Friday, November 20, 2015

பீமன் புரிந்த கோரத்தாண்டவம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 054அ

Bhima's dance of terror! | Bhishma-Parva-Section-054a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : பீமனைத் தாக்க நிஷாத மன்னன் கேதுமானுடன் சேர்ந்து விரைந்த கலிங்க மன்னன் சுருதாயுஸ்; போர்க்களத்தின் கொடூர நிலை; பீமசேனனைக் கைவிட்டு சேதி நாட்டு வீரர்கள் பின்வாங்குவது; பீமன் தனியாகப் போராடுவது; பீமனின் குதிரைகளைக் கொன்ற சக்ரதேவன்; பீமன் சக்ரதேவனைக் கொல்வது; பானுமானைக் கொன்ற பீமன்; வாளை எடுத்துக் கொண்டு பீமன் புரிந்த கோரத்தாண்டவம்....

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "எனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவனும், தனது துருப்புகளால் ஆதரிக்கப்பட்டவனும், பெரும் படைப்பிரிவின் தலைவனுமான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, அற்புதம் நிறைந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரனும், மரணத்தைப் போன்ற கதாயுதத்தைக் கையில் கொண்டு போர்க்களத்தில் உலவும் வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து எப்படிப் போரிட்டான்?" என்று கேட்டான்.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட கலிங்கர்களின் வலிமைமிக்க மன்னன் {சுருதாயுஸ்}, ஒரு பெரும் படையின் துணையுடன் பீமனின் தேரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சேதிகளால் {சேதி நாட்டு வீரர்களால்} ஆதரிக்கப்பட்ட பீமசேனன், நிஷாதர்களின் மன்னனுடைய மகனான கேதுமானுடன் சேர்ந்து கொண்டு தன்னை நோக்கி வருவதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் பெரும் படையை நோக்கி விரைந்தான்.

கவசம் தரித்தவனும், கோபத்தால் தூண்டப்பட்டவனுமான சுருதாயுசும் அணிவகுக்கப்பட்ட தனது துருப்புகளால் பின்தொடரப்பட்டு, மன்னன் கேதுமான் துணையுடன் அந்தப் போரில் பீமனுக்கு முன்பாக வந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, பத்தாயிரம் {10,000} யானைகள் மற்றும் நிஷாதர்களுடன் கூடிய கேதுமானும், பீமசேனனை அனைத்துப் புறங்களில் இருந்தும் சூழ்ந்தனர்.

பிறகு, பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களான சேதிகள், மத்ஸ்யர்கள், கரூசர்கள், ஆகியோர் பல மன்னர்களுடன் சேர்ந்து நிஷாதர்களுக்கு எதிராக விரைவாகச் சென்றனர். ஒருவரை ஒருவர் கொல்லும் விருப்பத்தில் விரைந்து கொண்டிருந்த வீரர்களுக்கிடையில், கடுமையான பயங்கரப் போர் தொடங்கியது. பீமனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் திடீரென மூண்ட அந்தப் போர், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் இந்திரனுக்கும், திதியின் மகன்களுடைய வலிமைமிக்கப் படைக்கும் இடையில் நடந்த போரைப் போன்று பயங்கரமானதாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் போராடிக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கப் படையின் ஆரவாரம், முழங்கிக் கொண்டிருக்கும் கடலின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட போராளிகள் அந்தப் போர்க்களம் முழுவதையும் சதையும், இரத்தமும் பரவிய ஒரு சுடுகாடு போல ஆக்கினர். படுகொலை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்ட போராளிகளுக்கு நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை. போரில் எளிதில் வெல்லப்பட முடியாத அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் சொந்த நண்பர்களையே தாக்கத் தொடங்கினர். சேதிகள் {சேதி நாட்டு வீரர்கள்} ஒரு புறத்திலும், கலிங்கர்களும், நிஷாதர்களும் ஒருபுறத்திலுமென, சிலருக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்த மோதல் பயங்கரமாக இருந்தது.

தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தித் தங்கள் ஆண்மையை வெளிப்படுத்திய சேதிகள் பீமசேனனைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். சேதிகள் தன்னைத் தொடர்வதை நிறுத்தியதும், கலிங்கர்கள் அனைவருடனும் போரிட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது சொந்த கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி திரும்பாமல் போரிட்டான்.

