Sunday, July 01, 2018

நிர்க்குண, சகுன பிரம்மம்! - சாந்திபர்வம் பகுதி – 217

Nirguna and Saguna Brahmam! | Shanti-Parva-Section-217 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 44)


பதிவின் சுருக்கம் : நிவிருத்தி மற்றும் பிரவிருத்தி அறங்கள்; பிரகிருதி மற்றும் புருஷன்; நிர்க்குண மற்றும் சகுன பிரம்மம்; ஆன்மாவுக்குக் குணங்கள் ஏற்படும் முறை; பிரம்மச்சரியம் மற்றும் அஹிம்சை ஆகிய யோகங்கள்; சகுன பிரம்மத்தின் குணங்களை முக்குணங்களில் இருந்து வேறுபட்டதாக அறிய வேண்டியதன் அவசியம்; முக்தியை அடைதல்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(கனவுகள், கனவுகளற்ற ஆழ்நிலை உறக்கம், குணங்களால் குறிப்பிடப்படும் பிரம்மம், குணங்கள் அனைத்தையும் விஞ்சிய பிரம்மம் ஆகிய) நான்கு காரியங்களையும், புலப்படுவது (உடல்), தத்துவம் எனப் பெரும் முனிவரால் (நாராயணனால்) விளக்கப்பட்ட புலப்படாதது (சித்-ஆன்மா) ஆகியவற்றையும் அறியாதவனைப் பிரம்மத்தை அறிந்தவன் என்று சொல்ல முடியாது[1].(1) எது புலப்படுமோ அது மரணத்திற்கு உட்பட்டதாகும். எது புலப்படாததோ, அது (சித்-ஆன்மா) மரணத்தைக் கடந்தது என்று அறியப்பட வேண்டும். முனிவன் நாராயணன் நிவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான்.(2) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் அதனிலேயே நிலைத்திருக்கிறது. மேலும், நிவிருத்தி அறமானது புலப்படாததும், அழிவற்றதுமான பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது[2].(3) படைப்பாளன் (பிரம்மன்) பிரவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான். பிரவிருத்தியானது மறுபிறவி, அல்லது திரும்புதலைக் குறிப்பால் உணர்த்துகிறது. மறுபுறம் நிவிருத்தியோ, உயர்ந்த கதியைக் குறிப்பால் உணர்த்துகிறது.(4) நன்மை மற்றும் தீமைக்கிடையிலான நிச்சய வேறுபாடுகளைப் பகுத்துப் பார்க்க விரும்புபவனும், ஆன்மாவின் இயல்பைப் புரிந்து கொள்ள எப்போதும் முயல்பவனும், நிவிருத்தி அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான தவசி உயர்ந்த கதியை அடைகிறான்[3].(5)

[1] "இந்தச் சுலோகத்தில் குறிப்பிடப்படும் முனிவர், நரனின் நண்பனும் தோழனுமான நாராயணன் என்று உரையாசிரியர் நினைக்கிறார். வியாசர் பிற்காலத்தில் எங்கு வசித்தாரோ அந்தப் பதரியின் வசித்தவர்களே இந்த நர நாராயணர்கள். இங்கே குறிப்பிடப்படும் தத்துவம் என்பதை விவாதத்திற்குரிய தலைப்பாக உரையாசிரியர் கருதவில்லை. மாறாக, எது தூய மூலமாக இருக்கிறதோ, எது மனத்தின் வண்ணத்தையோ, வடிவத்தையோ ஏற்காதோ அதுவே இங்கே குறிப்பிடப்படும் தத்துவம் என்று நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "பிரவிருத்தி அறம் செயல்களைக் கொண்டதாகும். அதனால் ஒருவனை மறுபிறவியில் இருந்து விடுவிக்க முடியாது. செயல்களின் விளைவாக இருக்கும் இருப்புகளின் மொத்த சங்கிலியும் பிரவிருத்தி அறத்திலேயே நிலைத்திருக்கிறது. மறுபுறம், நிவிருத்தி அறம், அல்லது செயல்களைத் துறப்பது, விடுதலை, அல்லது பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] கும்பகோணம் பதிப்பில், "நிவ்ருத்தி மார்க்கத்தைப் பெரிதாகக் கொண்டவனும், ஞானத்தின் உண்மையில் முயற்சியுள்ளவனும், எப்பொழுதும் சுபாசுபங்களைப் பகுத்துப் பார்ப்பவனுமான முனிவனானவன் அந்தப் பரமகதியைப் பெறுவான்" என்றிருக்கிறது.

