Friday, May 30, 2014

பாம்பை அடைந்த யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 178

Yudhishthira reached the snake! | Vana Parva - Section 178 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பீமனைப் பிடித்த பாம்பு தனது வரலாற்றைச் சொன்னது; தீச்சகுனங்களைக் கண்டு வருந்திய யுதிஷ்டிரன், பீமன் சென்ற பாதையைத் தொடர்ந்து சென்று அவன் பாம்பினால் பிடிக்கப்பட்டுக் கிடக்கும் இடத்தை அடைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "வலிமைமிக்கப் பீமசேனன், இப்படிப் பலமிக்கப் பாம்புக்கு அடங்கியதும், அந்தப் பாம்பின் பலத்தையும், அற்புதமான பராக்கிரமத்தையும் நினைத்து அதனிடம், "ஓ! பாம்பே, நீ யார் என்பதை எனக்குச் சொல்வதில் மகிழ்ச்சி கொள். ஓ! ஊர்வனவற்றில் முதன்மையானவனே என்னைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்? நான் பாண்டுவின் மகனான பீமசேனன். நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்துப் பிறந்தவன். பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்ட என்னை நீ எப்படி வீழ்த்தினாய்? என்னுடன் மோதிய எண்ணிலடங்கா சிங்கங்களும், புலிகளும், எருமைகளும், யானைகளும் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. ஓ! பாம்புகளில் சிறந்தவனே, பலமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும், நாகர்கள் எனது கரத்தின் சக்தி முன்னால் நிற்க முடியாதே. என்னதான் நான் முயன்றாலும், நீ என்னை விஞ்சுகிறாயே! நீ ஏதாவது மந்திரவித்தை கொண்டிருக்கிறாயா? அல்லது ஏதாவது வரம் பெற்றிருக்கிறாயா? ஓ! பாம்பே, உன்னால் பலம் நிறைந்த மனிதர்கள் கலங்கடிக்கப்படுகிறார்களே! எனவே, மனிதர்களின் பலம் நிலையற்றது என்பதில் நான் இப்போது நம்பிக்கை கொள்கிறேன்" என்றான் {பீமன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர்ந்த செயல்கள் புரிந்த வீரனான பீமன் இப்படிச் சொன்னதும், அந்தப் பாம்பு அவனைப் பிடித்து, அவனது உடலை முழுவதும் சுற்றிக் கொண்டது. இப்படி அவனை {பீமனை} அடக்கிய அந்தப் பலமிக்க நோக்கம் கொண்ட அது, அவனது {பீமனின்} பருத்த கரங்களை மட்டும் விடுவித்தது. பிறகு அந்தப் பாம்பானவன், "நற்பேறினாலேயே, தேவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று, பசியோடிருக்கும் எனக்கு, உன்னை உணவாக நிர்ணயித்திருக்கிறார்கள். உயிர் என்பது அனைத்து உயிருக்கும் விருப்பமானதாயிற்றே. நான் இந்தப் பாம்புருவை எப்படி அடைந்தேன் என்பதை உனக்குச் சொல்ல வேண்டும். ஓ! பக்திமான்களில் சிறந்தவனே, நான் {ஒரு} பெரும் முனிவரின் கோபத்தால் இந்த இழிந்த நிலைக்கு விழுந்தேன். இப்போது அந்தச் சாபத்திலிருந்து வெளியேறும்பொருட்டு நான் உனக்கு அது குறித்து அனைத்தையும் விவரிக்கிறேன்.

