முன்னிலையில் அவ்விதமே எழுதிவைப்பது, 3சம்ப்ரதிபத்தி = வாதியின் வழக்கை ப்ரதிவாதி ஒத்துக்கொண்டால் ஒருவனுக்கும் அபராதமின்றி ஸமாதானஞ்செய்வது, 4மித்யோத்தரம் = வாதியின் வழக்குப் பொய்யென்று சொல்வது, 4காரணோத்தரம் = வாதி சொல்லுகிறபடி நடந்ததுண்டு; ஆனால் அது திரும்பவும் கொடுத்தாய்விட்டது என்று ப்ரதிவாதி சொல்வது, 5ப்ராங்நியாயம் = இதே விஷயத்தை முன்னொரு ஸமயம் இவன் என்னைக் கேட்டு அபஜயமடைந்தவனென்று ப்ரதிவாதி சொல்வது, 7ப்ரதிபூ = இம்மூன்று உத்தரங்களுக்கும் வாதிப் பிரதிவாதிகள் செய்து கொடுக்க வேண்டிய பிணைச்சீட்டு, 8க்ரியா = அவரவர்கள் பக்ஷத்துக்கு வேண்டிய ஸாக்ஷி, பத்திரம், அனுபோகம், ப்ரமாணம் முதலியவற்றைக் காண்பிப்பது, 9பலஸித்தி = அதிலிருந்து தவறாமலிருப்பவனுக்குஜயம். இவைகளில் ஸம்ப்ரதிபத்தி என்னும் மூன்றாவதில் தண்டம் விதிக்கக்காரணமில்லாமையால் மற்ற எட்டும் தண்டத்திற்குக் கால்களென்று சொல்லப்படுகின்றன. கண்கள்: அரசன், அமாத்தியன் {அமைச்சன்}, புரோஹிதன், பரிஷத் என்ற நான்கும் தண்டத்திற்குக் கண்களாகும். சடை: பல ஸந்தேகமுண்டாவதால் ஜடையுள்ளது போலிருக்கிறது. இரண்டு நாக்கு: ஒன்றோடொன்று சேராத வாதிப்ரதிவாதிகளின் இரண்டுவித வசனங்களால் இரண்டுவித நாக்குள்ளது போலிருக்கிறது” என்றிருக்கிறது.

மேலும் தண்டனையானவன், வாள், வில், கதாயுதம், ஈட்டி {வேல்}, திரிசூலம், தடி, கணை, உலக்கை, போர்க்கோடரி, சக்கரம், சுருக்குக் கயிறு {பாசம்}, தடி, ரிஷ்டி, தோமரம் மற்றும் உலகில் உள்ள அனைத்து வகை ஆயுதங்களின் வடிவை ஏற்று இவ்வுலகில் உலவி வருகிறான்.(17,18) உண்மையில் தண்டனையானவன், துளைத்தல், வெட்டுதல், பீடித்தல், துண்டித்தல், பிரித்தல், தாக்குதல், கொல்லுதல், எதிர்த்து விரைதல் ஆகியவற்றின் மூலம் இவ்வுலகில் உலவி வருகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, இந்தத் தண்டனையானவன், வாள் {அஸி - ஆன்மா}, கத்தி {விசஸனம் – துன்பம்}, அறம் {தர்மம்}, சீற்றம் {தீக்ஷ்ணவர்மா}, தடுக்கப்படமுடியாதது {துராஸதம்}, செழிப்பின் தாய் {ஸ்ரீகர்ப்பம்}, வெற்றி {விஜயம்}, தண்டிப்பவன் {சாஸ்தா}, தடுப்பவன் {வ்யவகாரம்}, நித்தியமானவன் {ப்ரஜாகரம்}, சாத்திரங்கள், பிராமணன், மந்திரம் {பிராம்மணமந்த்ரம்}[4], பழிவாங்குபவன் {ப்ரவசனம்}, நீதி வழங்குபவர்களில் முதன்மையானவன் {பரம்}, நீதிபதி {தர்மபாலம்}, {அக்ஷரம்}, {கோபம்}, {ஸத்யகம்}, அழிவில்லாதவன் {நித்யகம்}, தேவன் {கிருஜம்}, தடுக்கப்படமுடியாத வழி கொண்ட ஒருவன், எப்போது முந்தியிருப்பவன், முதலில் தோன்றியவன், பற்றில்லா ஒருவன் {அஸங்கம்}, ருத்ரனின் ஆன்மா {ருத்ரதனயம்}, மூத்த மனு, {மனு, ஜ்யேஷ்டம்}, பெரும் நன்மை {சிவங்கரம்} என்ற பெயர்களிலும் அறியப்படுகிறான்.(20-22)