இதை நிறைவேற்ற விரும்பும் ஒருவன், நான் தற்போது பேசிக் கொண்டிருக்கும் புலப்படாதது மற்றும் புருஷன் குறித்த இரண்டையும் அறிய வேண்டும். மேலும், புலப்படாதது மற்றும் புருஷன் ஆகிய இரண்டிலிருந்தும் எது வேறுபட்டிருக்கிறது, அவை இரண்டையும் எது கடந்திருக்கிறது,(6) அனைத்தில் இருந்தும் எது தனிப்பட்டதாக இருக்கிறது என்பனவற்றை நுண்ணறிவுடன் கூடிய அவன் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்[4]. பிரகிருதி, புருஷன் ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும் அற்றனவாக இருக்கின்றன. அவற்றுக்கிடையிலுள்ள ஒற்றுமைகளை அறியாதவகையிலேயே அவ்விரண்டும் இருக்கின்றன.(7) இரண்டும் நித்தியமானவையும், அழிவற்றவையுமாக இருக்கின்றன. இரண்டும் பெரியனவற்றில் பெரியனவாக இருக்கின்றன. இவற்றில் அவை ஒரே தன்மையைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளும் இருக்கின்றன. (அதைக் குறித்து இப்போது நான் பேசப் போகிறேன்).(8) பிரகிருதியானது, (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களால் நிரம்பியதாக இருக்கிறது. அது படைப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. க்ஷேத்திரக்ஜனின் (புருஷன், அல்லது ஆன்மாவின்) உண்மைக் குணங்கள் வெவ்வேறானவையாக அறியப்பட வேண்டும்[5].(9) புருஷனானவன், பிரகிருதியின் மாற்றங்கள் அனைத்தையும் உணர்பவனாக இருக்கிறான் (ஆனால் {பிறவற்றால்} உணரப்படாதவனாக இருக்கிறான்). (உண்மை இயல்பைப் பொறுத்தவரையில்) அவன் அனைத்துக் குணங்களையும் கடந்தவனாக {நிர்க்குண பிரம்மமாக} இருக்கிறான். மேலும், புருஷன் மற்றும் பரமாத்மாவைப் பொறுத்தவரையில், அவை இரண்டும் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. வேறுபாடு காண குணங்கள் எவற்றையும் அவை கொண்டிருக்காததால், அவை இரண்டும் அனைத்திலும் மிகவும் வேறுபட்டிருக்கின்றன[6].(10)

[4] அவ்யக்தம், அல்லது புலப்படாதது என்பது பிரகிருதி அல்லது ஆதியில் நிறைவாகவும், நுட்பமாகவும் இருந்த தொடக்கப் பொருளாகும். பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் கடந்திருப்பது உண்மையில் பரமாத்மா, அல்லது பிரம்மமே. குணங்களின் மூலம் அனைத்தில் இருந்தும் வேறுபட்டிருப்பது "விசேஷம்" என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "புருஷன் எதையும் படைக்காதவன் மற்றும் முக்குணங்களையும் கடந்தவன் என்று உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "அஸம்ஹதௌ Asamhatau என்பதை அத்யந்தவிவிக்தௌ atyantaviviktau என்று உரையாசிரியர் விளக்குகிறார். புருஷௌ Purushau என்பது சித்-ஆன்மா, மற்றும் பரமாத்மா ஆகிய இரண்டு புருஷர்களைக் Purushas குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தலைப்பாகை அணிந்த மனிதன், தன் தலையைச் சுற்றிலும் மூன்று வகைத் துணிகளால் சுற்றியிருக்கிறான். (எனினும், அவன் அணிந்திருக்கும் தலைப்பாகையானது அந்த மனிதனல்ல).(11) அதேவகையிலேயே உடல்படைத்த ஆன்மாவானது, நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய முக்குணங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வாறு கொண்டிருந்தாலும் ஆன்மாவும், அந்தக் குணங்களும் ஒன்றல்ல.(12) இதனால், நான்கு வகைக் கருத்துகளைக் கொண்ட இந்த நான்கு காரியங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்[7]. இவை யாவற்றையும் புரிந்து கொள்ளும் ஒருவன், (அனைத்தையும் விசாரிப்பதைப் பொறுத்தவரையில்) தீர்மானத்தை எட்ட வேண்டிய தருணத்தில் ஒருபோதும் திகைப்படைய மாட்டான்.(13) உயர்ந்த செழிப்பை அடைய விரும்பும் ஒருவன், மனத்தில் தூய்மையடைந்தவனாக, உடல் மற்றும் புலன்களைப் பொறுத்தவரையில் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டு, கனிகளில் {பலன்களில்} எந்த விருப்பமும் இல்லாமல் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(14) யோக சக்தியானது, அண்டத்தில் மறைமுகமாகப் படர்ந்தூடுருவி, அதன் {அண்டத்தின்} ஒவ்வொரு பகுதியிலும் சுழன்று கொண்டு, அதைப் பிரகாசமாக ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது.(15)