அரச முனியான நகுஷனைக் {நஹுஷனை} குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய் என்பதில் {எனக்குச்} சந்தேகமில்லை. அவன் *{நகுஷன்} ஆயுவின் மகனும், உனது மூதாதையர்களின் குலத்தைத் தழைக்க வைத்தவனுமாவான். நானே அவன் {அந்த நகுஷன் நானே}. அந்தணர்களை அவமதித்த எனக்கு, அகத்தியரின் சாபம் ஏறப்பட்டு, நான் இந்த நிலைக்கு வந்தேன். நீ எனக்கு மகன் வழி {agnate} உறவினனாவாய். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாய். நீ என்னால் கொல்லப்படத்தக்கவன் அல்ல. எனினும் நான் இன்று உன்னை விழுங்குவேன்! விதியின் குறுக்கீட்டைப் பார்! ஒரு நாளின் ஆறாவது பாகத்தில் எருமையோ யானையோ, எதுவாக இருந்தாலும் எனது அருகில் {பிடிக்குள்} வந்தால், ஓ! மனிதர்களில் சிறந்தவனே, {அதனால் என்னிடமிருந்து} தப்பிக்க முடியாது. ஓ! குருக்களில் சிறந்தவனே, தாழ்ந்த வகையைச் சேர்ந்த விலங்கால் நீ பிடிக்கப்படவில்லை. நானும் எனது பலத்தால் மட்டும் உன்னைப் பிடிக்கவில்லை. {பலவானையும் பிடிப்பது} அது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரமாகும்.


நான் சக்ரனின் {இந்திரனின்} அரண்மனைக்கு முன் இருந்த அரியாசனத்தில் இருந்து வேகமாக விழுந்து கொண்டிருந்தேன். அப்போது நான் அந்த வழிபடத்தகுந்த முனிவரிடம் (அகஸ்தியரிடம்) "இந்தச் சாபத்தில் இருந்து என்னை விடுவியும்" என்று கேட்டேன். இதனால், இரக்கத்தில் நிறைந்த அந்தச் சக்தி மிக்கவர் {அகஸ்தியர்} என்னிடம், "ஓ! மன்னா {நகுஷா}, சில காலம் கழித்து நீ விடுவிக்கப்படுவாய்" என்றார். பிறகு நான் பூமியில் (பாம்பாக) விழுந்தேன்; ஆனால் எனது (முந்தைய வாழ்வின்) ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. அது மிகவும் பழங்காலத்துச் சம்பவமாக இருந்தாலும், சொல்லப்பட்டது யாவையும் நான் இன்னும் ஞாபகப் படுத்துவேன். அந்த முனிவர் {அகஸ்தியர்} என்னிடம், "ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை குறித்து அறிந்த ஒருவன், உன்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்து உன்னை விடுவிப்பான்" என்றார். "மேலும், ஓ! மன்னா {நகுஷா}, உன்னிலும் பலமிக்கவர்களை நீ பிடித்தால், அவர்கள் உடனே தங்கள் பலத்தை இழப்பார்கள்" என்று என்னிடம் இரக்கம் கொண்டவர்கள் {அந்தணர்கள்} சொன்னார்கள். பிறகு அந்த அந்தணர்கள் மறைந்தார்கள். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இப்படியே நான் பாம்பானேன். நான் அதிகமான பாவச் செயல்களைச் செய்து, சுத்தமற்ற {இந்த} நரகத்தில் வாழ்ந்து, காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் {நகுஷன்}.

வலுத்தகரம் கொண்ட பீமசேனன் அந்தப் பாம்பிடம் {நகுஷனிடம்}, "ஓ! பலமிக்கப் பாம்பே, நான் கோபமடையவில்லை. என்னையும் நான் பழி சொல்லவில்லை. மகிழ்ச்சியையும் துயரத்தையும் குறித்து எண்ணினால், மனிதர்கள், அதைச் {மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ} சில பொழுது தங்கள் சக்தியால் கொண்டும் வருகிறார்கள், விலக்கவும் செய்கிறார்கள். சில பொழுது அது அவர்களால் முடிவதில்லை. எனவே, இதனால் ஒருவன் மற்றவன் மனதின் அமைதியைக் குலைக்கக்கூடாது. தன்முயற்சியால் எவன்தான் விதியை வெல்லமுடியும்? விதியே தலைமையானது என நான் கருதுகிறேன். தன்முயற்சியால் {சுயமுயற்சியால்} பயனேதும் இல்லை. விதியின் அடியால் அடிக்கப்பட்டு, எனது கரங்களில் பராக்கிரமம் இழந்து, உணரக்கூடிய காரணமேதுமில்லாமல் இன்று நான் விழுந்திருக்கும்  நிலையைப் பார். ஆனால் நான் இன்று கொல்லப்படப் போவதால் அதிகம் வருந்தவில்லை.

