Saturday, October 25, 2014

தௌமியர் அறிவுரை! - விராட பர்வம் பகுதி 4

Dhaumya's advice! | Virata Parva - Section 4 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 4)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண






தங்களது தேர்கள், தேரோட்டிகள், சமையற்கலைஞர்கள், பெண் பணியாட்கள் ஆகியோர் எங்குச் செல்ல வேண்டும் என்று யுதிஷ்டிரன் சொன்னது; வேறு மன்னனுடைய ஆளுகையின் கீழ் வாழப்போகும் பாண்டவர்களுக்குத் தௌமியர் சொன்ன அறிவுரை...

யுதிஷ்டிரன் {தன் தம்பிகளிடம்}, “நீங்கள் ஒவ்வொருவரும் செய்யப் போகும் அலுவல்களை ஏற்கனவே நீங்கள் சொல்லிவிட்டீர்கள். எனது அறிவுக்கேற்றவாறு நான் என்ன அலுவலைச் செய்யப் போகிறேன் என்பதை நானும் சொல்லிவிட்டேன். தேரோட்டிகள், சமையற்கலைஞர்களுடன் கூடிய நமது புரோகிதர் {தௌமியர்} துருபதனின் வசிப்பிடம் {பாஞ்சாலம்} சென்று, அங்கு நமது அக்னிஹோத்ர நெருப்புகளைப் பராமரிக்கட்டும். இந்திரசேனனும் பிறரும், வெறும் தேர்களுடன் துவாராவதிக்கு {துவாரகைக்கு} விரைந்து செல்லட்டும். இதுவே எனது விருப்பம். திரௌபதியின் பெண் பணியாட்கள், நமது தேரோட்டிகள் மற்றும் சமையற்கலைஞர்களுடன் பாஞ்சாலம் செல்லட்டும். அவர்கள் அனைவரும், “எங்களைத் துவைதவனத் தடாகத்தில் விட்டுவிட்டு, பாண்டவர்கள் எங்குச் சென்றார்கள் என்பது தெரியாது" என்று சொல்லட்டும்" என்றான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி ஒருவருக்கொருவர் ஆலோசித்து, ஒருவருக்கொருவர் தாங்கள் என்ன அலுவலைச் {வேலையைச்} செய்யப் போகிறோம் என்று சொல்லிக்கொண்ட பாண்டவர்கள், தௌமியரின் அறிவுரையைக் கேட்டு நின்றனர். பின்வரும் வார்த்தைகளில் தனது அறிவுரையைச் சொன்னார் தௌமியர், “பாண்டுவின் மகன்களே, அந்தணர்கள், உங்கள் நண்பர்கள், தேர்கள், ஆயுதங்கள், (புனித) நெருப்புகள் ஆகியவை குறித்து நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகள் அருமை. ஆனால் ஓ! யுதிஷ்டிரா, குறிப்பாக நீயும் அர்ஜுனனும் திரௌபதியின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதே தகும். மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களின் குணங்களைப் பற்றி நீ நன்கு அறிவாய். உனது ஞானம் எப்படிப்பட்டதாக இருப்பினும், நீ ஏற்கனவே அறிந்ததை, உன் மீது கொண்ட பாசத்தால், நண்பர்கள் திரும்பச் சொல்வது அனுமதிக்கப்படலாம். அறம், இன்பம் மற்றும் பொருளின் அழியாத {நித்திய} நலன்களுக்கு இதுவும் அடிபணிந்ததே {உதவிகரமானதே}. எனவே, நான் உன்னிடம் சிலவற்றைப் பேசுகிறேன். அவற்றைக் குறித்துக் கொள்.

ஒரு மன்னனுடன் வசிப்பதென்பது கடினமானது. இளவரசர்களே, அனைத்து தவறுகளையும் தவிர்த்து ஓர் அரசகுடும்பத்துடன் நீங்கள் எப்படி வசிக்கலாம் என்பதைச் சொல்கிறேன். கௌரவர்களே {பாண்டவர்களே}, உங்களை அறிந்தவர்களால் கண்டுபிடிக்கப்படாதபடி இந்த வருடத்தைக் கௌரவிக்கப்பட்டோ படாமலோ அம்மன்னனின் அரண்மனையில் நீங்கள் வாழ வேண்டியிருக்கிறது. பதினான்காவது {14} வருடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் அனைத்து உயிரினங்களையும் பேணி பாதுகாக்கும் தெய்வத்தின் வடிவில் இருக்கும் மன்னன், மந்திரங்கள் அனைத்தையும் [1] கொண்டு சுத்திகரிக்கப்பட்ட நெருப்பைப் போன்று மேன்மைமிக்கவன். வாயிலில் அனுமதி பெற்ற பின்னரே, ஒருவன் மன்னன் முன்னிலைக்குச் செல்ல வேண்டும். அரச ரகசியங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது. அதே போல மற்றொருவர் விரும்பும் ஆசனத்தின் மீது ஆசை கொள்ளக்கூடாது.

