Tuesday, December 24, 2019

திருதராஷ்டிர நீதி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 05

Policies of Dhritarashtra! | Asramavasika-Parva-Section-05 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 05) (திருதராஷ்டிர நீதி - 1)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னனின் {யுதிஷ்டிரனின்} அனுமதியைப் பெற்றவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான திருதராஷ்டிரன் அப்போது காந்தாரியால் பின்தொடரப்பட்டுத் தன் அரண்மனைக்குச் சென்றான்.(1) பலம் குறைந்தவனும், மெதுவாக நகர்பவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஒரு யானைக் கூட்டத்தின் வயது முதிர்ந்த தலைவனைப் போலப் பெருஞ்சிரமத்துடன் நடந்தான்.(2) பெரும் கல்விமானான விதுரன், தேரோட்டியான சஞ்சயன், சரத்வானின் மகனும், பெரும் வில்லாளியுமான கிருபர் ஆகியோரால் அவன் பின்தொடரப்பட்டான்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் காலைச் சடங்குகளைச் செய்து, முதன்மையான பிராமணர்கள் பலரை நிறைவடையச் செய்த பிறகு, சிறிது உணவு உண்டான்.(4) ஓ! பாரதா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரியும், பெரும் நுண்ணறிவு கொண்ட குந்தியும், பல்வேறு பொருட்களைக் கொண்டு தங்கள் மருமகள்களால் வழிபடப்பட்ட பிறகு, சிறிதளவு உணவை உண்டனர்.(5) திருதராஷ்டிரன் உண்ட பிறகு, விதுரனும், பிறரும் அதையே செய்தனர், பாண்டவர்களும் தங்கள் உணவை முடித்துக் கொண்டு அங்கே வந்து அந்த முதிய மன்னனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(6)


அப்போது, ஓ! ஏகாதிபதி, அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்}, தன் அருகில் அமர்ந்திருந்த குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} முதுகைத் தன் கையால் தொட்டு,(7) "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, எட்டு அங்கங்களைக் கொண்ட உன் நாட்டுடன் தொடர்புடைய அனைத்திலும், நீதிமான்களின் கேள்விகளை {அறத்தை / தர்மத்தை} முதன்மையானவையாகக் கொண்டு, எப்போதும் கவனக்குறைவின்றி நீ செயல்பட வேண்டும்[1].(8) ஓ! குந்தியின் மகனே, நீ புத்திமானாகவும், கல்விமானகவும் இருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, நாட்டை நீதியுடன் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, கல்வியில் முதிர்ந்தவர்களாக இருப்போரை {கற்றறிந்த பெரியோரை} நீ எப்போதும் கௌரவிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு, எந்த ஐயுணர்வுமின்றி அதன்படியே நீ செயல்பட வேண்டும்.(10) ஓ! மன்னா, விடியலில் எழுந்து முறையான சடங்குகளுடன் அவர்களை வழிபட்டு, செயற்பாட்டுக்குரிய காலம் வரும்போது உன் செயல்களை (நீ நினைத்திருக்கும் செயல்களைக்) குறித்து அவர்களோடு ஆலோசிக்க வேண்டும்.(11) ஓ! மகனே, ஓ! பாரதா, உன் நடவடிக்கைகளால் உனக்கு என்ன நன்மை கிட்டும் என்பதை நீ அறிய விரும்பும்போது நீ அவர்களைக் கௌரவித்தால், அவர்கள் எப்போதும் உனக்கான நன்மையை அறிவிப்பார்கள்.(12)

[1] "சட்டம், நீதிபதி, வரிவிதிப்பவர், எழுத்தர், கணியர் {சோதிடர்}, தங்கம், நெருப்பு மற்றும் நீர் ஆகியவையே நாட்டின் எட்டு அங்கங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "தலைவன், அமைச்சன், தேசம், கோட்டை, பொக்கசம், துணைவர், படை, நகரவரிசை ஆகிய எட்டும் என்பது" என்கிறது.

