The Description of Dhaumya | Vana Parva - Section 3a | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
யுதிஷ்டிரன் தௌமியரிடம் தனது இக்கட்டான நிலையைச் சொல்லி ஒரு வழி சொல்லுமாறு கேட்டல்; தௌமியர் கூறிய விளக்கம்
வைசம்பாயனர் சொன்னார், "சௌனகரால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுக்கு மத்தியில் இருந்த தனது புரோகிதரை {தௌமியரை} அணுகி, "வேதங்களை அறிந்த அந்தணர்கள், கானகம் நோக்கிச் செல்லும் என்னைத் தொடர்ந்து வருகின்றனர். பேராபத்துகளால் துயரப்படும் என்னால் இவர்களைத் தாங்க இயலாது. என்னால் இவர்களைக் கைவிடவும் முடியவில்லை. அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் சக்தியும் என்னிடம் இல்லை. ஓ புனிதமானவரே {தௌமியரே}, இச்சூழலில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்லும்" என்று கேட்டான்.
வைசம்பாயனர் சொன்னார், "இதற்குச் சரியான வழியை சிந்திக்க தனது யோக சக்தியால் சிறிது நேரம் மனதை ஒருங்கிணைத்த அறம்சார்ந்தவர்களில் முதன்மையான தௌமியர், யுதிஷ்டிரனிடம், "பழங்காலத்தில், படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களும் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டன. சவிதா (சூரியன்), (அவை அனைத்துக்கும்) தந்தையைப் போல இருந்து அவற்றின் மீது இரக்கம் கொண்டான். முதலில் வடக்கு சரிவுக்குச் {உத்தராயணம் = வடகோடு} சென்று தனது கதிர்களால் தண்ணீரை இழுத்து, தென் சரிவுக்கு {தட்சணாயணம் = தென்கோடு} வந்து, பூமிக்கு மேல் நின்றான். அப்போது வெப்பத்துக்கு தன்னையே மையமாக வைத்துக் கொண்டான். இப்படி சூரியன் பூமியின் மேல் இருந்த போது, காய்கறிகளின் தலைவன் (சந்திரன்), சூரிய வெப்பத்தின் விளைவை (ஆவி-Vapour), மேகங்களாக மாற்றி, நீரின் வடிவில் அவற்றைக் கொட்டினான். இதனால் செடிகள் முளைத்தன. ஆகையால், சந்திரனின் தாக்கத்தின் மூலம் நனைந்த சூரியனே, வேகமாக வளரும் விதைகளில் இருந்து புனிதமான காய்கறியாக உருமாறி ஆறு சுவைகளைத் தருகிறான். இவையே {இப்படி விளைந்தவையே} பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணவாகின. ஆகையால் உயிரினங்களின் உயிரைத் தாங்க வைக்கும் உணவு, சூரிய சக்தியை தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே, சூரியனே அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிறான். ஓ யுதிஷ்டிரா, நீ அவனையே {சூரியனையே} புகலிடமாகக் கொள். தூய வம்சாவளி மற்றும் செயல்களுக்காக அறியப்படும் அனைத்து சிறப்புமிக்க ஏகாதிபதிகளும் தங்கள் மக்களுக்கு வழங்குவதற்காக உயர்ந்த தவப் பயிற்சியை மேற்கொண்டனர். பெரும்
கார்த்தவீரியன், வைனியன் {பிருது}, நகுஷன் ஆகிய அனைவரும் நோன்புகள், தவம்
மற்றும் தியானம் ஆகியவற்றின் தன்மையால், தங்கள் மக்களைப் பெரும்
துன்பங்களில் இருந்து விடுவித்தனர்.. ஆகையால், ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரனே}, செயல்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டவன் நீ. அதே போல் {அவர்களைப் போல}, கடுந்தவங்களைச் செய். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அறம் சார்ந்த மறுபிறப்பாளர்களை {அந்தணர்களை} ஆதரி" என்றார் {தௌமியர்}.
ஜனமேஜயன், "குருக்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், அந்தணர்களுக்காக அற்புதமான தோற்றம் கொண்ட சூரியனை எப்படி வணங்கினான்?" என்று கேட்டான்.