[1] "சில வங்காள உரைகளில் சர்வமந்திரமயம் {Sarvamantramaya} என்பதற்குப் பதில் சர்வாஸ்திரமயம்{Sarvastramaya} என்று இருக்கிறது. சர்வாஸ்திரமயம் {Sarvastramaya} தவறானது என்பது தெளிவு" என்கிறார் கங்குலி.

தன்னைத் தானே {மன்னனுக்குப்} பிடித்தமானவன் என்று கருதிக்கொண்டு, (மன்னனுடைய) தேர், மூடுவண்டி, ஆசனம், வாகனம், யானை ஆகியவற்றை ஆக்கிரமிக்காதவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுதி வாய்ந்தவனாவான். தீங்கிழைப்பவர்களின் மனங்களில், இது எச்சரிக்கையை எழுப்பும் என்று கணக்கிடப்பட்ட ஒரு தொழிலின் ஆசனத்தை ஆக்கிரமிக்காதிருப்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுதி வாய்ந்தவனாவான். கேட்கப்படாத போது யாரும் (மன்னனுக்கு) ஆலோசனை வழங்கக்கூடாது. வாயாடிகள் மற்றும் அவமரியாதை செய்யும் ஆலோசகர்கள் மீது மன்னர்கள் வெறுப்படைவார்கள். ஆதலால், குறித்த காலத்தில் மன்னனுக்கு மரியாதை செலுத்தும் ஒருவன் அமைதியாகவும் மரியாதையுடனும் மன்னனின் அருகில் அமர வேண்டும். {பொய் பேசுகிறவர்களிடத்தில் அரசர்கள் அன்பு வைக்கமாட்டார்கள். பொய் சொல்லுகிற மந்திரியை அரசர்கள் அவமதிப்பார்கள்}.

ஞானமுள்ள மனிதன், மன்னனின் மனைவியிடமோ, அந்தப்புரவாசிகளிடமோ, அரச கோபத்துக்கு ஆட்பட்டவர்களிடமோ நட்பு கொள்ளக்கூடாது. மன்னன் சம்பந்தப்பட்ட சிறு காரியத்தைச் செய்தாலும், அதை மன்னனைக் கேட்டே {கேட்ட பிறகே} செய்ய வேண்டும். ஓர் அரசாங்கத்தில் இப்படி நடந்து கொள்பவனுக்குத் தீங்கு நேராது. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {யுதிஷ்டிரா}, தங்கள் மகன்களோ, பேரர்களோ, சகோதரர்களோ கூடத் தங்கள் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் நடந்து கொண்டால், மனிதர்களை ஆள்பவர்கள் {மன்னர்கள்} அவர்களை மன்னிப்பதில்லை. எனவே, ஒருவன் உயர்ந்த அலுவலை {பதவியை} அடைந்தாலும் கூட, தன்னைக் கேட்டுக் கொள்ளாத வரையிலோ, தனக்குக் கட்டளை கிடைக்காத வரையிலோ, மன்னனின் கண்ணியத்தை {dignity} கருத்தில் கொண்டு, தன்னைப் பிறவிக் குருடனாகக் கருதிக் கொள்ள வேண்டும்.

அக்னியைப் போன்றோ பிற தேவனைப் போன்றோ ஒரு மன்னனை கவனத்துடன் சேவிக்கவேண்டும்; அரசாங்கத்தின் மீது பற்றற்ற {விசுவாசமற்ற} வகையில் செயல்படும் ஒருவன், அவனால் {மன்னனால்} நிச்சயமாக அழிக்கப்படுகிறான். கோபம், கர்வம், கவனக்குறைவு ஆகியவற்றைக் கைவிட்டு, ஏகாதிபதியால் {மன்னனால்} சுட்டப்பட்ட வழியில் தொடர்ந்து செல்வதே ஒருவனுக்குத் தகும். கவனமாக அனைத்து காரியங்களையும் ஆலோசித்த பின்னரே, இலாபகரமானவை, இனிமையானவை ஆகிய இரண்டு தலைப்புகளையும் {அந்த இரண்டு தன்மை கொண்ட செய்திகளை மட்டும்} ஒருவன் மன்னனின் முன்னிலையில் முன் வைக்க வேண்டும்; ஆனால் ஒரு பொருள் இனிமையற்றதாக இருப்பினும் இலாபகரமானதாக இருந்தால், அதற்கு {மன்னனிடம்} ஏற்புடைத்தன்மை இல்லையாயினும், அதை ஒருவன் சொல்ல வேண்டும். “நான் மன்னனால் விரும்பப்படவில்லை" என்று எப்போதும் நினைத்து, ஒருவன், தனது கவனக்குறைவை களைந்து, அவனுக்கு {மன்னனுக்கு} ஏற்புடைய, பயனுடையவற்றைக் கொண்டு வருவதில் நோக்கம் கொள்ள வேண்டும்.

