Monday, August 05, 2013

அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172

Angaraparna and Arjuna | Adi Parva - Section 172 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : கங்கைக் கரைக்கு வந்த பாண்டவர்கள்; மனைவியருடன் நீராடிக் கொண்டிருந்த கந்தர்வன்; கந்தர்வனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான மோதல்; கந்தர்வனின் மனைவியுடைய வேண்டுதலாலும், யுதிஷ்டிரனின் ஆணையினாலும் ஏவிய ஆயுதத்தைத் திரும்பப் பெற்ற அர்ஜுனன்; நல்ல புரோஹிதரை அடையும்படி பாண்டவர்களை அறிவுறுத்திய கந்தர்வன்...

வைசம்பாயனர் சொன்னார், "வியாசர் சென்ற பிறகு, அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், வந்த பிராமணரை {வியாசரை} வழியனுப்பிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்கள் தாயைத் {குந்தியைத்} தங்களுக்கு முன்பு விட்டு (பாஞ்சாலம் நோக்கி) முன்னேறிச் சென்றனர்.(1) அந்த எதிரிகளை அழிப்பவர்கள், தங்கள் இலக்கை அடைய வடக்கு நோக்கி இரவும் பகலுமாகப் பயணித்தனர். புருவத்தில் பிறைக் குறித் தாங்கியிருக்கும் சிவனின் புனிதமான நகரத்தை அடையும்வரை பயணித்தனர்.(2) மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மைந்தர்கள், கங்கையின் கரையை வந்தடைந்தனர். பெரும் தேர் வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கையில் பந்தத்துடன் முன் நடந்து அவர்களுக்குப் பாதையைக் காட்டி, அவர்களைப் (காட்டு விலங்குகளிடம் இருந்து) பாதுகாத்துச் சென்றான்.(3) அப்போது, அந்தக் கங்கையின் நீரில் தனிமையான அந்தச் சூழ்நிலையில், செருக்குடன் கூடிய ஒரு கந்தர்வன் தனது மனைவியருடன் விளையாடிக் கொண்டிருந்தான்.(4) அந்த ஆற்றை அணுகும் பாண்டவர்களின் பாத அடியோசைகள் அந்தக் கந்தர்வ மன்னனுக்குக் கேட்டது. பாத அடியோசையைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன் மிகுந்த சினம் கொண்டு,(5) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களைக் கண்டான்.

அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் தாயாருடன் {குந்தியுடன்} வருவதைக் கண்டு அவர்களை {பாண்டவர்களை} அணுகித் தனது பயங்கரமான வில்லை வட்டமாக வளைத்து,(6) " மாலையும் இரவும் சந்திக்கும் சந்திப்பொழுது முழுவதும், முதல் நாற்பது வினாடிகளைத் தவிர்த்து, தங்கள் விருப்பத்திற்கேற்ற வகையில் எங்கும் செல்லக்கூடிய யக்ஷர்களும், கந்தர்வர்களும் மற்றும் ராட்சசர்களும் உலாவுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. மீத நேரமனைத்தும் மனிதன் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறது.(7,8) எனவே, அந்த நேரத்தில், பயனில் பேராசை கொண்ட மனிதர்கள் எங்கள் அருகில் வந்தால், நாங்கள் இருவரும் (யக்ஷ, கந்தர்வர்கள்) ராட்சசர்களும் அந்த முட்டாள்களைக் {மனிதர்களைக்} கொன்றுவிடுவோம்.(9) எனவே, இந்த நேரத்தில் மன்னர்களையே தலைமையாகக் கொண்டு குளங்களை அணுகினாலும் வேதங்களை அறிந்த மனிதர்கள் அவர்களை மெச்சுவதில்லை.(10) தொலைவில் நிற்பீராக. என் அருகே வராதீர்கள். நாங்கள் பாகீரதியின் நீரில் {கங்கையின்} குளித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறியவில்லையா?(11) சுயபலத்தில் நம்பிக்கையுள்ள நான் கந்தர்வனான அங்காரபர்ணன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் பெருமையும், செருக்கும் கொண்டவனும் குபேரனின் நண்பனும் ஆவேன்.(12) இஃது எனது புலனாசைகளைத் தணித்துக் கொள்ள நான் விளையாடும் எனது கானகமாகும். கங்கைக்கரையிலுள்ள இக்கானகம் அங்காரபர்ணம் என்ற எனது பெயர் கொண்டதாகும்.(13) இங்கே தேவர்களோ, கபாலிகர்களோ, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ கூட வரத் துணிவதில்லை. குபேரனின் கிரீடத்தில் உள்ள பிரகாசமான அணிகலனான என்னை அணுகுவதற்கு எப்படி நீங்கள் துணிந்தீர்கள்?" என்று கேட்டான் {அங்காரபர்ணன்}.(14)