[4] கங்குலியில் பிராமணன், மந்திரம் என்றிருப்பது, கும்பகோணம் பதிப்பில் பிராம்மணமந்த்ரம் என்று ஒரே சொல்லாக இருக்கிறது.

தண்டனையே புனிதமான விஷ்ணு ஆவான். அவனே பலமிக்க நாராயணன் ஆவான். அவன் எப்போதும் பயங்கர வடிவையே ஏற்றுக் கொண்டிருப்பதால், அவன் மஹாபுருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(23) அவனது மனைவியான அறநெறியானவள், பிரம்மனின் மகள், லட்சுமி, விரிதி {நீதி}, சரஸ்வதி, அண்டத்தின் தாய் என்ற பெயர்களில் அறியப்படுகிறாள். இவ்வாறு தண்டனையானவன் பல்வேறு வடிவங்களைக் கொண்டவனாக இருக்கிறான்.(24)

அருள் மற்றும் சாபம், இன்பம் மற்றும் துன்பம், அறம் {நீதி} மற்றும் மறம் {அநீதி}, பலம் மற்றும் பலவீனம், நல்லூழ் மற்றும் தீயூழ், தகுதி மற்றும் தகுதியின்மை, நற்பண்பு {குணம்} மற்றும் குறை {தோஷம்},(25) விருப்பம் மற்றும் வெறுப்பு, பருவம் {ருது} மற்றும் மாதம், இரவு, பகல் மற்றும் கணம், கவனம் மற்றும் கவனமின்மை, இன்பம் மற்றும் கோபம், அமைதி மற்றும் தற்கட்டுப்பாடு,(26) விதி மற்றும் உழைப்பு {முயற்சி}, முக்தி மற்றும் கண்டிப்பு, அச்சம் மற்றும் அச்சமின்மை, தீங்கிழைத்தல் {ஹிம்சை} மற்றும் தீங்கிழையாமை {அஹிம்சை}, தவம், வேள்வி மற்றும் கடும் துறவு, நஞ்சு மற்றும் நல்ல உணவு,(27) தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு, கொலைபாதகச் செயல்கள் அனைத்தின் விளைவு, திமிர், கொடூரம், ஆணவம், செருக்கு, பொறுமை, கொள்கையுடைமை, கொள்கையின்மை,(28) சக்தியின்மை மற்றும் சக்தி, மரியாதை, அவமரியாதை, சிதைவு, உறுதியானநிலை, பணிவு, ஈகை, தகுந்த நேரம் மற்றும் தகாதநேரம்,(29) பொய்ம்மை, ஞானம், உண்மை, நம்பிக்கை, நம்பிக்கையின்மை, ஆண்மையின்மை, வணிகம், ஆதாயம், இழப்பு, வெற்றி, தோல்வி,(30) கடுமை மென்மை, மரணம், அடைதல் மற்றும் அடையாமை, ஏற்புடைமை மற்றும் ஏற்பில்லாமை, செய்யப்படக்கூடியது மற்றும் செய்யப்படக்கூடாதது, பலம் மற்றும் பலவீனம்,(31) வன்மம் மற்றும் நல்லெண்ணம், அறம் மற்றும் மறம், வெட்கம் மற்றும் வெட்கமின்மை, அடக்கம், செழுமை மற்றும் வறுமை,(32) ஆற்றல், செயல்கள், கல்வி, நாவண்மை, கூரிய அறிவு ஆகிய இவையெனைத்தும், ஓ! யுதிஷ்டிரா, இவ்வுலகில் தண்டனையின் வடிவங்களே. எனவே, தண்டனையென்பது அதிகமான பல்வேறு வடிவங்களைக் கொண்டதாகும்.(33)



