Thursday, August 31, 2017

நமுசியின் தலையைக் கொய்த இந்திரன்! - சல்லிய பர்வம் பகுதி – 43

Indra severed Namuchi's head! | Shalya-Parva-Section-43 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 12)


பதிவின் சுருக்கம் : தவத்தினால் சரஸ்வதியைத் தூய்மைப்படுத்திய தவசிகள்; அங்கே வேள்வி செய்து பிரம்மஹத்தியைப் போக்கிக் கொண்ட இந்திரன்; அங்கிருந்து சோமதீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பெரும் அரச மரத்தைக் கொண்டிருந்த சோம தீர்த்தம்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நுண்ணறிவு கொண்ட விஷ்வாமித்திரரால் கோபத்தில் சபிக்கப்பட்ட சரஸ்வதி, அந்த மங்கலமான சிறந்த தீர்த்தத்தின் {வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்தின்}, நீரோட்டத்தில் இரத்தத்தைச் சுமந்தபடி பாய்ந்தாள்.(1) பிறகு, ஓ! மன்னா!, ஓ பாரதா {ஜனமேஜயா}, ராட்சசர்கள் பலர் அங்கே வந்து, அங்கே பாய்ந்து கொண்டிருந்த குருதியைக் குடித்து, அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) அவர்கள், அந்தக் குருதியால் நிறைவடைந்து, உற்சாகத்தால் நிறைந்து, எந்த வகைக் கவலையுமில்லாமல், (புண்ணியத்தால்) சொர்க்கத்தை அடைந்த மனிதர்களைப் போல, அங்கே ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தனர்.(3) சில காலம் கழிந்ததும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட சில முனிவர்கள், சரஸ்வதியின் தீர்த்தங்களுக்குப் பயணிக்கும்போது அங்கேயும் {அந்த வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திற்கும்} வந்தனர்.(4) அந்த முனிவர்களில் முதன்மையானவர்கள், அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, மேலும் புண்ணியத்தை அடைய விரும்பினர்.(5)


இறுதியாக, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கல்விமான்கள் இரத்த ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்திற்கும் {வசிஷ்டாபவாஹத்திற்கும்} வந்தனர். உயர்ந்த அருளைக் கொண்ட அவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அச்சந்தரும் அந்தத் தீர்த்தத்திற்கு வந்து சேர்ந்து,(6) இரத்தத்துடன் கலந்திருக்கும் சரஸ்வதியின் நீரையும், அதை எண்ணற்ற ராட்சசர்கள் குடித்துக் கொண்டிருப்பதையும் கண்டனர்.(7) ஓ! மன்னா, கடும் நோன்புகளைக் கொண்ட அந்தத் தவசிகள் அந்த ராட்சசர்களைக் கண்டு, சரஸ்வதியை அந்த அவல நிலையில் இருந்து மீட்கப் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(8) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்த அருளாளர்கள், அங்கே வந்து, அந்த நதிகளில் முதன்மையானவளை {சரஸ்வதியை} இருப்புக்கு அழைத்து, அவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(9) "ஓ! மங்கலமான மங்கையே {கல்யாணி}, உன்னில் இருக்கும் இந்தத் தடாகம் ஏன் இவ்வாறு பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வாயாக. அதைக் கேட்டு, (அத்தடாகத்தை முறையான நிலைக்கு மீட்க) நாங்கள் முயற்சி செய்வோம்" {என்றனர்}.(10)

இவ்வாறு கேட்கப்பட்ட சரஸ்வதி, பேசும்போது நடுங்கிக் கொண்டே, நேர்ந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள். துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அவளைக் கண்ட அந்தத் தவசிகள், அவளிடம்,(11) "நாங்கள் காரணத்தைக் கேட்டுவிட்டோம். ஓ! பாவமற்ற மங்கையே, நீ பெற்ற சாபத்தைக் குறித்தும் கேட்டோம். நாங்கள் அனைவரும் இனி முயற்சி செய்வோம்" என்றனர்.(12) அந்த ஆறுகளில் முதன்மையானவளிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அவர்கள், அவர்களுக்குள் கலந்தாலோசித்தபடி, "நாம் அனைவரும் சேர்ந்து சரஸ்வதியை அவளது சாபத்திலிருந்து விடுவிப்போமாக" என்றனர்.(13) அந்தப் பிராமணர்கள் அனைவரும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அண்டத்தின் தலைவனும், உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனுமான மஹாதேவனை வழிபட்டு, தவங்கள், நோன்புகள், உண்ணா நோன்புகள், பல்வேறு பொருட்களைத் தவிர்த்தல், வலிநிறைந்த நோன்புகள் ஆகியவற்றை நோற்று, ஆறுகளில் முதன்மையான அந்தத் தெய்வீக சரஸ்வதியை {அந்த அவலநிலையில் இருந்து} விடுவித்தனர்.(14-16)