[7] "அந்த நான்கு காரியங்கள் இவையே: 1. பிரகிருதி மற்றும் புருஷனுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள்; 2. அவற்றுக்கிடையிலான வேறுபாடுகள்; 3.புருஷனுக்கும் {ஆன்மாவுக்கும்}, ஈஸ்வரனுக்கும் {பரமாத்மாவுக்கும்} இடையில் உள்ள ஒற்றுமைகள்; 4. அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் ஆகியனவாகும். இந்த நான்கையும் மறைக்கும் நான்கு கருத்துகள், 1. தொடக்கமும் முடிவும் இல்லாமை, 2. சித் மற்றும் அசைவின் இருப்பு, 3. அனைத்துப் பொருட்களில் இருந்தும் வேறுபட்டிருப்பது, 4. செயல்பாட்டு எனும் கருத்து ஆகியவையே அவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யோகத்தின் விளைவு ஞானமாகும். உலகத்தில் யோகம் மிக உயர்வாகச் சொல்லப்படுகிறது. உண்மைப் பண்பைப் பொறுத்தவரையில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களை எந்தெந்த செயல்கள் அழிக்கின்றனவோ அவை யோகமாக அமைகின்றன.(16) பிரம்மச்சரியம், தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியன உடலின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; அதே வேளையில், முறையான மனக்கட்டுப்பாடு மற்றும் பேச்சுக் கட்டுப்பாடு ஆகியன மனத்தின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.(17) சடங்குகளை அறிந்த மறுபிறப்பாளர்களிடம் இருந்து பிச்சையாகப் பெறப்படும் உணவானது, மற்ற உணவுகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டிருக்கிறது. அந்த உணவைச் சொற்பமாக உண்டாலும், ஆசை {ரஜோ} குணத்தில் பிறந்தவையான ஒருவனின் பாவங்கள் மங்கத் தொடங்குகின்றன.(18) அத்தகைய உணவில் வாழும் ஒரு யோகி, அவனது புலன்கள், தங்களுக்குரிய புலனுணர்வுப் பொருட்களில் இருந்து படிப்படியாக விலகுவதைக் காண்கிறான். எனவே அவன், தன் உடலைத் தாங்கிக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டுமே அத்தகைய உணவையும் உண்ண வேண்டும்.(19) யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனத்தின் மூலம், ஒருவன் படிப்படியாக அடையும் ஞானமானது, அவனது இறுதித் தருணங்களில் வலுக்கட்டாயமாகவும், உற்சாகமாகவும் அடையப்பட வேண்டும் (என்று மற்றொரு ஆசோலனையும் வழங்கப்படுகிறது)[8].(20)

