Tuesday, March 13, 2018

க்ஷேமதர்சினும், காலகவிருக்ஷீயரும்! - சாந்திபர்வம் பகுதி – 104

Kshemadarcin and Kalakavrikshiya! | Shanti-Parva-Section-104 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 104)


பதிவின் சுருக்கம் : நாட்டை இழந்தவனும், அறவோனுமான மன்னனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Kshemadarcin and Kalakavrikshiya - Mahabharata

க்ஷேமதர்சின் _ காலவிருக்ஷீயர் -மகாபாரதம் 
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தன் சொந்த அதிகாரிகளாலேயே எதிர்க்கப்படுபவனும், கருவூலமும், படையும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதவனும், செல்வமில்லாதவனும், அறவோனுமான ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவதற்காகத் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)


Kosala Map - Mahabharata
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக எப்போதும் க்ஷேமதர்சினின் கதை சொல்லப்படுகிறது. நான் அக்கதையை உனக்குச் சொல்கிறேன். ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில் {கோசல நாட்டு} இளவரசன் க்ஷேமதர்சின் பலவீனமடைந்தவனாக, பெரும் துயரத்தில் வீழ்ந்தபோது, அவன் தவசி காலகவிருக்ஷீயரிடம் சென்று, பணிவுடன் வணங்கி அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்[1].(3)

[1] "வங்க உரைகளில் 3ம் ஸ்லோகத்தின் முதல் வரியில் யாத்திரை Yatra என்பதற்குப் பதில், பிழையாகச் சத்ரு Catru என்ற வார்த்தை இருக்கிறது. பர்துவான் பண்டிதர்களும் தங்கள் பதிப்பில் அதே பிழையைத் தொடர்கிறார்கள். கே.பி.சின்ஹா இதைத் தவிர்க்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். சாந்தி பர்வம் 82ம் பகுதியில் இதே க்ஷேமதர்சின் மற்றும் காலகவிருக்ஷீயர் ஆகியோருக்கிடையில் நடந்த வேறொரு உரையாடலைப் https://mahabharatham.arasan.info/2018/02/Mahabharatha-Santi-Parva-Section-82.html பீஷ்மர் யுதிஷ்டிரனுக்குச் சொல்கிறார்.



மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, "ஓ! பிராமணரே, செல்வம் வேண்டும் என்னைப் போன்ற ஒரு மனிதன், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும், தன் நாட்டை மீட்கத் தவறினால், தற்கொலை, களவு, கொள்ளை, அடுத்தவரின் புகலிடத்தை நாடுதல், மேலும் இது போன்ற அற்ப காரியங்களைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(4,5) அறநெறிகளை அறிந்தவரும், மகிமை நிறைந்தவருமான உம்மைப் போன்ற ஒருவரே, மன, அல்லது உடல் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனுக்குப் புகலிடமாவீர்.(6) மனிதன் தன் ஆசைகளைக் கைவிட வேண்டும். இவ்வழியில் இன்ப துன்பங்களைக் கைவிட்டு, அறிவெனும் செல்வத்தை ஈட்டிச் செயல்படும் ஒருவன் புகழை அடைவதில் வெல்கிறான். செல்வத்தைச் சார்ந்து உலக இன்பங்களில் பற்று கொள்வோருக்காக நான் வருந்துகிறேன். எனினும், அவை யாவும் ஒரு கனவைப் போல மறைந்து விடுகின்றன.(8) பரந்த செல்வத்தைக் கைவிட முடிந்தோர், மிகக் கடினமான சாதனையை அடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில், எங்களிடம் இல்லாத செல்வத்தைக் கைவிட முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம்[2].(9) செழிப்பை இழந்து, மகிழ்ச்சியற்ற துயரமான இழிநிலையில் நான் விழுந்துவிட்டேன். ஓ! பிராமணரே, எந்த மகிழ்ச்சிக்காக நான் இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை எனக்குப் போதிப்பீராக" எனக் கேட்டான்.(10) நுண்ணறிவு மிக்க அந்தக் கோசல இளவரசனால் {க்ஷேமதர்சினால்} இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவருமான தவசி காலகவிருக்ஷீயர் பின்வரும் பதிலை அளித்தார்.(11)

