Tuesday, June 30, 2015

குருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணனின் சங்கொலி! - உத்யோக பர்வம் பகுதி 152

The conch blare of Krishna in Kurukshetra! | Udyoga Parva - Section 152 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் – 81) {சைனியநிர்யாண பர்வம் -2}

பதிவின் சுருக்கம் : பாண்டவப் படை குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் சென்றதையும், உபப்லாவ்யத்தில் அவர்கள் செய்து சென்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வைசம்பாயனர் விவரிப்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கிருஷ்ணன் இதைச் சொன்னதும் அனைத்து ஏகாதிபதிகளும் மகிழ்ச்சியில் நிறைந்தனர். மகிழ்ச்சியடைந்த மன்னர்கள் அனைவராலும் எழுப்பப்பட்ட ஒலி பேரொலியாக {பிரம்மாண்டமானதாக} இருந்தது. "அணிவகுப்பீராக, அணிவகுப்பீராக" என்று சொல்லி அத்துருப்புகள் பெரும் வேகத்துடன் நகரத் தொடங்கின. எங்கும் கேட்ட குதிரைகளின் கனைப்புகளும், யானைகளின் பிளிறல்களும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியும், சங்கொலிகளும், துந்துபிகளின் ஒலியும், அங்கே ஒரு மிகப்பெரிய ஆரவாரத்தை உண்டாக்கியது. தேர்களாலும், காலாட்படைவீரர்களாலும், குதிரைகளாலும், யானைகளாலும் நிரம்பியிருந்ததும், இங்கும் அங்கும் அணிவகுத்து நகர்ந்து சென்றதும், கவசங்களை அணிந்தபடி போர் கர்ஜனைகளுடன் சென்றவர்களைக் கொண்டதுமான பாண்டவர்களின் வெல்லப்பட முடியாத அந்தப் படையைக் காண, கடுமையான எதிர்ச்சுழிகளாலும், அலைகளாலும் கலங்கிச் செல்லும் பூரணமான {நிறைந்த அளவை எட்டிய} கங்கையின் மூர்க்கமான நீரூற்றைப் போலத் தெரிந்தது.


கவசம் தரித்தவர்களான பீமசேனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் ஐந்து மகன்கள், பிரஷத குலத்தைச் சார்ந்த திருஷ்டத்யும்னன் ஆகியோர் அந்தப் படையின் முன்னணியில் சென்றார்கள். பிரபத்ரகர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பீமசேனனுக்குப் பின்னே அணிவகுத்துச் சென்றார்கள். அப்படி அணிவகுத்துச் சென்ற படையின் ஆரவாரம், அமாவாசையின் போது மிக உயரமாக எழும் கடலின் {கடல் அலையின்} கர்ஜனையைப் போல, மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. உண்மையில் அந்த அமளி சொர்க்கத்தையே {வானத்தையே} எட்டுவதாகத் தெரிந்தது. பகைவரின் படையணியை உடைக்கவல்லவர்களும், கவசம் அணிந்தவர்களுமான அந்த வீரர்கள் மகிழ்ச்சியில் நிறைந்து இப்படியே அணிவகுத்துச் சென்றார்கள்.

அவர்களுக்கு மத்தியில் குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன், தேர்களையும், போக்குவரத்துக்குத் தேவையான பிற வாகனங்களையும், உணவு மற்றும் தீவனப் பைகளையும், கூடாரங்களையும் [1], வண்டிகளையும், பணப்பெட்டகங்களையும், இயந்திரங்களையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, அறுவைசிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செல்லுபடியாகதவர்கள், மெலிந்த பலவீனமான போர்வீரர்கள், ஆகியோரையும், பணியாட்கள் மற்றும் முகாம்களில் இருப்போர் {பணிசெய்வோரையும்} அனைவரையும் எனத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

[1] வேசிகளின் கூடாரங்கள் என்கிறது ஒரு பதிப்பு.

பாஞ்சால இளவரசியான உண்மை நிறைந்த திரௌபதி, வீட்டில் இருக்கும் பெண்களின் துணையோடும், ஊழியர்களும், பணிப்பெண்கள் சூழவும் உபப்லாவ்யத்திலேயே இருந்தாள். தங்கள் நிதி மற்றும் மங்கையரைப் பாதுகாக்கும்படி, தங்கள் படைவீரர்களில் சில அமைப்புகளை நிரந்தரச் சுற்றரணாக அமர்த்தியும், அங்கிருந்து சற்றுத் தூரத்தில் சிலரையும் நிறுத்திய பாண்டவர்கள், தங்கள் பெரும்படையுடன் புறப்பட்டுச் சென்றனர். {**பாண்டவர்கள், கோட்டை முதலிய அரண்களையும், வாயில்காப்போர் முதலிய படைவீரர்களாலும் செல்வம் மற்றும் மங்கையர் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, பெரிய படையுடன் சென்றார்கள்}.

பசுக்களையும், தங்கத்தையும் அந்தணர்களுக்குக் கொடையளித்துவிட்டு, அவர்களை வலம் வந்து, ஆசிகளைப் பெற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, தங்கள் தேர்களில் ஏறி அணிவகுப்பைத் தொடங்கினார்கள்.

கேகய இளவரசர்கள், திருஷ்டகேது, காசிகள் {காசி நாட்டு} மன்னனின் மகன் {அபிபூ}, சிரேணிமாத், வசுதானன், வெல்லப்பட முடியாத சிகண்டி ஆகிய அனைவரும் நலத்துடனும், இதயப்பூர்வமாகவும், கவசம்பூட்டி, ஆயுதங்கள் தாங்கிக் கொண்டும், ஆபரணங்களால் தங்ககளை அலங்கரித்துக் கொண்டும், யுதிஷ்டிரனைத் தங்கள் மத்தியில் கொண்டு அவனுக்கு {யுதிஷ்டிரனுக்குப்} பின்னால் அணிவகுத்துச் சென்றனர்.

விராடன், சோமக குலத்தின் யக்ஞசேனன் மகன் (திருஷ்டத்யும்னன்), சுசர்மன், குந்திபோஜன், திருஷ்டத்யும்னனின் மகன்கள் ஆகியோரும், நாற்பதாயிரம் {40,000} தேர்களும், அதைப் போல ஐந்து மடங்கு {2,00,000} குதிரைகளும், அதைவிட {குதிரைகளைவிட} பத்துமடங்கு {20,00,000} அதிக எண்ணிக்கையில் காலாட்படையும், அறுபதாயிரம் {60,000} யானைகளும் {படையின்} பின்னே சென்றன. அனாதிருஷ்டி, சேகிதானன், திருஷ்டகேது, சாத்யகி ஆகியோர் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} சூழ்ந்தபடி அணிவகுத்துச் சென்றார்கள்.

போர் வரிசையிலான தங்கள் படைகளுடன் குருக்ஷேத்திரக் களத்தை அடைந்தவர்களும், அடிப்பவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, காளைகளைப் போலக் கர்ஜிப்பவர்களாகத் தெரிந்தார்கள். களத்தில் புகுந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் தங்கள் சங்குகளில் ஒலியெழுப்பினர். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} தங்கள் சங்குகளிலும் ஒலியை எழுப்பினர். இடி உருளும் ஓசைக்கு நிகரானதும், பஞ்சஜன்யம் {Panchajanya} என்று அழைக்கப்பட்டதுமான அந்தச் சங்கின் ஒலியைக் கேட்ட (பாண்டவப் படையின்) போர்வீரர்க்ள அனைவரும் மகிழ்ச்சியால் நிறைந்தார்கள். கரங்கள் மற்றும் அசைவில் வேகத்தைக் கொண்ட அந்தவீரர்களின் சிம்மகர்ஜனைகள், சங்கொலிகள் மற்றும் துந்துபிகளின் ஒலிகள் ஆகியவை கலந்து, முழுப் பூமியையும், வானத்தையும், கடல்களையும் எதிரொலிக்கச் செய்தன."



**பாண்டவர்கள், கோட்டை முதலிய அரண்களையும்,....
திருவள்ளுவர் வாக்கு:

திருக்குறள்/ பொருட்பால்-அதிகாரம்: அரண்
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.


"அணிவகுப்பீராக, அணிவகுப்பீராக" என்று சொல்லி அத்துருப்புகள் பெரும் வேகத்துடன் நகரத் தொடங்கின..........
திருவள்ளுவர் வாக்கு:

திருக்குறள்/ பொருட்பால்-அதிகாரம்: படைச்செருக்கு
குறள் 778:
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.

தமிழ் விளக்கவுரை_சாலமன் பாப்பையா :
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டாம் என்று அரசன் சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.


பாண்டவப் படைத்தலைவன்! - உத்யோக பர்வம் பகுதி 151

The Generalissimo of Pandavahost! | Udyoga Parva - Section 151 | Mahabharata In Tamil

 (பகவத்யாந பர்வம் – 80) {சைனியநிர்யாண பர்வம் - 1}

பதிவின் சுருக்கம் : கௌரவப் படை புறப்பட்டுவிட்டது எனக் கிருஷ்ணன் மூலமாகக் கேட்ட யுதிஷ்டிரன், அக்ஷௌஹிணிகளின் தலைவர்களாக எழுவரை நியமித்து, படைத்தலைவராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் தனது தம்பிகளிடம் கேட்டது; விராடனின் பெயரைச் சகாதேவனும், துருபதனின் பெயரை நகுலனும், திருஷ்டத்யும்னனின் பெயரை அர்ஜுனனும், சிகண்டியின் பெயரை பீமசேனனும் முன்மொழிவது; படைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் கொடுப்பது; திருஷ்டத்யும்னனைப் படைத்தலைவனாகக் கிருஷ்ணன் தேர்ந்தெடுத்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஜனார்த்தனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், கேசவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில், தனது தம்பிகளிடம், "குருக்கள் கூடியிருந்த சபையில் நடந்தது அத்தனையும் நீங்கள் கேட்டீர்கள். கேசவன் {கிருஷ்ணன்} உதிர்த்த வார்த்தைகள் அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். எனவே, மனிதர்களில் சிறந்தவர்களே, போரிட வேண்டிய வரிசையில் {பிரிவுகளாகப் பிரித்து} எனது துருப்புகளை அணிவகுப்பீராக.


