Friday, December 26, 2014

பகடைக்காயால் யுதிஷ்டிரனை அடித்த விராடன்! - விராட பர்வம் பகுதி 67

Yudhishthira was struck with dice by Virata! | Virata Parva - Section 67 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 42)






பதிவின் சுருக்கம் : திரிகார்த்தர்களை வீழ்த்திய பிறகு, விராடன் தனது நகருக்குத் திரும்புவது; உத்தரன் குருக்களை எதிர்த்துத் தனியாகச் சென்றிருப்பதை அறிந்து வருந்துவது; பிருஹந்நளன் உடன் சென்றிருந்ததால் வருந்த வேண்டாம் என்று கங்கராக இருக்கும் யுதிஷ்டிரன் விராடனிடம் சொல்வது; உத்தரன் வென்றான் என்ற செய்தியை விராடன் கேள்விப்பட்டு மகிழ்வது; கங்கரை விராடன் சூதாட அழைப்பது; சூதாடும்போது தனது மகன் உத்தரனை விராடன் புகழ்வது; பிருஹந்நளனே அதற்குக் காரணம் என்பது போலக் கங்கரான யுதிஷ்டிரன் சொல்வது; கோபமடையும் விராடன் யுதிஷ்டிரனைப் பகடைக் காய்களால் தாக்குவது; யுதிஷ்டிரனின் மூக்கில் இருந்து இரத்தம் வழிவது; அதைத் திரௌபதி பிடிப்பது;...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விரைவாகத் தனது செல்வத்தை மீட்ட விராடன், நான்கு பாண்டவர்களின் துணையோடு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், பெரும்படையுடனும் தனது நகரத்திற்குள் நுழைந்தான். போரில் திரிகார்த்தர்களை வீழ்த்தி, பசுக்களை மீட்ட அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {விராடன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன்  சேர்ந்து பிரகாசமடைந்து, அழகில் ஒளிர்ந்தான். நண்பர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்துபவனான அந்த வீரமிக்க மன்னன் {விராடன்}, தனது அரியணையில் அமரந்ததும், அந்தணர்களின் தலைமையிலான அவனது குடிமக்கள் அவன் {விராடன்} முன் வந்து நின்றனர். அவர்களால் வழிபடப்பட்ட மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்}, தனது படையின் தலைமையில் நின்று, அந்த அந்தணர்களையும், குடிமக்களையும் பதிலுக்கு வணங்கி, அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தனுப்பினான். பெரிய படையைக் கொண்டவனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், உத்தரனைக் குறித்து விசாரிக்கும் வகையில், “உத்தரன் எங்கே சென்றிருக்கிறான்?” என்று கேட்டான்.


அரண்மனையில் இருந்த பெண்களும், கன்னிகைகளும், அந்தப்புரத்தில் வாழ்ந்த மற்ற மகளிரும், அவனிடம் {விராடனிடம்}, மகிழ்ச்சியுடன், “நமது பசுக்களைக் குருக்கள் {கௌரவர்கள்} கைப்பற்றினர். இதனால் கோபமுற்ற பூமிஞ்சயன் {உத்தரன்}, அந்தக் குரு {கௌரவப்} படையுடன் வந்திருக்கும் சந்தனுவின் மகன் பீஷ்மர், கிருபர், கர்ணன், துரியோதனன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய ஆறு பலமிக்கத் தேர்வீரர்களை வீழ்த்த எண்ணி, மிகுந்த துணிச்சலுடன், பிருஹந்நளையைத் துணைக்கழைத்துக் கொண்டு, தனியாகச் சென்றிருக்கிறான்” என்றனர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஒரே தேருடன், பிருஹந்நளையைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, தனது வீர மகன் {உத்தரன்} சென்றிருப்பதைக் கேட்ட மன்னன் விராடன், துயரில் மூழ்கி, தனது தலைமை ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்}, “திரிகார்த்தர்களின் தோல்வியை அறிந்த கௌரவர்களும், பூமியின் பிற தலைவர்களும் தங்கள் நிலையில் நிற்க மாட்டார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே, திரிகார்த்தர்களால் காயங்கொள்ளாத எனது பிற வீரர்கள், இந்தப்பெரும்படையைத் துணைக்கழைத்துக் கொண்டு உத்தரனின் பாதுகாப்புக்காகச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.

இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்களைத் தனது மகனுக்காக விரைந்து அனுப்பினான். பெரும்படைக்குச் சொந்தக்காரனான மத்ஸ்யர்கள் மன்னன் விராடன், இப்படியே, நால்வகைத் துருப்புகளைக் கொண்ட தனது படையின் பெரும்பிரிவை விரைந்து செல்ல கட்டளையிட்டான். இதைச் செய்த பிறகு, அவன் {விராடன்}, “இளவரசன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதைத் தாமதிக்காமல் அறியுங்கள்! அலியைத் தேரோட்டியாகக் கொண்டு சென்றிருக்கும் ஒருவன் உயிரோடு இருக்க மாட்டான் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், துன்பத்திலிருந்த மன்னன் விராடனிடம், சிரித்துக் கொண்டே, “ஓ! ஏகாதிபதி {விராடரே}, பிருஹந்நளன் அவனது {உத்தரனது} தேரோட்டியாகச் சென்றிருந்தால், உமது பசுக்களை எதிரியால் இன்று கைப்பற்ற இயலாது. அந்தத் தேரோட்டியால் பாதுகாக்கப்படும் உமது மகன், குருக்களுடன் கூடி வரும் பூமியின் அனைத்து தலைவர்களையும், ஏன், தேவர்களோ, அசுரர்களோ, சித்தர்களோ, யக்ஷர்களோ உண்மையில் வந்தால் கூட, அவர்களையும் போரில் வீழ்த்தவல்லவனாவான்”, என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதே வேளையில், உத்தரனால் அனுப்பப்பட்ட, வேகமான பாதங்களைக் கொண்ட தூதர்கள், விராடனின் நகரத்தை அடைந்து, வெற்றிச் செய்தியைத் தந்தனர். பிறகு தலைமை அமைச்சர், பெரும் வெற்றி அடையப்பட்டதையும், உத்தரனின் வருகை ஆகிய அனைத்தையும் மன்னனிடம் {விராடனிடம்} தெரிவித்தார். அவர் {தலைமை அமைச்சர்}, “அனைத்துப் பசுக்களும் திரும்பக் கொண்டு வரப்பட்டன, குருக்கள் வீழ்த்தப்பட்டனர். எதிரிகளைக் கொல்பவனான உத்தரனும், அவனது தேரோட்டியும் {உடல்நலத்துடன்} நன்றாக இருக்கின்றனர்” என்றார். பிறகு யுதிஷ்டிரன் {மன்னன் விராடனிடம்}, “நற்பேறாலேயே, பசுக்கள் மீட்கப்பட்டு, குருக்கள் {கௌரவர்கள்} முறியடிக்கப்பட்டுள்ளனர். எனினும், பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்டவனுக்கு வெற்றி உறுதி என்பதால், உமது மகன் {உத்தரன்}, குருக்களை {கௌரவர்களை} வீழ்த்தியதை நான் வியப்பாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா பலம் கொண்ட தனது மகன் {உத்தரன்} அடைந்த வெற்றியைக் கேட்ட மன்னன் விராடன், மயிர்சிலிர்க்கும் வண்ணம் மகிழ்ச்சியை அடைந்தான். தூதர்களுக்கு ஆடைகளைப் பரிசாக வழங்கிய பிறகு, அவன் தனது அமைச்சர்களிடம், “நெடுஞ்சாலைகள் {ராஜபாட்டைகள்} கொடிகளால் அலங்கரிக்கப்படட்டும், மலர்க்காணிக்கைகளால் அனைத்து தேவர்களும், தேவிகளும் வழிபடப்படட்டும். இளவரசர்களும், துணிவுமிக்க வீரர்களும், இசைக்கலைஞர்களும், கணிகையரும் {பொதுமகள் = வேசி = harlots} வெளியே அணிவகுத்து எனது மகனை வரவேற்கட்டும். கிங்கரர்கள் {மணியாட்டிகள் – bellmen}, மதங்கொண்ட யானைகளில் விரைந்து சென்று, நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் எனது வெற்றியை அறிவிக்கட்டும். கன்னியராலும், துதிபாடுவோராலும் சூழப்பட்டு, அழகான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்ட {எனது மகள்} உத்தரையும், எனது மகனை {உத்தரனை} எதிர்கொண்டழைக்கச் செல்லட்டும்” என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}  தொடர்ந்தார், “மன்னனின் இச்சொற்களைக் கேட்ட குடிமக்கள் அனைவரும், தங்கள் கைகளில் மங்கலகரமான பொருட்களுடன் சென்றார்கள். அவர்களில் பலர் கைத்தாளங்களுடனும் {வெண்கலத்தாளம்}, பூரிகைகளுடனும், சங்குகளுடனும் சென்றார்கள். அழகான ஆடைகள் உடுத்திய அழகிய பெண்டிரும், துதிபாடுவோரும், புனித பாடல்களைப் பாடுவோரும், முகமன் கூறுவோரும் {encomiasts}, பாணபத்திரரும் {minstrels}, பேரிகையிசைப்பவர்களும், இன்னும் பிறவகை இசைக்கலைஞர்களும் அளவிலா பராக்கிரமம் கொண்ட உத்தரனை வரவேற்பதற்காக, வலிமைமிக்க விராடனின் நகரத்தில் இருந்து வெளியே வந்தனர். துருப்புகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கன்னியரையும், கணிகையரையும் {வேசிகளையும்} அனுப்பிய பிறகு, விவேகம் நிறைந்த மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} மகிழ்ச்சியுடன், “ஓ! சைரந்திரி {மாலினி}, பகடையைக் கொண்டு வா. ஓ! கங்கரே, ஆட்டம் ஆரம்பமாகட்டும்” என்றான். அதற்குப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, “மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்டவன், தந்திரமான ஒரு சூதாடியுடன் விளையாடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை நாம் கேள்விப்படுகிறோம். எனவே, மகிழ்ச்சியாக இருக்கும் உம்முடன் நான் சூதாடத் துணிய மாட்டேன். எப்போதும் நான் உமக்கு நன்மையே செய்ய விரும்புகிறேன். எனினும், உமக்கு விருப்பமுண்டானால் விளையாட்டு ஆரம்பிக்கட்டும்” என்றான்.

அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நான் சூதாடாவிட்டாலும், எனது அடிமைப்பெண்கள், பசுக்கள், தங்கம், மற்றும் நான் கொண்டுள்ள அனைத்துச் செல்வங்கள் ஆகிய இவை யாவற்றையும் உம்மால் இன்று காக்க முடியாது” என்றான். அதற்குக் கங்கன் {யுதிஷ்டிரன் விராடனிடம்}, “ஓ! ஏகாதபதி, ஓ! வெகுமதிகள் அளிப்பவரே {விராடரே}, எண்ணற்ற தீமைகள் நிறைந்த சூதாட்டத்தால் உமக்கு என்ன பயன்? சூதாட்டம் பல தீமைகளைக் கொண்டது; எனவே, அதை விலக்க வேண்டும். பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரை நீர் பார்த்திருக்கலாம், அல்லது {அவரைக் குறித்துக்} கேட்டிருக்கலாம். அவர், தனது விரிந்த செழிப்பான நாட்டையும், தேவர்களைப் போன்ற தம்பிகளையும் பகடையால் இழந்தார். இதற்காகவே, நான் சூதாடத் தயங்குகிறேன். ஆனால் நீர் விரும்பினால், ஓ! மன்னா {விராடரே}, நான் விளையாடுவேன்” என்று பதிலளித்தான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விளையாட்டு நடந்து கொண்டிருந்த போது, மத்ஸ்யன் {விராடன்}, அந்தப் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “பாரும், பெரும் வல்லமை கொண்ட கௌரவர்களை எனது மகன் {உத்தரன்} போரில் வீழ்த்திவிட்டான்” என்றான். அதற்குச் சிறப்புமிக்க மன்னனான யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “பிருஹந்நளனைத் தேரோட்டியாகக் கொண்ட அவன் {உத்தரன்} ஏன் வெல்லமாட்டான்?” என்று கேட்டான்.

இப்படிச் சொல்லப்பட்டதும், மிகுந்த கோபம் கொண்ட மத்ஸ்ய மன்னன் {விராடன்}, பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தணர்களில் இழிந்தவனே, அலியோடு எனது மகனை ஒப்பிடுகிறாயா? ஒருவரிடம் எதைச் சொல்வது சரி, எது சரியன்று என்ற அறிவு உனக்கில்லையா? நீ என்னை அவமதிக்கிறாய் என்பதில் ஐயமில்லை. பீஷ்மரையும், துரோணரையும் தலைவர்களாகக் கொண்ட அவர்களை {கௌரவர்களை} எனது மகன் ஏன் வீழ்த்த முடியாது? ஓ! பிராமணா {கங்கா}, நட்பால் மட்டுமே, நான் உனது இக்குற்றத்தை மன்னிக்கிறேன். எனினும், நீ வாழ விரும்பினால் {உயிரோடிருக்க விரும்பினால்} மீண்டும் அவ்வாறு சொல்லாதே” என்றான் {விராடன்}.

