Saturday, February 24, 2018

உதத்தியரும், மாந்தாதாவும்! - சாந்திபர்வம் பகுதி – 90

Utatthya and Mandhatri! | Shanti-Parva-Section-90 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 90)


பதிவின் சுருக்கம் : பிரம்ம முனிவரான உதத்யர், மன்னன் மாந்தாதாவுக்குப் போதித்த அரசநீதியை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(முன்னொரு காலத்தில்) வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும் அங்கீரச குலத்தவருமான உதத்தியர் {உசத்தியர்}, யுவனாஸ்வனின் மகனான மாந்தாத்ரியிடம் {மன்னன் மாந்தாதாவிடம்} உற்சாகமாக உரையாடினார்.(1) ஓ! யுதிஷ்டிரா, வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரான உதத்தியர், அந்த மன்னனிடம் {மாந்தாதாவிடம்} சொன்ன யாவற்றையும் நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)


உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, "நீதியின் படி செயல்படவே ஒருவன் மன்னனாகிறானேயன்றி கணிக்கமுடியாதபடி நடந்து கொள்வதற்காக அல்ல. ஓ! மாந்தாத்ரி, உண்மையில் மன்னனே இவ்வுலகின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்வாயாக.(3) மன்னன் நீதியுடன் செயல்பட்டால், அவன் தேவ நிலையை அடைகிறான். மறுபுறம், அவன் நீதியில்லாமல் செயல்பட்டாலோ அவன் நரகில் மூழ்குகிறான்.(4) அனைத்துயிர்களும் அறத்திலேயே ஓய்ந்திருக்கின்றன. அறமோ மன்னனில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அறத்தை உயர்த்திப் பிடிக்கும் மன்னனே, உண்மையில் மன்னனாவான்.(5) நீதிமிக்க ஆன்மாவையும், அருள்கள் அனைத்தையும் கொண்ட மன்னன் அறத்தின் வடிவம் என்றே சொல்லப்படுகிறான். மன்னன், அநீதியை தண்டிக்கத் தவறினால், தேவர்கள் அவனது மாளிகையைக் கைவிடுவார்கள், மேலும் அவன் மனிதர்களுக்கு மத்தியில் கடுங்கண்டனத்தையீட்டுவான்.(6) தங்கள் கடமைகளை நோற்கும் மனிதர்களின் முயற்சிகள் எப்போதும் வெற்றியால் மகுடம் சூட்டப்படும். இதன் காரணமாகவே மனிதர்கள் அனைவரும் செழிப்பை உண்டாக்கும் அறவிதிகளுக்குக் கீழ்ப்படிந்த நடக்க முனைகிறார்கள்.(7)

பாவத்தைக் கட்டுப்படுத்தாதபோது, நீதிமிக்க நடத்தை முடிவுக்கு வந்து, அநீதி பெருமளவில் அதிகரிக்கிறது.(8) பாவம் கட்டுப்படுத்தப்படாதபோது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உடைமை உரிமைகளின்படி, "இஃது எனது, இஃது எனதில்லை" என்று எவனாலும் சொல்லமுடியாது.(9) உலகில் பாவமே மேலோங்கியிருக்கும்போது மனிதர்களால் தங்கள் மனைவியர், விலங்குகள், நிலங்கள் மற்றும் வீடுகளை அனுபவிக்க முடியாது.(10) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, தேவர்கள் எந்த வழிபாட்டையும் பெற மாட்டார்கள், பித்ருக்கள் சிராத்தங்களில் எந்தக் காணிக்கைகளையும் பெற மாட்டார்கள், விருந்தினர்கள் விருந்தோம்பலைப் பெற மாட்டார்கள்.(11) பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மறுபிறப்பாள வர்க்கத்தினர் வேதங்களைக் கற்க மாட்டார்கள், அல்லது உயர்ந்த நோன்புகளை நோற்கமாட்டார்கள், அல்லது வேள்விகளைப் பரவ விடமாட்டார்கள்.(12) ஓ! மன்னா {மாந்தாதா}, பாவத்தைக் கட்டுப்படுத்தாத போது, மனிதர்களின் மனமானது, ஆயுதங்களால் காயமடைந்தோரைப் போன்ற, பலவீனத்தையும் குழப்பத்தையும் அடையும் .(13) இம்மையிலும், மறுமையிலும் தங்கள் கண்களைச் செலுத்தும் முனிவர்கள், பூமியில் நீதியின் வடிவமாக இருக்கும் வகையில் மன்னனை மேன்மையானவனாக அமைத்தார்கள்[1].(14) எவனிடம் நீதி ஒளிர்கிறதோ அவனே ராஜன் என்று அழைக்கப்படுகிறான். மேலும் எந்த மன்னனிடம் அறமில்லையோ அவன் விருஷலன் என்று அழைக்கப்படுகிறான்[2].(15)