நமது வெற்றிக்காக இங்கே ஏழு {7} அக்ஷௌஹிணி படைகள் கூடியிருக்கின்றன. அந்த ஏழு அக்ஷௌஹிணிகளையும் வழிநடத்தப்போகும் {தலைவர்களான} அந்த ஏழு புகழ்பெற்ற வீரர்களின் பெயர்களைக் கேட்பீராக. துருபதர், விராடர், திருஷ்டத்யும்னன், சிகண்டி, சாத்யகி, சேகிதானன், பெரும் சக்தி கொண்ட பீமசேனன் ஆகியோரே அவர்கள் {அந்த எழுவர்}. இந்த வீரர்களே எனது துருப்புகளின் தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவரும், வேதங்களை {தனுர் வேதத்தை} அறிந்தவர்களாவர். பெரும் வீரம் கொண்ட இவர்கள் அனைவரும், அற்புத நோன்புகளைப் பயின்றவர்களாவர் {உடல் வெறுத்தவர்களாவர்}. பணிவு கொண்ட இவர்கள் அனைவரும், கொள்கைகளிலும் மற்றும் போரிலும் சாதனைளை அறிந்தவர்களாவர். ஆயுதங்களிலும், அம்புகளிலும் நன்கு திறம்பெற்ற இவர்கள் அனைவரும், அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தத் தகுந்தவர்களாவர்.

ஓ! சகாதேவா, ஓ! குரு குலத்தின் மகனே, அனைத்து வகைப் போர்வரிசைகளை {படைகளின் பிரிவுகளை} அறிந்தவரும், இந்த எழுவருக்கும் தலைவராக ஆகக்கூடியவரும், கணைகளைச் சுடராகக் கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற பீஷ்மரைப் போரில் தாக்குப்பிடிக்கக்கூடியவருமான வீரர் யார் என்பதை எங்களுக்கு இப்போது சொல்வாயாக. ஓ! மனிதர்களில் புலியே {சகாதேவா}, *நமது படைத்தலைவராக ஆகத் தகுந்தவர் யார் என்பதில் உனது கருத்தை எங்களுக்குச் சொல்வாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

சகாதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "உறவில் நமக்கு நெருக்கமானவரும் {சம்பந்தியும்}, துயரத்தில் {அஞ்ஞாதவாசத்தில்} நமக்கு ஆதரவாக இருந்தவரும், பெரும் பலம் கொண்டவரும், அனைத்து அறங்களையும் அறிந்தவரும், போரில் தடுக்கப்பட முடியாதவரும், நாட்டில் உள்ள பங்கை மீட்டுத் தருவதில் நமக்கு நம்பிக்கையானவரும், பலம்பொருந்திய மத்ஸ்ய {மச்ச நாட்டு} மன்னருமான விராடரே, பீஷ்மர் மற்றும் அந்தப் பலமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் போரில் தாக்குப்பிடிக்க வல்லவராவார்" என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகாதேவன் இதைச் சொன்னதும், சொல்திறமிக்க நகுலன் {யுதிஷ்டிரனிடம்}, "வயது, சாத்திர அறிவு, விடாமுயற்சி, பிறப்பு மற்றும் குலம் ஆகியவற்றினால் மதிக்கத்தகுந்தவரும், பணிவு, பலம் மற்றும் செழிப்பைக் கொண்டவரும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரும், (பரத்வாஜ முனிவரிடம்) ஆயுத அறிவியலைக் கற்றவரும், தடுக்கப்பட முடியாதவரும், உண்மையில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவரும், துரோணரையும், வலிமைமிக்கப் பீஷ்மரையும் எப்போதும் சவாலுக்கழைப்பவரும், அரச குடும்பங்களில் முதன்மையான ஒன்றில் வந்தவரும், படைகளின் புகழ்பெற்ற தலைவரும், சூழ்ந்திருக்கும் மகன்கள் மற்றும் பேரர்களின் விளைவால் நூறு கிளைகளைக் கொண்ட மரத்திற்கு ஒப்பானவரும், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் மனைவியுடன் சேர்ந்து துரோணரின் அழிவுக்காகக் கடும் தவமிருந்தவரும், சபைகளின் ரத்தினமானவரும், நம்மை எப்போதும் ஒரு தந்தையைப் போல ஆதரிப்பவரும், நமது மாமனாருமான துருபதரே படைத்தலைவராக இருக்க வேண்டும். போருக்கு விரைந்து வரும் துரோணரையும் பீஷ்மரையும் தாக்குப்பிடிக்க இயன்றவர் அவரே {துருபதரே} என்பது எனது கருத்து. ஏனெனில், அங்கிரசின் வழித்தோன்றலான துரோணருக்கு நண்பரான இந்த மன்னர் {துருபதர்}, தெய்வீக ஆயுதங்களையும் அறிந்தவராக இருக்கிறார்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {நகுலன்}.

மாத்ரியின் மகன்கள் இருவரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியதும், வாசவனின் {இந்திரனின்} மகனும், அந்த வாசவனுக்கே {இந்திரனுக்கே} நிகரானவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம்}, "தவசிகளை மனநிறைவு செய்து, தவநோன்புகளின் சக்தியால் பிறந்தவனும்; நெருப்பின் நிறம் கொண்டவனும்; சிறந்த சாதியிலான அற்புதக் குதிரைகள் பூட்டப்பட்டதும், பெருந்திரள் மேகங்களின் கர்ஜனையைப் போன்ற ஒலியை எழுப்பவல்ல சக்கரங்களைக் கொண்டதுமான தேருடனும், வில், வாள் மற்றும் இரும்புக் கவசம் ஆகியவற்றுடனும், வேள்வி செய்யும் நெருப்புக் குண்டத்தில் இருந்து உதித்தவனும்; சிங்கத்தைப் போன்ற உடற்கட்டு, வீரம், பலம், சக்தி ஆகியவற்றைக் கொண்ட வீரனும்; சிங்கம் போன்ற தோள்கள், கரங்கள், மார்பு ஆகியவற்றைக் கொண்டவனும்; சிங்கத்தின் உறுமல் போன்ற குரலைக் கொண்டவனும்; பெரும் பிரகாசம் கொண்ட வீரனும்; அழகிய புருவங்கள், நல்ல பற்கள், உருண்ட கன்னங்கள், நீண்ட கரங்கள், பருத்த உடல், சிறந்த தொடைகள், அகன்ற பெரிய கண்கள், சிறந்த கால்கள், உறுதியான உடற்கட்டு ஆகியவற்றைக் கொண்டவனும்; எவ்வகை ஆயுதத்தாலும் துளைக்கப்பட முடியாதவனும்; மதம் கொண்ட யானையைப் போல இருப்பவனும், உண்மை நிறைந்த பேச்சு, கட்டுபடுத்தப்பட்ட ஆசைகள் ஆகியவற்றைக் கொண்டவனுமான இந்தத் தெய்வீகமான திருஷ்டத்யும்னன் துரோணரின் அழிவுக்காகவே பிறந்தவனாவான்.

இடிபோன்ற கடுமையுடன் அடிக்கப்படுவதும், நெருப்புச்சுடர்விடும் {நெருப்பைக் கக்கும்} வாய்களுடன் கூடிய பாம்புகளைப் போன்றதும், யமனின் தூதர்களுக்கு இணையான வேகம் கொண்டதும், (தொடுவதாலேயே அனைத்தையும் எரித்துவிடும்) நெருப்புச் சுடர்களைப் போன்று விழுவதும், இதற்கு முன்னால் ராமரால் {பரசுராமரால்} மட்டுமே போரில் தாங்கப்பட்டதுமான பீஷ்மரின் கணைகளைத் தாங்கவல்லவன் திருஷ்டத்யும்னன் மட்டுமே என்று நான் நினைக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தவிர, பெரும் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தாக்கப்பிடிக்கவல்ல வேறு எவரையும் நான் காணவில்லை. இதையே நான் நினைக்கிறேன். கரங்களில் பெருவேகம் {பெரும் இலகுத்தன்மை} கொண்டவனும், அனைத்து வகையான போர்முறைகளை அறிந்தவனும், ஆயுதங்களால் துளைக்கப்பட முடியாத கவசம் கொண்டவனும், யானைக்கூட்டத்தின் தலைமை யானையைப் போன்றவனுமான இந்த அழகிய வீரனே {திருஷ்டத்யும்னனே), என் கருத்தின்படி, நமது படைத்தலைவனாக இருக்கத் தகுந்தவனாவான்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னான் {அர்ஜுனன்}.