[2] "என் நாட்டை இழந்துவிட்டாலும், அதை மீட்கும் நம்பிக்கையை என்னால் கைவிட முடியவில்லை என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, "ஏற்கனவே நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்றே தெரிகிறது. அறிவைக் கொண்டவனான நீ, உன் எண்ணத்தைப் போலவே செயல்பட வேண்டும். "நான் மற்றும் நான் கொண்டவை உள்ளிட்ட இவை அனைத்தும் நிலையற்றவை என்றே நான் காண்கிறேன்" என்ற உன் நம்பிக்கை சரியானதே.(12) ஓ! இளவரசே, எப்பொருள் இருக்கிறது என நீ கருதுகிறாயோ, அஃது உண்மையில் இல்லை என்று அறிவாயாக. ஞானம் கொண்ட மனிதன் இஃதை அறிகிறான், அதன்படி, எத்துன்பம் அவனுக்கு ஏற்பட்டாலும் அவன் ஒருபோதும் துன்பப்படுவதில்லை.(13) எவை நடந்தனவோ, எவை நடக்க இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உண்மையற்றவை. அனைவரும் அறிய வேண்டிய இதை நீ அறியும்போது, அநீதியில் {அதர்மத்தில்} இருந்து விடுபடுவாய்.(14) முன்பு ஈட்டப்பட்ட, அடையப்பட்ட பொருட்கள், அதற்குப் பின் ஈட்டப்பட்ட அடையப்பட்ட பொருட்கள் யாவும் அழிந்துவிட்டன. இதைக் கருத்தில் கொண்டால், எவன் தான் துன்பப்பட மாட்டான்?(15)

எப்பொருட்கள் இருந்தனவோ, அவை ஒன்றும் இப்போது இல்லை. இப்போது இருப்பவையும் இல்லாமலே போகும். துயரத்திற்கு அவற்றை மீட்கும் சக்தி கிடையாது. எனவே, ஒருவன் துன்பத்தில் ஈடுபடக்கூடாது.(16) ஓ! மன்னா {க்ஷேமதர்சனா}, இன்று உன் தந்தையும் எங்கே? உன் பாட்டன் எங்கே? இன்று நீயும் அவர்களைக் காணவில்லை. அவர்களும் இப்போது உன்னைக் காணவில்லை.(17) உனது நிலையின்மையைக் கருத்தில் கொண்டால், அவற்றுக்காக நீ ஏன் வருந்தப் போகிறாய்? நுண்ணறிவின் துணையுடன் சிந்திப்பாயாக, நீயும் இருக்க மாட்டாய் என்பதை நீ புரிந்து கொள்வாய்.(18) ஓ! மன்னா, நான், நீ, உன் நண்பர்கள், எதிரிகள் ஆகியோர் அனைவரும் நிச்சயம் இல்லாமல் போவோம். உண்மையில், அனைத்தும் இல்லாமலே போகும்.(19) இன்று இருபது, அல்லது முப்பது வயது கொண்டோர் அனைவரும், அடுத்த நூறு ஆண்டுகளில் நிச்சயம் இறந்துவிடுவார்கள்.(20)

ஒரு மனிதன் தன் பரந்த உடைமைகளை விட்டுக் கொடுக்கும் இதயம் இல்லாதவனாக இருந்தால், அவன் தன் உடைமைகள் தனதல்ல என்று நினைக்க முயற்சித்து, அதன் மூலம் தன் நன்மையை நாட வேண்டும்[3].(21) எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் உடைமைகளும் தன்னுடையவையல்ல என அவன் கருத வேண்டும். ஏற்கனவே மறைந்த உடைமைகளும் தன்னுடையவையல்ல எனவும் ஒருவன் கருத வேண்டும். விதியே அனைத்திலும் வலியது எனக் கருதப்பட வேண்டும். இவ்வகையில் சிந்திப்போரே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவ்வகையில் பொருட்களைக் காணும் பழக்கம் நல்ல பண்பாகும்.(22) புத்தியிலும், முயற்சியிலும் உனக்கு இணையானவர்களாகவோ, மேன்மையானவர்களாகவோ உள்ள பல மனிதர்கள், செல்வதை இழந்தவர்களாக உயிரோடு இருந்தாலும், நாடுகளை ஒருபோதும் ஆள்வதில்லை.(23) அவர்கள் உன்னைப் போன்றோரல்ல. அவர்கள் உன்னைப் போலத் துயரத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, இவ்வழியில் துயருறுவதை நிறுத்துவாயாக. நீ புத்தியிலும், முயற்சியிலும் அம்மனிதர்களை விட உயர்ந்தவனோ, குறைந்தது அவர்களுக்கு இணையானவனோ இல்லையா?" என்று கேட்டார்{காலகவிருக்ஷீயர்}.(24)