கந்தர்வனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "மரமண்டையே {மடையனே} பகலாகட்டும், இரவாகட்டும், சந்திப் பொழுதாகட்டும், சமுத்திரத்திலிருந்தும், இமயத்தின் பகுதிகளிலிருந்தும், இந்த நதியிலிருந்தும் மற்றவர்களை யாரால் தடுக்க முடியும்?(15) ஓ விண்ணதிகாரியே, வயிறு காலியாக இருந்தாலும், நிறைந்திருந்தாலும், அஃது இரவானாலும் பகலானாலும், ஆறுகளில் முதன்மையான இந்தக் கங்கைக்கு வருவதற்கென்று குறிப்பிட்ட நேரமெல்லாம் கிடையாது.(16) அதன் காரணமாகப் பலம் வாய்ந்த நாங்கள், உன்னைத் தொந்தரவு செய்வதை மதிக்க மாட்டோம். தீயவனே, போரில் பலவீனமானவர்களே உன்னை வழிபடுவார்கள்.(17) இமயத்தின் பொன் முகடுகளிலிருந்து வெளிவரும் இந்தக் கங்கை, ஏழு நீரோடைகளாகப்[1] பிரிந்து சமுத்திரத்தின் நீரில் கலக்கிறாள்.(18) கங்கை, யமுனை, சரஸ்வதி, விதஸ்தை, சரயு, கோமதி மற்றும் கண்டகி ஆகிய இந்த ஏழு நீரோடைகளில் {ஆறுகளில்}(19) நீரெடுத்துக் குடிப்பவர்கள், தங்களது அனைத்துப் பாவங்களையும் துடைத்தெறிகிறார்கள்.

[1] கங்கையின் ஏழு பிரிவுகள் 1. வஸ்வோகஸாரை, 2.நளினீ, 3.பாவனீ, 4.ஸீதை, 5.சக்ஷுஸ், 6.சிந்து, 7.அளகநந்தை ஆகியனவாகும்.

ஓ கந்தர்வா, இந்தப் புனிதமான கங்கை, அளகநந்தை என்ற தேவலோகப் பகுதியிலிருந்து பாய்கிறது[2].(20) அது பித்ருகளின் உலகத்தில், பாவிகளால் கடக்க முடியாத வைதரணீ ஆகிறது என்று கிருஷ்ண துவைபாயனரே {வியாசரே} சொல்லியிருக்கிறார். இந்த நற்பேறளிக்கும் தேவலோக ஆறு {கங்கை}, ஒருவனை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காத்து அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியது.  அப்படியிருக்கும் போது எங்களைத் தடுக்க நீ ஏன் விரும்புகிறாய்? உனது இந்தச் செயல் நித்திய அறச்செயலுக்கு இசைவாயில்லை.(21,22) அனைத்து ஆபத்துகளிலிருந்தும் விடுதலை அடைய வந்திருக்கும் எங்களை யாரும் தடுக்க முடியாது. உனது வார்த்தைகளைப் புறக்கணித்துப் பாகீரதியின் {கங்கையின்} இந்தப் புனிதமான நீரைத் தொடாமல் இருப்போமா?" என்றான் {அர்ஜுனன்}.(23)

