Thursday, April 26, 2018

இந்திரோதரின் நீதி! - சாந்திபர்வம் பகுதி – 152

The justice of Indrota! | Shanti-Parva-Section-152 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 22)


பதிவின் சுருக்கம் : இந்திரோதர் ஜனமேஜயனுக்குச் சொன்ன அறிவுரைகள்; ஜனமேஜயனைப் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவனுக்குக் குதிரை வேள்வி செய்து கொடுத்த இந்திரோதர்...


Shanti-Parva-Section-152 | Mahabharata In Tamil
சௌனகர் {இந்திரோதர் ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்தக் காரணங்களுக்காக, மிகக் கலங்கிய இதயம் கொண்ட உன்னிடம் நான் அறம் குறித்து உரையாடப்போகிறேன். அறிவையும், பெரும்பலத்தையும், நிறைவான இதயத்தையும் கொண்ட நீ, அறத்தைத் தானாக விரும்பி நாடுகிறாய்.(1) ஒரு மன்னன், முதலில் மிகக் கடுமையானவனாகி, பிறகு கருணையைக் காட்டி, தன் செயல்களின் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையைச் செய்கிறான். இது நிச்சயம் மிக ஆச்சரியமானதே ஆகும்.(2) நீ முதலில் கடுமையானவனாக இருந்தாய். ஆனால் இப்போதோ, அறம் நோக்கி உன் கண்களைத் திருப்பியிருக்கிறாய்.(3) ஆடம்பர உணவு மற்றும் இன்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, நீண்ட காலமாகவே நீ கடுந்தவங்களைச் செய்து வருகிறாய். ஓ! ஜனமேஜயா, பாவத்தில் மூழ்கியிருக்கும் மன்னர்களிடம் இவையனைத்தும் {காணப்படுவது} நிச்சயம் ஆச்சரியமானதே.(4)


செல்வமிக்கவன் பரந்த மனம் கொண்டவனாவதோ, தவத்தைச் செல்வமாகக் கொண்ட ஒருவன், அதை {தவசக்தியைச்} செலவு செய்யத் தயங்குவதோ ஒருபோதும் ஆச்சரியமானதில்லை. ஒருவர் மற்றொருவரிடமிருந்து தொலைவில் வாழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது[1].(5) எது தவறாகத் தீர்மானிக்கப்படுகிறதோ, அஃது அதிகமான துன்பத்தையே உண்டாக்கும். மறுபுறம், எது நல்ல உறுதியான தீர்மானத்தின் துணையுடன் நிறைவேற்றப்படுகிறதோ, அது சிறப்பான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது[2].(6) ஓ! பூமியின் தலைவா, வேள்வி, கொடை, கருணை, வேதங்கள், உண்மை ஆகிய இவ்வைந்தும் தூய்மைப்படுத்துவனவாகும். ஆறாவதானது, நன்றாகச் செய்யப்படும் தவமாகும். ஓ! ஜனமேஜயா, இறுதியானது {தவமானது} மன்னர்களுக்கு உயர்வான தூய்மையைத் தரும்.(7) அதை நீ முறையாகக் கைக்கொண்டால், நீ நிச்சயம் பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்}, அருளையும் ஈட்டுவாய். புனிதத் தலங்களுக்குப் பயணம் செய்வதும் உயர்ந்த தூய்மையைத் தரும் என்று சொல்லப்படுகிறது.(8)