உண்மையில், வலிமைமிக்க அந்தப் பீமசேனன் அசையாமல் தனது தேர் தட்டில் நின்றபடி கலிங்கர்களின் படைப்பிரிவின் மேல் தனது கூரிய கணைகளை மழையெனப் பொழிந்தான். அப்போது, வலிமைமிக்க வில்லாளியும், தேர்வீரனுமான அந்தக் கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, சக்ரதேவன் என்ற பெயரால் அறியப்பட்ட அவனது {சுருதாயுசின்} மகன் ஆகிய இருவரும் தங்கள் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {பீமனைத்} தாக்கத் தொடங்கினர். தனது அழகிய வில்லை அசைத்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், தனது கரங்களின் தனிப்பட்ட பலத்தை மட்டுமே நம்பி அந்தக் கலிங்கனுடன் {சுருதாயுசுடன்} போரிட்டான். எண்ணிலாக் கணைகளை அந்தப் போரில் அடித்த சக்ரதேவன், அவற்றைக் கொண்டு பீமசேனனின் குதிரைகளைக் கொன்றான்.

எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனன் தேரிழந்து நிற்பதைக் கண்ட சக்ரதேவன், அவன் {பீமன்} மீது கூரிய கணைகளை அடித்தபடியே அவனிடம் விரைந்தான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலம் கடந்ததும் {கார்காலத்தில்} மழையைப் பொழியும் மேகங்களைப் போல அந்த வலிமைமிக்கச் சக்ரதேவன் கணைமாரியைப் பொழிந்தான். ஆனால், வலிமைமிக்கப் பீமசேனனோ, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் நின்று கொண்டே, கடுமையான இரும்பிலான {எஃகால் ஆன} ஒரு கதாயுதத்தைச் சக்ரதேவன் மேல் வீசினான். அந்தக் கதாயுதத்தால் கொல்லப்பட்ட கலிங்க ஆட்சியாளரின் மகன் {சக்ரதேவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடியும் தேரோட்டியும் கொண்ட தனது தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.

தனது மகன் {சக்ரதேவன்} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, பல்லாயிரம் தேர்களுடன் பீமனை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டான். பெரும் வலிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் கதாயுதத்தைக் கைவிட்டு, கடுஞ்சாதனை செய்ய விரும்பி, வாளை எடுத்துக் கொண்டான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களில் காளை {பீமன்}, தங்கத்திலானதும், சந்திரப்பிறைகளைக் கொண்டதுமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, தனது வில்லின் நாண் கயிற்றைத் {கைகளால்} தேய்த்துக் கொண்டு, (அந்தப் பாண்டவனை {பீமனைக்}) கொல்ல விரும்பிய அந்த ஏகாதிபதி {சுருதாயுஸ்} பாம்பின் விஷத்தைப் போன்ற ஒரு பயங்கரக் கணையை எடுத்து பீமசேனனின் மீது எய்தான். இப்படித் தொடுக்கப்பட்ட அந்தக் கூரிய கணையை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது பெரும் வாளால் பீமசேனன் இரண்டாகப் பிளந்தான். அதனால் பெரிதும் மகிழ்ந்த அவன் {பீமன்}, துருப்புகளை அச்சுறுத்தும் வகையில் பேரொலியுடன் முழங்கினான்.

பீமசேனனுடனான அந்த மோதலில் பெரும் கோபம் தூண்டப்பட்டவனான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்ட பதினான்கு தோமரங்களை {ஈட்டியில் ஒரு வகை} அவன் {பீமன்} மீது வீசினான். எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, தான் கொண்டிருந்த அந்தச் சிறந்த வாளைக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானில் வந்து கொண்டிருந்த அந்தத் தோமரங்கள் தன்னை அடையும் முன்பே அவற்றைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். (இப்படி) அந்தப் போரில் அந்தப் பதினான்கு தோமரங்களையும் வெட்டியவனும் மனிதர்களில் காளையுமான அந்தப் பீமன் பானுமானைக்[1] கண்டு அவனிடம் விரைந்தான்.

[1] இவன் துரியோதனனின் மைத்துனனாவான். துரியோதனனின் மனைவி பானுமதியின் சகோதரனாவான். ஆனால் பானுமதியின் தந்தை பெயர் சித்திராங்கதன் என்பதாகும்.

அப்போது, பானுமான் கணைமாரியால் பீமனை மறைத்து, குரலால் பேரொலியை எழுப்பி அவ்வொலியை வானில் எதிரொலிக்கச் செய்தான். எனினும், அந்தக் கடும்போரில், பீமனால் அந்தப் பேரொலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தானே உரத்த குரலைக் கொண்டவனான அவன் {பீமன்}, அதைவிட அதிக ஒலியுடன் ஆரவாரம் செய்தான். அவனது ஆரவாரத்தைக் கேட்ட கலிங்கர்களின் படை அச்சத்தால் நிறைந்தது. அந்தப் போரில், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் பீமனை யாரும் மனிதனாகக் கருதவில்லை.

ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கையில் வாளுடன் உரக்க ஆரவாரம் செய்த அந்தப் பீமன், (பானுமானின்) அற்புதமான யானையின் மீது குதித்தான். அந்த யானையுடைய தந்தங்களின் உதவியைக் கொண்டு {தந்தங்களைப் பிடித்துக் கொண்டு} அந்த யானைகளின் இளவரசனுடைய {யானையின்} முதுகில் ஏறிய அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தனது கனமான வாளைக் கொண்டு பானுமானை நடுவில் இரண்டாகப் பிளந்தான். இப்படிக் கலிங்கர்களின் இளவரசனை அந்தப் போரில் கொன்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அடுத்து பெரும் சுமையைத் தாங்க வல்ல தனது வாளை அந்த யானையின் கழுத்தில் இறக்கினான். தலை வெட்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் பெரும் ஒலியோடு அலறிக் கொண்டு, வேகமான கடலின் அலைகளால் உண்ணப்படும் {அரிக்கப்படும்} அடிவாரம் கொண்ட சிகரத்துடன் கூடிய மலையைப் போலப் பூமியில் விழுந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்படி விழும் யானையில் இருந்து கீழே குதித்தவனும், உற்சாகமிழக்காத ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாரதக் குலத்தின் இளவரசன் {பீமன்}, (முன்பு போலவே) கவசத்துடனும், கையில் வாளுடனும் பூமியில் நின்றான்.

அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற யானைகளை விழச்செய்து (போர்க்களத்தில்} பல பாதைகளை உண்டாக்கிக் கொண்டு திரிந்தான். குதிரைப்படை, யானைகள், தேர்கள், காலாட்படையின் பெரும்பகுதி என அனைத்தையும் கொன்றபடி நெருப்புச் சக்கரத்தைப் போல அவன் சுழல்வதாக அப்போது தெரிந்தது. மனிதர்களில் தலைவனும், வலிமைமிக்கவனுமான பீமன், கூரிய முனை கொண்ட தனது வாளைக் கொண்டு, யானை மீதிருந்த போராளிகளின் உடல்களையும் தலைகளையும் விரைவாக வெட்டிக் கொண்டு பருந்தின் சுறுசுறுப்புடன் களத்தில் பறப்பதாகத் தெரிந்தது.

காலாட்படை வீரனாக நின்று, கோபத்தால் தூண்டப்பட்டு, பிரளய காலத்து யமனைப் போலத் தனியனாகவே நின்று தனது எதிரிகளுக்கு அச்சமூட்டிய அவன் {பீமன்}, அந்தத் துணிவுமிக்க வீரர்களைக் கலங்கச் செய்தான். அவர்களில் புத்தியற்றிருந்தவர்கள் மட்டுமே, கையில் வாளுடன் அந்தப் பெரும்போரில் வேகமாக உலவி கொண்டிருந்த அவனை நோக்கிப் பெரு முழக்கம் செய்து கொண்டு விரைந்தார்கள். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், பெரும் பலம் கொண்டவனுமான அவன் {பீமன்} அந்த வீரர்களுடைய தேரின் ஏர்க்கால்களையும், நுகத்தடிகளையும் வெட்டி, இறுதியில் அந்த வீரர்களையும் கொன்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன் பல்வேறு விதமான அசைவுகளை அங்கே வெளிப்படுத்துவதாகத் தெரிந்தது. வேகமாக நகர்தல், உயரமாகச் சுழன்று வருதல், இருபக்கங்களிலும் அசைதல், நேராகக் குதித்தல், ஓடுதல், உயரமாகக் குதித்தல் என {களத்தில்} அசைந்து கொண்டிருந்தான். மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் காணப்பட்டான் [2]. உயர் ஆன்ம பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} அற்புதமான வாளால் சிதைக்கப்பட்ட சிலர், உயிர்நிலைகளில் தாக்கப்பட்டோ, உயிரிழந்து கீழே விழும்போதோ உரக்க அலறினர்.