அம்முனிவர்களால் சரஸ்வதியின் நீர் தூய்மையாக்கப்பட்டதைக் கண்ட (அங்கே வசித்து வந்த) ராட்சசர்கள், பசியால் பீடிக்கப்பட்டு, அந்த முனிவர்களின் பாதுகாப்பையே நாடினர்.(17) பசியால் பீடிக்கப்பட்ட அந்த ராட்சசர்கள், கூப்பிக் கரங்களுடன், கருணை நிரம்பிய அந்தத் தவசிகளிடம் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொன்னார்கள்:(18) "நாங்கள் அனைவரும் பசித்திருக்கிறோம். நித்திய அறத்தில் இருந்து நாங்கள் விலகியிருக்கிறோம். பாவம் நிறைந்த எங்களின் இந்நடத்தை, நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டது கிடையாது.(19) உங்கள் அருள் இல்லாமையாலும், எங்கள் சொந்த தீய செயல்களாலும், எங்கள் பெண்களின் பாலியல் பாவங்களாலும் எங்கள் குற்றங்கள் {பாவங்கள்} அதிகரித்து, இவ்வாறு பிரம்ம ராட்சசர்களானோம். வைசியர்கள், சூத்திரர்கள், க்ஷத்திரியர்கள் ஆகியோரில் சிலரும், பிராமணர்களை வெறுப்பவர்களும், அவர்களுக்கு {பிராமணர்களுக்குக்} காயமேற்படுத்துபவர்களும் ராட்சசர்களாகின்றனர்.(20,21) பிராமணர்களில் சிறந்தவர்களே, எங்கள் துயர்துடைப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வீராக. நீங்கள் அனைத்து உலகங்களின் துயரையும் துடைக்கத் தகுந்தவர்களாவீர்கள்" என்றனர்.(23) அவர்களது இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தவசிகள், அந்தப் பெரும் நதியைப் புகழ்ந்தனர்.

அந்த ராட்சசர்களை மீட்பதற்காக, ஆழமான சிந்தனையில் ஆழ்ந்த அந்தத் தவசிகள்,(24) "தும்மலில் எச்சில் தெறித்த உணவு, புழு பூச்சிகளைக் கொண்டது, பிறர் உண்ட எச்சங்களின் கலவை, முடி {மயிர்} கலந்தது, அழுகியது {கெட்டுப் போனது}, கண்ணீர் கலந்தது ஆகிய உணவுகள் இந்த ராட்சசர்களின் பங்காகட்டும்.(25) இவையனைத்தையும் அறிந்த ஒரு கல்விமான், இவ்வகை உணவுகளைக் கவனமாகத் தவிர்ப்பானாக. அத்தகு உணவை உண்பவன் ராட்சசர்களின் உணவை உண்டதாகக் கருதப்படுவான்" என்றனர்.(26) அந்தத் தீர்த்தத்தைத் தூய்மைப்படுத்திய அந்தத் தவசிகள், அந்த ராட்சசர்களின் துயர் துடைப்புக்காக அந்த ஆற்றிடம் இவ்வாறு வேண்டினர்.(27) அந்தப் பெரும் முனிவர்களின் நோக்கத்தை அறிந்து கொண்ட அந்த ஆறுகளில் முதன்மையானவள் {சரஸ்வதியானவள்}, தன் உடலை, அருணை என்றழைக்கப்படும் புதிய வடிவில் ஏற்றுக் கொண்டாள்.(28) (சரஸ்வதியின் கிளையான) அந்தப் புதிய ஆற்றில் நீராடிய ராட்சசர்கள், தங்கள் உடல்களை விட்டுச் சொர்க்கத்தை அடைந்தனர்.(29) நூறு வேள்விகளைச் செய்தவனான தேவர்களின் தலைவன் (இந்திரன்), இவை யாவையும் உறுதிசெய்து கொண்டு, அந்த முதன்மையான தீர்த்தத்தில் {அருணசங்கத் தீர்த்தத்தில்} நீராடி, மிகப் பயங்கரமான பாவத்தில் இருந்து தூய்மையடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(30)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "என்ன காரணத்தால் இந்திரன் பிராமணரைக் கொன்ற {பிரம்மஹத்தி} பாவத்தால் களங்கமடைந்தான்? எவ்வாறு அவன் {இந்திரன்} அந்தத் தீர்த்தத்தில் நீராடி தூய்மையடைந்தான்?" என்று கேட்டான்.(31)