[8] "அஃதாவது, ஒருவன், தன் இறுதித் தருணங்களில் தன் உயிரை அங்கேயே கைவிடுவதற்காகக் காசி போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதையே இந்தச் சுலோகம் குறிப்பிடுகிறது என உரையாசிரியர் நீண்ட விளக்கம் தருகிறார். சிவனே ஆசிரியராக இருந்து உயர்ந்த கதிக்கு வழிவகுக்கிறான் என்ற கோட்பாட்டால், காசியில் மரணமடைவது நிச்சயம் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உடல்படைத்த ஆன்மாவானது, ரஜஸ் {ஆசை} குணமற்றிருக்கும்போது, (உடனடியாக விடுதலையை {முக்தியை} அடையாமல், புலனுணர்வுகளனைத்தின் நுண்ணிய வடிவை ஏற்று, வெளியில் {ஆகாயத்தில்} அசைந்து கொண்டிருக்கிறது. அவனது {அந்த ஆன்மாவின்} மனம் செயல்களால் பாதிப்படையாதபோது, அத்தகைய துறவின் விளைவால் அவன் (அந்த நுண்ணிய வடிவை இழந்து) பிரகிருதியில் கலக்கிறான் (எனினும் அவன், பிரகிருதிக்கும் மேன்மையான பிரம்மம், அல்லது விடுதலையை அடைவதில்லை).(21) இந்த உடல் திரட்டு அழிந்த பிறகு, கவனமற்ற தன்மை இல்லாமையின் மூலம், (திரள், நுட்பம் மற்றும் காரணம் என்ற) மூன்று உடல்களில் இருந்து தப்பி, விடுதலையை {முக்தியை} அடைவதில் அவன் வெல்கிறான்[9]. உயிரினங்களின் இறப்பும், பிறப்பும், அவற்றின் மூலமான அறியாமையில் (அல்லது அவித்யையில்) அமைந்த காரணத்தைச் சார்ந்தே இருக்கின்றன.(22) பிரம்மஞானம் எழும்போது, அம்மனிதனைத் தேவையேதும் பின்தொடர்வதில்லை. எனினும் (உண்மையில் சுயமல்லாததைச் சுயம் என்று நம்புவதன் மூலம்) உண்மைக்கு நேர்மாறானதை ஏற்கும் மனிதர்கள், இருக்கும் அனைத்துப் பொருட்களின் பிறப்பு மற்றும் இறப்பிலேயே எப்போதும் தங்கள் புத்தியைச் செலுத்துகின்றனர். (அத்தகைய மனிதர்கள் கனவில் கூட விடுதலையை ஒருபோதும் காண்பதில்லை)[10].(23) சில யோகிகள், பொறுமையின் துணை மூலம், தங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்டு, தங்கள் புத்தியின் துணை மூலம் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும்) தங்கள் இதயங்களை விலக்கிக் கொண்டு, புலன்களின் உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, நுட்பமாக இருப்பதன் விளைவால் அந்தப் புலன்களையே துதிக்கின்றனர்[11].(24) அவர்களில் சிலர், யோகத்தால் தூய்மையடைந்த மனத்துடன் சாத்திரங்களின்படி (சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளின்படி) செயல்பட்டு, புத்தியின் உதவியால் உயர்வானதை அறிவதில் வென்று, உயர்ந்ததை அடைந்து, வேறு எந்தப் பொருளையும் சாராமல் தன்னிலேயே நிலைத்திருக்கும் அந்த உயர்ந்ததிலேயே வசிக்கிறார்கள்[12].(25)

[9] "அதேஹம் என்பது உரையாசிரியரால் தேஹபாதாத் என்று விளக்கப்படுகிறது. தேஹாந்தாத் என்பது மூன்று உடல்கள் அனைத்தும் அழிவதாகும். (மரணத்திற்குப் பிறகு) திரள் உடல் அழிவதன் மூலம் மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்புகிறான் என்பது பொருள். காரண உடல் என்பது லிங்க சரீரத்தைவிட மிக நுண்ணிய இருப்புநிலையாகும்; பிரகிருதியில் அதன் இருப்பே 21ம் சுலோகத்தில் குறிப்பிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[10] "அத்தகைய மனிதர்கள், உடல், புலன்கள் முதலிய சுயம் அல்லாத அனைத்தும் சுயமெனத் தவறாக எடுத்துக் கொண்டு, பொருட்கள் பிறந்து இறக்கின்றன, ஆனால் விடுதலை {முக்தி}, அல்லது மறுபிறவியில் இருந்து முற்றிலும் தப்பித்தல் போன்றவை ஏதுமில்லை என்ற கருத்தையே அவர்கள் அடைகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