நீ உன் குதிரைகளைப் பாதுகாப்பதைப் போலவே உன் புலன்களையும் எப்போதும் பாதுகாப்பாயாக. அப்போது வீணாகாத செல்வம் போல அவை உனக்கு நன்மைபயக்கும்.(13) நேர்மைக்கான சோதனைகளில் தேர்ச்சியடைந்தவர்களையும் (பற்றுறுதி {விசுவாசம்}, அக்கறையின்மை, தன்னடக்கம், துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும்) பரம்பரை பரம்பரையாக நாட்டின் அதிகாரிகளாக இருப்பவர்களும், தூய ஒழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், தொழிலில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துபவர்களும், அறவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்களையே நீ அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(14) பல்வேறு வேடங்களில் இருப்பவர்களும், நம்பிக்கை சோதனைக்கு உட்பட்டவர்களும், உன் நாட்டைச் சேர்ந்தவர்களும், பகைவரால் அறியப்படாதவர்களுமான ஒற்றர்கள் மூலம் நீ எப்போதும் தகவல்களைத் திரட்ட வேண்டும்.(15) உன் கோட்டையானது, வலுவான சுவர்கள், வளைவுகளைக் கொண்ட வாயில்கள் மூலம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். சுவர்களின் அனைத்துப் பக்கங்களிலும், ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ள கண்காணிப்புக் கோபுரங்களின் மேல் பக்கத்துக்குப் பக்கம் நடந்து கொண்டிருக்கும் அறுவரை நீ நியமிக்க வேண்டும்[2].(16) வாயில்கள் போதுமான அளவுக்குப் பெரியதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். சரியான இடங்களில் நிறுவப்படும் அந்த வாயில்களை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்[3].(17) எந்த மனிதர்களின் குடும்பங்கள் மற்றும் ஒழுக்கம் நன்கறியப்பட்டிருக்கிறதோ, அவர்களையே நீ உன் காரியங்களில் நியமிப்பாயாக. ஓ! பாரதா, உண்ணும் உணவு, அணியும் மாலைகள், கிடக்கும் படுக்கைகள் தொடர்பான காரியங்களிலும், விளையாடும் மற்றும் உண்ணும் நேரங்களிலும் நீ எப்போதும் மிகக் கவனமாக உன் மேனியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

[2] "இங்கே சொல்லப்படும் அட்டா என்பது படைவீரர்கள் நடப்பதற்கான வழி என நீலகண்டரால் விளக்கப்படுகிறது. கும்பகோணம் பதிப்பில், "உறுதியான பிரகாரங்களும், வெளிவாயில்களுமுள்ளதும் அட்டங்களாலும், அட்டாலகங்களாலும் நிறைந்ததும் ஆறு ஸ்தானங்களுள்ளதுமான பட்டணமானது உன்னால் எல்லாத் திசைகளிலும் ரக்ஷிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது. அட்டங்கள் என்பதற்கான அடிக்குறிப்பில், "துர்க்கத்திற்கு மேற்பிரதேசத்திலுள்ள ஸஞ்சரிக்கத்தக்க இடங்கள் என்பது பழைய உரை" என்றும், அட்டாலகங்கள் என்பதன் அடிக்குறிப்பில், "மேல்மெத்தைவீடுகள்" என்றும், ஆறு ஸ்தானங்கள் என்பதன் அடிக்குறிப்பில், "’ஷட்பதம்’ என்பது மூலம், ‘எவரும் வரக்கூடிய ஆறிடங்களுள்ளதென்றதால் ஏழு மதில்களுள்ளனவென்பதும் இவற்றில் ஏழாவது மதிலினுள் அந்தப்புரமிருத்தலால் எவரும் செல்லலாகாதென்பது’ பழைய உரையின் கருத்து" என்றும் இருக்கின்றன.