[2] கும்பகோணம் பதிப்பில் மேற்கண்ட 18 முதல் 20 வரையிலான சுலோகங்கள், "இமயமலையின் பொற்கொடுமுடியிலிருந்து புறப்பட்ட இந்தக் கங்கை ஏழு பிரிவுகளாக {மேற்கண்ட அடிக்குறிப்பு [1]ல் சொல்லப்பட்டுள்ளவாறு} சென்று சமுத்திரஜலத்தைச் சேர்ந்தது. கங்கை, யமுனை, ப்லக்ஷஜாதை, ஸரஸ்வதீ, ரதஸ்தை, ஸரயு, கோமதி கண்டகி இவற்றின் தீர்த்தத்தையும் அப்படியே (முன் சொன்ன) ஏழு நதிகளின் தீர்த்தத்தையும் பருகுபவர்களிடம் பாவங்கள் தங்குவதில்லை" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அங்காரபர்ணன் பெருஞ்சினம் கொண்டு, தனது வில்லை வட்டமாக வளைத்துக் கொடும்பாம்புகளைப் போன்ற அவனது அம்புகளைப் பாண்டவர்கள் மீது ஏவத் தொடங்கினான்.(24) அப்போது, பாண்டுவின் மைந்தனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு கையில் {தோல்} கவசத்துடனும், ஒரு கையில் விளக்கு பந்தத்துடனும் அந்தக் கணைகள் அனைத்தையும் விலக்கி அந்தக் கந்தர்வனிடம்,(25) "ஓ கந்தர்வா, ஆயுதங்களின் நிபணத்துவம் வாய்ந்தவர்களை அச்சுறுத்த எண்ணாதே, அப்படி நீ வீசும் ஆயுதங்கள் நீர்க்குமிழி போல மறைந்து போகும்.(26) ஓ கந்தர்வா, நீ மனிதர்களை விட {ஆற்றலில்} உயர்ந்தவன் என்று நான் கருதுகிறேன். எனவே தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு நான் போரிடுவேன். கபடப் போர் புரிய மாட்டேன்.(27) (நான் உன் மீது இப்போது ஏவப்போகும்) இந்த நெருப்பாலான ஆயுதத்தை, இந்திரனின் மரியாதைக்குரிய குருவான பிருஹஸ்பதி பரத்வாஜருக்குக் கொடுத்தார்,(28) அவரிடம் {பரத்வாஜரிடம்} இருந்து அதை அக்னிவேஸ்யர் {Agnivesya} அடைந்தார். அக்னிவேஸ்யரிடமிருந்தும், பிராமணர்களில் முதன்மையான எனது குரு துரோணர் அடைந்தார். அவர் {துரோணர்} இதை {நெருப்பாலான ஆயுதத்தை} எனக்குக் கொடுத்தார்" என்றான்.(29)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்}, தனது நெருப்பாலான ஆயுதத்தை அந்தக் கந்தர்வன் மீது ஏவினான். அவ்வாயுதம் அந்தக் கந்தர்வனின் தேரை ஒரு நொடிப்பொழுதில் எரித்தது.(30) அந்த ஆயுதத்தின் வல்லமையால் உணர்விழந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன், அந்த தேரிலிருந்து தலைகீழாக விழுந்தான்.(31) தனஞ்சயன் {அர்ஜுனன்}, மலர்மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனது தலைமுடியைப் பற்றி, உணர்விழந்து கிடந்த அந்தக் கந்தர்வனைத் தனது சகோதரர்களிடம் இழுத்துச் சென்றான்.(32) இதைக்கண்ட கந்தர்வனின் மனைவியான கும்பீனசி, தனது கணவனை {அங்காரபர்ணனைக்} காக்க விரும்பி, யுதிஷ்டிரனிடம் ஓடி, அவனின் {அங்காரபர்ணனின்} பாதுகாப்பை வேண்டினாள்.(33)

