Wednesday, March 20, 2013

பாண்டவர் வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 61

The History of Pandavas! | Adi Parva - Section 61 | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : மகாபாரதத்தின் கதைச்சுருக்கம்...

வைசம்பாயனர் சொன்னார், "எனது உடலின் எட்டுப் பகுதிகளும் தரையைத் தொட,[1] என் ஆசானை {வியாசரை} பக்தியுடனும், மரியாதையுடனும் முதற்கண் வணங்கி, இந்தச் சபையில் இருக்கும் பிராமணர்களையும், மற்ற கற்றவர்களையும் முழு மனத்துடன் வழிபட்டு, மூவுலகங்களிலும் புத்திசாலிகளில் முதன்மையான இந்த உயரான்ம முனிவர் வியாசரிடம் நான் கேட்டவற்றை முழுமையாக உரைக்கின்றேன்.(1,2) இதை அறியப்போகும் ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நீ பாரதம் என்று அழைக்கப்படும் இந்தத் தொகுப்பைக் கேட்கத் தகுதி வாய்ந்தவனே. எனது ஆசானின் {வியாசரின்} கட்டளையில் தூண்டப்பட்டிருப்பதால் எனது இதயத்தில் அச்சத்தை[2]  நான் உணரவில்லை.(3) "ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒற்றுமையின்மை நிலவியது ஏன் என்றும், (குருக்களின்) ஆளும் ஆசையினால் நேர்ந்த சூதாட்டத்தைத் தொடர்ந்து, வனவாசம் ஏன் விதிக்கப்பட்டது என்றும் கேட்பாயாக. பாரதக் குலத்தில் சிறந்தவனே! {ஜனமேஜயனே!} கேட்க விரும்பிய உனக்கு அனைத்தையும் சொல்வேன்.(4,5)


[1] சாஷ்டாங்க நமஸ்காரம் = ஸ+அஷ்ட+அங்க+நமஸ்காரம். எட்டு அங்கங்கள் தரையில் பட வணங்குதல். பெரியோர்களையும், இறைவனையும், மத குருக்களையும் வணங்கும் ஒரு முறை. தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு அங்கங்களும் அதாவது நெற்றி, இரு தோள்கள் இரு கைகள், மார்பு இரு கால் முட்டிகள் உட்பட ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும் முறை

[2] பாரதம் முழுமையாகப் படித்தல் அல்லது முழுமையாக உரைத்தல் என்பது எளிமையான காரியம் அல்ல. தகுதிபெற்றோரே அதைச் செய்துமுடிக்க இயலும்.

அந்த வீரர்கள் (பாண்டவர்கள்), தங்கள் தந்தையின் {பாண்டுவின்} மரணத்தையடுத்து, காட்டிலிருந்து, தங்கள் சொந்த வீட்டிற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தனர். வந்து குறுகிய காலத்திற்குள், வில்வித்தையில் தேர்ந்தனர்.(6) பாண்டவர்கள் உடல் பலத்தாலும், சக்தியாலும், மனபலத்தாலும், குடிமக்களிடத்தில் பிரபலமாகவும், நற்பேறுகள் அருளப்பட்டு இருந்ததைத் கண்ட கௌரவர்கள் அவர்கள் மேல் {பாண்டவர்கள் மேல்} பொறாமை கொண்டனர்.(7) கோணல்புத்தி கொண்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மைந்தன் (சகுனி) ஆகியோர் அவர்களைத் {பாண்டவர்களைத்} துன்புறுத்தவும், அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றவும் ஆலோசித்து வந்தனர்.(8) அந்தத் தீயவனான துரியோதனன், எதிர்ப்பும் போட்டியுமற்ற அரசுரிமையைப் பெறுவதற்காக, (தாய்மாமனான) சகுனியின் ஆலோசனைப் படி பாண்டவர்களுக்கு இன்னலைச் {அழிக்கும் முயற்சிகளைச்}  செய்து வந்தான்.(9)