[3] கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பட்டணத்திற்குப் போதுமானவைகளும், பெரியவைகளுமான எல்லா வாயில்களும், எங்கும் நன்கு அமைக்கப்பட்டவையும், யந்திரங்களால் எங்கும் ரக்ஷிக்கப்பட்டவைகளுமாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

ஓ! யுதிஷ்டிரா, உன் குடும்பத்துப் பெண்மணிகள், நன்னடத்தைக் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், கல்விமான்களும், முதியவர்களும், நம்பிக்கைகுரியவர்களுமான ஊழியர்களால் கவனிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.(18,19) கல்விமான்களும், பணிவுள்ளவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், அறம்பொருள் அறிந்தவர்களும், எளிமையான நடத்தையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான பிராமணர்களை நீ அமைச்சர்களாக்கிக் கொள்ள வேண்டும்.(20) நீ அவர்களுடன் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும். எனினும், நீ பலருடன் ஆலோசிக்கக்கூடாது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், உன் மொத்த அவையினரோடோ, பகுதி பேருடனோ ஆலோசிக்கலாம். (ஊடுருவல்காரர்களிடம் இருந்து) நன்கு பாதுகாக்கப்பட்ட ஓர் அறை அல்லது இடத்திற்குள் {மந்திரகிரஹத்தில்} நீ உன் ஆலோசனைக்கூட்டங்களை நடத்த வேண்டும். புல்லற்ற காட்டிலும் நீ ஆலோசனைக்கூட்டம் நடத்தலாம். நீ ஒருபோதும் இரவு வேளையில் ஆலோசிக்கக்கூடாது[4].(22) மனிதர்கள் செய்வதைச் செய்து காட்டும் {சொல்வதைச் சொல்லிக் காட்டும்} குரங்குகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும், மூடர்கள் முடவர்கள் மற்றும் வாத நோயாளிகள் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அறையில் விலக்கப்பட வேண்டும்.(23) மன்னர்களின் ஆலோசனைகள் வெளிப்படுவதால் உண்டாகும் தீமைககள் தீர்க்கப்பட முடியாதவை என்று நான் நினைக்கிறேன்.(24) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஆலோசனைகள் வெளிப்படுவதால் எழும் தீமைகளையும், அவற்றை முறையாகப் பாதுகாப்பதால் உண்டாகும் நன்மைகளையும் உன் அமைச்சர்களுக்கு மத்தியில் நீ மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டும்.(25)

[4] "புற்கள் பகைவரின் ஒற்றர்களை மறைக்கும். இரவின் இருளும் அதையே செய்யும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் நற்செயல்களையும், குற்றங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் நீ செயல்பட வேண்டும்.(26) ஓ! மன்னா, உன் சட்டங்கள் அதற்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளவர்களும், மனநிறைவுடையவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களுமான நம்பிக்கைக்குரிய நீதிபதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். அவர்களுடைய செயல்களும் ஒற்றர்கள் மூலம் உன்னால் கண்டறியப்பட வேண்டும்.(27) ஓ! யுதிஷ்டிரா, நீதித்துறையைச் சார்ந்த உன்னுடைய அதிகாரிகள், குற்றங்களின் ஆழத்தைக் கவனமாக உறுதி செய்த பிறகு, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனைகளை வழங்க வேண்டும்[5].[28) கையூட்டு {பரிதானம் / லஞ்சம்} பெறும் மனநிலை கொண்டவர்கள், பிறர் மனைவியரின் கற்புக்குக் களங்கம் விளைவிப்பவர்கள், கடுந்தண்டனைகளைக் கொடுப்பவர்கள், பொய் {போலிநியாயம்} பேசுவபவர்கள், தூற்றுபவர்கள் {வைபவர்கள்}, பேராசையால் களங்கமடைந்தவர்கள் {களவு செய்பவர்கள்}, கொலைகாரர்கள், முரட்டுச் செயல்களைச் செய்பவர்கள்,(29) சபைகளுக்கும், பிறரின் விளையாட்டுகளுக்கும் {இன்பத் தேடல்களுக்குத்} தொந்தரவு கொடுப்பவர்கள், வர்ணக் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரை இடம் மற்றும் காலத்தைக் கருத்தில் கொண்டு அபராதங்களாலோ, மரணத்தாலோ தண்டிக்க வேண்டும்[6][7].(30)

[5] கும்பகோணம் பதிப்பில், "உன்னுடைய அதிகாரிகள் குற்றம், தண்டனை இவற்றினுடைய அளவை அறிந்து தண்டிக்கத்தக்கவர்களுக்குத் தண்டனையை விதிக்க வேண்டும்" என்றிருக்கிறது.

