Unity of Brahmana and Kshatriya! | Shanti-Parva-Section-73 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 73)
பதிவின் சுருக்கம் : புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைச் சொன்ன கசியபர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "ஓ! மன்னா, அறத்தகுதி மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் கண் கொண்டவனும், மிகச் சிக்கலான கருத்துகளைக் கொண்டவனுமான மன்னன், கல்வியறிவு பெற்றவரும், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் மிக நெருக்கமாக அறிந்தவருமான ஒரு புரோகிதரைத் தாமதமில்லாமல் நியமித்துக் கொள்ள வேண்டும்.(1) நல்லான்மா கொண்டோரும், கொள்கை அறிந்தவர்களுமான புரோகிதர்களையுடைய மன்னர்கள், தாங்களே அத்தகைய பண்புகளைக் கொண்டோராகி, திசைகள் அனைத்திலும் செழிப்பை அனுபவிப்பார்கள்.(2) மதிக்கத்தக்க பண்புகளைக் கொண்ட புரோகிதர், மற்றும் மன்னன் ஆகிய இருவரும், நோன்புகள் மற்றும் தவங்களை நோற்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடிமக்களையும், தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிள்ளைகளையும் பெருக்கிக் கொள்ள முடியும் {அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த முடியும்}.(3) அவர்கள் ஒரே இதயங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் இடையில் உண்டாகும் அத்தகு நட்பின் விளைவாகக் குடிமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(4) அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவில்லையெனில் மக்களுக்கு அழிவே ஏற்படும். பிராமணனும், க்ஷத்திரியனும் தான் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது.(5) இது தொடர்பாக இளையின் மகனுக்கும் {புரூரவஸுக்கும்}, கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலொன்று பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(6)