அந்தக் கந்தர்வி {கும்பீனசி}, "ஓ மேன்மைமிக்கவரே, உமது பாதுகாப்பை எனக்கு அருள்வீராக! எனது கணவரை விடுவிப்பீராக! ஓ தலைவா, கும்பீனசி என்ற பெயரைக் கொண்டவளும், இக்கந்தர்வரின் மனைவியுமான நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன்" என்று கேட்டாள்.(34)

(இப்படித் துயருற்ற) அவளைக் {கும்பீனசியை} கண்ட யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம், "ஓ எதிரிகளை அழிப்பவனே, ஓ குழந்தாய், வீரமற்றுப் பெண்ணின் பாதுகாப்பை அடைந்து, புகழை இழந்து, போரில் தோற்றவனை யார்தான் கொல்வார்கள்?" என்று கேட்டான்.(35)

அதற்கு அர்ஜுனன், "ஓ கந்தர்வா, உனது உயிரைப் பெற்றுக்கொண்டு செல்வாயாக. வருந்தாதே. குருக்களின் மன்னர் யுதிஷ்டிரன் உனக்குக் கருணை காட்டச் சொல்லி எனக்கு ஆணையிட்டிருக்கிறார்." என்றான்.(36)

அதற்கு அந்தக் கந்தர்வன் {அங்காரபர்ணன்}, "நான் உன்னால் வீழ்த்தப்பட்டேன். எனவே, நான் எனது அங்காரபர்ணன் (ஒளிரும் வாகனம் என்ற பொருள் கொண்ட) என்ற எனது பெயரைக் கைவிடுகிறேன். ஓ நண்பா, எனது பலம் ஒடுக்கப்பட்ட பிறகு, செருக்குடன் கூடிய பெயரை வைத்திருக்கக்கூடாது.(37) ஓ அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் உன்னை அடைய நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கந்தர்வர்கள் மட்டுமே அறிந்த மாய சக்திகளை (மாயத்தை உற்பத்தி செய்யும் நுணுக்கம்) நான் உனக்குக் கொடுக்க விரும்புகிறேன்.(38) தோற்றத்தில் வித்தியாசமான அற்புதமான எனது தேர் உனது நெருப்பாயுதத்தால் {ஆக்னேயாஸ்திரத்தால்} எரிக்கப்பட்டது. இதற்கு முன்பு எனது அழகான தேருக்காக அந்தப் பெயரால் அழைக்கப்பட்ட நான் {சித்திரரதன்}, இப்போது எரிந்த அந்தத் தேரின் பெயரையே கொள்ள வேண்டும். (39) மாயையை உற்பத்தி செய்யும் அறிவியலை முன்பு நான் எனது தவத் துறவுகளால் அடைந்தேன். அந்த அறிவியலை நான் எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு இன்று அளிக்கிறேன்.(40) ஒருவன் தனது எதிரியை பலத்தால் வென்ற பிறகு, அந்த எதிரி கேட்கும்போது அவனது உயிரைத் திருப்பித் தருபவன், என்ன நற்பேறுக்குத்தான் தகாதவன்?(41)

இந்த அறிவியலுக்குப் பெயர் சாக்ஷுஷி என்பதாகும். இது மனுவால் {Manu} சோமனுக்கும், சோமனால் விஸ்வாவசுக்கும், இறுதியாக விஸ்வாவசுவால் எனக்கும் உரைக்கப்பட்டது.(42) ஒரு சக்தியும் இல்லாத என்னிடம், எனது குரு {விஸ்வாவசு} மூலமாக வந்தடைந்த அந்த அறிவியல், என்னிடம் வந்ததால் கனியற்றிருக்கிறது. நான் அதன் மூலத்தையும், பரிமாற்றங்களையும் விவரித்தேன். இப்போது அதன் ஆற்றலைக் குறித்துக் கேட்பாயாக!(43) ஒருவன், (இதன் துணை கொண்டு) அவன் விரும்பியதைப் பார்க்கலாம். அதேபோல் விரும்பியவாறும் (பொதுவாகவும், குறிப்பாகவும்) பார்க்கலாம்.(44) ஒருவன், ஆறுமாதங்கள் ஒற்றைக் காலில் நின்றால் இந்த அறிவியலை அடையலாம். இருப்பினும் நான் உனக்கு இந்த அறிவியலை எந்தக் கடினமான நோன்பும் நோற்காமல் கொடுக்கிறேன்.(45) ஓ மன்னா, இந்த அறிவாலேயே {கந்தர்வர்களாகிய} நாங்கள் மனிதர்களை விட மேன்மையாக இருக்கிறோம். ஆன்மப் பார்வை கொண்டு எதையும் நாங்கள் பார்க்க முடிவதால் நாங்கள் தேவர்களுக்குச் சமமானவர்களாகவும் இருக்கிறோம்.(46)