பீமன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, துருபதனின் மகனும், 'பீஷ்மரின் அழிவுக்காகப் பிறந்தவன்' என்று தவசிகள் மற்றும் சித்தர்களின் கூட்டத்தால் சொல்லப்படுபவனும், போர்க்களத்தில் தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்தும்போது, ஒப்பற்ற ராமரை {பரசுராமரைப்} போன்றவனுமான சிகண்டியானவன், கவசம் பூண்ட தனது தேரில் நிலைத்திருக்கும்போது, ஆயுதங்களால் அவனை {சிகண்டியைத்} துளைக்கவல்ல ஒருவனையும் நான் காணவில்லை. சிகண்டியைத் தவிர, தனிப்போரில் பீஷ்மரைக் கொல்லவல்ல பிற வீரர்கள் யாரும் இல்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, சிகண்டியே நமது படைத்தலைவனாக இருக்கத் தகுந்தவன் என இதற்காகவே நான் நினைக்கிறேன்" என்றான் {பீமன்}.

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ! ஐயா {பீமா}, அண்டத்தில் உள்ள அனைத்தின் பலம் மற்றும் பலவீனம், வலிமை மற்றும் அயர்வு ஆகியவற்றையும், ஒவ்வொருவரின் நோக்கங்களையும், அறம்சார்ந்த கேசவனே {கிருஷ்ணனே} நன்கறிவான். தாசார்ஹ குலத்தின் கிருஷ்ணன் குறிப்பிடும் எவனும் ஆயுதங்களில் திறனுடனோ, திறனில்லாமலோ, இளைஞனாகவோ, முதியவராகவோ இருந்தாலும், அவனே எனது படைகளின் தலைவனாக இருக்கட்டும். இவன்தான் {கிருஷ்ணன்தான்} நமது வெற்றி அல்லது தோல்வியின் வேராக இருக்கிறான். இவனிலேயே நமது உயிர்கள், நமது நாடு, நமது செழிப்பும் வறுமையும், நமது மகிழ்வும் துன்பமும் இருக்கின்றன.

இவனே விதி சமைப்பவனாகவும், படைப்பாளனாகவும் இருக்கிறான். நமது ஆசைகளின் கனிகள் அனைத்தும் இவனிலேயே நிறுவப்பட்டுள்ளன. எனவே, கிருஷ்ணனால் பெயர் சொல்லப்படுபவரே, நமது படையின் தலைவராக இருக்கட்டும். நமது தலைவரை {படைத்தலைவரைத்} தேர்ந்தெடுத்து, மலர்களாலும், வாசனைத் திரவியங்களாலும் நமது ஆயுதங்களை வழிபட்டு, பொழுது புலர்ந்ததும் கிருஷ்ணனின் உத்தரவுப்படி போர்க்களதிற்கு அணிவகுப்போமாக" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "புத்திசாலி மன்னனும், நீதிமானுமான யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட, தாமரைக் கண் கிருஷ்ணன், தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பார்த்தபடி, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உமது துருப்புகளின் தலைவர்களாகப் பெயரிடப்பட்ட பலம்நிறைந்த வீரர்கள் அனைவரையும் நான் முழுமையாக அங்கீகரிக்கிறேன். எதிரிகளைத் தாக்குப்பிடிக்க அவர்கள் அனைவரும் தகுந்தவர்களே. உண்மையில், அவர்கள் இந்திரனையே பெரும்போரில் அச்சுறுத்தக்கூடியவர்கள் எனும்போது, பேராசையும், தீய மனமும் கொண்ட திருதராஷ்டிரன் மகன்கள் எம்மாத்திரம்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, போரைத் தடுத்துச் சமாதானத்தைக் கொண்டுவர நான் பெரும் முயற்சிகளைச் செய்தது உமது நன்மைக்காவே. அதன் காரணமாக, அறத்தால் நாம் பட்ட கடன்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டோம். குறை கண்டுபிடிக்கும் மனிதர்களால், இனி எதைக் கொண்டும் நம்மை நிந்திக்க முடியாது.

அறிவற்றவனும், மூடனுமான துரியோதனன், ஆயுதங்களில் நிபுணனாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். உண்மையில் அவன் பலவீனனாக இருப்பினும், பலம் கொண்டவனாகவே தன்னை நினைத்துக் கொள்கிறான் [1]. நமது கோரிக்கைகளைப் பெற படுகொலை ஒன்றே {இருப்பதில்} ஒரே வழி என்பதால் விரைவாக உமது துருப்புகளை அணிவகுப்பீராக. உண்மையில், யுயுதானனை {சாத்யகியை} இரண்டாவதாகக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அபிமன்யு, திரௌபதியின் ஐந்து மகன்கள், விராடன், துருபதன், கடும் பரக்கிரமம் கொண்ட பிற மன்னர்கள் மற்றும் அக்ஷௌஹிணிகளின் தலைவர்கள் அனைவரையும் காணும்போது, திருதராஷ்டிரன் மகன்களால், தங்கள் நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள {நிலத்தில் நிற்க} முடியாது. நமது படை பெரும் வலிமையுடையதும், வெல்லப்பட முடியாததும், தாக்குபிடிக்கப்பட முடியாததுமாகும். திருதராஷ்டிரன் கூட்டத்தை அது {பாண்டவர்கள் படை} கொல்லும் என்பதில் ஐயமில்லை. நமது தலைவரைப் {படைத்தலைவரைப்} பொருத்தவரை, எதிரிகளைத் தண்டிப்பவனான திருஷ்டத்யும்னனை நான் அழைப்பேன்" என்றான் {கிருஷ்ணன்}.

[1] இந்த இடத்தில்.... மூடனும், அறிவில்லாதவனுமான துரியோதனன் விருப்பம் நிறைவேறியவனாகத் தன்னை நினைத்துக் கொள்கிறான். தனத்தில் விருப்பம் கொண்ட அவன், பலத்துடன் இருப்பவனாகத் தன்னைப் பார்க்கிறான் என்று வேறொரு பதிப்பில் வருகிறது.



**நமது படைத்தலைவராக ஆகத் தகுந்தவர் யார்
 என்னும் வாக்கியத்தின் முக்கியத்துவமானது தெய்வப்புலவர் திருவள்ளுவரால், திருக்குறளில் பின்வருமாறு சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறள்-770
பொருட்பால்-அதிகாரம்:படைமாட்சி

குறள்:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.

சாலமன் பாப்பையா :
ஒரு படையில் சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.



Monday, June 29, 2015

"ஒரே வழி போரே!" என்ற கிருஷ்ணன்! - உத்யோக பர்வம் பகுதி 150

"War is the only way left!" said Krishna! | Udyoga Parva - Section 150 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –79)

பதிவின் சுருக்கம் : பெரியோர் சொல் கேளாத துரியோதனன் அவர்களை அவமதிக்கும் வகையில் சபையை விட்டு அகன்றது, பதினோரு அக்ஷௌஹிணி படையை குருக்ஷேத்திரத்திற்கு அனுப்பியது ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன், சாம, தான, பேதங்களைத் தான் துரியோதனனிடம் கௌரவச் சபையில் முயற்சித்துப் பார்த்துவிட்டதாகவும், இனி தண்டமே மீதி என்றும் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படி பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி, திருதராஷ்டிரர் ஆகியோர் சொல்லியும், அந்தப் பொல்லாதவன் {துரியோதனன்} அறிவைப் பெறவில்லை. மறுபுறம், அந்தத் தீய துரியோதனன், கோபத்தால் கண்கள் சிவக்க, (அவையை விட்டு அகன்று), அவர்கள் அனைவரையும் அவமதித்தான். (அவனால் அழைக்கப்பட்டவர்களும்), தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்த மன்னர்கள் அனைவரும், அவனது {துரியோதனனின்} பின்னை தொடர்ந்து சென்றனர்.


"இன்று பூச நட்சத்திரக் கூட்டம் உச்சம் பெற்றிருக்கிறது {இன்று பூச நட்சத்திரமாகும்}. (இன்றே) குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் செல்லுங்கள்" என்று மன்னன் துரியோதனன், தீய இதயம் கொண்ட அந்த ஆட்சியாளர்களிடம், மீண்டும் மீண்டும் சொன்னான். விதியால் உந்தப்பட்ட அந்த ஏகாதிபதிகள், பீஷ்மரைப் படைத்தலைவராக {சேனாதிபதியாகக்} கொண்டு, தங்கள் படைவீரர்களுடன் மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்றனர்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கௌரவர்களுக்காக பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகள் கூடியிருக்கின்றன. அப்படையின் தலைமையில், பனைமரக் கொடியைத் தனது தேரில் கொண்டவரான பீஷ்மர் பிரகாசித்துக் கொண்டிருந்தார். எனவே, இதுவரை நடந்ததை நோக்கில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எது சரியாகத் தோன்றுகிறதோ, அதைச் செய்யும். ஓ! மன்னா, ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது முன்னிலையில், பீஷ்மர், துரோணர், விதுரர், காந்தாரி மற்றும் திருதராஷ்டிரர் ஆகியோர் சொன்னது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, (பூமியில் உள்ள) மக்களின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் இந்தக் {கௌரவக்} குலத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் நிமித்தமாக, ({பாண்டவர்களாகிய} உங்களுக்கும், {கௌரவர்களாகிய} உமது சகோதரர்களுக்கும் இடையில்) சகோதரப் பாசத்தை நிறுவும் விருப்பத்தால், சமரசப் பேச்சில் தொடங்கும் கலைகள் அனைத்தையும் {சாம வழி} முயன்றேன். சமரசம் தோற்றதும், கருத்து வேறுபாட்டை (உண்டாக்கும்) கலையை {பேத வழியை} முயன்று, பாண்டவர்களாகிய உங்கள் அனைவரின் இயல்பான மற்றும் இயல்புக்கு மிக்க {சாதாரண மற்றும் அசாதாரண} சாதனைகளைக் குறிப்பிட்டேன். உண்மையில், சுயோதனன் சமரசப் பேச்சுகளுக்கு எந்த மதிப்பையும் காட்டாத போதே, ஒன்றாகக் கூடியிருந்த மன்னர்களுக்கிடையில் (அவர்களுக்குள்) கருத்து வேறுபாட்டை உண்டாக்க முயற்சி செய்தேன் (பேசினேன்). ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இயல்புக்கு மிக்க, மோசமான, பயங்கரமான மற்றும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அறிகுறிகளை நான் என்னிடம் வெளிப்படுத்தினேன்.

ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, {பேத வழியில்} மன்னர்கள் அனைவரையும் கடிந்து கொண்டு, துரியோதனனைப் புல்லாக்கி {துரும்பாகச் சிறுமை செய்து}, ராதையின் மகனை {கர்ணனை} அச்சுறுத்தி, திருதராஷ்டிரர் மகன்களின் சூதாட்டத்துக்காக சுபலனின் மகனை {சகுனியை} மீண்டும் மீண்டும் நிந்தித்து, வார்த்தைகள் மற்றும் சூழ்ச்சிகள் ஆகிய இரண்டின் மூலமாகவும் மன்னர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றுமையின்மையை {கருத்த வேறுபாட்டை} ஏற்படுத்த மீண்டும் ஒருமுறை முயற்சித்த பிறகு, நான் மீண்டும் சமரசம் பேசினேன். {மீண்டும் சாம வழிக்குத் திரும்பினேன்}. குரு குலத்தின் ஒற்றுமைக்காகவும், (நெருங்கி வரும்) தொழிலுக்கான {போருக்கான} முக்கிய தேவைகளை நோக்கில் கொண்டும், நான் கொடையளிப்பது குறித்தும் {தானவழியிலும்} பேசினேன்.

உண்மையில் நான், "வீரர்களான அந்தப் பாண்டுவின் மகன்கள், தங்கள் பெருமையைத் துறந்து, திருதராஷ்டிரர், பீஷ்மர் மற்றும் விதுரரைச் சார்ந்தே வாழ்வார்கள். {துரியோதனனான} உனக்கே நாடு கொடுக்கபடட்டும். அவர்கள் {பாண்டவர்கள்} எந்த அதிகாரத்தையும் பெறாமல் இருக்கட்டும். மன்னன் (திருதராஷ்டிரர்), கங்கையின் மகன் (பீஷ்மர்), மற்றும் விதுரர் ஆகியோர் உனது நன்மைக்காகச் சொல்வது அனைத்தும் நடைபெறட்டும். நாடும் உனதாகட்டும். (பாண்டவர்களுக்கு) ஐந்து கிராமங்களை மட்டும் விட்டுக்கொடு. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது தந்தையால் தாங்கப்படத் தகுந்தவர்கள் {ஆதரிக்கப்பட வேண்டியவர்கள்} அவர்கள் {பாண்டவர்கள்} என்பதில் ஐயமில்லை" என்றேன். {இப்படியே தான வழியில் பேசினேன்}.

இப்படிச் சொல்லப்பட்டும், அந்தத் தீய ஆன்மா கொண்டவன் {துரியோதனன்}, உமக்கு உங்கள் பங்கைத் தர மறுக்கிறான். எனவே, தண்டனையைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை. அதுவே, பாவம் நிறைந்தவர்களுக்கு எதிராகச் செய்யப்பட வேண்டிய வழியாக இப்போது இருக்கிறது [1]. உண்மையில், அந்த மன்னர்கள் அனைவரும், ஏற்கனவே குருக்ஷேத்திரத்திற்கு அணிவகுத்துச் சென்றுவிட்டார்கள். குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, போரில்லாமல் உமக்கு அவர்கள் நாட்டைத் தரமாட்டார்கள். மரணம் அவர்களுக்கு முன் காத்திருப்பதால், உலக அழிவுக்கு அவர்கள் அனைவரும் காரணமாக விளங்குகிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}."

[1] சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளில் முதல் மூன்று வழிகளை முயன்றாகிவிட்டது. சமாதானத்தைத் துரியோதனன் ஏற்கவில்லை. எனவே, இனி நான்காவது வழியான தண்டமே மிச்சமிருக்கிறது என்கிறான் கிருஷ்ணன்.



வேறு பதிப்புகளில் இங்கேயே {உத்யோக பர்வம் பகுதி 150} உபபர்வமான பகவத்யாந பர்வம் முற்று பெற்று, மற்றொரு உபபர்வமான சைனியநிர்யாண பர்வம் ஆரம்பமாகிறது. கங்குலியிலோ பகவத்யாந பர்வம் முற்று பெறாமல் தொடர்கிறது. வழக்கம் போலவே நாம் கங்குலியின் பாதையில் தொடர்ந்தாலும், அடுத்தப்பதிவில் இருந்து பகவத்யாந பர்வம் அந்தத் தலைப்பின் அருகிலேயே {சைனியநிர்யாண பர்வம்} என்ற உபதலைப்பையிட்டுத் தொடர்வோம்.
_________________________________________________________________________________


திருக்குறள் 673:
பொருட்பால் - அமைச்சியல் - வினைசெயல்வகை

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் 
செல்லும்வாய் நோக்கிச் செயல்.


Translation:
When way is clear, prompt let your action be;
When not, watch till some open path you see.

Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.


Sunday, June 28, 2015

"நீ மன்னனின் மகனில்லை!" என்ற திருதராஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 149

"You're not the son of a king" said Dhritarashtra! | Udyoga Parva - Section 149 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –78)

பதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, "ஓ! துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ! மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.


உயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ! ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.

அவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.

இதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ! ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.

பெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.

அவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.

எனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, "உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.

உறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.

இவ்வழியிலும், ஓ! பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம்? பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.

உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.

நீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ! இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும்? இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ! மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]" என்றார் {திருதராஷ்டிரர்}."

[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.


துரோணர், விதுரன், காந்தாரி பேச்சு! - உத்யோக பர்வம் பகுதி 148

"The speech of Drona, Vidura and Gandhari! | Udyoga Parva - Section 148 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –77)

பதிவின் சுருக்கம் : குருக்களின் நாடு பாண்டுவுக்கு எப்படி உரிமையானது என்றும், அதன் காரணமாக யுதிஷ்டிரனுக்குத் தார்மீக அடிப்படையில் எப்படி உரிமையானது என்றும் துரோணர், விதுரன் மற்றும் காந்தாரி ஆகியோர் துரியோதனனுக்கு எடுத்துரைத்ததைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "பீஷ்மர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, பேசுவதற்கு எப்போதும் தகுதிவாய்ந்தவரான துரோணர், (கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில், {யுதிஷ்டிரரான} உமக்கு நன்மையான வார்த்தைகளைத் துரியோதனனிடம் பேசினார். அவர் {துரோணர் துரியோதனனிடம்}, "ஓ! ஐயா {துரியோதனா}, பிரதீபரின் மகன் சந்தனு, தனது குலத்தின் நன்மைக்கு அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், பீஷ்மர் என்று அழைக்கப்படும் தேவவிரதன் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடன் இருந்ததைப் போலவும், உண்மைக்கு {சத்தியத்திற்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தவனும், தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தவனும், அறம் சார்ந்தவனும், அற்புத நோன்புகளைக் கொண்டவனும், அனைத்துக் கடமைகளிலும் கவனத்துடன் இருந்தவனும், குருக்களின் மன்னனுமான அந்த அரசன் பாண்டுவும் தனது குலத்தின் நன்மையில் அர்ப்பணிப்புடனேயே இருந்தான்.


(தான் கொண்ட உரிமையின் படி) குரு குலத்தைத் தழைக்க வைத்த அவன் {பாண்டு}, பெரும் ஞானம் கொண்ட தனது அண்ணன் திருதராஷ்டிரனுக்கும், தனது தம்பி க்ஷத்ரிக்கும் (விதுரனுக்கும்) அரசாட்சியைக் கொடுத்தான். மங்காப் புகழ் கொண்ட அரியணையில் இந்தத் திருதராஷ்டிரனை அமர்த்திய, குருகுலத்தின் அந்த அரச மகன் {பாண்டு}, அதன்பிறகு, தன் இரு மனைவியருடன் காட்டுக்குச் சென்றான். மனிதர்களில் புலியான விதுரன், பெரும் பணிவுடன், திருதராஷ்டிரனுக்குக் கீழ் தன்னை அமர்த்திக்கொண்டு, பனைமரத்தின் இளங்கிளை ஒன்றால் சாமரம் வீசிக் கொண்டு, இவனிடம் {திருதராஷ்டிரனிடம்} அடிமையைப் போலக் காத்திருக்கத் தொடங்கினான் {பணிவிடை செய்யத் தொடங்கினான் இந்த விதுரன்}.