[6] "’ ஆதாநருசி’ என்பது ஊழல் அதிகாரிகள் மற்றும் கள்வர்களைக் குறிக்கும் மிக நாகரிகமான வழியாகும். கடுந்தண்டனைகளை வழங்குபவர்கள் கொல்லப்படத்தகுந்த கொடுங்கோலர்களாகக் கருதப்பட்டனர். ஒரு காலத்தில் இங்கிலாந்தில் கடும் அபராதங்கள் தடைசெய்யப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டத்தின் சொற்களைப் பயன்படுத்தவதாக இருந்தால், ‘ஸாஹஸப்ரியா’ என்பது, is a dooer of rash deeds, such as culpable homicide not amounting to murder {கொலை அளவுக்கு இல்லாத கொலை போன்ற மோசமான முரட்டுச் செயல்களைச் செய்பவனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[7] கும்பகோணம் பதிப்பில் இதற்கு மேலும், "அந்தப்புர ப்ரதேசத்தில் வேலைக்காரர்களுடன் பானம் செய்யக்கூடாது. அவர்கள் மதம்பிடித்து வைவார்கள்; மனைவியையும் பிடிப்பார்கள். மறைந்திருந்து ஆயுதத்தால் கொல்லவும் விரும்புவார்கள்; மதம்பிடித்துக் கூத்தாடுவார்கள்; பலவித நிந்தைகளைச் சொல்லுவார்கள்; சேரத்தக்கதையும், சேரத்தகாததையும் அறிய மாட்டார்கள்; அரசனானாலும் அதிகமாகப் பானம் செய்தால் எல்லாப் பொக்கசத்தையும் அழித்துவிடுவான்; பாடகர்களுக்கு வீணாகத் தனக்குவியலையும் கொடுப்பான்; தனக்கு நிந்தையையும் தோஷங்களையும் அடைவான்; ஆகையால், மிக்கப் பராக்ரமம் விருத்தியடைவதற்காகப் பத்தினியுடன் தனித்துப் பானம் செய்ய வேண்டும். (ஆனாலும்) அதுவும் குறிப்பினால் வெளிப்பட்டுவிடுகிறது" என்றிருக்கிறது. இந்தப் பகுதி கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.

காலையில், நீ வழங்க வேண்டியவற்றைக் கொடுப்பதில் {உனக்குப் பிரியமானதைச் செய்வதில்} ஈடுபடுபவர்களை நீ காண வேண்டும். அதன்பிறகே நீ காலைக் கடன்களையும், அதற்கும்பிறகு உன் உணவையும் பார்க்க வேண்டும்.(31) அதன்பிறகு நீ உன் படைகளை மேற்பார்வையிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவர்களை மகிழ்விக்க வேண்டும். உன்னுடைய மாலைப் பொழுதுகள் தூதர்களுக்காகவும், ஒற்றர்களுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும்.(32) பகலில் செய்யப்பட வேண்டிய செயல்களைத் தீர்மானிக்கப் பின்னிரவை நீ அர்ப்பணிக்க வேண்டும். நள்ளிரவுகளும், நடுப்பகல்களும் உனது கேளிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். எனினும், அனைத்துக் காலங்களிலும் நீ உன் காரியங்களை நிறைவேற்றக்கூடிய வழிமுறைகளேயே நினைக்க வேண்டும்.(33) உரிய காலத்தில் உன் மேனியை அலங்கரித்துக் கொண்டு, அபரிமிதமாகக் கொடையளிப்பதற்காக நீ அமர வேண்டும். ஓ! மகனே, பல்வேறு செயல்களின் சுழற்சி, சக்கரங்களைப் போல நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது.(34) நீ நியாயமான வழிமுறைகளின் மூலம் பல்வேறு வகைச் செல்வங்களைக் கொண்டு உன் கருவூலத்தை நிறைக்க எப்போதும் முயற்சிக்க வேண்டும். முடிவில் நியாயமற்ற வழிமுறைகள் அனைத்தையும் நீ புறக்கணிக்க வேண்டும்.(35)

