Monday, November 14, 2016

உறக்கமற்ற கிருஷ்ணன்! - துரோண பர்வம் பகுதி – 182

The sleepless Krishna! | Drona-Parva-Section-182 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 30)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் மீது அந்த மரண ஈட்டியை கர்ணன் ஏன் முன்பே ஏவவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; கிருஷ்ணனின் கொள்கை உறுதியே அதற்குக் காரணம் எனச் சொன்ன சஞ்சயன்; சிறு எதிரிக்கு எதிராக அந்த ஈட்டியைப் பயன்படுத்திய கர்ணன் மற்றும் துரியோதனனின் மடமையால் துயருற்ற திருதராஷ்டிரன்; மரண ஈட்டியை ஏவ கௌரவர்கள் இரவில் தீர்மானித்திருந்தாலும், காலையில் அதை மறந்தனர் என்பதைச் சொன்ன சஞ்சயன்; இதே கேள்வியைக் கிருஷ்ணனிடம் கேட்ட சாத்யகி; கிருஷ்ணனின் பதில்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நிச்சயம் ஒருவரைக் கொல்லவல்ல ஓர் ஈட்டியை அந்தச் சூதன் மகன் {கர்ணன்} கொண்டிருந்தபோது, பிறர் அனைவரையும் விட்டுவிட்டு, பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏன் அவன் அஃதை ஏவவில்லை?(1) அந்த ஈட்டியால் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்ட பிறகு, சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். அப்படியிருக்கையில், பல்குனன் {அர்ஜுனன்} இறந்த பிறகு, ஏன் வெற்றி நமதாகாது?(2) போரிட அழைக்கப்பட்டால், அந்த அறைகூவலைத் தான் ஒருபோதும் மறுப்பதில்லை என்ற அளவுக்கு அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறான். எனவே, அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, பல்குனனை நிச்சயம் போருக்கு அழைத்திருக்க வேண்டும்.(3)


ஓ! சஞ்சயா, விருஷன் {கர்ணன்}, அந்தப் பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} தனிப்போரில் ஈடுபட்டாலும், சக்ரனால் {இந்திரனால்} தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால்} அவனை {அர்ஜுனனை} ஏன் கொல்லவில்லை என்பதை எனக்குச் சொல்வயாக.(4) என் மகன் {துரியோதனன்}, நுண்ணறிவு மற்றும் ஆலோசகர்கள் ஆகிய இரண்டும் அற்றவன் என்பதில் ஐயமில்லை. அந்தப் பொல்லாத பாவி {துரியோதனன்}, தொடர்ச்சியாக எதிரியால் கலங்கடிக்கப்படுகிறான். அப்படியிருக்கையில், தன் எதிரிகளை அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(5) உண்மையில், அத்தகு வலிமைகொண்டதும், வெற்றியைத் தரவல்லதுமான அந்த ஈட்டி, ஐயோ, கடோத்கசன் மூலம் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பலனற்றதாகச் செய்யப்பட்டதே.(6) உண்மையில், கை முடமான ஒரு முடவனின் கரத்தில் உள்ள கனி {பழம்} பலமிக்கவனால் பறிக்கப்படுவதைப் போலவே, கர்ணனின் கரத்தில் இருந்து அது {அந்த ஈட்டி} பறிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே அந்த மரண ஈட்டி {சக்தி ஆயுதம்} கடோத்கசனால் கனியற்றதாகச் செய்யப்பட்டது.(7)

பன்றிக்கும் நாய்க்கும் இடையிலான சண்டையில் அவ்விரண்டும் இறந்து போன பிறகு, வேடனே ஆதாயத்தை அடைவதைப் போல, ஓ! கற்றவனே {சஞ்சயா}, கர்ணனுக்கும், ஹிடிம்பையின் மகனுக்கும் {கடோத்கசனுக்கும்} இடையிலான போரில் ஆதாயமடைந்தத்து வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று நான் நினைக்கிறேன்.(8) போரில் கடோத்கசன் கர்ணனைக் கொன்றால், அது பாண்டவர்களுக்குப் பெரும் ஆதாயத்தைக் கொடுக்கும். மறுபுறம், கர்ணன் கடோத்கசனைக் கொன்றால், கர்ணனின் ஈட்டி {சக்தி ஆயுதம்} இழக்கப்படுவதன் விளைவால் அதுவும் அவர்களுக்கே பெரும் ஆதாயத்தையே கொடுக்கும். பெரும் ஞானம் கொண்டவனும், மனிதர்களில் சிங்கமுமான அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் நன்மைக்கு ஏற்புடையதைச் செய்ய இவ்வழியில் சிந்தித்து, போரில் கர்ணனால் கடோத்கசன் கொல்லப்படும்படி செய்தான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(9,10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “கர்ணன் அடைய விரும்பிய சாதனையை அறிந்து கொண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான கடோத்கசனை அழைத்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {அவனைக்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடச் செய்து, பின்னவனின் {கர்ணனின்} மரண ஈட்டியைக் கனியற்றதாகச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவும் உமது தீய கொள்கையால் விளைந்தனவே.(11,12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, கிருஷ்ணன், கர்ணனின் கரங்களில் இருந்து வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், நாம் நிச்சயம் வெற்றியை அடைந்திருப்போம்.(13)