ஒருநாள் திருதராஷ்டிரனின் அந்தத் தீய மகன் {துரியோதனன்} பீமனுக்கு விஷத்தைக் கொடுத்தான். ஆனால் ஓநாய் வயிறு கொண்ட பீமன் அந்த விஷத்தை உணவுடன் சேர்த்துச் செரித்து முடித்தான்.(10) அதன் பிறகும் அந்தப் பாவி {துரியோதனன்} கங்கையின் கரையில் தூங்கிக் கொண்டிருந்த பீமனைக் கட்டி நீரில் வீசி விட்டுச் சென்று விட்டான்.(11) ஆனால் பலம் பொருந்திய கைகளைக் கொண்ட பீமசேனன், அந்தக் குந்தியின் மைந்தன் {பீமன்} எழுந்து, தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துத் தன் வலியெல்லாம் அகன்று வெளியே வந்தான்.(12)

அவன் {பீமன்} தூங்கிக் கொண்டிருக்கையிலும், நீரிலும் கடும் விஷம் கொண்ட கருநாகங்கள் அவனை உடலெங்கும் தீண்டின. இருப்பினும் அந்த எதிரிகளை அழிப்பவன் {பீமன்} அழியவில்லை.(13) அப்படிப் பாண்டவர்கள், தங்கள் சகோதரர்களான கௌரவர்களால் துன்பப்படும் பொழுதெல்லாம், உயர்ந்த எண்ணம் கொண்ட விதுரன், கருத்தோடு அவர்களைக் {பாண்டவர்களைக்} கவனிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அந்தத் தீய காரியங்களை மட்டுப்படுத்தி, துன்பத்திலிருந்த அவர்களைக் காப்பாற்றினான்.(14) எப்படிப் பூலோக மனிதர்களின் இன்பத்தைச் சக்ரன் {இந்திரன்} தக்கவைக்கிறானோ அப்படி விதுரன் பாண்டவர்களைத் தீயவற்றிலிருந்து விலக்கி வைத்தான்.(15)

இப்படி மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பலவகைகளில் முயன்றும் பாண்டவர்கள் விதியாலும், எதிர்காலத்தில் முக்கியமான (குரு பரம்பரையை அழிக்க) காரணத்துக்காகவும் காப்பாற்றப்படும்போது, அவர்களை {பாண்டவர்களை} அழிப்பதில் தன் இயலாமையை உணர்ந்த துரியோதனன், விருஷன் (கர்ணன்), துச்சாசனன் உள்ளிட்ட தனது ஆலோசகர்கள் பலரையும் கூட்டி, திருதராஷ்டிரன் அறிய அரக்காலான வீடு {அரக்கு மாளிகை} ஒன்றைக் கட்டச் செய்தான்.(16,17)

மன்னன் திருதராஷ்டிரன், தன் மக்கள் {கௌரவர்கள்} மீதிருந்த பாசத்தாலும், ஆட்சி உரிமையின் மீதிருந்த ஆசையால் தூண்டப்பட்டும், பாண்டவர்களைத் தந்திரமாக வாரணாவதத்திற்கு அனுப்பினான்.(18) பாண்டவர்கள் தங்கள் தாயுடன் {குந்தியுடன்} அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் {பாண்டவர்கள்} நகரத்தைவிட்டு வெளியேறும் போது, விதுரன் நடக்கப் போகும் ஆபத்தையும், அதிலிருந்து தப்புவது எப்படி என்று சில யோசனைகளையும் அவர்களுக்குத் {பாண்டவர்களுக்குத்} தெரிவித்தான்.(19)