[2] வேறுபதிப்பில் இந்த நிலைகள் பின்வருமாறு சொல்லப்படுகிறது: வட்டமாகச் சுழல்தல் {பிராந்தம்}, நாற்புறத்திலும் வீசுதல் {ஆவித்தம்}, மேலாகச் சுழல்தல் {உத்பிராந்தம்}, நாற்புறத்திலும் மேலாகச் சுழல்தல் {ஆப்லுதம்}, நேராக நீட்டல் {பிரஸ்ருதம்}, துள்ளுதல் {பிலுதம்}, இலக்குகளை அடித்தால் {சம்பாதம்}, நேராக வீசுதல் {சமுதீர்ணம்} எனப் பல்வேறு விதமான வாள்வீச்சுகளை வெளிப்படுத்தினான் என்று இருக்கிறது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துதிக்கைகள் வெட்டப்பட்ட சிலவும், தந்தங்கள் வெட்டப்பட்ட சிலவும், தலை பிளக்கப்பட்ட சிலவும் எனப் பல யானைகள் தங்கள் ஓட்டுநர்களை {பாகன்களை} இழந்து, தங்கள் படைகளையே கொன்றபடி பெரும் அலறலுடன் கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உடைந்த ஈட்டிகள், யானை செலுத்தும் வீரர்களின் தலைகள், யானைகளுக்கு மேலிருந்த கூடுகள், தங்கம் போன்ற பிரகாசமான கச்சைகள், கழுத்தணிகள், சக்திகள், உலக்கைகள், அம்பறாத்தூணிகள், பல்வேறு வகைகளிலான பொறிகள், அழகிய விற்கள், பளபளக்கும் தலைகளைக் கொண்ட குறு அம்புகள் {பிண்டிபாலங்கள்}, யானைகளை வழிநடத்தப் பயன்படும் அங்குசங்கள் {வேணுகங்கள்}, இரும்பு மாவெட்டிகள், பல்வேறு வடிவங்களிலான மணிகள், தங்கத்தால் இழைக்கபட்ட வாள் பிடிகள் ஆகியவை கீழே விழுவதையும், அல்லது (ஏற்கனவே) விழுந்து கொண்டிருக்கும் குதிரை ஓட்டிகளிடம் இருந்து அவை விழுவதையும் நாங்கள் கண்டோம்.

உடலின் முன்புறமும், கீழ்ப்புறமும், துதிக்கையும் வெட்டப்பட்டோ, முழுவதும் கொல்லப்பட்டோ கிடந்த யானைகளைக் கொண்ட பூமி, நொறுங்கி விழுந்த மலைகள் பரவியிருக்கும் போர்க்களம் போலத் தோன்றியது. இப்படிப் பெரும் யானைகளை நசுக்கிய அந்த மனிதர்களில் காளை {பீமன்}, அடுத்ததாகக் குதிரைகளையும் நசுக்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {பீமன்}, குதிரை வீரர்களில் முதன்மையானவர்களையும் சாய்த்தான்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், அவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போர் எல்லையில்லா கடுமை கொண்டதாக இருந்தது. கடிவாளங்கள், பூட்டங்கயிறுகள், பொன்னொளிவீசும் கச்சைகள், குதிரையின் மேல்விரிப்புகள், ஈட்டிகள், விலைமதிப்புமிக்க ரிஷ்டிகள் {வளையும் தன்மைமிக்க ஒரு வகை வாள்}, கவசங்கள், கேடயங்கள், அழகிய ஆபரணங்கள் ஆகியன அந்தப் போர்க்களத்தில் தரையில் பரவிக் கிடந்தன. அவன் {பீமன்}, (இரத்தத்தால்) பற்பல நிறமுள்ள அல்லி மலர்களால் நிரம்பியதைப் போலத் அந்தப் போர்க்களத்தைப் தோன்றச் செய்தான்.

வலிமைமிக்கவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயரக் குதித்து, கொடிமரங்களுடன் கூடிய சில தேர்வீரர்களைத் தன் வாளால் இழுத்துக் கிழே தள்ளினான். அடிக்கடி மேலே குதித்தும், பெரும் சுறுசுறுப்புடன் அனைத்துப் புறங்களிலும், பல்வேறு வழிகளில் விரைந்தும் சென்ற அந்த வீரன் {பீமன்} போராளிகளை வியக்கச் செய்தான். காலால் சிலரைக் கொன்றான். தரையில் இழுத்துப் போட்டு, பூமியில் அழுத்தி சிலரைக் கொன்றான். தனது வாளால் சிலரைக் கொன்றான். தனது முழக்கங்களால் சிலரை அச்சுறுத்தினான். (தான் ஓடும்போது உண்டான) விசையால் சிலரைத் தரையில் வீழ்த்தினான். சிலர் அவனைக் {பீமனைக்} கண்ட அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடினார்கள். இப்படியே, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட கலிங்கர்களின் பெரிய படை அந்தப் போர்க்களத்தில் பீமசேனனைச் சூழ்ந்த படி அவனிடம் விரைந்து சென்றது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்