[1] "சுலோகம் 5-க்கான இந்த உரையானது இறுதிநிலை எய்தாத வரைவாகவே இங்கே தரப்படுகிறது. செல்வந்தன் ஈகையாளனாவது ஆச்சரியமில்லை. மேலும், தவசியானவர் தன் சக்தியைச் செயல்படுத்துவதில் விருப்பமில்லாதவராக இருக்கிறார். (அகஸ்தியர் தன் மனைவியை நிறைவு செய்வதற்காகச் செல்வத்தை உண்டாக்க விரும்பவில்லை என்பதை நாம் இங்கே சாட்சி பகரலாம்). இந்த இருவரும் ஒருவருவருக்கொருவர் தொலைவில் வாழமாட்டார்கள் என்பதன் பொருளானது, ஒரு செல்வந்தன் ஈகையாளனாகும் அதே காரணமே, ஒரு தவசியைத் தான் கொண்ட செல்வத்தை {தவசக்தியைக்} கையாள மிகக் கவனமாக இருக்க வைக்கிறது என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸம்பத்துள்ளவன் தாதாவாயிருப்பதும், க்ருபணன் தவத்தைப் பொருளாகக் கொண்ட முனியாயிருப்பதும் ஆச்சர்யமல்லவென்று சொல்லுகிறார்கள். அது ஸமீபத்திலிருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு பலவீனன், ஈகையாளனாவதோ, துன்பத்திலிருக்கும் மனிதன் தவத்தை நாடுவதும் ஆச்சரியமானதில்லை. இந்நடத்தையானது, அவர்களின் நிலைக்கு நெருக்கமானது எனச் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.

[2] "எது அசமிக்ஷிதமோ asamikshitam, அதுசமகிரம் samagram kaarpanyam கார்ப்பன்யம் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நன்றாக ஆலோசிக்கப்படாதவையெல்லாம் கார்ப்பண்யமாகும். அது நன்றாக ஆலோசனையுடனிருக்குமாகில் அதில் அதனால் குணமுண்டாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இந்தத் தவறான தன்மையானது முறையாகக் கருதப்படுவதில்லை. எனவே, ஒருவன் அதைச் சரியாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது மட்டுமே அவன் அதன் பண்புகளைப் பாராட்டுவான்" என்றிருக்கிறது.

இது தொடர்பாக யயாதி பாடிய பின்வரும் சுலோகம் குறிப்பிடப்படுகிறது: "எந்த மனிதன் உயிரையும், நீண்ட வாழ்வையும் ஈட்டுவானோ, அவன் அர்ப்பணிப்புடன் வேள்விகளைச் செய்த பிறகு, அவற்றை (முதிர்ந்த வயதில்) கைவிட்டு {துறந்து}, தவங்களைச் செய்ய வேண்டும்" {என்பது அந்த ஸ்லோகம்}.(9) குருவின் களம் {குருக்ஷேத்திரம்} புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதி ஆறு அதைவிடப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. சரஸ்வதியைவிட, சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் இன்னும் அதிகமான புனிதம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது; சரஸ்வதியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தையும்விடப் பிருதூதகம்[3] என்றழைக்கப்படும் தீர்த்தம் மிகப் புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. பிருதூதகத்தில் நீராடி, அதன் நீரைப் பருகிய ஒருவன், அகால மரணமடையமாட்டான்.(10) மஹாஸரஸுக்கும், புஷ்கரை என்ற பெயரில் இருக்கும் தீர்த்தங்கள் அனைத்திற்கும், பிரபாஸத்துக்கும், மானஸத்தின் {மானசரோவரின்} வடக்குத் தடாகத்துக்கும் {உத்தர மானஸத்துக்கும்}, காலோதகத்துக்கும் நீ செல்ல வேண்டும். அதன் பிறகு, நீ உயிரையும், நீண்ட வாழ்நாளையும் அடைவாய்.(11) சரஸ்வதியும், திருஷத்வதியும் ஒன்றுகலக்கும் இடத்திலேயே மானஸத் தடாகம் இருக்கிறது[4]. வேத அறிவைக் கொண்ட மனிதர்கள் இந்த இடங்கள் அனைத்திலும் நீராட வேண்டும். கடமைகள் அனைத்திலும் ஈகையே சிறந்தது என்றும், ஈகையைவிடத் துறவு சிறந்ததென்றும் மனு சொல்லியிருக்கிறார்.(12)

[3] வனபர்வம் 83ல் தீர்த்தயாத்ரா உபபர்வத்தில் இந்தத் தீர்த்தம் குறித்துச் சொல்லப்படுகிறது. https://mahabharatham.arasan.info/2014/01/Mahabharatha-Vanaparva-Section83d.html இது ஹர்யானாவில் இன்றும் இருக்கும் பெஹோவா Pehowa என்ற இடம் என்று சொல்லப்படுகிறது. அங்கிருக்கும் கார்த்திகேயன் கோவில் புகழ்மிக்கதாகும். ஆனால் சல்லிய பர்வத்தில் வரும் பலராமனின் சரஸ்வதி தீர்த்த யாத்திரையில் இந்த இடம் குறிப்பிடப்படுவதாகத் தெரியவில்லை.