வைசம்பாயனர் {ஜனமேஜயன்} சொன்னார், "ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, அந்த வரலாற்றைக் கேட்பாயாக. அந்த நிகழ்வுகளை, அவை நிகழ்ந்தவாறே கேட்பாயாக. பழங்காலத்தில் வாசவன் {இந்திரன்}, நமுசியிடம் தான் செய்து கொண்ட உடன்படிக்கையை எவ்வாறு உடைத்துக் கொண்டான் என்பதைக் கேட்பாயாக.(32) (அசுரன்) நமுசி, வாசவனின் மீது கொண்ட அச்சத்தால், சூரியனின் ஒரு கதிருக்குள் நுழைந்து {ஒளிந்து} கொண்டான். பிறகு இந்திரன் {அந்தப் போர் நடந்து கொண்டிருதபோதே} நமுசியோடு நட்பு கொண்டு, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு,(33) "ஓ! அசுரர்களில் முதன்மையானவனே, ஓ! நண்பா, ஈரமடைந்த, அல்லது உலர்ந்த எப்பொருளினாலும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இரவிலோ, பகலிலோ நான் உன்னைக் கொல்ல மாட்டேன். இதையே உண்மை {சத்தியம்} என உறுதிகூறுகிறேன்" என்று சொன்னான்.(34) இந்த உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட தலைவன் இந்திரன், {போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது} ஒரு நாள் மூடுபனியைக் கண்டான். அப்போது {பகலும் இரவுமற்ற அந்தச் சந்திப் பொழுதில்} அவன் நீரின் {கடலின்} நுரையை (தனது ஆயுதமாகக்) கொண்டு நமுசியின் தலையைக் கொய்தான்.(35)

வெட்டப்பட்ட அந்த நமுசியின் தலையானது, இந்திரனைப் பின்தொடர்ந்து சென்று, அவனருகில் இருந்து, "ஓ! நண்பனைக் கொன்றவனே, ஓ! இழிந்தவனே" என்ற இந்த வார்த்தைகளைச் சொன்னது.(36) அந்தத் தலையால் இடைவிடாமல் {இவ்வாறு} தூண்டப்பட்ட இந்திரன், பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, என்ன நடந்தது என்பதைத் துயருடன் சொன்னான்.(37) அண்டத்தின் அந்த உயர்ந்த தலைவன் {பிரம்மன்}, அவனிடம் {இந்திரனிடம்}, "ஓ! தேவர்களின் தலைவா, ஒரு வேள்வியைச் செய்து, முறையான சடங்குகளுடன் அருணையில் {அருணசங்கமத் தீர்த்தத்தில்} நீராடினால், அந்தத் தீர்த்தம் பாவம் குறித்த அச்சத்தில் இருந்து உன்னைக் காக்கும்.(38) ஓ! சக்ரா {இந்திரா}, முனிவர்களால் அந்த ஆற்றின் நீர் புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்பொரு சமயம், அவ்விடத்தில் அந்த ஆறு மறைந்தே இருந்தது.(39) தெய்வீகமான சரஸ்வதி, அருணையிடம் சென்று, அதில் தனது நீரைப் பாயவிட்டாள். சரஸ்வதி மற்றும் அருணையின் இந்தச் சங்கமம் {அருண சங்கமம்}, மிகப் புனிதமானதாகும்.(40) ஓ! தேவர்களின் தலைவா, அங்கு ஒரு வேள்வியைச் செய்வாயாக. அபரிமிதமான கொடைகளை அளிப்பாயாக. அங்கே உன் தூய்மைச் சடங்கைச் செய்து, உனது பாவத்தில் இருந்து விடுபடுவாயாக" என்றான் {பிரம்மன்}.(41)