ஓ மனிதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நான் உனக்கும் உனது சகோதரர்களுக்கும் கந்தர்வர்களின் உலகில் பிறந்த நூறு {100} குதிரைகளைக் கொடுக்க விரும்புகிறேன்.(47) தெய்வீக நிறத்துடன், மனோ வேகம் கொண்ட அக்குதிரைகள் தேவர்களையும் கந்தர்வர்களையும் சுமக்க நியமிக்கப்பட்டிருந்தன. அவை சதையற்று மெலிவாக இருந்தாலும் அவை களைப்படைவதில்லை, எக்காரணம் கொண்டும் துயரடைவதில்லை.(48) பழங்காலத்தில் விருத்திரனைக் கொல்வதற்காகவே வஜ்ராயுதமானது {இடியுடன் கூடிய மின்னலான இந்திரனின் ஆயுதமானது} தேவர்கள் தலைவனால்  உருவாக்கப்பட்டது. ஆனால், அஃது அவன் மீது ஏவப்பட்டபோது, விருத்திராசுரனின் தலைபட்டு அது நூறு துண்டுகளாக உடைந்தது.(49)

அந்தத் துண்டுகளைத் தேவர்கள் மரியாதையுடன் வணங்குகின்றனர். அவை மூவுலகத்திலும், வஜ்ராயுதத்தின் பகுதிகளாக அதன் புகழுக்காக அறியப்படுகிறது.(50) வேள்வித்தீயில் தெளிந்த நெய்யை விடும் பிராமணர்களின் கரங்களும், க்ஷத்திரியர்கள் போர் புரியும் தேர்களும், வைசியர் செய்யும் தானமும், சூத்திரர் செய்யும் தொண்டும் அந்த வஜ்ரத்தின் சிதறிய பாகங்களே.(51) எனவே, க்ஷத்திரியர்களுடைய தேரின் ஒரு பகுதியாகக் குதிரைகள் இருப்பதால், அவை கொல்லத்தக்கவையல்ல என்று நம்பப்படுகிறது. க்ஷத்திரியனின் தேரை அலங்கரிக்கும் குதிரை, வடவனின் வாரிசாகிறது.(52) கந்தர்வர்களின் பகுதியில் பிறந்த இக்குதிரைகள், அதன் முதலாளிகள் விரும்புவது போல எந்நிறத்தையும் எவ்வேகத்தையும் கொள்ளவல்லவையாகும். நான் கொடுக்கும் இந்த எனது குதிரைகள், உங்கள் விருப்பங்களை எப்போதும் நிறைவேற்றும்" என்றான் {அங்காரபர்ணன்}.(53)

கந்தர்வனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "ஓ கந்தர்வா, ஆபத்துக் காலத்தில் உனது உயிரை அடைந்ததால் நீ இந்த அறிவியலையும், குதிரைகளையும் கொடுப்பதாய் இருந்தால், நான் அவற்றைக் கொடையாகக் கொள்ள மாட்டேன்" என்றான்.(54)

