Tuesday, June 26, 2018

புலன்களை வெற்றிகொள்! - சாந்திபர்வம் பகுதி – 213

Conquer the senses! | Shanti-Parva-Section-213 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 40)


பதிவின் சுருக்கம் : ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...


Conquer the senses! | Shanti-Parva-Section-213 | Mahabharata In Tamil
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)

[1] "பிரம்மமானது, வித்யை (அறிவு {ஞானம்}) மற்றும் மாயையுடன் கூடிய அவித்யை (அறியாமை) ஆகிய இரு குணங்களைக் கொண்டிருப்பதாகச் ஸ்ருதிகளில் சொல்லப்படுகிறது. இந்த மாயையின் விளைவாலேயே, சித் ஆன்மாக்கள், அல்லது ஜீவன்கள் உலகப் பொருட்களின் மீது பற்றுக் கொள்கின்றன. இந்த மாயையின் விளைவாகவே மனிதர்கள், அனைத்தும் ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போதும் கூட, அவற்றில் இருந்து தங்களை முற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "மானா Maana என்பது தன்னைத் தானே வழிபடுவது என்றும்; தர்பம் Darpa என்பது அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது என்றும்; அஹங்காரம் Ahankaara என்பது பிறவற்றை முற்றிலும் அலட்சியம் செய்து, அனைத்து சிந்தனைகளையும் தன்னையே மையமாகக் கொண்டு செய்வது என்றும் உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. இங்கே அகங்காரம் என்பது நனவுநிலையல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த விஷ்ணுவின் மாயையால் மறைக்கப்பட்ட அங்கங்களுள்ளவர்களும் ஞானத்திலிருந்து நழுவினவர்களும் போகங்களில்லாதவர்களுமான மனிதர்கள் பிறகு, புத்தியிலுள்ள பெரிய அவிவேகத்தால் ஆசையை அடைகிறார்கள்; ஆசையிலிருந்து கோபத்தையடைந்து, அதன்பிறகு லோபத்தையும் மோஹத்தையுமடைகிறார்கள். அவற்றிலிருந்து அபிமானத்தையும், கர்வத்தையும், அகங்காரத்தையும் அடைகிறார்கள் அந்த அகங்காரத்திலிருந்து கார்யங்கள் உண்டாகின்றன" என்றிருக்கிறது.

பிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரஜ்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட வேண்டும்.(10)

[3] "இந்த உவமையின் சக்தி பின்வருவதில் இருக்கிறது: பிரகிருதியானது, க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவைக் கட்டி, பிறப்பெடுக்கும் கடமையில் அதைத் தள்ளுகிறது. ஆன்மாவானது, பிரகிருதியின் தொடர்பைத் தவிர்க்க முனைந்து, விடுதலையை {முக்தியை} நாட வேண்டும் என்பதைப் போலவே, மனிதர்கள் பெண்களைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வட்டாரப் பேச்சுமொழிகளிலும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, பொதுவாகப் பிரகிருதி, அல்லது பிரகிருதியின் குறியீடுகளாகவே பெண்கள் அழைக்கப்படுகின்றனர். இது பிரகிருதி மற்றும் புருஷன் குறித்த தத்துவக் கோட்பாட்டின் இயல்புக்கு மீறிய செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "இங்கே சொல்லப்படும் கிரியை Kriya என்பது மந்திர சக்தி அல்லது அதர்வணச் சடங்குகளின் உச்சவினையாகும். புலப்படாத எதிரிகளுக்கு அழிவைக் கொண்டுவரும் அதர்வணச் சடங்குகளைப் போலவே பெண்கள் பயங்கரமானவர்கள் என்று இங்கே சொல்லப்படுகிறது. ராஜசி அந்தர்ஹிதாம் Rajasi antarhitaah என்பது அவர்கள் அந்தக் குணத்திலேயே முற்றிலும் மறைந்தவர்களாகி முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள் என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



வியர்வையின் (மற்றும் பிற மாசுகளின்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)