உன்னுடைய தாமதங்களைக் காண விரும்பும் உன் பகைவர்களை உன் ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து, நம்பிக்கைக்குரிய நபர்களைக் கொண்டு தொலைவில் இருந்தே அவர்களை அழிக்க வேண்டும்.(36) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒழுக்கத்தை ஆய்வு செய்த பிறகே உன் பணியாட்கள் நியமிக்கப்பட வேண்டும். உரிய காரியத்திற்கு நியமிக்கப்பட்ட பணியாட்களைக் கொண்டோ, அவற்றுக்காக நியமிக்கப்படாத பணியாட்களைக் கொண்டோ நீ உன் செயல்கள் அனைத்தையும் செய்வாயாக[8].(37) உன் படைத்தலைவன், ஒழுக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், துணிவுமிக்கவனாகவும், கடினமான சூழ்நிலைகளைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவனாகவும், பற்றுறுதி {விசுவாசம்} கொண்டவனாகவும், உன் நன்மையில் அர்ப்பணிப்பு உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.(38) ஓ! பாண்டுவின் மகனே, உன் மாகாணங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பசுக்களையும், கழுதைகளையும் போல உன் செயல்களை எப்போதும் செய்ய வேண்டும்[9].(39) ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய காரிய தாமதங்களையும் {ரந்திரங்கள் / பலவீனங்களையும்}, பகைவர்களின் காரிய தாமதங்களையும் நீ கவனமாக உறுதி செய்து கொள்ள வேண்டும். உன்னுடையவர்களின் காரிய தாமதங்களையும், பகைவருடையவர்களின் காரிய தாமதங்களையும் நீ உறுதி செய்து கொள்ள வேண்டும்.(4) தங்கள் தங்கள் தொழில்களில் திறம்பெற்றவர்களும், உனது நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான உன் நாட்டைச் சேர்ந்தவர்கள், போதுமான வாழ்வாதாரங்களின் மூலம் உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும்.(41) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஞானமுள்ள மன்னன் ஒருவன், சாதித்திருக்கும் தன் குடிமக்களின் சாதனைகள் பாதுகாக்கப்படுவதை எப்போதும் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்கள், தங்கள் திறனில் இருந்து வீழாதிருப்பதைக் கண்டு உன்னிடம் உறுதியான அர்ப்பணிப்புடன் திகழ்வார்கள்[10]" {என்றான் திருதராஷ்டிரன்}.(42)

[8] கும்பகோணம் பதிப்பில், "காரியத்தையும் அகாரியத்தையும் அறிந்த வேலைக்காரர்களைக் கொண்டு காரியங்களைச் செய்து கொள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு நீ சிறந்த பணியாட்களை நியமிப்பாயாக. குறிப்பிட்ட பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், படாதிருந்தாலும் அந்தப் பணிகளை நிறைவேற்ற நீ அவர்களைப் பயன்படுத்துவாயாக" என்றிருக்கிறது.

[9] "அஃதாவது, அவர்கள் தங்கள் உணவை மட்டுமே பெற்றுக் கொண்டு மனநிறைவுடன் பணி செய்ய வேண்டும். அவர்களுடைய கூலி, அவர்கள் உண்பதற்குத் தேவையானதைவிட அதிகமாக இருக்கக் கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தேசத்திலுள்ள தொழிலாளிகளான எல்லாரும் காளை போலவும், கழுதை போலவும் (போஷிக்கப்பட்டால்) உன்னுடைய காரியங்களைச் செய்வார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாட்டுப்புறத்திலும், நகரத்திலும் வசிக்கும் உன்னதமானோர் அனைவரும் கால்நடைகளைப் போல வாழ்வாதாரங்களைப் பெறுவதை உறுதி செய்வது உன் பணியாகும்" என்றிருக்கிறது. மூலத்தில் "ஸர்வே ஜனபதாஸ்சைவ தவக் கர்மாணி பாண்டவ கோவத்ராஸபவச்சைவ குர்யுர்யே வ்யவஹாரிண" என்றிருக்கிறது.

[10] கும்பகோணம் பதிப்பில், "அறிஞனானவன் (தனக்கு) நன்மையை விரும்புகிறவர்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டும். உனக்கு அவர்கள் எப்பொழுதும் மலைகள் போல் ஆராயத்தகாதவர்களாயிருப்பார்கள்" என்றிருக்கிறது.

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்