உண்மையில், ஓ! திருதராஷ்டிரரே, யோகியரின் தலைவனான அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பார்த்தனை {அர்ஜுனனைக்} காக்காதிருந்தால், தன் குதிரைகள், கொடிமரம், தேர் ஆகியவற்றோடு கூடிய அவன் {அர்ஜுனன்} போரில் அழிவை அடைந்திருப்பான்.(14) பல்வேறு வழிகளில் காக்கப்பட்டு, கிருஷ்ணனின் நல்ல துணையுடன் கூடிய அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளை அணுகி அவர்களை வென்று வருகிறான்.(15) உண்மையில், கிருஷ்ணனே பார்த்தனை {அர்ஜுனனை} அந்த மரண ஈட்டியில் இருந்து பாதுகாத்தான், இல்லையெனில், மரத்தை அழிக்கும் மின்னலை {இடியைப்} போல அவ்வாயுதம் {அந்த சக்தி ஆயுதம்} குந்தியின் மகனை {அர்ஜுனனை} அழித்திருக்கும்” {என்றான் சஞ்சயன்}.(16)

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “என் மகன் {துரியோதனன்}, சச்சரவில் விருப்பம் கொண்டவனாவான். அவனது ஆலோசகர்கள், மூடர்களாகவே இருக்கிறார்கள். அவனது {துரியோதனனது} ஞானமும் வீணானதாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, அர்ஜுனனின் நிச்சய மரணத்திற்கான இந்த உறுதியான வழிமுறைகள் கலங்கடிக்கப்பட்டிருக்கின்றன.(17) ஓ! சூதா {சஞ்சயா}, துரியோதனனோ, ஆயுதம் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான கர்ணனோ, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது அந்த மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தை} ஏன் வீசவில்லை?(18) ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பெரும் ஞானம் கொண்ட நீயும் இந்தப் பெரும்பொருளை {சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்துதல் என்ற நோக்கத்தைக்} கர்ணனுக்கு நினைவூட்டாமல் ஏன் மறந்தாய்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(19)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒவ்வொரு இரவும், துரியோதனன், சகுனி, நான் மற்றும் துச்சாசனன் ஆகியோர் {ஆலோசனையின் போது} கவனமாகக் கருத்தில் கொள்ளும் பொருளாக அதுவே {அந்த ஈட்டியே} இருந்தது.(20) (நாங்கள் கர்ணனிடம்), “ஓ! கர்ணா, பிற போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டுத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக. பிறகு நாம் பாண்டுக்களையும், பாஞ்சாலர்களையும் நம் அடிமைகளாகக் கொள்ளும் தலைவர்களாவோம்.(21) அல்லது, பார்த்தன் {அர்ஜுனன்} வீழ்ந்த பிறகு, விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} பாண்டு மகன்களில் ஒருவரை (அவனுடைய {அர்ஜுனனுடைய} இடத்தில் நிறுத்திப் போரிட) நியமித்தானென்றால், அந்தக் கிருஷ்ணனே கொல்லப்பட வேண்டும்.(22)

கிருஷ்ணனே பாண்டவர்களின் ஆணிவேராவான். பார்த்தன் அதனில் {அந்த ஆணி வேரில்} வளர்ந்த மரம் போன்றவனாவான். பிருதையின் {குந்தியின்} பிற மகன்கள் அதன் கிளைகளாவர், அதே வேளையில் பாஞ்சாலர்கள் அதன் இலைகள் என்று அழைக்கப்படலாம்.(23) பாண்டவர்கள் கிருஷ்ணனையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளனர்; கிருஷ்ணனையே தங்கள் வலிமையாகவும், கிருஷ்ணனையே தங்கள் தலைவனாகவும் அவர்கள் கொண்டுள்ளனர். உண்மையில், நட்சத்திரக்கூட்டங்களுக்கு ஒரு சந்திரனைப் போல, கிருஷ்ணனே அவர்களது மைய ஆதாரமாக இருக்கிறான். எனவே, ஓ! சூதன் மகனே {கர்ணா}, இலைகள், கிளைகள், மரம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, எங்கும், எக்காலத்திலும் கிருஷ்ணனையே பாண்டவர்களின் ஆணிவேர் என்று அறிந்து கொள்வாயாக” என்று {கர்ணனிடம் நாங்கள்} சொன்னோம்.(25)