[3] "அஃதாவது, அவன் அந்தச் செல்வம் தன் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிறருக்காகவே தன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும். அப்போது அவன் ஈகை பயில்வதில் வெல்வான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, "என் நாடானது, அது கொண்டிருந்த அனைத்துப் பொருட்களுடன் எந்த முயற்சியுமில்லாமல் என்னால் {முன்பு} வெல்லப்பட்டது என்று கருதுகிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அனைத்திலும் வலிமையான காலம் அஃதை அபகரித்து விட்டது.(25) ஓர் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போல என் நாடு காலத்தால் அடித்துச் செல்லப்பட்டதன் விளைவாகவே, (ஈகை பெறுவதன் மூலம்) அடையும் எதையும் கொண்டு என்னை ஆதரித்துக் கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன் என்பதைக் காண்கிறேன்" என்றான்.(26)

தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, "(வாழ்வில்) உண்மை அறிவால் தூண்டப்பட்ட ஒருவன், கடந்த காலத்திற்காகவோ, எதிர்காலத்திற்காகவோ ஒருபோதும் வருந்தக்கூடாது. ஓ! கோசல இளவரசே {க்ஷேமதர்சின்}, நீ உன் கவனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு காரியத்திலும் நீ இத்தகு மனநிலையையே கொள்வாயாக.(27) கிடைக்கமுடியாததை அல்லாமல், கிடைக்கக்கூடியதை மட்டுமே அடைய விரும்பி, தற்போது நீ கொண்டிருக்கும் உடைமைகளில் இன்புற்று, இல்லாததை நினைத்து ஒருபோதும் வருந்தாமல் இருப்பாயாக.(28) ஓ! கோசல இளவரசே, எளிமையாக நீ அடைந்த எதையும் கொண்டு நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக. செழிப்பை இழந்தாலும், தூய மனநிலையைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் அதற்காக வருந்தக்கூடாது.(29) மூடப்புத்தி கொண்ட பேரற்ற மனிதனே, முந்தைய செழிப்பை இழக்கும்போது, தன் தற்போதைய உடைமைகளில் நிறைவில்லாமல் படைப்பாளனை நிந்திக்கிறான்.(30)

அத்தகு மனிதன், பிறர் அதற்குத் தகாதவர்களாக இருப்பினும், செழிப்பால் அருளப்பட்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்களே எனக் கருதுகிறான். இதன் காரணமாகவே, ஆணவமும் அகந்தையும் கொண்டவர்களும், தங்கள் முக்கியத்துவம் குறித்த உணர்விலேயே நிறைந்திருப்பவர்களுமான அவர்கள் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {க்ஷேமதர்சினே}, நீ அத்தகு களங்கங்களினால் கறைபடியாதவனாக இருக்கிறாய்.(31,32) நீ செல்வத்தை இழந்தவனாக இருப்பினும், அடுத்தவரின் செழிப்பைப் பொறுத்துக் கொள்வாயாக. கைத்திறன் கொண்டவர்கள், பிறரிடம் உள்ள செழிப்பை அனுபவிக்கிறார்கள். செழிப்பானது, பிறரின் செழிப்பை வெறுப்பவனிடம் இருந்து விலகிச் செல்கிறது.(33) நன்னடத்தை மற்றும் ஞானம் கொண்டவர்களும், யோகத்தின் கடமைகளை அறிந்தவர்களுமான மனிதர்கள், செழிப்பு, மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைத் தாங்களாகவே துறக்கிறார்கள்.(34) உலகம் சார்ந்த செல்வமானது, இடையறாத செயல்பாடு மற்றும் முயற்சியைச் சார்ந்தது என்பதால் அது நிலையில்லாதது என்றும் அடையமுடியாதது என்றும் கருதும் வேறு சிலரும், அதைத் துறப்பதைக் காண முடிகிறது.(35)