தனது நிலையில் {இடத்தில்} இருந்து மாறாதிருப்பவனும், மன்னனின் எதிரிகளிடம் நட்பு கொள்ளாதவனும், மன்னனுக்குத் தீங்கிழைக்காதவனும் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கும் தகுதி படைத்தவர்களாவர். {மன்னனின்} பின்புறம் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களுக்கு நியமிக்கப்பட்டிருப்பதாலும், அவனுக்கு முன் புறத்தில் அமர்வது தடை செய்யப்பட்டுள்ளதாலும், ஒரு கற்ற மனிதன், மன்னனுக்கு வலது புறத்திலோ இடது புறத்திலோ அமர வேண்டும். ஒரு மன்னன் (தனது ஊழியர்களைப் பொறுத்த மட்டில்) எதிலும் ஈடுபடாத போது, ஆவலால் உந்தப்பட்டு, பிறருக்கு முன்பாக யாரும் அவனது {மன்னனின்} முன்னிலைக்கு வலிந்து முன் செல்லாதிருக்கட்டும். ஏனெனில், பாதிக்கப்பட்ட ஏழையாக இருப்பினும், இத்தகு நடத்தை மன்னிக்கக்கூடாததாக இருக்கும் [2].

[2] “இது மிகக் கடினமான சுலோகமாக உள்ளது. நீலகண்டர் சஞ்சயேத் {Sanjayet} என்ற படிப்பதைக் கைக்கொள்கிறார். வங்கப் பதிப்புகள் சஞ்சபேத் {Sanjapet} என்று சொல்கின்றன. பின்னது {Sanjapet} சரியான வாசிப்பாக இருக்குமானால், அதன் பொருள், “ஒரு மன்னனின் முன்னிலையில் என்ன நடக்கிறது என்பதை யாரும் பேசாதிருக்கட்டும். ஏனெனில், ஏழைகள் கூட இதைப் பெரும் தவறாகக் கருதுகின்றனர்" என்று எடுத்துக் கொள்ளலாம். மன்னனைக் குறித்த எதையும் காணும் ஒருவன் அதைப் பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற உணர்வு தெளிவாக உள்ளது. சக்தியற்றவர்கள் கூட, தங்களைக் குறித்த இத்தகு பகிரங்கப்படுத்தலை, தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகின்றனர். எனவே, இது மன்னிக்க முடியாததாகும் என்றும் கொள்ளலாம்" என்கிறார் கங்குலி.

