Iron bolt! | Mausala-Parva-Section-01 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : தீய சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன்; பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் முக்தியையும், யாதவர்களின் அழிவையும் கேட்டது; துவாரகைக்கு வந்த விஸ்வாமித்ரர், கண்வர் மற்றும் நாரதர்; யது குலத்தை அழிக்கும் இரும்பு உலக்கை; உலக்கையைப் பொடியாக்கிக் கடலில் கொட்டிய யாதவர்கள்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(போருக்குப் பிறகு) முப்பத்தாறு ஆண்டுகள் {36} ஆனபோது, குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன் வழக்கத்திற்கு மாறான தீய சகுனங்கள் பலவற்றைக் கண்டான்.(1) காற்று, உலர்ந்ததாகவும் {வெப்பமாகவும்}, வலுவானதாகவும், பருக்கைக் கற்களைப் பொழிந்து கொண்டிருப்பதாகவும் அனைத்துப் பக்கங்களில் வீசிக் கொண்டிருந்தது. பறவைகள் இடமிருந்து வலமாக வட்ட கதியில் சுழலத் தொடங்கின.(2) பேராறுகள் எதிர் திசைகளில் ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் அடிவானமானது எப்போதும் மூடுபனியால் மறைக்கப்பட்டிருந்தது. (சுடர்மிக்க) கரிகளைப் பொழிந்தபடியே எரிகொள்ளிகள் வானத்தில் இருந்து பூமியில் விழுந்தன.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரிய வட்டில் எப்போதும் புழுதியால் மறைக்கப்பட்டதாகவே தெரிந்தது. அஃது உதிக்கும்போது, நாள் சமைக்கும் அந்தப் பெரும் ஒளிக்கோள் காந்தியை இழந்ததாகவும், (மனிதர்களின்) தலையற்ற உடல்களால் கடக்கப்படுவது போலவும் தெரிந்தது.(4) ஒவ்வொரு நாளும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டை சுற்றிலும் கடுமையான ஒளி வளையங்கள் தென்பட்டன. அந்த வளைகளில் மூன்று நிறங்கள் தெரிந்தன. அவற்றின் முனைகள் கருப்பாகவும், முரடாகவும், நிறத்தில் செஞ்சாம்பல் நிறத்திலும் இருந்தன. ஓ! மன்னா, அச்சத்தையும், ஆபத்தையும் முன்குறிப்பிடுபவையான இவையும், இன்னும் பல தீச்சகுனங்களும் காணப்பட்டு, மனிதர்களின் இதயங்களைக் கவலையால் நிறைத்தன.(6)