இவ்வாறு சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஓ! ஜனமேஜயா, பிரம்மனின் அந்த வார்த்தைகளின்பேரில் சரஸ்வதியின் அந்த வசிப்பிடத்தில் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.(42) பலனைக் கொன்றவனான அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, கொடைகள் பலவற்றைக் கொடுத்து, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, குறிப்பிட்ட வேள்விகளை முறையாகச் செய்து, அருணையில் மூழ்கினான்.(43) அப்போது அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டவனாக வெளியே எழுந்து வந்தான்[1]. பிறகு அந்தச் சொர்க்கத்தின் தலைவன் {இந்திரன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(44) ஓ! பாரதா, அந்த நமுசியின் தலையும் அவ்வோடையில் {அருணையில்} விழுந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்த அசுரனும் {நமுசியும்}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற வல்ல நித்திய பகுதிகள் பலவற்றை அடைந்தான்."

[1] நமுசி என்ற அசுரன் ஒரு பிராமணனாக இருந்திருக்க வேண்டும். ஆதிபர்வம் பகுதி 65, சுலோக எண்கள் 22-26ல் இந்த நமுசி கசியபர் மற்றும் தனுவின் மகனாகக் குறிப்பிடப்படுகிறான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்ம பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பல வகையிலான தானங்களை அளித்து, பெரும் புண்ணியத்தை அடைந்தான். அறச்செயல்களையே செய்யும் அவன்{பலராமன்}, அடுத்ததாகச் சோமனின் பெரும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(46) ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பழங்காலத்தில் அங்கேதான் சோமன் {சந்திரன்}, ராஜசூய வேள்வியைச் செய்தான். பிராமணர்களில் முதன்மையானவரும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவருமான உயர் ஆன்ம அத்ரியே அந்த மகத்தான வேள்வியின் ஹோத்ரியாக இருந்தார். அவ்வேள்வியின் நிறைவில், (ஒரு தரப்பில் இருந்த) தேவர்களுக்கும், (மறுதரப்பில் இருந்த) தானவர்கள், தைத்தியர்கள் மற்றும் ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நடந்தது. அந்தக் கடும்போரானது, (அசுரன்) தாரகனின் பெயரால் {தாரகம் என்றே} அறியப்பட்டது. அந்தப் போரில் ஸ்கந்தன் {முருகன்} அந்தத் தாரகனைக் கொன்றான்.(47,48) அந்தச் சந்தர்ப்பத்தில் தைத்தியர்களை அழிப்பவனான மஹாசேனன் (என்றும் ழைக்கப்பட்ட ஸ்கந்தன்), தேவர்களின் படைத்தலைமை பொறுப்பை அடைந்தான்[2]. அந்தத் தீர்த்தத்தில்தான் ஒரு பெரும் அஸ்வத {அரச} மரம் இருக்கிறது. குமாரன் என்றும் அழைக்கப்பட்ட கார்த்திகேயன், {சோம தீர்த்தத்தில் உள்ள} அதன் {அந்த அரச மரத்தின்} நிழலில் தான் எப்போதும் வசித்திருக்கிறான்" {என்றார் வைசம்பாயனர்}.(49)

[2] முந்தைய பகுதியான சல்லிய பர்வம் பகுதி 43, சுலோகம் எண் 7ல் சொல்லப்பட்டது போல, ஸ்தாணு [அ] வசிஷ்டாபவாஹத் தீர்த்தத்திலேயே கந்தன் தேவர்களின் படைத்தலைமையை ஏற்றிருக்க வேண்டும். சோம தீர்த்தம் கந்தனின் வசிப்பிடம் என்றே இங்குக் குறிப்பிடப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 43 ல் உள்ள சுலோகங்கள் : 49

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்