[4] கும்பகோணம் பதிப்பில், "ஸரஸ்வதியிலும், த்ருஷத்வதியிலும் ஸ்நானஞ்செய்யும் மனிதன் தாபமடைவானோ?" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், சரஸ்வதி மற்றும் திருஷத்வதியின் சங்கமத்தில் நீ நீராட வேண்டும்" என்றிருக்கிறது. இந்த இரு பதிப்புகளிலும் மானஸம் இவற்றுடன் இணைக்கப்படவில்லை.

இது தொடர்பாகச் சத்தியவான் செய்த பின்வரும் ஸ்லோகம் குறிப்பிடப்படுகிறது. "ஒரு குழந்தையைப் போல எளிமைமிக்கவனாகவும், தகுதியோ {புண்ணியமோ}, பாவமோ அற்றவனாகவும் (ஒருவன்) செயல்பட வேண்டும்.(13) அனைத்து உயிரினங்களையும் பொறுத்தவரையில், இவ்வுலகில் துன்பமோ இன்பமோ கிடையாது. (துன்பம் என்று அழைக்கப்படுவதும், இன்பம் என்று அழைக்கப்படுவதும், தவறாக உண்டான கற்பனையின் விளைவுகளே ஆகும்). இதுவே அனைத்து உயிரினங்களின் உண்மையான இயல்பாகும்.(14) அனைத்து உயிரினங்களிலும், துறவை மேற்கொண்டு, தகுதிமிக்க {புண்ணியமான}, பாவம் நிறைந்த செயல்கள் இரண்டையும் தவிர்ப்பவர்களின் வாழ்வே மேன்மையானதாக இருக்கிறது" {இதுவரை உள்ளதே சத்தியவானின் ஸ்லோகமாக இருக்க வேண்டும்}. ஒரு மன்னனுக்குச் சிறப்புடைய செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன்.(15) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வலிமையையும், ஈகையையும் வெளிப்படுத்தி நீ சொர்க்கத்தை வெல்வாயாக. வலிமை மற்றும் சக்தியின் பண்புகளைக் கொண்ட மனிதனே அறமீட்டுவதில் வெல்கிறான்[5].(16)

[5] "இங்கே சொல்லப்படும் பலம் vala என்பது பொறுமை (தாங்கிக் கொள்ளும் பலம்) என்றும், ஓஜஸ் Ojas(சக்தி) என்பது, புலனடக்கம் என்றும் நீலகண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பலத்தாலும், தனங்களாலும் ஸ்வர்க்கத்தை ஜயி; பரிசுத்தியையும் அடை. எவனுக்குப் பலமும், கருவிகளுள்ள சக்திகளுமிருக்கின்றனவோ அந்த மனிதனே தர்மத்திற்கு ப்ரபுவாவான்" என்றிருக்கிறது.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களுக்காகவும், இன்பத்துக்காகவும் இந்தப் பூமியை நீ ஆள்வாயாக. நீ முன்பு பிராமணர்களைப் பழித்தாய். இப்போது அவர்களை நிறைவு செய்வாயாக.(17) {முன்பு} உனக்கு ஐயோ என்று அவர்கள் கதறி இருந்தாலும், அவர்களை நீ கைவிட்டிருந்தாலும், தன்னறிவால் வழிநடத்தப்படும் நீ, ஒருபோதும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்று முழுப் பற்றுடன் உறுதியேற்பாயாக. உனக்குத் தகுந்த செயல்களில் ஈடுபட்டு, உனக்கான உயர்ந்த நன்மையை நாடுவாயாக.(18) ஆட்சியாளர்களில் சிலர் பனிபோல் குளுமையாக இருக்கிறார்கள்; சிலர் நெருப்பைப் போலச் சீற்றத்துடன் இருக்கிறார்கள்; சிலர் ஏரை {கலப்பையைப்} போல (தங்கள் எதிரிகளை வேரோடு பிடுங்குபவர்களாக) இருக்கிறார்கள்; மேலும் சிலரோ இடியைப் போல (திடீரெனத் தங்கள் எதிரிகளை எரிப்பவர்களாக) இருக்கிறார்கள்.(19) தன்னழிவைத் தவிர்க்க விரும்புபவன், பொதுவாகவோ, சிறப்பான காரணங்களுக்காகவோ தீய அற்பர்களுடன் ஒருபோதும் கலவாமல் இருக்க வேண்டும்.(20)