பிறகு, ஓ! ஐயா {துரியோதனா}, குடிமக்கள் அனைவரும் பாண்டுவிடம் எப்படிப் பணிந்து நடந்தார்களோ, அப்படியே மன்னன் திருதராஷ்டிரனிடமும், அன்றிலிருந்து பணிந்து நடந்து வருகிறார்கள். பகை நகரங்களை வெல்பவனான பாண்டு, திருதராஷ்டிரனிடமும், விதுரனிடமும் நாட்டைக் கொடுத்துவிட்டு உலகம் முழுவதும் சுற்றினான். எப்போதும் உண்மைக்கு {சத்தியத்துக்கு} அர்ப்பணிப்புடன் இருக்கும் விதுரன், நிதி, தானம், (நாட்டின்) சேவகர்களை மேற்பார்வையிடுதல், அனைவருக்கும் உணவிடுதல் ஆகிய துறைகளின் {நிதி மற்றும் உள்துறை ஆகியவற்றின்} அதிகாரத்தை {திருதராஷ்டிரர் ஆட்சியில்} எடுத்துக் கொண்டான். அதே வேளையில், பகை நகரங்களை வெல்பவரான பெரும் சக்தி கொண்ட பீஷ்மரோ, மன்னர்களிடம் போர், அமைதி, தேவையானவற்றைச் செய்தல், அல்லது பரிசுகளை நிறுத்தி வைத்தல் போன்ற துறைகளை {வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைகளை} மேற்பார்வையிட்டார். பெரும் பலம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் அரியணையில் இருக்கும்போது, உயர் ஆன்ம விதுரன் அவன் {திருதராஷ்டிரன்} அருகிலேயே  இருந்தான்.

திருதராஷ்டிரனின் குலத்தில் பிறந்த நீ, குடும்பத்துக்குள் பிளவைக் கொண்டு வர எப்படித் துணிந்தாய்? உனது சகோதரர்களிடம் (பாண்டவர்களிடம்) ஒற்றுமையாக இருந்து, இன்பத்துக்கான அனைத்துப் பொருட்களையும் அனுபவிப்பாயாக. ஓ! மன்னா {துரியோதனா}, கோழைத்தனத்தாலோ {ஏழ்மையாலோ}, செல்வத்துக்காகவோ நான் இதை உன்னிடம் சொல்லவில்லை. ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பீஷ்மர் எனக்குக் கொடுத்த செல்வத்தையே நான் அனுபவிக்கிறேன்; நீ கொடுத்ததை அல்ல. ஓ! மன்னா {துரியோதனா}, எனது வாழ்வாதாரத்திற்கான வழிகளை நான் உன்னிடம் பெற விரும்பவில்லை. {நான் பீஷ்மரால் கொடுக்கப்பட்டதில் மனம் நிறைகிறேன். உன்னால் கொடுக்கப்பட்டதை விரும்பவில்லை}. எங்கே பீஷ்மர் இருக்கிறாரோ, அங்கேதான் இந்தத் துரோணன் இருப்பான். பீஷ்மர் உன்னிடம் சொன்னதைச் செய்வாயாக. ஓ! எதிரிகளை வாட்டுபவனே {துரியோதனா}, பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு}, பாதி நாட்டைக் கொடுப்பாயாக. ஓ! ஐயா {துரியோதனா}, உன்னிடம் போலத்தான், நான் அவர்களுக்கும் ஆசானாகச் செயல்பட்டேன். உண்மையில், அஸ்வத்தாமன் எப்படியோ, அப்படியே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனும் எனக்கு ஆவான். உணர்ச்சி மிக்கப் பேச்சினால் {ஆவதென்ன?} என்ன பயன் ஏற்படும்? நீதி எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கும்" என்றார் {துரோணர்}.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அளக்கமுடியாத சக்தி கொண்ட துரோணர் இதைச் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் அறம்சார்ந்த விதுரர், தனது பெரியப்பாவை {பீஷ்மரை} நோக்கித் திரும்பி, அவரது முகத்தைப் பார்த்தார். பிறகு விதுரர் {பீஷ்மரிடம்}, "ஓ! தேவவிரதரே {பீஷ்மரே}, நான் பேசும் இவ்வார்த்தைகளைக் கேட்பீராக. அழியும் தருவாயில், இந்தக் குரு குலம் உம்மால் மீட்கப்பட்டது. இதன் காரணமாகவே நீர் எனது இப்போதைய புலம்பல்களில் வேறுபடுகிறீர். {புலம்புகிறவனான எனது வார்த்தைகளை அலட்சியம் செய்கிறீர்}. இந்த நமது குலத்தின் களங்கமும், காமத்தால் உணர்வுகளை இழந்தவனும், நன்றி மறந்தவனும், தீயவனும், பேராசைக்கு அடிமையானவனுமாக இந்தத் துரியோதனன் இருந்தாலும், அவனது {துரியோதனனின்} விருப்பங்களையே நீர் பின்தொடர்கிறீர். அறம் மற்றும் பொருளை மேற்கொள்பவரான தனது தந்தையின் {திருதராஷ்டிரரின்} கட்டளைகளை மீறிவரும் துரியோதனனின் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் குருக்கள் தாங்கத்தான் வேண்டும். ஓ! பெரும் மன்னா {பீஷ்மரே}, குருக்கள் அழியா வண்ணம் செயல்படுவீராக.

ஓவியம் படைக்கும் ஓவியனைப் போல, ஓ! மன்னா {பீஷ்மரே}, நானும், திருதராஷ்டிரரும் உயிர்பெறக் காரணமாக இருந்தவர் நீரே. உயிரினங்களைப் படைத்த படைப்பாளனே {பிரம்மனே}, அவற்றை மீண்டும் அழிக்கிறான். அவனைப் {பிரம்மனைப்} போலவே செயல்படாதீர். உமது கண் முன்பாகவே உமது குலம் அழிவதைக் கண்டு, அதை அலட்சியம் செய்யாதீர். எனினும், நெருங்கி வரும் உலகளாவிய படுகொலையின் விளைவால், உமது அறிவை இழந்துவிட்டீரெனில் {உமக்கு புத்தி கெட்டுவிட்டதெனில்}, என்னையும், திருதராஷ்டிரரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்வீராக. இல்லையெனில் {புத்தி கெடவில்லையெனில்}, தனது அறிவை வஞ்சித்துக் கொள்ளும் இந்தத் தீய துரியோதனனை இன்றே கட்டிப் போட்டு, பாண்டுவின் மகன்களுடன் இந்த நாட்டை ஆண்டு, அதைச் சுற்றிலும் பாதுகாப்பீராக. ஓ! மன்னர்களில் புலியே {பீஷ்மரே}, எண்ணிப் பாரும். பாண்டவர்கள், குருக்கள், மற்றும் அளவற்ற சக்தி கொண்ட பிற மன்னர்கள் ஆகியோரின் பெரும் படுகொலைகள் நம்முன்னே இருக்கின்றன" என்றார் {விதுரர்}.

துயரால் நிரம்பி வழிந்த இதயத்துடன் இருந்த விதுரர் இதைச் சொல்லி நிறுத்தினார். இக்காரியம் குறித்துச் சிந்தித்த அவர் {விதுரர்}, மீண்டும் மீண்டும் பெருமூச்சு விடத் தொடங்கினார்.

பிறகு, ஒரு முழு இனமே அழிவுக்குள்ளாகப்போவதை அறிந்து எச்சரிக்கை அடைந்த மன்னன் சுபலனின் மகள் {காந்தாரி}, மிகுந்த சீற்றத்துடன், கூடியிருந்த மன்னர்கள் முன்னிலையில், தீய இதயம் கொண்ட கொடூரனான துரியோதனனிடம், அறம் மற்றும் பொருள் நிறைந்த இவ்வார்த்தைகளைச் சொன்னாள். அவள் {காந்தாரி துரியோதனனிடம்}, "பாவம் நிறைந்த நீ, உன் ஆலோசகர்களின் ஆதரவோடு செய்த குற்றங்களை அறிக்கையிடப் போகும் (எனது) வார்த்தைகளை, இந்த அரசச் சபையில் இருக்கும் மன்னர்கள் அனைவரும் மற்றும் இந்தச் சபையின் பிற உறுப்பினர்களான மறுபிறப்பாள முனிவர்களும் {பிராமணர்களும்} கேட்கட்டும்.

குருக்களின் நாடு முறையான வகையில், அடுத்தடுத்து அனுபவிக்கப்படுகிறது {ஆளப்படுகிறது}. இதுவே எப்போதும் நமது குலத்தின் வழக்கமுமாகும். நீயோ, பாவம் நிறைந்த ஆன்மாவோடும், அதீதத் தீச்செயல்களைச் செய்து கொண்டும், குரு நாட்டை நீதியற்ற வகையில் அழிக்க முற்படுகிறாய். பெரும் முன்னறிதிறம் கொண்ட விதுரனைத் (தனது ஆலோசகராக) தன் கீழே கொண்டிருக்கும் திருதராஷ்டிரர் இந்த நாட்டை உடைமையாகக் கொண்டிருக்கிறார். இந்த இருவரையும் கடந்து, ஏன் அறியாமையால் அரசாட்சியின் மேல் இப்போது பேராசை கொள்கிறாய்?

பீஷ்மர் உயிரோடிருக்கையில், உயர் ஆன்ம மன்னன் {திருதராஷ்டிரன்}, க்ஷத்ரி {விதுரன்} ஆகிய இருவரும் கூட, அவருக்கு {பீஷ்மருக்கு} அடங்கியே நடக்க வேண்டும். உண்மையில், தான் ஏற்ற நீதியின் விளைவால், மனிதர்களில் முதன்மையானவரும், கங்கையின் பிள்ளையுமான உயர் ஆன்ம பீஷ்மர் ஆட்சியுரிமையை விரும்பவில்லை.. இதன்காரணமாக, இந்த வெல்லப்பட முடியாத நாடு பாண்டுவுக்கு உடைமையானது. எனவே, அவனது {பாண்டுவின்} பிள்ளைகளே இன்று {அதற்கு} தலைவர்களாவர் {எஜமானர்களாவர்}; வேறு எவனும் அல்ல. தங்கள் தந்தைவழி உரிமையால், இந்தப் பரந்த நாடு, பாண்டவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கும் என முறையான வரிசையில் உரிமையானதாகும்.