[5] "உடலில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் பிற மாசுக்களில் இருந்து ஒட்டுண்ணி புழுக்கள் உண்டாகின்றன. பிள்ளைகள் உயிர்வித்தில {உயிர்நீரில்} இருந்து உண்டாகின்றனர். முந்தைய வழக்கில் செயல்படும் சக்தியை ஸ்வபாவமே (இயற்கையே} தருகிறது. பிந்தைய வழக்கில், முற்பிறவிச் செயல்கள், மனச்சார்புகள் ஆகியவற்றின் அழியாத ஆதிக்கமே செயல்படும் சக்தியைத் தருகிறது. எனவே, ஒருவனுடைய வாரிசுகள், அவனது உடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்களைப் போன்றவர்களே. இரண்டு வழக்கிலும் அலட்சியம், அல்லது கவனமின்மையையே ஞானம் போதிக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டதுதான் இப்போது மீண்டும் சொல்லப்படுகிறது. பிரவிருத்தி, அல்லது செயல்களுக்கான மனச்சார்புகளின் காரணமாக ரஜஸ் (ஆசை) குணமே இருக்கிறது. சத்வ குணம் (நற்குணம்) என்பது பிரம்மத்துக்கு வழிவகுக்கும் ஞானம், அல்லது உயர்ந்த உணர்வுகளாகும். இரண்டும் தமஸையே (இருள் குணத்தையே) சார்ந்திருக்கின்றன. சித், அல்லது ஜீவன் என்பது தூய ஞானமாகும். தமஸ், அல்லது அவ்யக்ததால் மூழ்கடிக்கப்படும் போது, வாழ்வின் நிலைகளாக நனவுநிலை மற்றும் புத்தி ஆகிவற்றைக் கொண்டு இவ்வுலகில் நாம் உணரும் வகையில் அது வாழ்வு எனும் ஆடையைப் போர்த்திக் கொள்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[7] "சித், அல்லது ஆன்மா என்பது மொத்த அறிவாகும். அறியாமை மற்றும் இருளால் மறைக்கப்படும்போது அது புத்தி மற்றும் நனவுநிலையால் வெளிப்பட்டு ஒரு வடிவத்தை, அல்லது உடலை ஏற்கிறது. எனவே, இருளால் மறைக்கப்பட்ட ஞானம், அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவானது, சித், அல்லது ஆன்மா, அல்லது ஜீவன் உடலை ஏற்பதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, அத்தகைய அறிவானது உடலின் வித்து என்றழைக்கப்படுகிறது. மேலும், அறியாமையால் மறைக்கப்படும் அறிவின் (அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவின்) அடித்தளமாக (இரண்டாம் வெளிப்பாடான) தத்விஜம் சார்ந்திருப்பது, உண்மையில் பிறப்புக்கு முன்பிருந்த தூய அறிவு, அல்லது சித், அல்லது ஜீவன், அல்லது ஆன்மாவையே ஆகும். இஃது ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட அறிக்கையை மீண்டும் சொல்லும் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

[8] "ஆன்மாவானது, தாயின் கருவறையில் இருக்கும்போது, முற்பிறவி செயல்களை நினைத்துப் பார்க்கிறது, அந்தச் செயல்களின் செல்வாக்கு, புலன்களின் வளர்ச்சியையும், புதிய வாழ்வில் அதை வெளிக்காட்டப்போகும் பண்பையும் தீர்மானிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே வழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்களால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது" என்றார் {பீஷ்மர்}.(21)

[9] "ஏற்கனவே (இந்தப் பகுதியின் 9ம் சுலோகத்தில்) பெண்கள் புலன்களின் உடல்வடிவங்கள் என்றும், ரஜஸ் அல்லது ஆசை குணத்தின் அந்தர்ஹிதம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, புலன்கள் ரஜஸில் பிறந்தவை என்று இங்கே முடிவு செய்யப்படுகிறது. மேலும் ரஜஸின் அழிவால் அவையும் {புலன்களும்} அழிவடையும். எனவே, ரஜஸ், அல்லது ஆசை குணத்தை வெற்றிகொள்வதே இங்கு அவசியம். சாத்திர அறிவால் கூர்மையாக்கப்பட்ட பார்வை கொண்ட கண்ணின் துணையுடன் இது சாத்தியப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 213ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்