வைசம்பாயனர், "ஓ மன்னா {ஜனமேஜயா}, உன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, மனதை அனைத்துப் பொருட்களிலிருந்தும் விலக்கி கவனமாகக் கேள். ஓ மன்னர்களுக்கு மன்னா {ஜனமேஜயா}, ஒரு நேரத்தைக் குறித்துக் கொள். நான் உனக்கு அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன். ஓ சிறப்பானவனே {ஜனமேஜயனே}, பழங்காலத்தில் தௌமியரால், பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சொல்லப்பட்ட சூரியனின் நூற்று எட்டுப் {108} பெயர்களைக் கேள். தௌமியர், "சூரியன் , ஆர்யமான், பாகன், த்வஸ்த்ரி, புஷன், ஆர்க்கன், சாவித்ரி, ரவி, கபஸ்திமத், அஜன், மிருத்யு, தத்ரி, பிரபாகரன், பிரிதிபி, அபன், தேஜா, கா, வாயு, சோமன், பிருஹஸ்பதி, சுக்ரன், புதன், அங்காரகன், இந்திரன், விவஸ்வத், திப்தன்சு, சுச்சி, சௌரி, சனைசரன், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஸ்கந்தன், வைஸ்ரவணன், வைதியுதக்னி, ஜதராக்னி, அய்ந்தனன், தேஜாசம்பாதி, தர்மத்வஜன், வேதகார்த்ரி, வேதாங்கன், வேதவாஹனன், கிருதன், திரேதன், துவாபரன், அசுத்தம் நிறைந்த கலி, காலன், கஸ்தன், முகூர்த்தன், க்ஷபன், யமன், க்ஷனன், சம்வத்சரகரன், அஸ்வத்தா, காலச்சக்கரன், பிபவசு, புருஷன், சாஸ்வதன், யோகின், வியாக்தவ்யக்தன், ஸ்னாதனன், காலதியாக்ஷன், பிரஜாதியாக்ஷன், விஸ்வகர்மன், தமௌண்டன், வருணன், சகரன், அன்சு, ஜிமுதன், ஜிவனன், அரிஹன், பூதஸ்ரயன், பூதபதி, ஸ்ரஸ்திரி, ஸம்வர்தகன், வன்ஹி, சர்வாதி, அலோலூபன், ஆனந்தன், கபிலன், பானு, கமாதன், சர்வதோமுகன், ஜெயன், விசாலன், வரதன், மனஸ், சுபர்ணா, பூதாதி, சிக்ராகன், பிரந்தாரனன், தன்வந்தரி, துர்மகேது, அதிதேவன், அதிதிசூதன், துவதஸத்மன், அரவிந்தாக்ஷன், பித்ரு, மாட்ரி, பிதாமஹன், சுவர்கதுவாரன், பிரஜாதுவாரன், மோக்ஷதுவாரன், திரிபிஸ்தபன், தேஹாகார்த்தி, பிரசந்தாத்மன், விஸ்வாத்மன், விஸ்வாதோமுகன், சாரசராத்மன், சுகுஸ்மாத்மன், மற்றும் கருணையுள்ள மைத்திரேயன். சுயம்புவின் (பிரம்மா) சொல் படி அளவிடமுடியா சக்தி கொண்ட சூரியனின் நூற்று எட்டு {108} பெயர்கள் இவையே. "தங்கத்தைப் போன்றும் நெருப்பைப் போன்றும் பிரகாசித்து தேவர்களாலும், பித்ருகளாலும், யக்ஷர்களாலும் வணங்கப்பட்டு, அசுரர்களாலும், நிசாசரர்களாலும், சித்தர்களாலும் வழிபடப்படும் ஓ பாஸ்கரா {சூரியனே} செல்வத்தை அடைய நான் உன்னை வணங்குகிறேன்" என்ற துதி பாடலை எவனொருவன் நிலைத்த கவனத்துடன் சூரியோதயத்தின் போது உச்சரிக்கிறானோ அவன் மனைவி மக்கள் செல்வம், முன்ஜென்ம நினைவு ஆகியவற்றைப் பெறுகிறான். இந்த துதி பாடலை பாடுவதால் ஒருவன், பொறுமையையும் நினைவுத்திறனையும் பெறுகிறான். மனதை ஒருமுகப்படுத்தி ஒரு மனிதன் இந்தத் துதி பாடலை பாடட்டும். அப்படிச் செய்வதால், அவன் துயரம், காட்டுத்தீ, கடல் ஆகியவற்றுக்கு எதிரான சாட்சியாக இருந்து, விருப்பப்படும் பொருள் அனைத்தையும் பெறுவான்"
வைசம்பாயனர் தொடர்ந்தார், "சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை தௌமியரிடம் இருந்து கேட்ட நீதிமானான யுதிஷ்டிரன், அந்தணர்களைத் தாங்க விரும்பி, மனதை ஒருமுகப்படுத்தி, மனதை சுத்தப்படுத்தி, கடும் தியானத்தில் ஈடுபட்டான். நாளை உண்டாக்குபவனை {சூரியனை} மலர்களாலும் மற்ற பொருட்களாலும் பூஜித்து, தனது சடங்குகளைச் செய்தான் மன்னன் {யுதிஷ்டிரன்}. நீரோடையில் நின்று கொண்டு, முகத்தை நாளின் தேவனுக்கு {சூரியனுக்கு} நேராக வைத்துக் கொண்டான். கங்கையின் நீரைத் தொட்ட அறம்சார்ந்த யுதிஷ்திரன், புலன்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்வாதாரமாக காற்றை மட்டுமே கொண்டு, பிராணாயாமத்தில் ஈடுபட்ட ஆன்மாவுடன் நின்றான். தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, பேச்சை அடக்கி, (சூரியனை நோக்கி) துதிபாடலை பாட ஆரம்பித்தான் {யுதிஷ்டிரன்}.
![]() |
![]() |
![]() |