Friday, December 05, 2014

உத்தரனை இழுத்து வந்த அர்ஜுனன்! - விராட பர்வம் பகுதி 38

Arjuna dragged back Uttara! | Virata Parva - Section 38 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 13)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண




பதிவின் சுருக்கம் : கௌரவப் படையைக் கண்ட உத்தரன் அஞ்சி ஓடுவது; கௌரவர்கள் பிருஹந்நளையே அர்ஜுனன் எனச் சந்தேகம் கொள்வது; ஓடும் உத்தரனை அர்ஜுனன் இழுத்து வருவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நகரத்தில் இருந்து வெளியே வந்த அச்சமற்ற விராடனின் மகன் {உத்தரன்}, தனது தேரோட்டியிடம் {பிருஹந்நளையிடம்}, “குருக்கள் {கௌரவர்கள் } எங்கே இருக்கிறார்களோ, அங்கே செல். வெற்றியை விரும்பி இங்கே கூடியிருக்கும் குருக்களை வீழ்த்தி, எனது பசுக்களை அவர்களிடமிருந்து மீட்ட பிறகே, எனது தலைநகரத்திற்கு நான் திரும்புவேன்” என்றான். இளவரசனின் {உத்தரனின்} இந்தச் சொற்களைக் கேட்ட, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, குதிரைகளை விரைந்து நடத்தினான். காற்றின் வேகம் கொண்டவையும், தங்க அட்டிகைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், மனிதர்களில் சிங்கத்தால் {அர்ஜுனனால்} நடத்தப்பட்டவையுமான அக்குதிரைகளைப் பார்க்க காற்றில் பறப்பன போலத் தெரிந்தன.


வெகுதூரம் செல்வதற்கு முன்னரே அந்த எதிரிகளை அடிப்பவர்களான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, மத்ஸ்யனின் மகனும் {உத்தரனும்}, பலமிக்கக் குருக்களின் {கௌரவர்களின்} படையைக் கண்டனர். மயானத்தை நோக்கிச் செல்லும் வழியில், அவர்கள் {அர்ஜுனனும், உத்தரனும்} போருக்காக அணிவகுத்திருக்கும் குருக்களின் {கௌரவர்களின்} படையைக் கண்டனர். பெருந்திரளான கடலைப் போலவும், எண்ணிலடங்கா மரங்களுடன் வானத்தில் நகரும் காட்டைப் போலவும் அந்தப் பெருஞ்சேனை தெரிந்தது. ஓ! குருக்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அந்தப் படை நகர்ந்ததால் ஏற்பட்ட புழுதிப்படலம் வானத்தை அடைந்து, அனைத்து உயிரினங்களின் பார்வையையும் தடை செய்தது.

யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த அந்தப் பெரும்படை, கர்ணனாலும், துரியோதனனாலும், கிருபராலும், சந்தனுவின் மகனாலும் {பீஷ்மராலும்}, புத்திசாலியும் பெரும் வில்லாளியுமான துரோணராலும், அவரது மகனாலும் {அஸ்வத்தாமனாலும்} பாதுகாக்கப்படுவதைக் கண்ட விராடனின் மகன் {உத்தரன்} அச்சத்தால் பீதியடைந்து, தன்னுடலில் இருந்த முடிகள் அனைத்தும் முனைவரை முள் போல நீண்டு நிற்க {மயிர்க்கூச்சுடன் = புளகத்துடன்} பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிட நான் துணியேன். என் உடல் புளகமடைவதைப் {மயிர் சிலிர்ப்பதைப்} பார். கடுமை மிகுந்தவர்களும், தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாதவர்களுமான எண்ணிலடங்கா போர்வீரர்கள் நிறைந்த குருக்களின் படையோடு போரிட எனக்குத் தகுதி கிடையாது. குதிரைகளும், யானைகளும், தேர்களும், காலாட்படைவீரர்களும், பதாகைகளும் நிறைந்ததும், பயங்கர வில்லாளிகளைக் கொண்டதுமான பாரதர்களின் படைக்குள் ஊடுருவ நான் முயலமாட்டேன். போர்களத்தில் நிற்கும் துரோணர், பீஷ்மர், கிருபர், கர்ணன், விவிம்சதி, அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன், பாஹ்லிகன், ரதவீரர்களில் முதன்மையான வீரமன்னன் துரியோதனன் மற்றும் போரில் நிபுணத்துவம் வாய்ந்த இன்னும் பிற அற்புத வில்லாளிகளை, போர்க்களத்தில் நிற்கும் எதிரிகளாகக் கண்டமாத்திரத்தில், என் மனம் மிகவும் கவலை கொள்கிறது. அடிப்பவர்களான இந்தக் குருக்கள் {கௌரவர்கள்}, போர்க்களத்தில் அணிவகுத்து நிற்பதைக் கண்டதும் மயிர்ச்சிலிர்ப்புடன் கூடிய அச்சத்தை நான் அடைகிறேன்” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இழிந்த மனம் கொண்ட மூடனான உத்தரன், மடத்தனத்தால் (தேரோட்டியாக) வேடந்தரித்திருந்த உயர் ஆன்மா கொண்டவனின் (அர்ஜுனனின்) முன்னிலையில், (தனது விதியை நினைத்துப்) புலம்பத் தொடங்கினான். அவன் {உத்தரன்}, “வெறுமையான நகரத்தை மட்டும் எனக்கு விட்டுவிட்டு, முழுப் படையையும் அழைத்துக் கொண்டு திரிகார்த்தர்களைச் சந்திக்க எனது தந்தை சென்றுவிட்டார். எனக்கு உதவி செய்ய எந்தத் துருப்புகளும் இல்லை. சிறுவனும், தனியாக இருப்பவனும், ஆயுதங்களில் அதிகப் பயிற்சி இல்லாதவனுமான {உத்தரனாகிய} நான், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்ட எண்ணிலடங்கா வீரர்களுடன் மோத இயலாதவனாக இருக்கிறேன். எனவே, ஓ! பிருஹந்நளா, முன்னேறுவதை நிறுத்து!” என்றான் {உத்தரன்}.

அதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் உத்தரனிடம்}, “அச்சத்தால் வெளிறிப்போய், உன்னுடைய எதிரிகளின் மகிழ்ச்சியை நீ ஏன் அதிகரிக்கிறாய்? போர்க்களத்தில், எதிரிகளிடம் நீ எக்காரியத்தையும் இன்னும் செய்யவில்லை. “கௌரவர்களிடம் என்னை அழைத்துச் செல்” என்று நீயே எனக்குக் கட்டளையிட்டாய். எனவே, அதோ எண்ணிலடங்கா கொடிகள் இருக்கும் அந்த இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {உத்தரா}, ஊனுக்காகப் {இறைச்சிக்காகப்} போரிடும் பருந்துகளைப் போல, உனது பசுக்களுக்காகப் போரிடத் தயாராக இருக்கும் எதிரிகளான குருக்களுக்கு {கௌரவர்களுக்கு} மத்தியில் நான் உன்னை நிச்சயம் அழைத்துச் செல்வேன். பூமியின் ஆட்சியைக் கோருவதான உயர்ந்த நோக்கத்துக்காக அவர்கள் வந்திருந்தாலும், நான் அதையே செய்வேன்.

புறப்படும்போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பெரும் ஆண்மையுடன் பேசிவிட்டு, இப்போது போரில் இருந்து ஏன் விலகுகிறாய்? பசுக்களை மீட்காமல் நீ வீடு திரும்பினால், வீரமிக்க ஆண்களும், ஏன் பெண்களும்கூட அவர்களுக்குள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது உன்னைச் சொல்லி (ஏளனமாகச்) சிரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, தேரோட்டுவதில் எனக்கிருக்கும் திறன் குறித்துச் சைரந்திரி {மாலினி} உயர்வாகச் சொல்லி பாராட்டியிருக்கிறாள் (அதற்காகவே நான் வந்தேன்). எனவே, குருக்களிடம் {கௌரவர்களிடம்}, நான் ஏன் போரிடக்கூடாது? (உன்னைப் பொறுத்தவரை) நீ உறுதியுடன் நில் {போதும்}.” என்றாள் {பிருஹந்நளை}.