தண்டனையில்லாவிட்டால் உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று கலங்கடிக்கும். வாழும் உயிரினங்கள், ஓ! யுதிஷ்டிரா, தண்டனை மீது கொண்ட அச்சத்தாலேயே ஒன்றையொன்று கொல்லாதிருக்கின்றன.(34) ஓ! மன்னா, தண்டனையால் பாதுகாக்கப்படும் குடிமக்கள், தங்கள் ஆட்சியாளனின் வலிமையை அதிகரிக்கின்றனர். இதன் காரணமாகவே தண்டனையானது அனைத்திற்கும் புகலிடமாகக் கருதப்படுகிறது.(35) ஓ! மன்னா, தண்டனையே உலகை அறத்தின் பாதையில் விரைவாக நிலைநிறுத்துகிறது. உண்மையைச் சார்ந்திருக்கும் அறமானது பிராமணர்களிடம் இருக்கிறது.(36) அறத்துடன் கூடிய முதன்மையான பிராமணர்கள் வேதங்களில் பற்று கொள்கிறார்கள். வேதங்களில் இருந்து வேள்விகள் வருகின்றன. வேள்விகள் தேவர்களை நிறைவு செய்கின்றன.(37) அவற்றால் நிறைவடையும் தேவர்கள், பூமிவாசிகளை இந்திரனிடம் ஒப்படைக்கிறார்கள். பூமிவாசிகளுக்கு நன்மை செய்வதற்காக இந்திரன் அவர்களுக்கு (எது இல்லாமல் பயிர்களும், விளைச்சலும் பொய்த்துப் போகுமோ அந்த மழையின் வடிவில்) உணவை அளிக்கிறான்.(38) உயிரினங்கள் அனைத்தின் வாழ்வு உணவைச் சார்ந்தே இருக்கிறது. உணவிலிருந்தே உயிரினங்கள் தங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்று வளர்ச்சியடைகின்றன. தண்டனையானவன் (க்ஷத்திரிய ஆட்சியாளனின் வடிவில்) அவர்களுக்கு {உயிரினங்களுக்கு} மத்தியில் விழிப்புடன் இருக்கிறான்.(39) இந்த நோக்கத்திற்காகவே தண்டனையானவன், மனிதர்களுக்கு மத்தியில் ஒரு க்ஷத்திரியனின் வடிவை ஏற்கிறான். மனிதர்களைப் பாதுகாக்கும் அவன், எப்போதும் கவனத்துடனும், ஒருபோதும் சிதையாமலும் விழிப்புடன் இருக்கிறான்.(40)