[1] "பீஷ்மர் இதை மிகப் பழமையான உரையாடல் என்று சொல்கிறார். ஒருவேளை இந்தச் சுலோகமானது, பிரம்மவர்த முனிவர்களை இந்தியப் பகுதியில் முடியாட்சியின் வடிவத்தை ஏற்படுத்த தூண்டிய எழுத்தாளருடைய கருத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகிறது எனக் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] இந்தச் சுலோகம் ராஜன் மற்றும் விருஷலன் என்ற வார்த்தைகளின் சொற்பிறப்பியலைக் கொடுக்கிறது. எவனிடம் அறம் ஒளிர்கிறதோ (ராஜதே {Raajate}) அவன் ராஜனாவான். எவனிடம் விருஷம் என்றழைக்கப்படும் அறம் மறைகிறதோ அவன் விருஷலன் ஆவான். அடுத்தச் சுலோகத்தைப் பார்க்கவும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

எவன் விருஷத்தை {அறத்தை} பலவீனமடையச் செய்கிறானோ அவன் விருஷலன் என்ற பெயரில் அறியப்படுகிறான். எனவே, ஒரு மன்னன் அறத்திற்கான காரணத்தை முன்னேற்ற வேண்டும்.(16) அனைத்துயிரினங்களும் அறத்தின் வளர்ச்சியில் வளர்கின்றன, அதன் சிதைவில் அழிகின்றன. எனவே, அறம் அழிய ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.(17) செல்வத்தை (தனத்தை) அடைந்து, பாதுகாக்கத் துணைபுரியும் காரணத்தால் நீதியே தர்மம் {அறம்} என்றழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, தவசிகள், தர்மமே மனிதர்களின் அனைத்துத் தீய செயல்களையும் கட்டுப்படுத்தி, எல்லைகளை நிர்ணயிக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.(18)


பிரம்மன்
தான்தோன்றி (பிரம்மன்), உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காகவே தர்மத்தை {அறத்தை} உண்டாக்கினான். இதன் காரணமாகவே, ஒரு மன்னன், தன் குடிமக்களின் நன்மைக்காக அறவிதிகளின்படி செயல்பட வேண்டும்.(19) மேலும், இதே காரணத்திற்காகவே, ஓ! மனிதர்களில் புலியே {மந்தாதா}, அனைத்திலும் முதன்மையானதாகத் தர்மம் {அறம்} சொல்லப்படுகிறது. மனிதர்களில் முதன்மையான எவன், தன் குடிமக்களை நீதியுடன் ஆள்கிறானோ, அவனே மன்னன் என்று அழைக்கப்படுகிறான்.(20)

காமத்தையும், கோபத்தையும் அலட்சியம் செய்து, அறவிதிகளை நீ நோற்பாயாக. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் செழிப்புக்கு உகந்ததாக இருக்கும் அறமே அனைத்திலும் முதன்மையானது.(21) மேலும், தர்மமானது பிராமணனிடம் இருந்து உண்டானது. இதன்காரணமாகவே, எப்போதும் பிராமணன் வழிபடப்பட வேண்டும். ஓ! மாந்தாத்ரி, நீ பிராமணர்களின் விருப்பங்களைப் பணிவுடன் நிறைவு செய்வாயாக.(22) பிராமணர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதைப் புறக்கணித்தால், மன்னன் தனக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறான். அத்தகு புறக்கணிப்பின் விளைவால் அவன், நண்பர்கள் எவரையும் அடைவதில் தவறி, தன் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறான்.(23)


பலி_மகாபலி
விரோசனன் மகனான அசுரன் பலியின் {மகாபலியின்} மூடத்தனத்தால் எழுந்த பிராமணர்களுக்கு எதிரான வன்மத்தின் விளைவாக, முன்பு அவனிடமே {மகாபலியிடமே} வசித்திருந்த செழிப்பின் தேவி {திருமகள்} அவனைக் கைவிட்டாள்.(24) அவள் {திருமகள்}, அந்த அசுரனைக் கைவிட்டுத் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் சென்றாள். புரந்தரனுடன் {இந்திரனுடன்} வாழும் அந்தத் தேவியைக் கண்ட பலி, பலவாறாக வீண் வருத்தமடைந்தான்.(25)