ஒரு முறை மட்டுமே செய்யப்பட்ட பாவச் செயலுக்காக ஒருவன் வருந்துவதன் மூலம் அவன் தூய்மையடையலாம். இருமுறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி ஒருபோதும் அதைச் செய்வதில்லை என்று உறுதியேற்பதன் மூலம் அவன் தூய்மையடையலாம்.(21) மும்முறை செய்யப்பட்ட பாவச் செயலுக்காக, இனி எப்போதும் அறம் மட்டுமே பயில்வேன் என்ற தீர்மானத்தின் மூலம் அவன் தூய்மையடையலாம். அத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்திருந்தால், அவன் புனிதத் தலங்களுக்குப் பயணிப்பதன் மூலம் தூய்மையடையலாம். செழிப்பில் விருப்பம் உள்ள ஒருவன், அருள்நிலையையே விளைவாகக் கொண்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) நறுமணங்களுக்கு மத்தியில் வாழ்பவர்கள் அதன் விளைவாக நறுமணமாகவே இருப்பார்கள். மறுபறம் கடும் நாற்றத்திற்கு மத்தியில் வாழ்பவர்கள் இழிவாகவே இருப்பார்கள்.(23) தவத்துறவுகளைச் செய்வதில் அர்ப்பணிப்புள்ள ஒருவன், விரைவில் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். (ஹோம) நெருப்பை ஒரு வருடம் வழிபடுவதன் மூலம் ஒருவன் பல்வேறு வகைப் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(24)

கருவைக் கொன்ற குற்றத்தைச் செய்த ஒருவன், நெருப்பை மூன்று வருடங்கள் வழிபடுவதன் மூலம் தூய்மையடைகிறான். கருவைக் கொன்ற குற்றவாளியானவன், மஹாசரஸ், புஷ்கரை, பிரபாசம், வட மானஸம் என்றழைக்கப்படும் தீர்த்தங்களுக்குப் புறப்பட மட்டுமே செய்தாலும், அவற்றில் இருந்து ஒரு நூறு யோஜனைகள் தொலைவிலேயே தூய்மையடைகிறான்[6].(25) உயிரினங்களைக் கொன்றவன், எத்தனை உயிரினங்களைக் கொன்றானோ, அதே அளவுக்கு அந்த வகை உயிரினங்களைக் கடும் துன்பத்தில் இருந்து காப்பதன் மூலம் தன் பாவங்களில் இருந்து தூய்மையடைகிறான்.(26) அகமர்ஷன மந்திரங்களை மூன்று முறை உரைத்த பிறகு, நீரில் மூழ்குவதன் மூலம் ஒருவன், ஒரு குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} இறுதி நீராடிய கனிகளை அறுவடை செய்யலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்[7].(27) அத்தகைய செயலானது ஒருவனுடைய பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்குவதன் விளைவாக, அவன் உலகில் மதிப்பையும் அடைகிறான். (தங்களைச் சுற்றியிருப்போருக்குக் கீழ்ப்படியும்) ஆதரவற்ற மூடர்களைப் போல அனைத்து உயிரினங்களும் அத்தகைய மனிதனுக்குக் கீழ்ப்படியும்.(28)

