Dwaraka drowned! | Mausala-Parva-Section-7 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : வசுதேவரைத் தேற்றி யாவரையும் இந்திரப்ரஸ்தம் செல்லச் சொன்ன அர்ஜுனன்; யோகத்தால் உடலை விட்ட வசுதேவர்; வசுதேவர், கிருஷ்ணன் ஆகியோரைத் தகனஞ்செய்த அர்ஜுனன்; கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது; வஜ்ரனுக்கு முடிசூட்டியது; ருக்மிணி தீக்குளித்தது; ஸத்யபாமை தவம் செய்யச் சென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பகைவரை எரிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்} இவ்வாறு தன்னுடைய தாய்மாமனால் {வசுதேவரால்} சொல்லப்பட்டதும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனாக, அதேபோல உற்சாகமற்றிருந்த வசுதேவரிடம்,(1) "ஓ! மாமா, விருஷ்ணி குலதைச் சேர்ந்த அந்த வீரனையும் {கிருஷ்ணனையும்}, என்னுடைய உற்றார் உறவினரான வேறு சிலரையும் இழந்திருக்கும் இந்தப் பூமியை என்னால் பார்க்க முடியவில்லை.(2) மன்னர் {யுதிஷ்டிரன்}, பீமசேனர், சகாதேவன், நகுலன், எண்ணிக்கையில் ஆறாவதாக யாஜ்ஞசேனி ஆகியோரும் இக்காரியத்தில் என்னைப் போலவே மனம் கொண்டுள்ளனர்.(3) மன்னர் புறப்படுவதற்கான காலமும் வந்துவிட்டது. நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் மிக அருகில் இருக்கிறது. காலப்போக்கை நன்கு அறிந்தோரில் நீர் முதன்மையானவராக இருக்கிறீர்.(4) எனினும், ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, விருஷ்ணி குலத்தின் பெண்கள், பிள்ளைகள் மற்றும் முதியோரை முதலில் இந்திரப்ரஸ்தத்திற்கு அனுப்புவீராக" என்றான்.(5)