எனது சகோதரர்கள் நாடிழந்து கானகத்தில் இருக்கிறார்களே என்றே வருந்துகிறேன். யக்ஷர்களும், ராட்சசர்கள் நிறைந்த இந்த அடைய முடியாத இமயத்தில் என்னைத் தேடித் தடுமாறுவார்கள். நான் கொல்லப்பட்டது கேட்டு, (எனது சகோதரர்கள்) அனைத்து முயற்சிகளையும் கைவிடுவார்கள். மீண்டும் நாட்டை அடைய விரும்பி, எனது கடும் மொழிகளால் சத்தியத்தில் உறுதி கொண்ட அவர்களை இதுவரை நான் கட்டுப்படுத்தி வந்தேன். அல்லது, {அப்படி நான் நடந்து கொள்ளவில்லை என்றால்} தேவர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும் வெல்லப்பட முடியாதவனும் அனைத்துக் கலைகளையும் அறிந்தவனுமான புத்திகூர்மையுள்ள அர்ஜுனன் {நாட்டை இழந்த} துயரத்தால் பாதிக்கப்படமாட்டான். அந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், மிகுந்த பலசாலியுமானவன் {அர்ஜுனன்} தனியொருவனாகவே தேவர்களையும் அவர்கள் இடத்தில் இருந்து விரைவாக இழுத்துவிட வல்லவன். அப்படியிருக்க, அனைத்து மனிதர்களாலும் வெறுக்கப்பட்டு, அகங்காரமும், அறியாமையும் நிறைந்து ஏமாற்றுகரமான சூதாட்டம் விளையாடும் திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} குறித்து நான் என்ன சொல்ல?

மகன்களிடம் பாசமாக, பகைவர்களைக் காட்டிலும் அதிகமான மேன்மையை எங்களுக்கு எப்போதும் விரும்பும், எனது அப்பாவித் தாயை {குந்தியை} நினைத்து நான் வருந்துகிறேன். ஓ! பாம்பே, தலைவனற்ற அவள் {குந்தி} என் மீது கொண்டிருந்த நம்பிக்கை அனைத்தும் எனது அழிவினால் கனியற்றதாகும் {பலனற்றதாகும்}. எனது கரங்களின் சக்தியால் எப்போதும் பாதுகாக்கப்பட்டு, ஆண்மையைக் கொடையாகக் கொண்ட இரட்டையர்களான நகுலனும் சகாதேவனும் அவர்களது அண்ணனின் (என்னுடைய {பீமனுடைய}) அழிவால் மிகவும் உற்சாகம் குறைந்து, தங்கள் பராக்கிரமம் இழந்து, துயரால் பீடிக்கப்படுவார்கள். இதையே நான் நினைக்கிறேன் {நினைத்து வருந்துகிறேன்}" என்றான். இப்படி விருகோதரன் {பீமன்} மிகவும் புலம்பினான். பாம்பின் உடலால் சுற்றப்பட்ட அவனால் எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியவில்லை.