அதற்கு அந்தக் கந்தர்வன், "ஒரு சிறப்பு வாய்ந்த மனிதரைச் சந்திப்பது எப்போதும் மனநிறைவையே உண்டாக்கும். அதுவும் தவிர்த்து நீ எனக்கு என் உயிரை அளித்திருக்கிறாய். உன்னால் மனநிறைவை அடைந்து, நான் இந்த அறிவியலை உனக்குக் கொடுக்கிறேன்.(55) எனினும் அக்கடமை அனைத்தும் ஒரு புறம் சார்ந்ததாக மட்டும் இருக்காது. ஓ பீபத்சு {அர்ஜுனா}, ஓ பாரதக் குலத்தின் காளையே, நான் உனது அற்புதமான தெய்வீக ஆயுதமான நெருப்பாயுதத்தை {அக்னேயாவை} உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன்" என்றான்.(56)

அர்ஜுனன், "நான் உனது குதிரைகளை எனது ஆயுதத்துக்கான பண்டமாற்றாகப் பெற்றுக் கொள்கிறேன். நமது நட்பு நிலைத்திருக்கட்டும். ஓ நண்பா, மனிதர்களாகிய நாங்கள் கந்தர்வர்கள் முன் அச்சத்துடன் நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சொல்வாயாக.(57) எதிரிகளைத் தண்டிப்பவர்களான நாங்கள் அறம் சார்ந்தவர்கள். வேதமறிந்தவர்கள். ஓ கந்தர்வா, இரவு நேரத்தில் பயணம் செய்யும் எங்களை நீங்கள் கண்டிக்கிறீர்கள்" என்று கேட்டான்.(58)

அதற்குக் கந்தர்வன், "மனைவிகளற்றவர்கள் நீங்கள் (கல்வி காலம் நிறைந்த பிறகும்), நீங்கள் எந்தக் குறிப்பிட்ட ஆசிரமத்தையும் (வாழ்க்கை முறையையும்) ஏற்றுக் கொள்ள வில்லை {பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு வாழ்க்கைமுறைகள்}. கடைசியாக, நீங்கள் பிராமணரை முன்கொண்டு நடக்கவில்லை. எனவே, பாண்டு மைந்தர்களே, நீங்கள் என்னால் கண்டிக்கப்பட்டீர்கள்.(59) யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், பிசாசங்களும், உரகங்களும், தானவர்களும் குரு குலத்தவரின் வரலாற்றை அறிந்து வைத்துள்ளனர். அதில் அறிவும் கொண்டுள்ளனர்.(60)

ஓ வீரர்களே, நாரதரிடமிருந்தும், மற்றத் தெய்வீக முனிவர்களிடமிருந்தும் உங்கள் மூதாதையர்களின் நற்செயல்களை நான் அறிந்து வைத்திருக்கிறேன்.(61) கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த உலகை நான் சுற்றி வரும்போது உனது குலத்தின் பேராற்றலைக் கண்டிருக்கிறேன்.(62) ஓ அர்ஜுனா, மூன்று உலகங்களில் கொண்டிருக்கும் ஆயுத அறிவுக்காவும், வேத அறிவுக்காகவும் புகழப்படும் பரத்வாஜரின் மகனான உனது குருவையும் {துரோணரையும்} நான் அறிவேன்.(63) ஓ குரு குலத்தின் புலியே, ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தனே, நான் தர்மன், வாயு, சக்ரன் {இந்திரன்}, அஸ்வினி இரட்டையர்கள், மற்றும் பாண்டுவாகிய குருகுலத்தை என்றும் நிலைக்க வைத்திருக்கும் ஆறு மூலங்களையும் அறிவேன். இவர்கள் உங்கள் குலத்தைத் தழைக்க வைக்கும் தேவர்களும் மனிதர்களும் ஆவர்.(64) நீங்கள் ஐந்து சகோதரர்களும், கல்வி கற்று, உயர்ந்த ஆன்மா கொண்டு, அனைத்து ஆயுதங்களிலும் முதன்மையடைந்த அறம்சார்ந்தவர்கள் என்பதையும்  நான் அறிவேன். உங்கள் நல்ல இதயங்களையும், களங்கமற்ற நடத்தைகளையும் அறிந்தே நான் உங்களைக் கண்டித்தேன்.(65,66)