குந்தியின் மைந்தர்கள் {பாண்டவர்கள்} வாரணாவதத்தை அடைந்து தங்கள் தாயுடன் {குந்தியுடன்} வாழ்ந்து வந்தனர். திருதராஷ்டிரனின் உத்தரவை ஏற்றுக் கொண்டு அந்த நகரத்தில் {வாரணாவதத்தில்}, அந்த அரக்காலான வீட்டில் எதிரிகளை அழிப்பதில் சிறப்புவாய்ந்தவர்களான அவர்கள் வாழ்ந்து வந்தனர்.(20,21) அந்த இடத்தில புரோச்சனனிடம் இருந்து விழிப்புடன் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு ஒரு வருடம் அங்கே வாழ்ந்தனர். விதுரனின் வழிகாட்டுதல்படி, ஒரு சுரங்கப் பாதையை அமைத்து, அந்த அரக்காலான வீட்டுக்கு நெருப்பு வைத்துப் (அவர்களது எதிரியும், துரியோதனனின் ஒற்றனுமான) புரோச்சனனை எரித்துக் கொன்றனர். அந்த எதிரிகளை அழிப்பவர்கள் {பாண்டவர்கள்}, பயத்துடனும், கவலையுடனும், தங்கள் தாயை {குந்தியை} அழைத்துக் கொண்டு தப்பித்தனர்.(22,23)

கானகத்திற்குள் அருவி ஒன்றின் அருகில் ஒரு ராட்சசனைக் கண்டனர் {கொன்றனர்}. திருதராஷ்டிரனின் மைந்தர்களுக்குப் {கௌரவர்களுக்குப்} பயந்து, தங்களது எந்தச் செயலும் தங்களை வெளிக்காட்டிவிடும் என்று அஞ்சியபடியே பாண்டவர்கள் அந்த இருளில் தப்பிச் சென்றனர். இங்கே பீமன் ஹிடிம்பையை (அவன் கொன்ற ராட்சசனின் தங்கையை) மனைவியாக அடைந்ததால், அவள் மூலமாகக் கடோத்கசன் பிறந்தான்.(24,25)

கடும் நோன்புகளை நோற்பவர்களும், வேதங்களை நன்கு அறிந்தவர்களுமான பாண்டவர்கள், ஏகச்சக்கரம் என்ற நகரத்திற்குச் சென்று, அங்கே பிரம்மச்சாரிகளாக வேடம் பூண்டு மறைந்து வாழ்ந்தனர்.(26) அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்}, அந்த நகரில் ஒரு பிராமணரின் வீட்டில் சிறிது காலம் யாவற்றையும் தவிர்த்துத் தன்னடகத்துடன் வாழ்ந்தனர்.(27) இங்கேதான் பெரும் கரங்களைக் கொண்ட பீமன், பசிகொண்டவனும், பலம்பொருந்தியவனும், மனிதர்களை உண்ணும் ராட்சசனுமான பகனைச் {பகாசுரனைச்} சந்தித்தான்.(28) அந்தப் பாண்டுவின் மைந்தனும், மனிதர்களில் புலியுமான பீமன், தனது பெருத்த கரங்களைக் கொண்டு அவனை {பகாசுரனை} வேகமாகக் கொன்று அங்கு வாழ்ந்த குடிமக்களைக் காப்பாற்றிப் பயத்திலிருந்து விடுவித்தான்.(29)

பாண்டவர்கள் அதன்பிறகு, கிருஷ்ணை (பாஞ்சால இளவரசி) {திரௌபதி}, கூடியிருக்கும் இளவரசர்களுக்கிடையில் ஒரு கணவனைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள் என்பதை அறிந்தனர். அதைக் கேட்டதும் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சாலத்திற்குச் சென்று அந்த மங்கையை {திரௌபதியை} அடைந்தனர்.(30) அப்படித் திரௌபதியை (பொதுவான மனைவியாக) அடைந்து, அங்கே {பாஞ்சாலத்தின் தலைநகர் காம்பில்யத்தில்} ஒரு வருடம் வாழ்ந்தனர். அதன்பிறகு அனைவராலும் அவர்கள் {பாண்டவர்கள்} அறியப்பட்டதும், அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் {பாண்டவர்கள்}, அஸ்தினாபுரம் திரும்பினர்.(31)