உண்மையில், கர்ணன், யாதவர்களை மகிழ்விக்கும் அந்தத் தசார்ஹ குலத்தோனை {கிருஷ்ணனைக்} கொன்றிருந்தால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மொத்த உலகமும் உமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.(26) உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாதவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மகிழ்விக்கும் அந்த ஒப்பற்றவன் {கிருஷ்ணன்}, உயிரை இழந்து பூமியில் கிடக்கும்படி செய்யப்பட்டால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலைகள், கடல்கள் காடுகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த உலகமும் உமது மேலாதிக்கத்தைக் கொண்டதாக நிச்சயம் ஆகியிருக்கும்.(27) தேவர்களின் தலைவனும், அளவிலா சக்தி கொண்டவனுமான அந்த ரிஷிகேசனை {கிருஷ்ணனைக்} குறித்த இத்தகு தீர்மானத்துடனேயே நாங்கள் ஒவ்வொரு காலையிலும் எழுந்தோம். எனினும், போரின் போது நாங்கள் எங்கள் தீர்மானத்தை மறந்தோம்.(28)

கேசவனே {கிருஷ்ணனே} குந்தியின் மகனான அர்ஜுனனை எப்போதும் பாதுகாக்கிறான். அவன் {கிருஷ்ணன்} அர்ஜுனனைப் போரில் ஒரு போதும் சூதன் மகன் {கர்ணன்} முன்பு நிறுத்தவில்லை [1].(29) உண்மையில், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அச்யுதன் {கிருஷ்ணன்}, நம்மைக் கொண்டே நமது மரண ஈட்டியை எவ்வாறு கனியற்றதாக்குவது என்று சிந்தித்து, பிற முதன்மையான தேர்வீரர்களையே கர்ணனுக்கு முன்பாக நிறுத்தினான் [2].(30) மேலும், உயர் ஆன்ம கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து {அர்ஜுனனை} இவ்வகையில் காக்கும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த முதன்மையானவன் {கிருஷ்ணன்} தன்னைத் தானே ஏன் காத்துக் கொள்ள மாட்டான்?(31) நன்றாகச் சிந்தித்தால், கையில் சக்கரம் தாங்கிய வீரனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வெல்ல இயன்ற எவனும் மூவுலகிலும் இல்லை என்பதையே நான் காண்கிறேன்”.(32)