[6] "வட்டார மொழியைச் சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் 25ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரியில் பிழை செய்திருக்கிறார்கள். ஒரு மனிதன் நூறு யோஜனைகள் தொலைவில் இருந்து எந்தப் புனித நீர்நிலைகளுக்காவது புறப்பட்டால் தூய்மையடைவான் என்று அவர்கள் பொருள் கொள்வதாகத் தெரிகிறது. இந்தப் பொருள் ஏற்கப்பட்டால், நூறு யோஜனைகளுக்குள் வாழும் எந்த மனிதனும் தூய்மையடைய முடியாது என்றாகும். உண்மையில், நூறு யோஜனைகளுக்குள் இருக்கும் பல்வேறு தலங்களை அணுகுவதற்குள்ளாகவே ஒரு மனிதன் தூய்மையடைய முடியும் என்பதே அந்தத் தீர்த்தங்களின் திறனைச் சொல்வதாக அமையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ப்ரூணஹத்தி செய்தவன் மஹாஸரஸ், புஷ்கரம், ப்ரபாஸம், உத்தரமானஸம் இவைகளுக்காக நூறு யோஜனஞ்செல்வதால் விடுதல் பெறுவான்" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில் இந்த வரியே இல்லை.

[7] "இந்த மந்திரங்கள் ஒவ்வொரு பிராமணனின் காலை, நடுப்பகல், மாலை வேண்டுதல்களின் அங்கமானவையாகும். அகமர்ஷணர், பெரும் புனிதரான வேதகால முனிவராவார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், தேவர்களும், அசுரர்களும், தேவர்களின் ஆசானான பிருஹஸ்பதியை அணுகி அவரிடம் பணிவாக, "ஓ! பெரும் முனிவரே, அறத்தின் கனிகளை நீர் அறிவீர், அதேபோல, மறுமையில் நரகத்திற்கு வழிவகுக்கும் பிற செயல்களின் கனிகளையும் நீர் அறிவீர்.(29) எவனிடம் (துன்பம் மற்றும் இன்பம் ஆகிய) இரண்டும் இணையாக இருக்கிறதோ, அவன் தகுதி {புண்ணியம்} மற்றும் பாவம் ஆகிய இரண்டில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள மாட்டானா? ஓ! பெரும் முனிவரே, அறவோரின் கனிகள் என்ன என்பதையும், ஓர் அறவோன் தன் பாவங்களை எவ்வாறு அகற்றுகிறான் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டனர்.(30)

பிருஹஸ்பதி, "மடமையினால் ஒருவன் பாவம் செய்திருந்தால், அவன் தகுதிவாய்ந்த {புண்ணியமான} செயல்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவற்றைச் செய்வான் என்றால், காரங்களின் மூலம் அழுக்குத் துணியை வெளுப்பதைப் போல அவன் அத்தகைய அறத்தின் மூலம், தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம்.(31) பாவத்தை இழைத்துவிட்டு ஒருவன் தற்புகழ்ச்சி செய்யக்கூடாது. நம்பிக்கையின் மூலமும், வன்மத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமும் அவன் அருள்நிலையை அடைவதில் வெல்வான்.(32) நல்லோரின் குற்றங்கள் வெளிப்படும்போது, அதை மறைப்பவன், குற்றங்களை இழைத்தவனாக இருந்தாலும் அருள்நிலையை அடைவான்.(33) காலையில் எழும் சூரியன், இருளனைத்தையும் விலக்குவதைப் போலவே, அறச்செயல்களின் மூலம் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் விலக்கிக் கொள்கிறான்" என்று பதிலுரைத்தார் {என்றார் இந்திரோதர்}".(34)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "சுனகரின் மகனான இந்திரோதர், மன்னன் ஜனமேஜயனிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குதிரை வேள்வியைச் செய்து கொடுப்பதில் அவனுக்குத் துணையாக இருந்தார்.(35) தன் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவனும், அருள் நிலையை மீண்டும் அடைந்தவனும், சுடர்மிக்க நெருப்பைப் போலக் காந்தியுடன் ஒளிர்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்த மன்னன் {ஜனமேஜயன்}, முழுவடிவைக் கொண்ட சோமன் சொர்க்கத்தில் நுழைவதைப் போலத் தன் நாட்டுக்குள் நுழைந்தான்" {என்றார் பீஷ்மர்}.(36)

சாந்திபர்வம் பகுதி – 152ல் உள்ள சுலோகங்கள் : 36

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்