அங்கே சென்றதும் திருதராஷ்டிரனாலும், சந்தனுவின் மைந்தனாலும் (பீஷ்மராலும்) "ஓ அன்பானவர்களே {பாண்டவர்களே}, உங்களுக்கும் உங்கள் தம்பிகளுக்கும் கருத்துப் பேதங்கள் ஏற்படாதிருக்க, உங்களுக்குக் காண்டவபிரஸ்தத்தை இருப்பிடமாகத் {அளிக்கத்} தீர்மானித்திருக்கிறோம். ஆகையால், எல்லாப் பொறாமைகளையும் மறந்து தூக்கியெறிந்துவிட்டு, பல நகரங்களும், பல அகலமான சாலைகளும் கொண்ட காண்டவபிரஸ்தத்துக்குச் சென்று அங்கு வாழுங்கள்" என்றனர். அதன்படி பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடனும், தொண்டர்களுடனும், பலவகையான ஆபரணங்களையும் ரத்தின கற்களையும் எடுத்துக் கொண்டு காண்டவபிரஸ்தம் சென்றனர். அங்கே அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள் {பாண்டவர்கள்} பல வருடங்கள் தங்கி இருந்தனர்.(33-35)

பல நாடுகளைத் தங்கள் பலத்தால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தங்கள் இதயத்தை அறத்தின்பால் ஈடுபடுத்தி, உண்மையை உறுதியாக ஏற்று,(36) அடைந்த செல்வத்தால் நிலைத்தடுமாறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், பல தீமைகளை அழித்தும் பாண்டவர்கள் பலத்தில் வளர்ந்தனர். புகழ் மிக்கப் பீமன் கிழக்கை வென்றான்,(37) வீரனான அர்ஜுனன் வடக்கை வென்றான், நகுலன் மேற்கை வென்றான், எதிரி வீரர்களை அழிப்பவனான சகாதேவன் தெற்கை வென்றான்.(38) இவையெல்லாம் நடந்தபிறகு, அவர்களது {பாண்டவர்களது} ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. சூரியனைப் போன்ற ஐந்து பாண்டவர்களோடு சேர்ந்து,(39) பூமியானது ஆறு சூரியன்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. அதன்பிறகு, பெரும் சக்தியையும், வீரத்தையும் கொடையாகக் கொண்ட நீதிமானான யுதிஷ்டிரன், தனக்கு உயிரை விட மேலானவனும், இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் சக்தி கொண்டவனுமான அர்ஜுனனைச் சில காரணங்களுக்காகத் காட்டிற்கு அனுப்பினான்.(40,41) மனிதர்களில் புலியும், உறுதியான ஆன்மாகக் கொண்டவனுமான அர்ஜுனன், அனைத்து அறங்களையும் கொடையாகக் கொண்டு, பதினோரு வருடங்களும், பதினோரு மாதங்களும் கானகத்தில் வாழ்ந்தான்[3].(42)

[3] மன்மதநாதரின் பதிப்பில் பதினோரு வருடங்களும், பத்து மாதங்களும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்பகோணம் பதிப்பில், "ஒரு வருஷம் முழுதும் மேலே ஒரு மாஸமும் வனத்தில் வசித்து" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் ஒரு வருடமும், ஒரு மாதமும் என்றே இருக்கிறது. மூல ஸ்லோகத்தில்  துவாதச வர்ஷானி அதாவது பனிரெண்டு வருடங்கள் என்றே உள்ளது.

