The words of Karna! | Virata Parva - Section 48 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 23)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : தான் அர்ஜுனனை அடிக்கப் போகும் விதத்தைக் கர்ணன் விவரிப்பது...
கர்ணன் {துரியோதனனிடம்} சொன்னான், “இந்த அருளப்பட்டவர்கள், அச்சத்தில் இருப்பவர்களாக, துயரத்தில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியாதவர்களாக, போர் செய்ய விருப்பமில்லாதவர்களாக இருப்பதைக் காண்கிறேன். வருவது மத்ஸ்யர்களின் மன்னனாக {விராடனாக} இருந்தாலும், பீபத்சுவாக {அர்ஜுனனாக} இருந்தாலும், பெருகிவரும் கடலைத் தடுக்கும் கரைகளைப் போல நான் அவனைத் தடுப்பேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் இந்த நேரான பறக்கும் கணைகள், சீறிச் செல்லும் பாம்புகளைப் போல இலக்குத் தப்பாதவையாகும். எனது இலகுவான கரங்களால் அடிக்கப்படும் இந்தக் கூரிய முனைகளும், தங்க இறகுகளும் கொண்ட கணைகள், வெட்டுக்கிளிகளால் மூடப்படும் மரம் போலப் பார்த்தனை {அர்ஜுனனை} எல்லாப்புறங்களிலும் மூடும். இந்த இறகு படைத்த கணைகளால் அழுத்தப்படும் இந்த வில்லின் நாண், தோலாலான எனது கையுறைகளால் ஒலி எழுப்பும். அதனால் கேட்கப்படும் ஒலி இரு முரசுகளின் ஒலியை ஒத்திருக்கும்.
(கடந்த) பதிமூன்று {13} ஆண்டுகளாகத் தவ நோன்புகளில் ஈடுபட்ட பீபத்சுவால் {அர்ஜுனனால்}, இந்த மோதலில் என்னை மென்மையாகவே தாக்க முடியும். நற்குணங்கள் கொண்ட அந்தணனாக மாறியிருக்கும் அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, என்னால் அடிக்கப்படும் ஆயிரம் கணைகளை அமைதியாகத் தாங்கிக் கொள்வதற்குத் தகுந்த மனிதனாக மாறியிருக்கிறான். உண்மையில், இந்த வலிமைமிக்க வில்லாளி மூவுலகங்களிலும் கொண்டாடப்படுகிறான். மனிதர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனுக்கு, நானும், எந்த வகையிலும் சளைத்தவனல்ல. என்னால் அடிக்கப்படும் கழுகின் இறகுகளைக் கொண்ட எனது தங்கக் கணைகள் மின்மினி பூச்சிகள் மொய்ப்பதைப் போல இன்று வானத்தில் தெரியட்டும்.
போர்க்களத்தில் அர்ஜுனனைக் கொன்று, திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} நான் வாக்குறுதி அளித்திருந்ததும், திரும்பச் செலுத்துவதற்குக் கடினமானதுமான எனது கடனை இன்று செலுத்துவேன். எனது வில்லில் இருந்து அடிக்கப்படும் நேரான கணைகளின் பற்களுக்கிடையில் நிற்பதற்குத் தேவர்களிலோ அசுரர்களிலோ யாரும் இல்லையெனும்போது, வேறு எந்த மனிதன் இருக்க முடியும்? இறகு படைத்து, அழுந்திய கணுக்களுடன் பறக்கும் எனது கணைகள் மின்மினிப் பூச்சிகளாக வானத்தில் தெரியட்டும். இந்திரனின் வஜ்ரத்தைப் போல அவன் கடினமாக இருந்தாலும், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} சக்தியை அவன் {அர்ஜுனன்} பெற்றிருந்தாலும், எரிகொள்ளிகளைக் கொண்டு ஒரு யானையைத் துன்புறுத்துவதைப் போல, நான் இன்று நிச்சயம் பார்த்தனை {அர்ஜுனனை} அடிப்பேன்.
ஒரு பாம்பைக் கருடன் பிடிப்பது போல, பலமிக்கத் தேர்வீரனும், துணிவுமிக்கவனும், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவனும், {என்னைத்} தடுத்து நிறுத்த இயலாதவனுமான அந்தப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் பிடிப்பேன். கட்டுக்கடங்காத நெருப்பு போல, வாட்கள், பராசங்கள் மற்றும் கணைகள் என்ற எரிபொருளால் சுடர்விட்டெரிந்து எதிரிகளை எரிக்கும் அந்தப் பாண்டவ நெருப்பு {அர்ஜுனன்}, (நான் வழிநடத்தும்) எண்ணிலடங்கா தேர்களை இடியாகவும், எனது குதிரைகளின் வேகத்தைக் காற்றாகவும் கொண்டிருக்கும் வலிமைமிக்க மேகம் போன்ற நான் அடிக்கும் தொடர்ச்சியான கணை மழையால் அணைக்கப்படும். பாம்புகள் எறும்புப் புற்றைத் துளைப்பதைப் போல, எனது வில்லில் இருந்து புறப்படும் நஞ்சுமிக்கப் பாம்புகளான எனது கணைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} உடலைத் துளைக்கும். கோங்கு மலர்களால் { Karnikara flowers} மூடப்படும் மலையைப் போல, நன்கு கடினமாக்கப்பட்டதும், நேரானதும், தங்க இறகுகள் கொண்டதும், பெரும் சக்தி கொண்டதுமான எனது கணைகளால் குந்தியின் மகன் {அர்ஜுனன்} துளைக்கப்படுவதை நீ இன்று பார்ப்பாய்.
துறவியரில் சிறந்தவரான ஜமதக்னி மகனிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த நான், அவற்றின் சக்தியை நம்பி, தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது எறிவேலால் அடிக்கப்பட்டு, அவனது {அர்ஜுனனது} தேரின் கொடியின் மேல் அமர்ந்திருக்கும் குரங்கு, இன்று பயங்கரமாகக் கதறிக் கொண்டு தரையில் விழும். எதிரியின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தில் அமர்ந்திருக்கும் (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) உயிரினங்களின் கதறல்கள் இன்று விண்ணை நிறைக்கும். அவை {அந்த உயிரினங்கள்} அனைத்து திக்குகளுக்கும் பறந்து போகும். அர்ஜுனனை அவனது தேரில் இருந்து கீழே வீசி, துரியோதனனின் இதயத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் கணையின் வேரை நான் இன்று பிடுங்குவேன். தேர் உடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, வீரம் குன்றி, பாம்பு போலப் பெருமூச்சு விடும் பார்த்தனை {அர்ஜுனனை}, இன்று கௌரவர்கள் காண்பார்கள். தங்கள் விருப்பப்படி செல்வங்களான பசுக்களைக் கௌரவர்கள் எடுத்துச் செல்லட்டும். ஆனால் அவர்கள் விரும்பினால், தங்கள் தேர்களில் இருந்து கொண்டு, நான் செய்யும் போரைச் சாட்சியாகக் காணட்டும்” என்றான் {கர்ணன்}
![]() |
![]() |
![]() |
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.