மறுபுறம், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பயங்கரமான தீச்சகுனங்களை {கண்டும்) எண்ணிப் பார்த்து மிகவும் அஞ்சினான். வானத்தின் புள்ளிகள் பற்றி எரிவதாலும், ஆசிரமத்திற்கு வலப்புறத்தில் நின்று பயங்கர நரிகள் அமங்களகரமாக ஊளையிட்டதாலும் அவன் {யுதிஷ்டிரன்} பீதியடைந்தான். ஒரு சிறகும், ஒரு கண்ணும், ஒரு காலுமுள்ள பிரகாசமில்லாத விச்சுளிப் பறவைகள் {vartikas - வார்த்திகப் பறவைகள்}, சூரியனுக்கு எதிரில் ரத்தத்தைக் கக்கி கோரமாகக் காட்சியளித்தன. காற்று வறண்டதாகவும், பல கற்களைச் சுமந்து வருவதாகவும் வேகமாக வீசியது. வலப்புறத்தில் இருந்த அனைத்து விலங்குகளும், பறவைகளும் கத்தின. அண்டங்காக்கைகள் {கருங்காக்கைகள்} பின்புறமிருந்து "போ! போ!" என்று கத்தின. அதே நேரத்தில் (யுதிஷ்டிரனின்) வலக்கரமும், மார்பும், இடது காலும் (தானாகவே) துடிக்க ஆரம்பித்தன. மேலும், தீமையைக் குறிக்கும்படி அவனது இடது கண் ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரிந்தது {துடித்தது}.

அதன் பேரில், ஓ! பாரதா {ஜனமேஜயா}, புத்திகூர்மையுள்ள நீதிமானான யுதிஷ்டிரன் ஏதோ (தவிர்க்க முடியாத) பேரிடர் சமீபிக்கிறது என்பதை உணர்ந்து, திரௌபதியிடம், "பீமன் எங்கே?" என்று கேட்டான். அதற்குப் பாஞ்சாலி {திரௌபதி}, விருகோதரன் {பீமன்} சென்று நெடுநேரம் ஆனதாகச் சொன்னாள். இதைக் கேட்ட அந்தப் பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} "நீ திரௌபதிக்குப் பாதுகாப்பாக இருப்பாயாக" என்று சொல்லி விட்டு தௌமியரோடு கிளம்பினான். கிளம்பும்போது நகுலனிடமும் சகாதேவனிடமும் அந்தணர்களைப் பாதுகாக்குமாறும் சொன்னான். ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய குந்தியின் மகனான அந்தத் தலைவன் {யுதிஷ்டிரன்}, பீமனின் காலடித் தடங்களைத் தொடர்ந்து சென்று, அந்தப் பெரும் காட்டில் பீமசேனனைத் தேடினான். கிழக்கு திசையை அடைந்து யானைக்கூட்டங்களின் தலைமை யானைகளையும் (அவை கொல்லப்பட்டிருப்பதையும்), பீமனால் (பீமனின் காலடித்தடங்களால்) பூமி குறிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். ஆயிரக்கணக்கான மான்களும், நூற்றுக்கணக்கான சிங்கங்களும் அந்தக் கானகத்தில் {வீழ்ந்து} கிடப்பதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது பாதையை உறுதி செய்தபடி சென்றான். வாயு வேகமாக மான்களைத் துரத்திச் சென்ற அந்த வீரனின் {பீமனின்} தொடையசைவில் ஏற்பட்ட காற்றால் விழுந்த மரங்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டான். {பீமனின்} பாதச்சுவடுகளால் வழிகாட்டப்பட்டு மேலும் முன்னேறி, வறண்ட, காற்று மிகுந்த, நீரில்லா உவர் நிலத்தை அடைந்து இலையில்லாத காய்கறிகள் {மரங்கள்} அடர்ந்து, முள் மரங்கள் நெருக்கமாக இருக்கும் அந்த இடத்தில் மொட்டை மரங்களும், சிறிய மரங்களும் நிறைந்திருந்தன. கற்களும், குச்சிகளும், புதர்களும் சிதறிக் கிடந்தன. அடைவதற்கு அரிதான மேடுபள்ளங்கள் நிறைந்த ஆபத்தான அந்த மலையின் குகையில், தனது தம்பி {பீமன்}, பாம்புகளில் முதன்மையானவனால் {பெரும்பாம்பால்} பிடிக்கப்பட்டு அசைவற்றிருப்பதைக் கண்டான் {யுதிஷ்டிரன்}.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்