இந்தக் காலத்தில், ஒரு சமயம், அர்ஜுனன் துவாரகையில் இருக்கும் கிருஷ்ணனிடம் சென்றான். அங்கே அந்த பீபத்சு (அர்ஜுனன்) தாமரைக்கண் கொண்டவளும், இனிமையான பேச்சுடையவளுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இளைய தங்கை சுபத்திரையைத் தனது மனைவியாகக் கொண்டான். பெரும் இந்திரனுடன் சச்சி இருந்தது போல, அல்லது கிருஷ்ணனுடன் ஸ்ரீ இருந்ததுபோல,(43,44) அவள் {சுபத்திரை} பாண்டுவின் மகன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். அதன்பிறகு ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, குந்தியின் மைந்தன் அர்ஜுனன், வாசுதேவனுடன் சேர்ந்து வேள்வி நெய்யைச் சுமக்கும் அக்னியை (அக்னியின் செரியாமையைப் போக்க அங்கே இருந்த மருத்துவ மூலிகைகளை எரித்து) காண்டவ வனத்தில் மனநிறைவு கொள்ளச் செய்தான். அர்ஜுனனுக்குக் கேசவனின் {கிருஷ்ணனின்} உதவி இருக்கும்போது,(45,46) ஒப்பற்ற மிக உயர்ந்த ஆதாரங்களைக் கொண்ட விஷ்ணுவுக்கு எதிரிகளை அழிப்பது எப்படிக் கடினமில்லையோ அப்படி இந்தப் பணியும் அவனுக்குக் {அர்ஜுனனுக்குக்} கடினமாகத் தெரியவில்லை. அக்னி அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தனுக்கு {அர்ஜுனனுக்கு} அற்புதமான வில்லான காண்டீவத்தையும்,(47) எப்போதும் வற்றாத அம்பறாத்தூளியையும், கருடனைக்[4]கொடிக்கம்பத்தில் கொண்ட ஒரு தேரையும் கொடுத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அர்ஜுனன் பெரும் அசுரனை (மயனை) நெருப்பில் விழும் அச்சத்திலிருந்து (நெருப்பிலிருந்து) காப்பாற்றினான்.(48) நன்றியுடைய மயன், அனைத்து வகையான நகைகளையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு (பாண்டவர்களுக்காக) ஒரு தெய்வீக அரண்மனையைக் கட்டிக் கொடுத்தான். தீய துரியோதனன், அந்த அரண்மனையைக் கண்டு அதை அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டான்.(49)

[4] குரங்குக் கொடி கொண்ட தேர் என்றுதான் ஆதிபர்வம் 227 இல் சொல்லப்படுகிறது. கருடக் கொடி கிருஷ்ணன் மற்றும் விஷ்ணுவுன்டையது ஆகும். மூல ஸ்லோகத்தில் கபிலக்சணம் – அதாவது குரங்குச் சின்னம் கொண்ட என்றே உள்ளது.

யுதிஷ்டிரனைச் சுபலனின் மகன் {சகுனியின்} மூலம் சூதாட்டத்தில் ஏமாற்றி, பாண்டவர்களைப் பனிரெண்டு {12} வருடங்கள் கானகத்திற்கும்,(50) ஒரு {1} வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழவும் பணித்தான். ஆக அந்த நாடு கடத்தலை முழுப் பதிமூன்று {13} வருடங்களுக்கு விதித்தான். பதினான்காவது {14} வருடத்தில், ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, பாண்டவர்கள் திரும்பி வந்து தங்கள் சொத்துக்களைக் கோரினர்.(51) அவர்களால் {பாண்டவர்களால்} அதைப் பெற முடியவில்லை. அதன் காரணமாகப் போர் தீர்மானிக்கப்பட்டது. பாண்டவர்கள் மொத்த க்ஷத்திரிய குலத்தையே அழித்து, மன்னன் துரியோதனனைக் கொன்று, பேரழிவிற்குள்ளான தங்கள் அரசைப் பெற்றனர். இதுதான் எந்தச் செயலையும் தீய ஆசைகளால் கவரப்பட்டு செய்யாதவர்களான பாண்டவர்களின் வரலாறு. ஓ வெற்றிபெற்ற ஏகாதிபதிகளில் முதன்மையானவனே! {ஜனமேஜயனே} இதுதான் ஒற்றுமையின்மையின் காரணமாகக் கௌரவர்கள் தங்கள் அரசை இழந்து, பாண்டவர்கள் வெற்றியை அடைந்த வரலாறு" {என்றார் வைசம்பாயனர்}.(52,53)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்