உயர்ந்த ஆன்மாக் கொண்டவரும், குருக்களின் அறிவுநிறைந்த தலைவரும், உண்மையை உறுதியுடன் கடைப்பிடிப்பவருமான தேவவிரதர் {பீஷ்மர்} என்ன சொல்கிறாரோ, அதன் படி இந்த மன்னனும் {திருதராஷ்டிரரும்}, விதுரனும், பெரும் நோன்புகள் கொண்ட பீஷ்மரின் கட்டளையின் பேரில், அதையே அறிக்கையிட்டபடி {பறைசாற்றியபடி}, நமது குலத்தின் வழக்கத்தை நோற்று, உரிய வகையில் நமது நாட்டை ஆளட்டும். இதுவே (இந்தக் குலத்தின்) நலன்விரும்பிகள் செயல்பட வேண்டிய முறையாகும். தர்மனின் மகனான யுதிஷ்டிரன், அறத்தை முதன்மையாகக் கொண்டு, மன்னன் திருதராஷ்டிரரால் வழிகாட்டப்பட்டு, சந்தனுவின் மகனால் {பீஷ்மரால்} தூண்டப்பட்டு, குருக்களின் இந்த நாட்டைச் சட்ட முறைமைகளின்படி அடைந்து, நீதியுடன் நீண்ட வருடங்கள் ஆளட்டும்" என்றாள் {காந்தாரி}."


Saturday, June 27, 2015

"என் நாடு! எவனுக்கு உரிமை?" என்ற பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 147

"My kingdom! whose right?" said Bhishma | Udyoga Parva - Section 147 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –76)

பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தில் இருந்து திரும்பிய கிருஷ்ணன் உபப்லாவ்யம் அடைந்தது; ஹஸ்தினாபுரத்தில் நடந்தது அத்தனையும் பாண்டவர்களிடம் தெரிவித்தது; யுதிஷ்டிரன் அதை மீண்டும் திரும்பச் சொல்லும்படி கேட்டதும், துரியோதனனிடம் பீஷ்மர் பேசிய பேச்சைக் கிருஷ்ணன் விவரித்துச் சொன்னது; பாண்டவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுக்குமாறு பீஷ்மர் துரியோதனினடம் சொன்னைக் கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொன்னது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஹஸ்தினாபுரத்தில் இருந்து உபப்லாவ்யத்திற்குத் திரும்பியவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, நடந்த அத்தனையும் பாண்டவர்களிடம் சொன்னான். நீண்ட நேரம் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} கலந்தாலோசித்து, மீண்டும் மீண்டும் ஆலோசனைகள் வழங்கிய சௌரி {கிருஷ்ணன்}, ஓய்வெடுக்கத் தனது பகுதிக்கு {மாளிகைக்குச்} சென்றான். விராடனுடன் கூடிய மன்னர்கள் அனைவரையும், அவர்கள் தலைமையில் இருந்த பிறரையும் அனுப்பிய பாண்டவர்கள், சூரியன் மறையும்போது, தங்கள் மாலைத் துதிகளைச் சொன்னார்கள். கிருஷ்ணனில் தங்கள் இதயங்களை நிலைக்க வைத்த அவர்கள், அவனைக் {கிருஷ்ணனைக்} குறித்தே சிந்திக்கலானார்கள். இறுதியாக, தாசார்ஹ குலத்துக் கிருஷ்ணனைத் தங்கள் மத்தியில் கொண்டு வந்து, தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மீண்டும் விவாதித்தார்கள்.


யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷனே} {கிருஷ்ணா}, நாகபுரத்திற்கு {ஹஸ்தினாபுரத்தின் மற்றொரு பெயர்} சென்று, (குருக்களின்) சபையில், திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} நீ சொன்ன அனைத்தையும் எங்களுக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்றான். அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "நாகபுரத்திற்குச் {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்ற நான், நன்மையானவையும், {அறிவுக்குகந்த} காரணம் நிரம்பியவையும், உண்மையானவைமான சொற்களைத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} சொன்னேன். எனினும், தீய மனம் கொண்ட அவன் {துரியோதனன்} அவற்றை ஏற்கவில்லை" என்றான் {கிருஷ்ணன்}.

யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, தவறான வழியில் துரியோதனன் நடக்க விரும்பிய போது, குருக்களில் முதிர்ந்தவரான பாட்டன் {பீஷ்மர்}, பழியுணர்ச்சி கொண்ட அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? பரத்வாஜரின் மகனான பெரும் அருள் கொண்ட ஆசான் {துரோணர்} என்ன சொன்னார்? அவனைப் பெற்றோரான திருதராஷ்டிரரும், காந்தாரியும் என்ன சொன்னார்கள்? அறமறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், எங்கள் நிமித்தமாக எப்போதும் துயர் கொண்டவரும், எங்களை மகனாகக் கருதுபவரும், எங்கள் சிறிய தந்தையுமான க்ஷத்ரி {விதுரர்}, அந்தத் திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? அந்தச் சபையில் அமர்ந்திருந்த மன்னர்கள் அனைவரும் என்ன சொன்னார்கள்?

ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நடந்ததை நடந்தவாறே எங்கள் அனைவருக்கும் சொல்வாயாக. தன்னைத்தானே அறிவாளியாகக் கருதுபவனும், பேராசை மற்றும் காமத்தில் மூழ்கியிருப்பவனுமான தீய துரியோதனனுக்கு ஏற்பில்லாத வகையில், குருக்களின் தலைவர்களும் (பீஷ்மரும், திருதராஷ்டிரரும்}, குருக்களின் அந்தச் சபையில் இருந்த மற்ற பிறரும் பேசிய பேச்சுக்களை ஏற்கனவே நீ {எங்களிடம்} சொன்னாய். எனினும், ஓ! கேசவா {கிருஷ்ணா}, அவ்வார்த்தைகள் எனது நினைவில் நிற்கவில்லை. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, நான் அவ்வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்புகிறேன். ஓ! தலைவா {கிருஷ்ணா}, வாய்ப்பைக் கடந்துவிடாதபடியான ஒரு வழியில் நீ செயல்படுவாயாக. {காலங்கடத்தாமல் சொல்வாயாக}. ஓ! கிருஷ்ணா, நீயே எங்களது புகலிடம், நீய எங்களது தலைவன், நீயே எங்களது வழிகாட்டியுமாவாய்!", என்றான் {யுதிஷ்டிரன்}.

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மன்னன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, குருக்களின் சபைக்கு மத்தியில் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்பீராக. ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, அவற்றை உமது மனத்தில் தாங்குவீராக. எனது வார்த்தைகள் முடிந்ததும், திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} உரக்கச் சிரித்தான். இதனால் பெரிதும் கோபமுற்ற பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, நமது குலம் ({குலத்தைப்} பாதுகாப்பது) குறித்து நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கேள். அதைக் கேட்ட பிறகு, ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, உனது குடும்பத்திற்கு {குலத்திற்கு} நன்மையானதைச் செய்வாயாக.

ஓ! ஐயா {துரியோதனா}, ஓ! மன்னா, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவராக இருந்தார். முன்பு, நானே அவரது {சந்தனுவின்} ஒரே மகனாக இருந்தேன். "ஒரே மகனாக இருப்பவன் மகன் அல்ல {ஒரே மகன் உள்ளவன் மகனில்லாதவனே} என்பதே அறிவுள்ளோர் வாக்கு. எனது குலம் அழிவடையாதிருக்கட்டும், எனது புகழ் பரவ வேண்டும்" என்பதே அவரது {சந்தனுவின்} ஆசையாக இருந்தது. இதனால், இரண்டாவது மகனைத் தான் எப்படிப் பெறுவது என்ற விருப்பம் அவரது {சந்தனுவின்} இதயத்தில் எழுந்தது. இதுவே அவரது விருப்பம் என்பதை அறிந்த நான், எனது தந்தைக்காகவும், நமது குலத்திற்காகவும், நோற்க {நோன்பு ஏற்று வாழக்} கடுமையான உறுதிமொழியைச் செய்து, காளியை {சத்யவதியை} எனது தாயாக அழைத்து வந்தேன்.

னது உறுதிமொழியின் விளைவால், நான் மன்னனாக முடியவில்லை என்பதும், எனது உயிர்வித்தை நான் மேலெழச் செய்திருக்கிறேன் என்பதும் நிச்சயமாக உன்னால் நன்கு அறியப்பட்டவையே. (நான் அதற்காக வருந்தவும் இல்லை). எனது வாக்குறுதியை நோற்று, மகிழ்ச்சியுடனும், இன்பத்துடனும் வாழ்ந்து வரும் என்னை இதோ பார்.

ஓ! மன்னா {துரியோதனா}, குரு குலத்தைத் தாங்கியவர்களில் அழகனும், வலிய கரங்களைக் கொண்டவனும், அற ஆன்மா கொண்டவனுமான விசித்திரவீரியன், எனது தம்பியாக அவளிடம் {காளி என்ற சத்தியவதியிடம்} பிறந்தான். என் தந்தை {சந்தனு} விண்ணேகியதும், என்னை நான் விசித்திரவீரியனுக்குப் பணியாளாக நிறுத்திக் கொண்டு, எனது நாட்டின் ஆட்சியாளனாக அவனை {விசித்திரவீரியனை} நிறுவினேன். ஓ! மன்னர்களுக்கு மன்னா {துரியோதனா}, பிறகு பல ஏகாதிபதிகளின் கூட்டத்தை வீழ்த்தி, தகுந்த மனைவிகளை, நான் அவனுக்குக் {விசித்திரவீரியனுக்குக்} கொணர்ந்தேன். நீ அதை அடிக்கடி கேட்டிருக்கிறாய்.