ஓ குரு குலத்தவனே, பலம் நிறைந்த எந்த மனிதனும் தனது மனைவின் எதிரில் தவறாக நடத்தப்பட்டால் பொறுமையாக இருக்க மாட்டான்.(67) ஓ குந்தியின் மைந்தா {அர்ஜுனா}, குறிப்பாக எங்களில் ஒருவன் {கந்தர்வன்} இருளின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, கரத்தின் பலம் அதிகரிக்கும்போது, அதுவும் அவனது மனைவி அவனுடன் இருக்கும்போது பொறுமையாக இருக்க மாட்டான். ஆகவேதான் நான் கோபம் கொண்டேன்.(68) ஓ நோன்பு நோற்பவர்களில் சிறந்தவர்களே, இருப்பினும் நான் உங்களால் போரில் வீழ்த்தப்பட்டேன். நான் ஏன் இந்த இழிந்த நிலையை அடைந்தேன் என்பதைக் குறித்துக் கேட்பீராக.(69) வாழ்க்கை முறைகளில் பிரம்மச்சரியமே உயர்ந்தது. இப்போது நீங்கள் அந்த அந்த முறையிலேயே இருக்கிறீர்கள். அதனால்தான், ஓ பார்த்தா {அர்ஜுனா}, நான் போரில் உங்களால் வீழ்த்தப்பட்டேன்.(70)

ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, மணம்புரிந்த எந்த க்ஷத்திரியன் எங்களுடன் இரவில் போரிட்டாலும், அவன் உயிருடன் தப்பவே முடியாது.(71) ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, ஒரு பிராமணனால் தூய்மையாக்கப்பட்ட மணம் புரிந்த க்ஷத்திரியன், தனது மாநிலத்தின் புரோகிதரை நன்றாகக் கவனித்துக் கொள்பவன் இரவில் உலவுபவர்களைத் தனது பலத்தால் அழிப்பான்.(72) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, எனவே மனிதர்கள், எப்போதும் கல்விமான்களான புரோகிதர்களைத் தாங்கள் செய்ய விரும்பும் அனைத்து நற்காரியங்களிலும் நியமித்துக்கொள்ள வேண்டும். வேதங்களை அதன் ஆறு கிளைகளுடன் அறிந்து, சுத்தமாகவும், உண்மையாகவும், அறம்சார்ந்த ஆன்மாவைக் கொண்டு, சுயக்கட்டளை கொண்ட பிராமணன், ஒரு மன்னனுக்குப் புரோகிதனாக இருக்கத் தகுதி வாய்ந்தவன்.(73,74) நீதிகளின் விதிகளை அறிந்த பிராமணனைப் புரோகிதனாக அடைந்த ஓர் ஏகாதிபதி என்றும் வெற்றி வாகை சூடுபவனாக இருந்து, தனது வார்த்தைகளுக்குத் தலைவனாக இருந்து, நன்னடத்தையோடு இருந்து, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்.(75)

கிடைக்காதது கிடைக்க, தான் கொண்டதைக் காக்க ஒரு மன்னன் எப்போதும் தகுதி வாய்ந்த ஒரு புரோகிதரை அடைய வேண்டும்.(76) தனது வளமையை விரும்பும் ஒருவன், எப்போதும் புரோகிதரின் வழிநடத்துதலோடு செயல்பட்டால், அவன் கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் முழு உலகத்தையும் அடைவான்.(77) ஓ தபதியின் மைந்தனே {அர்ஜுனனே}, பிராமணன் இல்லாத ஒரு மன்னன், தனது ஆற்றலால் நிலத்தையோ, பிறப்பால் மட்டுமே புகழையோ அடைய முடியாது.(78) எனவே, ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பிராமணர்களை அதிகாரத்தில் வைத்திருக்கும் அரசாட்சி நீடித்திருக்கும் என்பதை அறிந்து கொள்வாயாக" என்றான் {சித்ரரதன்}.(79)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்