மன்னன் தனது பொய்யுரைகள் புகார் செய்யப்பட்டால் பகைமை கொள்கிறான்; எனவே, மன்னன் உரைக்கும் எந்தப் பொய்யையும் மற்றவர்களுக்கு எந்த மனிதனும் வெளிப்படுத்துவது தகாது. தன்னைத் தானே கற்றவன் என்று நினைத்துக் கொள்பவர்களையும் மன்னர்கள் அவமதிக்கிறார்கள். “நான் வீரன், நான் புத்திசாலி" என்று எந்த மனிதனும் பெருமையாக நினைக்கலாகாது. ஆனால் மன்னனின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் ஒருவன், மன்னனின் நற்கருணைகளையும், வாழ்வின் நல்ல காரியங்களையும் அனுபவிக்கிறான்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஏற்புடைய பொருட்களை அடைந்தாலும், அடைவதற்கு அரிதான செல்வத்தை அடைந்தாலும், ஒரு மனிதன் மன்னனுக்கு இனிமையானதையும், இலாபகரமானதையுமே எப்போதும் செய்ய வேண்டும். ஒருவனின் சினத்தால் தடையேற்படும் என்றும், அந்த ஒருவனின் உதவியால் பெரும் கனிகள் {பலன்கள்} கிடைக்கும் எனக் கருதப்படும்போது, ஞானிகளால் மதிக்கப்படும் எந்த மனிதன் அதில் குறும்புத்தனம் {mischief} செய்வான் {தவறிழைப்பான்}? மன்னனின் முன்னிலையில் எந்த மனிதனும் தனது உதடுகளையோ, கரங்களையோ, தொடைகளையோ அசைக்கக்கூடாது. மன்னனின் முன்னிலையில் ஒரு மனிதன் மெதுவாகவே பேசவோ, உமிழவோ {speak and spit} வேண்டும். நகைப்பிற்கிடமான பொருட்களின் முன்னிலையிலும், ஒரு மனிதன் பைத்தியக்காரனைப் போல உரத்த சிரிப்பை வெளிப்படுத்தக் கூடாது. முடிந்த வரை தன்னை அடக்கிக் கொண்டு, (காரணமற்ற) எந்த ஈர்ப்பையும் ஒருவன் ஈர்க்கக்கூடாது. தனது ஆர்வத்தைக் காட்ட ஒருவன் (அவனுக்கு {மன்னனுக்கு} முன்பாக) அடக்கமாகச் சிரிக்க வேண்டும். எப்போதும் மன்னனின் நலத்தை மனதில் கொண்டு, பாராட்டுக் கிடைக்கும்போது மகிழ்ச்சியும், அவமானம் நேரும்போது கீழ்மையும் அடையாமல் இருப்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கத் தகுந்தவனாவான்.

மன்னனையும் அவனது மகனையும், {தனது} ஏற்புடைய {இனிமையான} பேச்சுகளால் எப்போதும் மகிழ்விக்கும், கற்ற அரசவை உறுப்பினனே அரசகுடும்பத்துக்குப் பிடித்தமானவனாக வசிப்பதில் வெற்றிப் பெறுகிறான். அற்ப காரணத்திற்காக அரச உதவியை இழந்த {மன்னனுக்கு {அ} அரச குடும்பத்துக்கு} பிடித்தமான அரசவை உறுப்பினன், மன்னனைக் குறித்துத் தீமையாய்ப் பேசாதிருந்தால், அவன் செழிப்பை மீண்டும் அடைவான். மன்னனுக்குப் பணிவிடை செய்பவனோ, அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவனோ, அறிவு நுட்பமுடையவனாக இருந்தால், மன்னன் இருக்கும்போதும், இல்லாத போதும் அவனைப் {மன்னனைப்} பாராட்டியே பேச வேண்டும். மன்னனின் மீது பலத்தைப் பிரயோகிப்பதன் {The courtier who attempts to obtain his end by employing force on the king} மூலம், ஓர் அரசவை உறுப்பினன் தனது முடிவை எட்டினால், அவனால் நீண்ட காலம் அவனது இடத்தில் இருக்க முடியாது. மேலும், அது மரண ஆபத்தையும் ஏற்படுத்தும். தன்னார்வத்தின் காரணமாக, யாரும், மன்னனின் எதிரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது [3]. அதே போலத் திறன்களிலும், திறமை தேவைப்படும் காரியங்களிலும், மன்னனுக்கு மேலாகத் தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளக்கூடாது.

[3] “வங்கப் பதிப்புகளில், இயந்திரத்தனமாக ராஜ்னா {Rajna} என்று உரைக்கப்படுகிறது. இதை, என்னிடமுள்ள ஒரு பண்டிதரின் கையெழுத்துப் பிரதியில் இலக்கணத்தின் ஆறாம் வேற்றுமை விதியின் படி கண்ட ராஜ்னாஸ் {Rajnas} என்பதை ஏற்றுப் படிக்கிறேன்" என்கிறார் கங்குலி.

எப்போதும் மகிழ்ச்சியுடனும், பலத்துடனும், வீரத்துடனும், உண்மையுடனும் {சத்தியத்துடனும்}, மென்மையுடனும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடனும், தனது தலைவனை {master – முதலாளி, எஜமான்} நிழல் போலப் பின்பற்றும் ஒருவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிக்கும் தகுதியுடையவன் ஆவான். மன்னனின் அரசாட்சிக்குள்ளோ, வெளியிலோ செய்யச் சொல்லி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பணியை அச்சமில்லாமல் மேற்கொள்பவன் மட்டுமே அரச குடும்பத்துடன் வசிப்பதற்குத் தகுதியுடையவன் ஆவான். தனது வீடல்லாமல் வெளியே வாழும் ஒருவன், தனது அன்புக்குரியவர்களை நினைவில் கொள்ளாமல், (எதிர்கால) மகிழ்ச்சியை எதிர்பார்த்து (தற்போதை) துன்பத்தை ஏற்பவன் மட்டுமே அரசகுடும்பத்துடன் வசிப்பதற்குத் தகுயுடையவன் ஆவான்.