நீ ஞானம் கொண்டவனாகத் தெரிகிறாய். பிறகு ஏன் நீ விரும்பக்கூடாதவையும், நிலையற்றவையும், பிறரைச் சார்ந்திருக்கக்கூடியவையுமான பொருட்களை விரும்பி பரிதாபத்துக்குரியவனாக வருந்துகிறாய்? நீ (உன் உடைமைகள் எப்படி இருந்தபோதிலும் புகழை அனுபவிக்கத்தக்கவனாக உன்னைச் செயல்பட வைப்பதற்கான) குறிப்பிட்ட மனோநிலையைக் குறித்துக் கேட்க விரும்புகிறாய். நான் உனக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், விருப்பத்திற்குரிய அந்தப் பொருட்கள் யாவையும் துறந்துவிடுவாயாக. தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களே, முயற்சி செய்து அடைய வேண்டிய வடிவில் தோன்றும், அதே வேளையில், எவை முயற்சி செய்து அடையப்பட வேண்டுமோ, அவை தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களாகத் தோன்றும்.(37) சிலர் செல்வத்தைத் தேடியே செல்வத்தை இழக்கிறார்கள். வேறு சிலர் செல்வத்தை முடிவிலா இன்பத்தின் வேராகக் கருதி, அதை ஆவலுடன் பின்தொடர்கிறார்கள்.(38) மேலும் சிலர், செல்வத்தில் மகிழ்ந்து, அதைவிட வேறெதுவும் மேன்மையானதல்ல என நினைக்கிறார்கள். அத்தகு மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தில் உள்ள தங்கள் ஆவலால், வாழ்வின் பிற நோக்கங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள்.(39) ஓ! கோசல இளவரசே, கடினமாக ஈட்டப்பட்டதும், தன் ஆசைகளின் அளவுக்கு இணையானதுமான செல்வத்தை ஒரு மனிதன் இழந்தால், {அதன் விளைவாக உண்டாகும்} துன்பத்தால் ஏற்படும் செயல்பாடின்மையில் மூழ்கி, செல்வம் குறித்த விருப்பம் அனைத்தையும் கைவிடுகிறான்.(40)

நல்லான்மாவையும், உயர்ந்த பிறப்பையும் கொண்ட சில மனிதர்கள், அறம் ஈட்டுவதில் ஈடுபடுகிறார்கள். மறுமையில் புகழை வெல்லும் விருப்பத்தால் அவர்கள் உலகம் சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் துறக்கிறார்கள்.(41) சில மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டுத் தங்கள் உயிரை இழக்கிறார்கள். செல்வத்தோடு தொடர்பில்லா வாழ்வில் எந்தப் பயனும் இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.(42) அவர்களது பரிதாப நிலையைப் பார். அவர்களது மூடத்தனத்தைப் பார். வாழ்வென்பது மிகக் குறுகியது, நிச்சயமற்றது எனும்போது இம்மனிதர்கள், அறியாமையால் உந்தப்பட்டுத் தங்கள் கண்களைச் செல்வத்தில் நிலைக்கச் செய்கிறார்கள்.(43) அழிவே முடிவு எனும்போது கட்டடச்சாரங்களிலும், மரணமே முடிவு எனும்போது வாழ்விலும், பிரிவே முடிவு எனும்போது சேர்க்கையிலும் எவன் இதயத்தை நிலைக்கச் செய்வான்?(44) சில நேரங்களில் மனிதன் செல்வத்தைத் துறக்கிறான், மேலும் சிலநேரங்களில் செல்வம் மனிதனைத் துறக்கிறது. செல்வ இழப்பால் ஞானம் கொண்ட எந்த மனிதன் வருந்துவான்? செல்வத்தையும் நண்பர்களையும் இழக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர்.(45)