மேலும் தண்டனைக்கு, தேவன் {ஈஸ்வரன்}, மனிதன் {புருஷன்}, உயிர் {பிராணனன்}, சக்தி {ஸத்வம்}, இதயம் {வ்ருத்தம்}, அனைத்துயிர்களின் தலைவன் {ப்ரஜாபதி}, அனைத்துப் பொருட்களின் ஆன்மா {பூதாத்மா}, வாழும் உயிர் {ஜீவன்} என்று எட்டு பெயர்களும் இருக்கின்றன.(41) (படைகளின் வடிவில்) பலம் கொண்டவனும், ஐந்து பொருட்களின் சேர்க்கையாயிருப்பவனுமான மன்னனுக்குச் செழிப்பு மற்றும் தண்டக் கோல் ஆகியவற்றைத் தேவன் {ஈஸ்வரன்} கொடுத்தான்[5].(42) ஓ! யுதிஷ்டிரா, கீழே சொல்லப்பட்டுள்ள {இதற்கு அடுத்து சொல்லப்படும்} எட்டுப் பொருட்களுடன் சேர்த்து உன்னதக் குருதி, பெருஞ்செல்வமுள்ள அமைச்சர்கள், அறிவு, (உடற்பலம் மற்றும் மனோசக்தி போன்ற) பல்வேறு வகையான சக்திகள் ஆகியவற்றையும், (நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைச் சார்ந்திருக்கும்) வேறு சக்திகளையும் மன்னன் நாட வேண்டும்.(43) யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைவீரர்கள், படகுகள், பொருத்தமான கூலியாட்கள் (முகாமைப் பின்தொடர்ந்து பிற வேலைகளைச் செய்யக்கூடியவர்கள் {சுமை தூக்குபவர்கள்}), மக்கள் தொகை பெருக்கம், கால்நடை ஆகியவையே {முன் சொல்லப்பட்ட} அந்த எட்டு பொருட்களாகும்.(44) கவசங்கள் மற்றும் வேறு பாதுகாப்பு உறைகளைப் பூண்டிருக்கும் தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், குதிரைப்படை வீரர்கள், காலாட்படை வீரர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் ஆகியோர் படையின் அங்கத்தினராவர்.(45)

[5] “அவை {ஐந்து பொருட்கள்}, அறம் {தர்மம்}, சட்டம், தண்டனை {தண்டநீதி}, தேவன் {ஈஸ்வரன்} மற்றும் வாழும் உயிர் {ஜீவன்} ஆகியவையே” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “ஈஸ்வரர் அரசனுக்கு வ்யவஸ்தையுள்ள தண்டநீதியையும் ஐஸ்வரியத்தையும் அளித்தார். அந்த அரசன் எப்பொழுதும் பலத்துடன் கூடியவனும், தர்மம், வ்யவகாரம், தண்டநீதி, ஈஸ்வரன், ஜீவன் என்ற ஐந்துவித உருவமுள்ளவனுமாயிருக்கிறான்” என்றிருக்கிறது.

பிச்சைக்காரர்கள், முக்கிய நீதிபதிகள், கணியர்கள் {சோதிடர்கள்}, தணிவுச் சடங்குகள் மற்றும் அதர்வணச் சடங்குகளைச் செய்பவர்கள், கருவூலம், கூட்டாளிகள், தானியங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் ஆகியன,(46) ஏழு பண்புகளையும், எட்டு அங்கங்களையும் கொண்ட ஒரு நாட்டின் உடலாகின்றன. தண்டனையும், ஒரு நாட்டின் மற்றொரு பலமிக்க அங்கமே. (ஒரு படையின் வடிவில் உள்ள) தண்டனையே ஒரு நாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது.(47) க்ஷத்திரியப் பயன்பாட்டுக்காகத் தேவனே பெருங்கவனத்துடன் தண்டனையை அனுப்பினான். அழிவில்லா அண்டமானது, பாரபட்சமற்ற தண்டனையின் உடல்வடிவமே ஆகும்.(48) அறத்தின் வழிகளைச் சுட்டிக்காட்டும் தண்டனையைவிட மன்னர்களால் மதிக்கத்தக்கது வேறெதுவும் இல்லை. உலகின் பாதுகாப்புக்காகவும், பல்வேறு மனிதர்களின் கடமைகளை நிறுவுவதற்காகவும் பிரம்மனே தண்டனையை அனுப்பினான் (படைத்தான்).(49) வாதி, பிரதிவாதிகளின் சச்சரவுகளில் எழும் மற்றொரு வகை வியவஹாரமும், பிரம்மனில் இருந்தே எழுந்தது. இரு தரப்பினருக்கு மத்தியிலும் முக்கிய நம்பிக்கையையூட்டும் அந்த வியவஹாரம் நன்மைபயக்குவதாகவே தெரிகிறது.(50)