ஓ! பலமிக்கவனே {மந்தாதா}, இதுவே வன்மம் மற்றும் செருக்கின் விளைவாகும். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, செழிப்பின் தேவி {திருமகள்} கோபத்தில் உன்னைக் கைவிடாதவாறு நீ விழிப்புடன் இருப்பாயாக.(26) அநீதியானது {அதர்மமானது}, செழிப்பின் தேவியிடம் {திருமகளிடம்} செருக்கு {அகங்காரம்} என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றது என்று சுருதிகள் அறிவிக்கின்றன. ஓ! மன்னா {மந்தாதா}, இந்தச் செருக்கே தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு மத்தியில் பலரை அழிவடையச் செய்தது.(27) அவனால் {செருக்கால்} அரசமுனிகள் பலரும் அழிவை அடைந்திருக்கின்றனர். எனவே, ஓ! மன்னா, நீ விழிப்படைவாயாக. அவனை {செருக்கை} வெற்றிகொள்வதில் வெல்பவனே மன்னனாகிறான். மறுபுறம், அவனால் {செருக்கால்} வெற்றி கொள்ளப்படுபவன் எவனோ, அவன் ஓர் அடிமையே ஆகிறான்.(28) ஓ! மாந்தாத்ரி, நீ அழிவில்லா (புகழ்) வாழ்வை விரும்பினால், செருக்கு மற்றும் அநீதி {அதர்மம்} ஆகிய இரண்டிலும் ஈடுபடாத ஒரு மன்னனாக வாழ்வாயாக.(29) (செருக்கால்) போதையுண்டிருப்பவன், (நேர்மையின் விதிகளில்) அலட்சியமாக இருப்பவன், அறத்தை ஏளனம் செய்பவன், உணர்வற்றவன், ஒன்றுசேர்ந்திருக்கும் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து கொள்பவன் ஆகியோரின் தோழமையைத் தவிர்ப்பாயாக.(30)

முன்பு உன்னால் தண்டிக்கப்பட்டவன், அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிமித்தமாகத் தண்டிக்கப்பட்ட அமைச்சர்களின் தோழமை, மலைகள், சமமற்ற நிலங்கள், அடைவதற்கரிதான காடுகள், யானைகள், குதிரைகள் மற்றும் நச்சுப்பாம்புகள் ஆகிவற்றிடம் இருந்து விலகிச் செல்வாயாக. நீ இரவில் திரிவதைக் கைவிட வேண்டும். மேலும், கஞ்சத்தனம், பகட்டு, தற்புகழ்ச்சி, கோபம் ஆகிய பிழைகளையும் நீ தவிர்க்க வேண்டும்.(32) அறியாத பெண்களிடமோ, இருபாலினத்தோரிடமோ {பேடிகளிடமோ}, காமவெறிபிடித்தவர்களிடமோ, பிறரின் மனைவியரிடமோ, திருமணமாகாத கன்னியரிடமோ நீ ஒருபோதும் உடலுறவில் ஈடுபடக்கூடாது.(33) தீயொழுக்கத்தை மன்னன் கட்டுப்படுத்தாத போது, வர்ணக் குழப்பம் பின்தொடரும், மதிப்பிற்குரிய குடும்பங்களில் கூட, பாவம் நிறைந்த ராட்சசர்களும், அலிகளும், உறுப்பிழந்த பிள்ளைகளும், தடித்த நா படைத்தவர்களும், மூடர்களும் பிறப்பெடுக்கத் தொடங்குவார்கள்.(34) எனவே, மன்னன் தன் குடிமக்களுக்கு நன்மை செய்வதன் பொருட்டு, நீதியுடன் செயல்படக் குறிப்பான கவனத்தைக் கொள்ள வேண்டும்.(35)

ஒரு மன்னன் கவனமில்லாமல் செயல்பட்டால், அதன் விளைவாகப் பெருந்தீமையே விளையும். அநீதியானது {அதர்மமானது} அதிகரித்தால், அது வர்ணக்குழப்பத்தையே உண்டாக்கும்.(36) கோடைகால மாதங்களில் குளிர் ஏற்பட்டு, அதற்குரிய காலம் வரும்போது மறைந்துபோகும். வறட்சி, வெள்ளம், தொற்றுநோய்கள் ஆகியன மக்களைப் பீடிக்கும்.(37)

அத்தகு தருணங்களில், தீமை விளைவிக்கும் நட்சத்திரங்கள் எழுந்து, பயங்கரமான எரிநட்சத்திரங்கள் தோன்றும். நாட்டின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் பிறவும் தோன்றும்(38) மன்னன் தன் பாதுகாப்புக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், தன் குடிமக்களையும் பாதுகாக்காமல் இருந்தால், முதலில் பின்னவர்களுக்கு {குடிமக்களுக்கு} அழிவு ஏற்பட்டு, பிறகு அந்த அழிவானது மன்னனையே பற்றும்.(39) இரு மனிதர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவனின் செல்வத்தைப் பறிப்பார்கள், குழுவாகச் செயல்படும் பலர் அந்த இருவரிடமும் கொள்ளையடிப்பார்கள். கன்னியரின் கற்பு அழிக்கப்படும். அத்தகு நிலைகள் மன்னனின் பிழைகளில் இருந்தே உண்டாகின்றன என்று சொல்லப்படுகிறது.(40) மன்னன் அறத்தைக் கைவிட்டு, கவனமில்லாமல் செயல்பட்டால், மனிதர்களுக்கு மத்தியில், உடைமைக்கான உரிமைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்" என்றார் {உதத்தியர்}.(41)

சாந்திபர்வம் பகுதி – 90ல் உள்ள சுலோகங்கள் : 41

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்