யுதிஷ்டிரன் {விராடனிடம்},  “பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விகர்த்தனன் மகன் {கர்ணன்}, கிருபர், மன்னர் துரியோதனன் மற்றும் பிற பலமிக்க அரசர்களான தேர்வீர்கள் கூடியிருந்தாலும், மருதர்களால் சூழப்பட்ட இந்திரனே கூட இருந்தாலும், அவர்கள் அனைவரிடமும் மோதிப் போரிட பிருஹந்நளனைத் தவிர வேறு எந்த மனிதனால் முடியும்? கரங்களின் வலிமையில் அவனுக்கு நிகர் யாரும் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை! உண்மையில், ஒரு பயங்கரப் போரைப் பார்க்கும்போதும் பிருஹந்நளனின் இதயமே மகிழ்ச்சியில் நிறையும். தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் கூடி வந்த போதும் அவனே அவர்களை வீழ்த்தியிருக்கிறான். அப்படிப் பட்ட ஒருவனைக் கூட்டாளியாகக் கொண்டிருப்பவனான உமது மகன் {உத்தரன்}, ஏன் எதிரியை வெல்லக் கூடாது?” என்றான். அதற்கு விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “மீண்டும் மீண்டும் தடுத்தும் நீ உனது நாவை அடக்க மறுக்கிறாய். தண்டிக்க எவரும் இல்லையாயின், யாரும் அறம் பயிலமாட்டார்கள்” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன் {விராடன்}, கோபத்தால் எரிந்து, பகடைக் காயால் யுதிஷ்டிரனை வலிந்து அடித்து, அவனை நிந்தித்தபடி, “இது மீண்டும் நடவாதிருக்கட்டும்!” என்றான். இப்படிக் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அவனது {யுதிஷ்டிரனின்} மூக்கில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. ஆனால், அது தரையில் விழும் முன்னரே குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அதைத் தனது கைகளில் பிடித்தான். பிறகு தன்னருகே நின்று கொண்டிருந்த திரௌபதியை அறம் சார்ந்த அந்த யுதிஷ்டிரன் பார்த்தான். தனது தலைவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படிபவளான களங்கமற்ற திரௌபதி, {அந்தப் பார்வையின்} பொருளை உணர்ந்து, நீர் நிறைந்த ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொண்டுவந்து, அவனது {யுதிஷ்டரனின்} மூக்கில் இருந்து வழிந்த இரத்ததைப் பிடித்தாள் [1].

[1] மெலிதான மேலாடையால் இரத்ததை ஏந்தி, தங்கப் பாத்திரத்தில் அதைப் பிழிந்தாள் என்றும், அப்போது திரௌபதி விராடனிடம், கங்கரின் இரத்தம் எத்தனை துளிகள் தரையில் விழுகின்றனவோ, அத்தனை வருடங்கள் அவனது நாட்டில் மழையில்லாமல் போய்விடும் என்பதால்தான் தான் அந்த இரத்தத்தைப் பிடிப்பதாகச் சொல்வதாகவும் வேறு பதிப்புச் சொல்கிறது.

அதே வேளையில், பலவிதமான இனிய நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் ஊக்கப்படுத்தப்பட்ட உத்தரன், குடிமக்களாலும், பெண்களாலும், மாகாணங்களின் மக்களாலும் வரவேற்கப்பட்டு, மெதுவாக நகரத்திற்குள் நுழைந்தான். அரண்மனையின் வாயிலை அடைந்த அவன் {உத்தரன்}, தனது வருகையைக் குறித்துத் தனது தந்தைக்கு {மன்னன் விராடனுக்குச்} செய்தி அனுப்பினான். பிறகு மன்னனை அணுகிய சுமைதூக்கி {porter} {வாயில் காப்போன் = gatekeeper} ஒருவன், “பிருஹந்நளையைத் துணையாகக் கொண்ட உமது மகன் உத்தரன் வாயிலில் காத்திருக்கிறான்” என்றான். மத்ஸ்ய மன்னன் {விராடன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம், “நான் அவர்களைக் காண ஆவலுடன் இருப்பதால், அவர்கள் இருவரையும் இங்கே வரவேற்று அழைத்துவா” என்றான்.

பிறகு, குருக்களின் மன்னனான யுதிஷ்டிரன், {அந்தப்} பாதுகாவலனின் காதுக்கருகில் மெதுவாக, “உத்தரன் மட்டும் உள்ளே வரட்டும். பிருஹந்நளன் உள்ளே வரக்கூடாது. போரிலின்றி வேறு நேரத்தில் எவன் என் மேனியில் காயமேற்படுத்தவோ, இரத்தம் சிந்தவோ செய்கிறானோ, அவன் உயிருடன் இருக்க மாட்டான் என்பது அந்த வலிய கரங்கள் கொண்ட வீரன் {பிருஹந்நளன்} ஏற்றிருக்கும் நோன்பாகும். {இதைக் கண்டால்} ஆத்திரத்தில் அழற்சியுறும் அவன், நான் இரத்தம் சிந்துவதைப் பார்க்கப் பொறாமல் {பொறுக்க முடியாமல்}, ஆலோசகர்கள், துருப்புகள், குதிரைகளுடன் சேர்த்து விராடரையும் இப்போதே கொன்று விடுவான்” என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்