வேதத்தை ஆன்மாவாகக் கொண்ட {இரண்டாவது வகையைச் சார்ந்த} மற்றொரு வியவஹாரமும் இருக்கிறது. அது வேதத்தையே தன் காரணமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, குடும்பப் பழக்கவழக்கங்களின் தொடர்புடையதாக இருப்பினும், சாத்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ள மற்றொரு (மூன்றாவது) வகையைச் சேர்ந்த வியவஹாரமும் இருக்கிறது[6].(51) இந்த வியவஹாரமானது, மேலே சொல்லப்பட்டபடி, வழக்காடுபவர் இருவரின் நம்பிக்கையின் மூலம் விவரிக்கப்படுவதாகவும், அது மன்னர்களிடம் {மட்டுமே} இருப்பதாகவும் நம்மால் அறியப்பட வேண்டும். அது தண்டனை என்ற பெயராலும், அத்தாட்சி {ஆதாரம்} என்ற பெயராலும் அறியப்பட வேண்டும்.(52) தண்டனையானது அத்தாட்சியால் ஒழுங்குபடுத்தப்படுவதாகத் தெரிந்தாலும், அது தன் ஆன்மாவை வியவஹாரத்திலேயே {சட்டத்திலேயே} கொண்டுள்ளது. எது வியவஹாரம் என்று அழைக்கப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதவிதிகளை அடிப்படையாகக் கொண்டதே.(53) வேதங்களை ஆன்மாவாகக் கொண்டதாகச் சொல்லப்படும் வியவஹாரமானது, அறநெறி, அல்லது கடமையே ஆகும். கடமை மற்றும் அறநெறிகளை நம்பும் மனிதர்களுக்கு அது நன்மையை உண்டாக்குகிறது. தூய ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் பொதுச் சட்டத்தில் செய்துள்ளபடியே வியவஹாரம் குறித்துப் பேசுகின்றனர்.(54) ஓ! யுதிஷ்டிரா, மூன்றாம் வகை வியவஹாரமும் மனிதர்களின் பாதுகாவலனாகவும், வேதத்தைத் தன் வேராகக் கொண்டதாகவும் இருக்கிறது. அதுவே மூவுலகங்களையும் நிலைநிறுத்துகிறது. உண்மையையே ஆன்மாவாகக் கொண்டிருக்கும் அது {மூன்றாவது வியவஹாரம்} செழிப்பை உண்டாக்குவதாகும்.(55)