[1], [2] துரோண பர்வம் பகுதி 144க்கு இக்கருத்து முரணாக உள்ளது. அர்ஜுனனும் கர்ணனும் அப்போது மோதிக் கொண்டனர். அப்போது அர்ஜுனனின் கணையில் இருந்து அஸ்வத்தாமனே கர்ணனை காத்தான். அதைச் சொன்னதே சஞ்சயன்தான். அப்போது ஜெயத்ரதனைக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு அர்ஜுனன் சென்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் தானாக முன் வந்து கர்ணன் முன்பு அர்ஜுனனை நிறுத்தவில்லை என்பது உண்மையே. கடோத்கசனின் வதத்தை நிறைவேற்றும் வரையில் கர்ணன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கிருஷ்ணன் கருதியிருக்கலாம் என்ற கோணமும் இதில் மறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தேர்வீரர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாதவனுமான சாத்யகி, பெரும் தேர்வீரனான கர்ணனைக் குறித்து, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், “ஓ! ஜனார்த்தனரே {கிருஷ்ணரே}, அளவில்லா சக்தி கொண்ட அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைப்} பல்குனர் {அர்ஜுனர்} மீது ஏவ வேண்டும் என்பதே கர்ணனின் உறுதியான தீர்மானமாகும். எனினும், அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, அஃதை ஏன் அவர் {அர்ஜுனர்} மீது ஏவவில்லை” என்று கேட்டான்.(34)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் - சாத்யகியிடம்}, “துச்சாசனன், கர்ணன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அவர்களின் தலைமையில் நின்ற துரியோதனன் ஆகியோர் அடிக்கடி (இதைக் குறித்துக் கர்ணனிடம் பேசி),(35) “ஓ! கர்ணா, ஓ! பெரும் வில்லாளியே, ஓ! போரில் அளவிலா ஆற்றலைக் கொண்டவனே, ஓ! வெற்றியாளர்கள் அனைவரிலும் முதன்மையானவனே {கர்ணனே}, பெரும் தேர்வீரனான குந்தியின் மகன் பார்த்தன், அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்} மீதன்றி வேறு எவர் மீதும் இந்த ஈட்டி ஏவப்படக்கூடாது. தேவர்களுக்கு மத்தியில் வாசவனை {இந்திரனைப்} போல அவனே அவர்களில் {பாண்டவர்களில்} மிகவும் கொண்டாடப்படுபவன் ஆவான்.(36,37) அவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுவிட்டால், சிருஞ்சயர்களுடன் கூடிய பிற பாண்டவர்கள் அனைவரும் நெருப்பற்ற தேவர்களைப் போல[3] உற்சாகமற்றவர்களாவார்கள்” என்றனர்.(38) “அப்படியே ஆகட்டும்” என்று அஃதை ஏற்றான் கர்ணன். ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, காண்டீவதாரியை {அர்ஜுனனைக்} கொல்வதே கர்ணனின் இதயத்தில் எப்போதும் இருந்தது.(39) எனினும் நான், ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, எப்போதும் ராதையின் மகனை {கர்ணனை} மலைக்கச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே அவன் {கர்ணன்}, வெண்குதிரைகள் கொண்ட பாண்டு மகனின் {அர்ஜுனனின்} மீது அந்த ஈட்டியை வீசவில்லை.(40)

[3] “நெருப்பே தேவர்களின் வாயாகும். நெருப்பில்லாத தேவர்கள் வாயற்றவர்களாக ஆவார்கள். இப்படியே நீலகண்டர் விளக்குகிறார்” என இங்கே கங்குலி குறிப்பிடுகிறார்.

ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {சாத்யகி}, பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்திற்கு ஏதுவான வழிமுறைகளைக் கலங்கடிக்காதவரை {என் விழிகளில்} உறக்கத்தையோ, என் இதயத்தில் மகிழ்ச்சியையோ நான் கொள்ளவில்லை.(41) எனவே, கடோத்கசனின் மூலம் அந்த ஈட்டி பயனற்றதானதைக் கண்ட பிறகே, ஓ! சிநிக்களில் காளையே {சாத்யகி}, மரணத்தின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து தனஞ்சயன் {அர்ஜுனன்} இன்று மீட்கப்பட்டதாக நான் கருதுகிறேன்.(42) போரில் பீபத்சுவுடைய {அர்ஜுனனுடைய} பாதுகாப்பின் அளவுக்கு என் தந்தை, என் தாய், நீங்கள் {யாதவர்கள்}, என் சகோதரர்கள் ஆகியோரையும், ஏன் என் உயிரையே கூடத் தகுந்ததாக நான் கருதவில்லை.(43)

மூவுலகங்களின் அரசுரிமையை விட மதிப்புமிக்க ஏதாவது இருந்தாலும் கூட, ஓ! சாத்வதா {சாத்யகி}, (என்னோடு அதைப் பகிர்ந்து கொள்ள) பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} இல்லாமல் அதை நான் (அனுபவிக்க) விரும்பவில்லை.(44) எனவே, மரணத்தில் இருந்து மீண்டவனைப் போலத் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்டு, ஓ! யுயுதானா {சாத்யகி}, இந்த மகிழ்ச்சிப் போக்கு எனதானது {இப்படி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறேன்}.(45) இதற்காகவே கர்ணனோடு போரிட நான் அந்த ராட்சசனை {கடோத்கசனை} அனுப்பினேன். இரவில் கர்ணனோடு போரிட்டு தாக்குப்பிடிக்கவல்லவன் {கடோத்கசனைத் தவிர வேறு} எவனும் இருக்கவில்லை” என்றான் {கிருஷ்ணன்}.(46)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தனஞ்சயனின் {அர்ஜுனனின்} நன்மையிலும், அவனுக்கு ஏற்புடையதிலும் எப்போதும் அர்ப்பணிப்புள்ள அந்தத் தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்தச் சந்தர்ப்பத்தில் சாத்யகியிடம் இப்படியே பேசினான்” {என்றான் சஞ்சயன்}.(47)
----------------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி 182-ல் உள்ள மொத்த சுலோகங்கள்:  47


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்