சில காலத்திற்குப் பிறகு, நான் (பெரும்) ராமரிடம் {பரசுராமரிடம்} தனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ராமரிடம் {பரசுராமரிடம்} கொண்ட அச்சத்தால், எனது தம்பி {விசித்திரவீரியன்} ஓடிவிட்டான். மேலும் அவனது குடிமக்களும் {அப்போது} அவனைக் கைவிட்டனர். இந்தக் காலத்தில் தான், அவன் தனது மனைவியரிடம் மிகவும் பற்றுக் கொண்டான். அதன் காரணமாக அவனை உருக்கு நோய் {phthisis = உடலை மெலியச் செய்யும் காச நோய்; க்ஷய ரோகம்} தாக்கியது. அவனது மரணத்தை அடுத்து, நாட்டில் அரசின்மை ஏற்பட்டது. தேவர்கள் தலைவன் {இந்திரன்}, (நாட்டின் மீது) ஒரு துளி மழையும் பொழியாமல் இருந்தான்.

பிறகு, பட்டினி என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்கள், என்னிடம் துரிதமாக வந்து, "உமது குடிமக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள். எங்கள் நன்மைக்காக, நீர் எங்கள் மன்னனாவீராக. இந்த வறட்சியை விரட்டுவீராக. ஓ! சந்தனுவின் குலத்தைத் தழைக்க வைப்பவரே {பீஷ்மரே}, நீர் அருளப்பட்டிரும். உமது குடிமக்கள் கடுமையான மற்றும் பயங்கரமான நோய்களால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்களில் {குடிமக்களில்} வெகு சிலரே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஓ! கங்கையின் மகனே {காங்கேயரே = பீஷ்மரே}, அவர்களைக் காப்பதே உமக்குத் தகும். இந்த வேதனைகளை {சித்திரவதைகளை} விரட்டுவீராக {நோய்களைப் போக்குவீராக}. ஓ! வீரரே {பீஷ்மரே}, உமது குடிமக்களை நீதியுடன் பேணிக் காப்பீராக. நீர் உயிரோடிருக்கையில், இந்த நாடு அழிவடையாதிருக்கட்டும்" என்று {குடிமக்கள்} கூறினர்.

அழுகுரலுடன் அவர்கள் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டும், எனது இதயம் கலங்காதிருந்தது. நல்லோரின் நடத்தையை நினைவுகூர்ந்த நான், எனது நோன்பைக் {வாக்குறுதியைக்} காக்கவே விரும்பினேன். பிறகு, ஓ! மன்னா {துரியோதனா}, குடிமக்கள், மங்கல குணம் கொண்ட எனது தாய் காளி {சத்தியவதி}, எனது பணியாட்கள், புரோகிதர்கள், (எங்கள் வீட்டைச் சார்ந்த) ஆசான்கள், கல்வி அறிவுள்ள பல அந்தணர்கள் ஆகிய அனைவரும் பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டு, என்னை அரியணை ஏறும்படி வேண்டினார்கள்.

அவர்கள், "(பழங்காலத்தில்) பிரதீபனால் ஆளப்பட்ட நாடு, நீ உயிரோடிருக்கையில் {நீ வாழ்ந்து கொண்டிருக்கும்போதே} அழிந்து போகலாமா? ஓ! பரந்த இதயம் கொண்டவனே {பீஷ்மா}, எங்கள் நன்மைக்காக நீ மன்னனாவாயாக" என்றனர். அவர்களால் இப்படிச் சொல்லப்பட்டவனும், துன்பம் நிறைந்து பெரிதும் பாதிக்கப்பட்டவனுமான நான், எனது கரங்களை ஒன்றாகக் குவித்து, எனது பெற்றோரிடம் {தந்தையிடம்} கொண்ட மரியாதையால், நான் ஏற்ற நோன்பைத் தெரிவித்தேன். எங்கள் குலத்துக்காகவே நான் எனது உயிர் வித்தை மேலெழுப்பி, அரியணையை உதறி வாழும் நோன்பை நோற்றேன் என்று அவர்களிடம் திரும்பத் திரும்பக் கூறினேன். அதிலும் குறிப்பாக எனது தாய்க்காகவே {சத்தியவதிக்காகவே} நான் மீண்டும் அப்படிச் செய்தேன். எனவே, நான், "நுகத்தடியில் என்னைப் பூட்ட வேண்டாம்" என்று அவர்களிடம் இரந்து கேட்டேன்.

மீண்டும் நான் எனது கரங்களைக் கூப்பி, எனது தாயைச் {சத்தியவதியைச்} சமாதானப்படுத்தும் வகையில், "ஓ! தாயே, சந்தனுவால் பெறப்பட்டு, குரு குலத்தின் உறுப்பினராக இருக்கும் நான், எனது உறுதிமொழியைப் பொய்யாக்க முடியாது" என்று சொன்னேன். இதையே நான் மீண்டும் மீண்டும் அவளிடம் {சத்தியவதியிடம்} சொன்னேன். ஓ! மன்னா {துரியோதனா}, மேலும் நான் {சத்தியவதியிடம்}, "ஓ! தாயே, குறிப்பாக உனக்காகவே நான் இந்த நோன்பை நோற்றேன்; தாய்ப்பாசத்தின் சிறந்த அடையாளமான {எடுத்துக்காட்டான} உனக்கு, ஓ! தாயே, நிச்சயம் நான் பணியாளும் அடிமையுமாவேன்" என்றேன்.

இப்படி என் தாயிடமும், {குடி}மக்களிடமும் இரந்து கேட்ட நான், பிறகு, பெரும் தவசியான வியாசரை அணுகி, எனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் பிள்ளைகளைப் பெறுமாறு வேண்டினேன். உண்மையில், ஓ! மன்னா {துரியோதனா}, நானும், எனது தாயும் {சத்தியவதியும்} அந்த முனிவரை {வியாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தோம். இறுதியில், ஓ! மன்னா {துரியோதனா}, பிள்ளைகள் குறித்த எங்களது வேண்டுதல்களை அந்த முனிவர் {வியாசர்} அருளினார். ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {துரியோதனா}, மொத்தமாக அவர் {வியாசர்} மூன்று பிள்ளைகளைப் பெற்றார்.

உன் தந்தை {திருதராஷ்டிரன்} பார்வையற்றவனாகப் {குருடனாகப்} பிறந்தான், ஒரு புலனில் பிறவிக் குறைபாடு கொண்டதன் விளைவாக, அவனால் {திருதராஷ்டிரனால்} மன்னனாக முடியவில்லை {முடியாது}. உயர் ஆன்மா கொண்டவனும், கொண்டாடப்பட்டவனுமான பாண்டுவே மன்னனானான். பாண்டு மன்னனானான் எனும்போது, அவனுடைய மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தந்தைவழி பரம்பரை உரிமையைப் பெற வேண்டும். ஓ! ஐயா {துரியோதனா}, சண்டையிடாதே, அவர்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} பாதி நாட்டைக் கொடு. நான் உயிரோடு இருக்கும்போது, வேறு எந்த மனிதன்தான் ஆட்சி செய்யத்தகுந்தவன்? எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே.

உங்களுக்கு மத்தியில் சமாதானம் நிலவ வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம். ஓ! ஐயா, ஓ! மன்னா {துரியோதனா}, உன்னிடமும், அவர்களிடமும் {பாண்டவர்களிடமும்} நான் எந்த வேறுபாடும் கொள்ளவில்லை {பாரபட்சமும் பார்க்கவில்லை}. (ஆனால் உங்கள் அனைவரையும் சமமாக விரும்புகிறேன்). நான் என்னென்ன சொன்னேனோ, அவையே, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, காந்தாரி மற்றும் விதுரன் ஆகியோரின் கருத்துகளுமாகும். இந்த எனது வார்த்தைகளை அலட்சியம் செய்யாதே. இந்தப் பூமியையும், நீ கொண்ட அனைத்தையும் அழிக்காதிருப்பாயாக" என்றார் {பீஷ்மர்}.


Friday, June 26, 2015

"அர்ஜுனனைத் தவிர நால்வரை கொல்லேன்!" என்ற கர்ணன் - உத்யோக பர்வம் பகுதி 146

Except Arjuna, four will not be slained by me!" said Karna| Udyoga Parva - Section 146 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –75)

பதிவின் சுருக்கம் : குந்தி சொன்ன கதை உண்மையே எனச் சூரியன் கர்ணனுக்கு உறுதி அளித்தது; குந்தியை நிந்தித்த கர்ணன், அவள் செய்த குற்றங்களையும், தான் இழந்த சுகங்களையும் சுட்டிக் காட்டியது; துரியோதனானால் விரும்பிய அனைத்தையும் அடைந்த தான் உரிய நேரத்தில் அவனைக் கைவிட முடியாது என்று கர்ணன் சொன்னது; அர்ஜுனனைத் தவிரக் குந்தியின் மற்ற நான்கு மகன்களைக் கொல்ல மாட்டேன் எனக் குந்தியிடம் உறுதியளித்த கர்ணன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குந்தி இப்படிச் சொன்னதும்) சூரிய வட்டிலில் இருந்து வெளிவந்ததும், பாசம் மிகுந்ததுமான ஒரு குரலைக் கர்ணன் கேட்டான். வெகு தூரத்தில் இருந்து வந்த அந்தக் குரல், தந்தையின் பாசத்துடன் சூரியனால் பேசப்பட்டதாகும். (அது {அந்தக் குரல்}), "பிருதை {குந்தி} சொன்ன வார்த்தைகள் உண்மையே. ஓ! கர்ணா, உனது தாயின் {குந்தியின்} வார்த்தைகளின்படி நீ செயல்படுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, அந்த வார்த்தைகளை நீ முழுமையாகப் பின்பற்றினால், பெரும் நன்மை உனக்கு விளையும்" என்றது {சூரியனின் குரல்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தனது தாயாலும், தனது தந்தையான சூரியனாலேயும் கூட இப்படிச் சொல்லப்பட்டும், கர்ணனின் இதயம் தடுமாற்றமடையவில்லை. அவன் {கர்ணன்} உண்மைக்கு {சத்தியத்துக்கு} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்தான்.