[11]"’பொறுமையின் உதவி மூலம்’ என்பது, தங்கள் நிலைகளை விட்டு எழாமல் யோக மனோநிலையில் மாற்றம் கொள்வது என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. ‘புலன்களின் உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது’ என்பது முற்றிலும் புலன்களின் சார்பற்ற நிலையை அடைவதால் புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவது என்ற பொருளைக் கொண்டதாகும். ’ நுட்பமாக இருப்பதன் விளைவால் அந்தப் புலன்களையே துதிப்பது’ என்பது பிராணனையும், இந்திரியங்களையும் சுயமாக, அல்லது ஆன்மாவாகக் கருதித் துதிப்பது என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. யோகிகள் பிரம்மத்தை அடையும் காரியத்திற்கு இந்த விளக்கம் என்ன பயனளிக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தைரியத்தால் சரீரங்களை உறுதியுள்ளவைகளாகச் செய்து கொண்டவர்களும், புத்தியால் அடக்கப்பட்ட மனமுள்ளவர்களும், இந்திரியங்களுக்கு இருப்பிடமான ஸ்தூல சரீரத்தை விட்டு விலகினவர்களுமான சிலர் ஸூக்ஷ்மமாயிருப்பதால் அந்த இந்திரியங்களை உபாஸிக்கிறார்கள்" என்றிருக்கிறது.

[12] "’சாத்திரங்களின் (சாதிரங்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளின்) படி செயல்படுவது" என்பது இந்திரியேப்யம் பராஹ்யர்த்தம் Indriyebhyah parahyartha என்று தொடங்கும் கீதையின் நன்கறியப்பட்ட சுலோகங்களை {பகவத் கீதை 3:42} மறைமுகமாகக் குறிக்கிறது. அந்தச் சுலோகத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு நிலைகள் பின்வருமாறு: "புலன்களைவிடப் புலன்நுகர் பொருட்கள் மேன்மையானவை. அவற்றை விட மனம் மேன்மையானது. மனத்தைவிடப் புத்தி மேன்மையானது. புத்தியைவிட ஆன்மா மேன்மையானது. ஆன்மாவைவிடப் புலப்படாதது மேன்மையானது. புலப்படாததைவிடப் புருஷன் (பிரம்மம்) மேன்மையானவன். புருஷனைவிட மேன்மையானது எதுவும் இல்லை".

சிலர் பிரம்மத்தைத் தோற்றங்களாக {வடிவங்களாக / சிலைகளாக} வழிபடுகின்றனர். சிலர் குணங்களுடன் கூடியவனாக {சகுன பிரம்மமாக} அவனை வழிபடுகிறார்கள். சிலர், அழிவற்றதும், மின்னலின் கீற்றைப் போன்றதுமாக விளக்கப்படும் அந்த உயர்ந்த தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் உணர்கிறார்கள்[13].(26) தவங்களின் மூலம் தங்கள் பாவங்கை எரித்தவர்களான வேறு சிலர், முடிவில் பிரம்மத்தையே அடைகிறார்கள். இந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் உயர்ந்த கதியையே அடைகிறார்கள். சாத்திரக்கண் கொண்ட ஒருவன், பல்வேறு வடிவங்களிலான நுண்ணியக் குணங்களை, மனிதர்களால் வழிபடப்படும் பிரம்மத்தில் இருந்து வேறுபட்ட குணங்களாகக் காண வேண்டும். உடலைச் சார்ந்திருக்கும் தேவையைக் கடந்தவனும், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவனும், தியானயோகத்தில் அர்ப்பணிப்புள்ள {தாரணையில் பற்றுள்ள} மனத்தைக் கொண்டவனுமான யோகியானவன், பரம்பொருள் அல்லது புலப்படாததைப் போன்ற மற்றொருவனாகவே கருதப்பட வேண்டும்.(28) ஞானம் அடைவதில் அர்ப்பணிப்புள்ள இதயங்களைக் கொண்டோர், மனிதர்களின் உலகில் இருந்து விடுபடுவதிலேயே முதலில் வெல்கிறார்கள். அடுத்தபடியாகப் பற்றுகளைக் கைவிட்டு, பிரம்மத்தின் இயல்பில் கலந்து, இறுதியாக அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(29) வேதங்களை அறிந்த மனிதர்கள், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும் அறத்தைக் குறித்து இவ்வாறே சொல்லியிருக்கின்றனர். தங்கள் தங்கள் அறிவின் அளவுக்குத் தக்கபடி அவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(30)

[13] "மின்னலின் கீற்றை மீண்டும் மீண்டும் உணரும்போது அது சுடர்மிக்க ஒளித்திரளாகிறது. ஒருவேளை பேசுபவர் இதையே சொல்ல நினைக்கிறார் போலும்" எனக் கங்குலி இங்கே விளுக்கிறார்.