உத்தரன் {பிருஹந்நளாவிடம்}, “மத்ஸ்யர்களின் செல்வமனைத்தையும் குருக்கள் கொள்ளையிடட்டும். ஓ! பிருஹந்நளா, ஆண்களும் பெண்களும் என்னைக் கண்டு சிரிக்கட்டும். எனது பசுக்கள் அழியட்டும், எனது நகரம் பாலைவனமாகட்டும். நான் எனது தந்தையின் முன் வெளிப்பட்டு நின்றாலும்கூட, போருக்கான தேவை எதுவும் {எனக்கு} இல்லை” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அச்சமுற்ற இளவரசன் {உத்தரன்} இதைச் சொல்லிவிட்டு, தேரில் இருந்து குதித்து, வில்லையும் அம்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு மதிப்பையும் பெருமையையும் துறந்து ஓடத்தொடங்கினான். எனினும், பிருஹந்நளன் {உத்தரனிடம்}, “போர்க்களத்தில் இருந்து ஓடுவது, வீரமிக்க க்ஷத்திரியர்களின் செயலன்று. பயத்தில் ஓடுவதைவிடப் போர்க்களத்தில் ஏற்படும் மரணமே சிறந்தது” என்று உரத்துச் சொன்னான். இதைச் சொன்ன குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, {களத்தைவிட்டு} ஓடிவிட்ட இளவரசனைத் தொடர்ந்து {செல்லும் பொருட்டு}, தனது நீண்ட பின்னலும், சுத்தமான சிவந்த ஆடைகளும் காற்றில் படபடக்கும்படி, அந்த அற்புதமான தேரில் இருந்து இறங்கி {உத்தரனைப் பின்தொடர்ந்து} ஓடினான்.

இப்படி, பின்னல் காற்றில் படபடக்க ஓடிக்கொண்டிருப்பது அர்ஜுனன் என்பதை அறியாத சில போர்வீரர்கள், இக்காட்சியைக் கண்டு வெடித்துச் சிரித்தனர். அவன் {அர்ஜுனன்} இப்படி ஓடிக்கொண்டிருப்பதைக் கண்ட குருக்கள் {கௌரவர்கள்}, “சாம்பலுக்குள் மறைந்திருக்கும் நெருப்பு போல, {இப்படி} வேடம்பூண்டிருக்கும் இந்த மனிதன் யார்? இவன் பகுதி {சிறிது} ஆணாகவும், பகுதி {சிறிது} பெண்ணாகவும் இருக்கிறானே. அலியின் உருவத்தைத் தாங்கியிருந்தாலும், இவன் அர்ஜுனனைப் போல இருக்கிறானே. இவனது தலைகளும், கழுத்தும், கதாயுதங்களைப் போன்ற இரு கரங்களும் அவனைப் {அர்ஜுனனைப்} போலவே உள்ளன. இவனது நடையும் அவனைப் {அர்ஜுனனைப்} போலவே உள்ளது. தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தவிர இவன் வேறு யாரும் அல்ல.

மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் அர்ஜுனன், தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்திரனைப் போன்றவனாவான். தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தவிர வேறு எவன் நமக்கு எதிராகத் தனியாக வருவான்? தனது ஒரு மகனை மட்டுமே விராடன் அந்த வெறும் நகரத்தில் விட்டுச் சென்றான். அவன் {அந்த மகன்} வீரத்தாலல்ல, சிறுபிள்ளைத்தனத்தால் வெளியே வந்திருக்கிறான். நகரத்தை விட்டு வெளியே வந்தவன் உத்தரனாக இருக்க வேண்டும். இப்போது மாறுவேடத்தில் இருக்கும் பிருதையின் மகனான அர்ஜுனனை, அவன் {உத்தரன்} தேரோட்டியாக வரித்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நமது படையைக் கண்ட அவன் {உத்தரன்} பீதியடைந்து ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவனைத் திரும்பிக் கொண்டுவரவே, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஓடிக்கொண்டிருக்கிறான் என்பதில் ஐயமில்லை” என்று {கௌரவர்கள்} தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மாறுவேடத்தில் இருக்கும் பாண்டுவின் மகனைக் கண்ட கௌரவர்கள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, இந்த உத்தேசக் கணிப்பீடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினர். ஆனால், அவர்களால் திட்டவட்டமாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அதே வேளையில் புறமுதுகிட்டு ஓடிய உத்தரனைத் தொடர்ந்து, விரைந்து சென்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு நூறு அடிகள் எடுத்து வைப்பதற்குள் அவனது தலைமுடியைப் பற்றினான். அர்ஜுனனால் பிடிக்கப்பட்ட விராடனின் மகன் {உத்தரன்}, பெரும் துன்பத்தில் இருப்பவனைப் போல மிகவும் வருந்திப் புலம்பத் தொடங்கி, “ஓ! நல்ல பிருஹந்நளா, ஓ! அழகிய இடை கொண்டவளே கேள். தேரின் பாதையை விரைந்து திருப்பு. எவன் {உயிருடன்} வாழ்கிறானோ, அவனே செழிப்பைச் சந்திக்கிறான் {அடைகிறான்}. பசும்பொன்னாலான நூறு நாணயங்களையும் {பொற்காசுகளையும்}, பொன்னால் இழைக்கப்பட்ட எட்டு பிரகாசமான வைடூரியங்களையும், அற்புத குதிரைகளால் இழுக்கப்படும் தங்கக் கொடிக்கம்பமுடைய ஒரு தேரையும், பராக்கிரமம் மிக்கப் பத்து அராளங்களையும் {மதயானைகளையும்} நான் உனக்குத் தருகிறேன். ஓ! பிருஹந்நளா, என்னை விட்டு விடு” என்றான் {உத்தரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “{உத்தரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்} சிரித்துக் கொண்டே, கிட்டத்தட்ட உணர்வை இழந்து, இச்சொற்களைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த உத்தரனைப் பிடித்துத் தேரை நோக்கி இழுத்து வந்தான். பிறகு, அச்சத்தால் உணர்வை இழக்கும் தருவாயில் இருந்த அந்த இளவரசனிடம் {உத்தரனிடம்}, பிருதையின் மகன் {அர்ஜுனன்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, எதிரியிடம் போரிட உனக்குத் துணிவில்லையென்றால், நான் எதிரியிடம் போரிடுவதற்கேதுவாக வந்து குதிரைகளின் கடிவாளத்தைப் பிடி. வீரர்களாலும், வலிமைமிக்கவர்களாலும் பாதுகாக்கப்பட்டு, வலிமைமிக்கதாகவும், வெல்லமுடியாததாகவும் இருக்கும் தேர்களின் ஒப்பற்ற வரிசையிருக்கும் அவ்விடத்திற்கு, எனது கரங்களின் பலத்தால் உண்டான பாதுகாப்புடன் ஊடுருவிச் செல்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {உத்தரா}, அஞ்சாதே, நீ ஒரு க்ஷத்திரியன். மேலும் நீ ஓர் அரசின் இளவரசர்களில் முதன்மையானவனுமாவாய். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, எதிரிகளின் மத்தியில் நீ ஏன் அடங்கிச் செல்கிறாய்? நான் நிச்சயம் குருக்களுடன் {கௌரவர்களுடன்} போரிட்டு, வல்லமைமிக்கதும், அணுக இயலாததுமான தேர்களின் வரிசைக்குள் ஊடுருவிச் சென்று, பசுக்களை மீட்பேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உத்தரா}, நான் குருக்களுடன் போரிடுவேன். நீ எனது தேரோட்டி ஆவாயாக” என்றான் {அர்ஜுனன்}. இப்படி விராடனின் மகனான உத்தரனிடம் பேசியவனும், இதுவரை போரில் வீழாதவனுமான பீபத்சு {பீபத்சு-அர்ஜுனன்}, சிறிது நேரம் அவனைத் {உத்தரனைத்} தேற்றினான். பிறகு, பயத்தால் பீதியுற்று, மயக்கமும் தயக்கமும் கொண்ட இளவரசனை {உத்தரனை}, அடிப்பவர்களில் முதன்மையான அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} தேரில் ஏற்றினான்” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்