அவன் {கர்ணன் குந்தியிடம்}, "ஓ! க்ஷத்திரியப் பெண்மணியே, உனது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதே கடமைகளில் உயர்ந்தது என்று, (என் காரியத்தில்) நீ சொன்னதை என்னால் ஏற்க முடியாது.

ஓ! தாயே, நான் பிறந்த உடனேயே, உன்னால் நான் கைவிடப்பட்டேன். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, எனக்கு நீ செய்த இந்தப் பெருந்தீங்குதான், எனது சாதனைகளுக்கும், புகழுக்கும் அழிவைச் செய்து வந்திருக்கிறது. உண்மையில், நான் க்ஷத்திரியனே என்றாலும், க்ஷத்திரியனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் நான் உன்னால் இழந்தேன். இதைவிடப் பெரிய தீங்கை, வேறு எந்த எதிரியால் எனக்கு இழைத்துவிட முடியும்? இரக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் எனக்கு இரக்கம் காட்டாத நீ, (நான் பிறந்த {க்ஷத்திரிய} வகைக்குண்டான கட்டாயச்) சடங்குகள் மற்றும் எனக்குச் செய்யப்பட வேண்டிய அனைத்திலும் இருந்து என்னை விலக்கி வைத்த நீ, இன்று எனக்கு உன் கட்டளைகளை இடுகின்றாய். {க்ஷத்திரியன் ஒருவனுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை உரிய காலத்தில் செய்ய எனக்குக் கருணை காட்டாமல், நன்மைகள் அற்றுப் போன என்னிடம் இன்று நீ கட்டளை இடுகின்றாயா?}

ஒரு தாயைப் போல, எனது நன்மைக்காக இதற்கு முன் நீ எப்போதும் முற்பட்டதில்லை. எனினும், உனக்கு நன்மை செய்து கொள்ள விரும்பியே நீ இன்று என்னிடம் பேசுகிறாய். கிருஷ்ணனைத் (தனது தேரோட்டியாகத்) தன்னுடன் கொண்டிருக்கும் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} எவன்தான் அஞ்சமாட்டான்? இன்று நான் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றால், நான் அச்சத்தாலேயே அப்படிச் செய்கிறேன் என்று எவன்தான் கருதமாட்டான்? இதுவரை, அவர்களது {பாண்டவர்களின்} அண்ணனாக என்னை யாரும் அறியமாட்டார்கள். போர் நெருங்கும் சமயத்தில், நான் பாண்டவர்களின் அண்ணன் என்று சொல்லி, அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்றுவிட்டால், க்ஷத்திரியர்கள் அனைவரும் என்ன சொல்வார்கள்? விரும்பிய பொருட்கள் அனைத்தும் அளித்து, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நோக்கம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால், எப்போதும் வணங்கப்பட்டு வரும் நான், அவர்களிடம் {கௌரவர்களிடம்} கொண்ட நட்பை எப்படி முழுமையாகப் பயனற்றதாக்க முடியும்? மற்றவர்களுடன் பகைமையால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவர்கள்}, வாசவனிடம் {இந்திரனிடம்} தலைவணங்கும் வசுக்களைப் போல எப்போதும் என்னை வணங்கி, எனக்காக எப்போதும் காத்திருக்கிறார்கள் {பணிவிடை செய்கிறார்கள்}. எனது பலத்தின் துணையால், எதிரிகளுடன் மோதும் திறனைப் பெற்றுவிட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பேணப்பட்ட அவர்களது நம்பிக்கையை எப்படி நான் கெடுப்பேன்? என்னைத் தங்கள் படகாகக் கொண்டு, போர் எனும் கடக்க முடியாத கடலைக் கடக்க அவர்கள் விரும்புகிறார்கள். வேறு எந்தப் படகுகளும் அற்ற கடலைக் கடக்க விரும்பும் அவர்களை நான் எப்படிக் கைவிட முடியும்?

இதுவரை திருதராஷ்டிரர் மகன்களால் தாங்கப்பட்டு வந்த யாவரும், தங்கள் தலைவர்களுக்கு {எஜமானர்களுக்கு} உதவ வேண்டிய நேரம் இதுவே. எனது உயிரையும் துச்சமாக நினைத்து, நிச்சயம் நான் அவர்களுக்காகவே {கௌரவர்களுக்காகவே} செயல்படுவேன். தங்கள் தலைவர்களால் நன்கு ஊட்டப்பட்டு, (தேவையான அனைத்தும்) நன்கு அளிக்கப்பட்டும், உரிய நேரத்தில் தக்க உதவியைச் செய்யாத உறுதியற்ற இதயம் படைத்த, பாவம் நிறைந்த மனிதர்கள், தங்கள் தலைவனின் {சோறிடுபவனின்} சோற்றைத் திருடுவதால், அவர்களுக்கு இம்மையும் இல்லை; மறுமையும் கிடையாது. நான் உன்னிடம் வஞ்சகமாக {ஏமாற்றுகரமாகப்} பேச மாட்டேன். {நான் உன்னை ஏமாற்ற மாட்டேன்}. திருதராஷ்டிரர் மகனுக்காக {துரியோதனனுக்காக}, என் சக்தியிலும், பலத்திலும் சிறந்ததைக் கொண்டு உனது மகன்களுடன் நான் போரிடுவேன். எனினும், நான் அன்பையும், நன்னடத்தையையும் கைவிட மாட்டேன். எனவே, உனது வார்த்தைகள் என்னதான் எனக்கு நன்மையை அளித்தாலும், இப்போது என்னால் அதற்குக் கீழ்ப்படிய முடியாது. எனினும் இந்த உனது வேண்டுதல்கள் பலனற்றதாகாது.

அர்ஜுனனைத் தவிர, உனது மற்ற மகன்களான யுதிஷ்டிரன், பீமன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரைப் போரில் தாக்குப்பிடித்து, என்னால் அவர்களைக் கொல்ல முடியும் என்றாலும், அவர்கள் என்னால் கொல்லப்பட மாட்டார்கள். யுதிஷ்டிரனின் போராளிகள் அனைவரிலும் நான் அர்ஜுனனிடம் மட்டுமே போரிடுவேன். *போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன். ஓ! புகழ்பெற்ற பெண்மணியே {குந்தியே}, உனது மகன்களின் எண்ணிக்கை எப்போதும் ஐந்துக்குக் குறையாது. {அர்ஜுனன் கொல்லப்பட்டால்} என்னுடனாவது, அல்லது நான் கொல்லப்பட்டால் அர்ஜுனனுடனாவது சேர்த்து, அது {உனது மகன்களின் எண்ணிக்கை} எப்போதும் ஐந்தாகவே இருக்கும்" என்றான் {கர்ணன்}.

கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, துயரில் நடுங்கிய குந்தி, மனோபலத்தின் விளைவால் அதிராமல் இருந்த தனது மகனை {கர்ணனை} அணைத்துக் கொண்டாள். அவள் {குந்தி கர்ணனிடம்}, "உண்மையில், ஓ! கர்ணா, நீ சொல்வது சாத்தியமாகத் தோன்றினாலும், கௌரவர்கள் நிச்சயம் அழிக்கப்படுவார்கள். அனைத்தும் விதியே. எனினும், ஓ! எதிரிகளை வாட்டுபவனே {கர்ணா}, உனது தம்பிகள் நால்வருக்கு, பாதுகாப்புக்கான உறுதியை நீ வழங்கியிருக்கிறாய். போரில் நீ ஆயுதங்களை அடிக்கும் நேரத்தில், இந்த உறுதிமொழியை நினைவில் தாங்குவாயாக" என்றாள். இவை அனைத்தையும் சொன்ன பிருதை {குந்தி}, மேலும் கர்ணனிடம், "நீ அருளப்பட்டிருப்பாயாக. உடல்நலம் {ஆரோக்கியம்} உனதாகட்டும்" என்றாள். கர்ணன் அவளிடம் {குந்தியிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று மறுமொழி கூறினான். பிறகு அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெவ்வேறு திசைகளில் சென்றனர்."



*போரில் அர்ஜுனனைக் கொன்று, நான் பெரும் தகுதியை அடைவேன், அல்லது சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, புகழால் நான் போர்த்தப்படுவேன்...
திருக்குறள்/ பொருட்பால்/ அதிகாரம்-படைச்செருக்கு/ குறள்:779.

இழைத்தது        இகவாமைச்     சாவாரை            யாரே        
பிழைத்தது        ஒறுக்கிற்            பவர்.

தமிழ் விளக்கவுரை-சாலமன் பாப்பையா :
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்