(ஐயுறுவாதத்தின் தாக்குதல்கள் மூலம்) அசைக்கப்பட முடியாததும், உடையவர்களை அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபடச் செய்வதுமான அறிவை அடைவதில் வெல்லும் மனிதர்கள், மரணத்திற்குப் பிறகு பல்வேறு உயர்ந்த உலகங்களை அடைந்து, தங்கள் ஞானத்தின் அளவுக்குத்தக்கபடி விடுதலை {முக்தி} அடைகிறார்கள்.(31) அறிவின் மூலம் நிறைவை உள்ளீர்த்துக் கொள்பவர்களும், ஆசைகள் மற்றும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவர்களுமான தூய இதயம் கொண்டோர், தங்கள் இயல்பின்படி, புலப்படாத குணத்தைக் கொண்டதும், தெய்வீகமானதும், பிறப்பும் இறப்பும் அற்றதுமான பிரம்மத்தின் அருகே படிப்படியாக நெருக்கமடைந்து செல்கிறார்கள்.(32) தங்கள் ஆன்மாக்களில் வசிக்கும் {நிர்க்குண} பிரம்மத்தை உணர்ந்து, தாங்களே மாறும் இயல்பற்றவர்களாகும் அவர்கள் (பூமிக்கு) மீண்டும் திரும்ப வேண்டியதில்லை. அழிவற்றதும், நித்தியமானதுமான பரம நிலையை அடைந்த அவர்கள் அந்த இன்பநிலையிலேயே நிலைத்திருப்பார்கள்.(33)

இவ்வுலகத்தைப் பொறுத்தவரையில் ஞானமென்பது (பிழை செய்பவர்களின் வழக்கில்) இவ்வளவுதான். (பிழையால் திகைப்படையாதோர் வழக்கில்) அஃது {ஞானம்} இருப்பில் இருப்பதில்லை. ஆசையில் கட்டப்பட்டுள்ள மொத்த அண்டமும் ஒரு சக்கரத்தைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது[14].(34) தாமரைத்தண்டின் இழைகள், அத்தண்டின் அனைத்து பகுதிகளிலும் படர்ந்திருப்பதைப் போலவே, ஆசை இழைகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் உடலில் படர்ந்திருக்கிறது.(35) நெசவாளன் ஒருவன், தனது நூல்களைத் தன் ஓடத்தின் {ஊசியின்} மூலம் ஓர் ஆடையில் நெய்வதைப் போலவே, அண்டமெனும் துணியில் உள்ள நூல்கள் {ஸம்ஸாரமெனும் நூலானது} ஆசையெனும் ஓடத்தால் {ஊசியால்} {அண்டத்திற்குள்} நெய்யப்படுகிறது.(36) பிரகிருதி, பிரகிருதியின் மாறுதல்கள் {விகாரம்} மற்றும் புருஷன் {பரமாத்மா} ஆகியவற்றை முறையாக அறிந்த ஒருவன், ஆசையில் இருந்து விடுபட்டவனாக விடுதலையை {முக்தியை} அடைகிறான்[15].(37) தெய்வீக முனிவரும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன், அனைத்து உயிரினங்களிடமும் கொண்ட கருணையின் நிமித்தமாக, அழிவின்மையை {மரணமில்லா நிலையை} அடைவதற்கான இந்த வழிமுறைகளைத் தெளிவாக வெளியிட்டிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(38)

[14] கும்பகோணம் பதிப்பில், "இந்த ஞானம் என்பது இவ்வளவுதான். இவ்வுலகமானது இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது. உலகமனைத்தும் ஆசையால் கட்டப்பட்டு உருளை போலச் சுற்றிக் கொண்டிருக்கிறது" என்றிருக்கிறது.

[15] "விகாரம், பிரகிருதி, புருஷன், அல்லது விளைவுகள், அவற்றின் பொருள் காரணம் மற்றும் பரமாத்மா என்றும் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 217ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்