ஓ! மன்னா {க்ஷேமதர்சின்}, மனிதர்களுக்கு நேரும் இடர்கள் அனைத்தும் அவர்களுடைய சொந்த நடத்தையாலேயே நேர்கிறது என்பதைக் கண்டு புரிந்து கொள்வாயாக. எனவே நீ உன் புலன்கள், மனம் மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்துவாயாக.(46) ஏனெனில், இவை பலவீனமடைந்து, தீமையை உண்டாக்கினால் எந்த மனிதனும் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருக்கும் வெளிப்பொருட்களின் மேலுள்ள ஆசையில் {சபலத்தில்} இருந்து ஒருபோதும் விடுபட முடியாது. காலம் மற்றும் இடம் ஆகியவற்றில் பல இடைவெளிகள் இருப்பதால், கடந்த காலத்தைக் குறித்த போதுமான கருத்தையோ, எதிர்காலத்தைக் குறித்த முன்னுணர்தலையோ ஒருவனாலும் அமைத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இத்தகு ஞானமும், ஆற்றலும் கொண்ட உன்னைப் போன்ற ஒரு மனிதன், சேர்க்கை பிரிவு, நன்மை தீமை ஆகியவற்றுக்காக ஒருபோதும் துயரில் ஈடுபட மாட்டான்.(47) இத்தகு மென்மையான மனநிலை, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா, முடிவுசெய்யப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டவனும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனுமான ஒரு மனிதன் துயரில் ஈடுபடாதவனாகவும், {எதையும்} அடையும் ஆசையில் ஒருபோதும் அமைதியற்றவனாக மாறாதவனாகவும், அற்ப மதிப்பைக் கொண்ட எதையும் இழப்பதற்கு அஞ்சாதவனாகவும் இருப்பான்.(48) அத்தகு மனிதன், பாவம் நிறைந்ததும், தீமையானதும், கொடுமையானதும், இழிந்தோருக்கு மட்டுமே தகுந்ததுமான ஆண்டி {பிச்சைக்காரன்} எனும் வஞ்சக வாழ்வைப் பின்பற்ற ஒரு போதும் தகுந்தவனாகான்[4].(49) பெருங்காட்டுக்குச் சென்று, தனியாக இருந்து, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு, பேச்சையும், ஆன்மாவையும் கட்டுப்படுத்தி, அனைத்துயிரினங்களிடமும் கருணையால் நிறைந்து அங்கே இன்பமாக வாழ்வாயாக.(50)

[4] கும்பகோணம் பதிப்பில், "கெட்டமனிதர்களுக்கு யோக்யமானதும், துன்பமுள்ளதும், மிக்கப் பாவமுள்ளதும் கொடுமையான விருத்தியுள்ளதும் கெட்ட மனிதர்களைச் சேர்ந்ததுமான ஓடெடுக்கும் ஜீவனத்தை நீ விரும்பத்தக்கவனேயல்லன்" என்றிருக்கிறது.

அருகே மனிதர்கள் இல்லாமல், பெரும் தந்தங்களுடைய யானைகளின் தோழமையில், காட்டின் விளைச்சலில் நிறைந்து உற்சாகமான இத்தகு வாழ்வைக் காட்டில் வாழ்வது ஞானியரின் நடத்தை எனச் சொல்லப்படுகிறது.(51) பெரும் தடாகம் ஒன்று கலங்கும்போது, தன் அமைதியைத் தானே மீட்கிறது. அதே போலவே, ஞானம் கொண்ட மனிதனும், இத்தகு காரியங்களில் குழப்பமடையும்போது, தானாகவே அமைதியடைகிறான். உன்னைப் போன்று இத்தகு பரிதாபகரமான நிலையில் வீழ்ந்த ஒரு மனிதன் இவ்வாறே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றே நான் காண்கிறேன்.(52) உன் செழிப்பை மீட்பது கிட்டத்தட்ட முடியாதநிலையில், அமைச்சர்களும், ஆசோலகர்களும் இல்லாதவனாக இருக்கும்போது, இத்தகு வழியே உனக்குத் திறந்திருக்கிறது. விதியை நம்பிக்கொண்டிருப்பதால் எந்தப் பலனையும் அடைய முடியும் என்பதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார் {காலகவிருக்ஷீயர்}.(53)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்