ஒருவன் மன்னனைப் போல உடுத்தக்கூடாது; மன்னனின் முன்னிலையில் சிரிப்பில் ஈடுபடக் கூடாது; அரச ரகசியங்களை வெளியிடக்கூடாது. இப்படிச் செயல்பட்டால் ஒருவன் அரச ஆதரவை வெல்ல {பெற} முடியும். ஒரு பணியை நடைமுறைப்படுத்த சொல்லப்படும்போது, அதைச் செய்வதற்காக ஒருவன் கையூட்டைத் {இலஞ்சத்தைத்} தொட்டால் அவன் விலங்கிடப்படவோ, கொல்லப்படவோ நேரிடலாம். மன்னன் அளிக்க விரும்பும் ஆடைகள், ஆபரணங்கள், தேர்கள் மற்றும் இன்ன பிற பொருட்களே பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் அரச ஆதரவை ஒருவன் வெல்லலாம். குழந்தைகளே, பாண்டுவின் மகன்களே {பாண்டவர்களே}, உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி, இவ்வழியில் நடந்து,  இந்த ஒரு வருடத்தைக் கழிப்பீர்களாக! பிறகு உங்கள் நாட்டை மீட்டு, நீங்கள் விரும்பியவாறு வாழலாம்" என்றார் {தௌமியர்}.

யுதிஷ்டிரன் {தௌமியரிடம்}, “உம்மால் நாங்கள் நன்கு கற்றுள்ளோம். நீர் அருளப்பட்டிரும். உம்மைத் தவிர, எங்கள் தாய் குந்தியோ, பெரும் ஞானம் கொண்ட விதுரரோ கூட எங்களுக்கு இப்படிச் சொல்ல முடியாது. இத்துயரில் இருந்து பாதுகாப்பாக வர எங்களை இயன்றவராக்குவதற்கும், எதிரிகளை நாங்கள் வெல்வதற்கும், இப்போது நாங்கள் புறப்படுவதற்கும் வேண்டிய அவசியமான அனைத்தையும் செய்வதே உமக்குத் தகும்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி யுதிஷ்டிரன் சொன்னதும், அந்தணர்களில் சிறந்த தௌமியர், புறப்படும் வேளையில் விதிகளின் படி செய்யப்படும் சடங்கைச் செய்தார். அவர்களது நெருப்பை ஏற்றி, பாண்டவர்கள் செழிப்படையவும், வெல்லவும், மீண்டும் உலகனைத்தையும் வெல்லவும் மந்திரங்களின் மூலம் அவர் {தௌமியர்} காணிக்கை அளித்தார். பிறகு அந்த நெருப்புகளையும், துறவை செல்வமாகக் கொண்ட அந்தணர்களையும் வலம் வந்த அந்த ஆறுபேரும், *யக்ஞசேனியை {திரௌபதியை} முன்னிறுத்தி புறப்பட்டுச் சென்றனர். அந்த வீரர்கள் அப்படிப் புறப்பட்டுச் சென்ற போது, துறவிகளில் சிறந்த தௌமியர், அவர்களது புனித நெருப்புகளை எடுத்துக் கொண்டு பாஞ்சாலர்களிடத்திற்கு {பாஞ்சால நாட்டிற்கு} புறப்பட்டார். {தேரோட்டி} இந்திரசேனனும், முன்பே குறிப்பிடப்பட்ட பிறரும் யாதவர்களிடம் சென்றனர். பாண்டவர்களின் தேர்களையும், குதிரைகளையும் பார்த்துக் கொண்டு அவர்கள், மகிழ்ச்சியுடனும், தனியுரிமையுடனும் தங்கள் காலத்தைக் கடத்தினர்.

***************************************************************************
*யக்ஞசேனியை {திரௌபதியை}

 திரௌபதி = துருபதன் மகள்  
  துருபதா
D
R
U
P
A
D
A
  திரௌபதி
D
RA
U
P
A
D
I

daughter of king Drupada = Draupadi
வேறு சில பெயர்கள்:
1. கிருஷ்ணை {கருப்பி / கருப்பானவள்}
2. பாஞ்சாலி {பாஞ்சால நாட்டின் இளவரசி}
3. யக்ஞசேனி {யக்ஞசேனன் {துருபதன்} மகள்} 



மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
மஹாபாரதப் பாத்திரங்களின் பெயர்க்காரணங்கள்
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்