[6] “இங்கே சொல்லப்படும் வியவஹாரம் என்பதற்கு நெருக்கமான பொருளாகச் சட்டம் என்ற சொல் அமையும். மூன்று வகை வியவஹாரங்கள், அல்லது சட்டங்கள் இங்கே பேசப்படுகின்றன. முதலில் சொல்லப்படுவது, வழக்காடுபவர்களுக்கு {வாதிபிரதிவாதிகளுக்கு} மத்தியில் சச்சரவுகளின்படி தீர்மானிக்கப்படும் பொதுச் சட்டமாகும். அதில் உரிமையியல் {குடியியல்} மற்றும் குற்றவியல் சட்டங்களும் {Civil & Criminal Law} அடக்கம். அதுவே இங்கே வழக்காடும் ’இருவர் மேல் கொண்ட நம்பிக்கையால் வர்ணிக்கப்படும்’ என்ற பொருளில் வத்ர-பிரத்யாய-லக்ஷணம் Vattra-pratyaya-lakshana என்று விசித்திரமாக விளக்கப்படுகிறது. உரிமையியல், அல்லது குற்றவியல் வழக்கு நடத்தப்படும்போது, மன்னனோ, மன்னனின் பெயரைக் கொண்டு செயல்படுபவர்களோ, சாட்சி மற்றும் ஆதாரங்களை அழைத்து, இரு தரப்பினரையும் நம்பி காரியத்தைத் தீர்மானிக்க வேண்டும். பிறகு மறுசீரமைப்போ, தண்டனையோ பின்தொடரும். இரண்டு வழக்கிலும் அது தண்டனையின் வடிவமாகவே இருக்கிறது. இரண்டாவது வகை வியவஹாரம், அல்லது சட்டமானது, வேதங்களின் சமய சட்டமாகும். இவை சாத்திரப் புத்தகங்களில் மனிதக் கடமைகளின் ஒவ்வொரு பகுதியையும் ஒழுங்குபடுத்த விதிக்கப்பட்டுள்ள விதிகளாகும். மூன்றாவது வகை வியவஹாரம், அல்லது சட்டமானது குறிப்பிட்ட குடும்ப, அல்லது குலங்களின் பழக்கவழக்கங்கள் குறித்ததாகும். அது குலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது. குலாச்சாரமானது பொருந்தாநிலை இல்லாதபோது, அல்லது, நிறுவப்பட்ட உரிமையியல் சட்டத்திற்கோ, குற்றவியல் சட்டத்திற்கோ {பொருந்தாத வகையில்} வெளிப்படையாக வேறுபடாதபோது, அல்லது வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சமய சட்டங்களின் நிலைக்கு எதிராக இல்லாதபோது பின்பற்றப்படும். ({1883-ன் இந்தியாவில்} பிரிட்டிஷ் நீதிமன்றங்களும் குலாச்சாரத்தைக் கட்டாயமாகப் பின்பற்றுகின்றன}. இங்கே பீஷ்மர் என்ன சொல்கிறார் என்றால் சாத்திரங்களுக்கு (வேதங்களுக்கும், ஸ்மிருதிகளுக்கும்) பொருந்தாதபோது அந்தக் குலாச்சாரத்தைப் பின்பற்றக்கூடாது என்கிறார்.

எது தண்டனையோ, அது நித்திய வியவஹாரமாகவே {அழிவில்லா சட்டமாகவே} நம்மால் காணப்படுகிறது. எது வியவஹாரம் என்று சொல்லப்படுகிறதோ, அஃது உண்மையில் வேதமே ஆகும்.(56) எது வேதமோ, அதுவே நெறியும், கடமையும் ஆகும். எது நெறியும், கடமையும் ஆகுமோ அதுவே அறவழியாகும். இந்த இறுதியானது எதுவோ, அஃது அனைத்து உயிரினங்களின் தலைவனான பெரும்பாட்டன் பிரம்மனிடம் தொடக்கத்திலேயே இருந்தது.(57) தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பாம்புகள், மேலும் பிற அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த அண்டத்திற்கும் படைப்பாளன் பிரம்மனே.(58) எனவே, வழக்காடும் இரு தரப்பினரிடம் கொண்ட நம்பிக்கையால் விவரிக்கப்படும் வியவஹாரமும் அவனிடம் {பிரம்மனிடம்} இருந்தே வந்தது. வியவஹாரத்தைப் பொறுத்தவரையில், இதன் காரணமாகவே பின்வருவதை அவன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்:(59) “தன் கடமைக்கு ஏற்ப ஆட்சி செய்யும் மன்னனால், தாயோ, தந்தையோ, உடன் பிறந்தவனோ {சகோதரனோ}, மனைவியோ, புரோஹிதனோ தண்டிக்கப்படக்கூடாதவர்கள் அல்ல”[7] {என்று விதித்திருக்கிறான் பிரம்மன்}” என்றார் {பீஷ்மர்}.(60)

[7] கும்பகோணம் பதிப்பில், “ஸ்வதர்மத்திலிருக்கும் அரசனுக்குத் தாயானாலும், தந்தையானாலும், உடன்பிறந்தவனானாலும், பாரியையானாலும், புரோஹிதரானாலும் தண்டிக்கத்தகாதவர் ஒருவருமில்லை” என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 121ல் உள்ள சுலோகங்கள் : 60

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்