Tuesday, August 28, 2018

மிருத்யுவின் தவங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 258

The penance of Mrityu! | Shanti-Parva-Section-258 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 85)


பதிவின் சுருக்கம் : பிரம்மனுக்கும் மிருத்யுதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்களையும், அவளது தவங்களையும், இறுதியில் உயிர்களை வதைக்க அவள் சம்மதித்த காரணத்தையும் அனுகம்பகனுக்குச் சொன்ன நாரதர்...


நாரதர் {அனுகம்பனிடம்}, "தன் சக்தியால் துயரை அடக்கியவளும், பெரிய கண்களைக் கொண்டவளுமான அந்தப் பெண் {மிருத்யுதேவி}, ஒரு கொடியைப் போன்ற பணிவான தன்மையுடனும், கூப்பிய கரங்களுடனும் பெரும்பாட்டனை {பிரம்மனை} வணங்கி, அவனிடம் பேசினாள்.(1) அவள், "ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, உம்மிலிருந்து பிறந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணால், அனைத்து உயிரினங்களையும் பீதியில் உறையவைக்கும் இந்தப் பயங்கரச் செயலை எவ்வாறு செய்ய இயலும்?(2) சிறுகொடுமையையும் செய்ய நான் அஞ்சுகிறேன். அறப்பணியில் என்னை நியமிப்பீராக. அஞ்சியவளாக என்னை நீர் காண்கிறீர். ஓ!, என் மேல் உமது கருணைப் பார்வையைச் செலுத்துவீராக.(3) குழந்தைகள், இளைஞர்கள், முதியோரென எனக்குத் தீங்கிழைக்காத உயிரினங்களை என்னால் அழிக்க இயலாது. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உம்மை வணங்குகிறேன், என்னிடம் நிறைவு கொள்வீராக.(4)

அன்பு மகன்களையும், அன்புக்குரிய நண்பர்கள், சகோதரர்கள், தாய்மார் மற்றும் தந்தைமாரையும் என்னால் அழிக்க முடியாது. (என் செயலின் மூலமாக) இவர்கள் அழிய நேர்ந்தால், அவர்களது உறவினர்களில் எஞ்சியிருப்போர் என்னை நிச்சயம் சபிப்பார்கள். இத்தன்மையில் நான் அச்சத்தால் நிறைந்திருக்கிறேன்.(5) உயிரோடு எஞ்சியவர்களின் கண்ணீர் என்னைக் காலத்திற்கும் எரித்துக் கொண்டிருக்கும். அவர்களிடம் (நான் கொல்ல வேண்டியவர்களின் உறவினர்களிடம்) நான் அச்சங்கொள்கிறேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(6) (என்னால் கொல்லப்படும்) பாவம் நிறைந்த உயிரினங்கள் அனைத்தும் நரகலோகங்களில் மூழ்க வேண்டியிருக்கும்[1]. ஓ! வரமளிக்கும் தேவா, நான் உம்மை நிறைவு செய்ய முனைகிறேன். ஓ! பலமிக்கத் தலைவா, உமது கருணையை எனக்களிப்பீராக. ஓ! உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டா, என் இந்த விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறேன். ஓ! தேவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, உமது அருளின் மூலம் கடுந்தவங்களைச் செய்யும் அனுமதியை நான் கோருகிறேன்" என்றாள் {மிருத்யு}.(8)

[1] கும்பகோணம் பதிப்பில், "பாவச்செயல் உள்ளவர்கள் யமன் வீட்டில் வீழ்த்தப்படுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், "பாவச்செயல்களைப் புரிவோர் யமனின் வசிப்பிடம் செல்கிறார்கள்" என்றிருக்கிறது.

பெரும்பாட்டன் {பிரம்மன்}, "ஓ! மரணமே {மிருத்யு}, அனைத்து உயிரினங்களின் அழிவுக்காகவே நீ என்னால் நினைக்கப்பட்டாய். செல்வாயாக, அனைத்தையும் கொல்லும் பணியில் உன்னை நிறுவிக் கொள்வாயாக. (இந்தச் செயலின் உரிமை அல்லது பிறவற்றைக் குறித்துச்) சிந்திக்காதே.(9) இது நிச்சயம் நடக்க வேண்டும். மாறாக இருக்க முடியாது. ஓ! பாவமற்றவளே, ஓ! பழுதற்ற அங்கங்களைக் கொண்டவளே, நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவாயாக" என்றான்.(10)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! பகை நகரங்களைக் கைப்பற்றுபவனே {அனுகம்பகா}, மரணம் {மிருத்யு} என்றழைக்கப்படும் அந்தப் பெண் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஒருவார்த்தையும் பேசாமல் உயிரினங்கள் அனைத்தின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனை} நோக்கிய கண்களுடன் பணிவுடன் அங்கே நின்றாள்.(11) பிரம்மன் மீண்டும் மீண்டும் அவளிடம் பேசினாலும், அந்தப் பெண் உயிரற்றவளைப் போலத் தெரிந்தாள். அவளை இவ்வாறு கண்ட தேவர்களின் தேவனான அந்தத் தலைவர்களின் தலைவன் {பிரம்மன்} அமைதியடைந்தான்.(12) உண்மையில் அந்தச் சுயம்பு, தன் விருப்பத்தின் முயற்சியால் நிறைவடைந்தான். உலகங்கள் அனைத்தின் தலைவனான அவன் புன்னகைத்தபடியே அண்டத்தில் தன் கண்களைச் செலுத்தினான்.(13) வெல்லப்பட முடியாதவனும், சிறப்புமிக்கவனுமான அந்தத் தேவன் தன் கோபத்தை அடக்கிய போது, (மரணம் என்றழைக்கப்பட்ட) அந்தப் பெண் அவனருகில் இருந்து சென்றுவிட்டாள் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(14) ஓ! மன்னா, உயிரினங்களை அழிப்பதாக உறுதிகூறாமலேயே பிரம்மனிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற மரணம் {மிருத்யு}, தேணுகம்[2] என்றழைக்கப்படும் ஒரு புனிதத்தலத்துக்குச் சென்றாள். அங்கே அந்தத் தேவி ஒற்றைக் காலில் நின்று கொண்டு ஆயிரத்தைநூறு கோடி ஆண்டுகளுக்குக் கடுந்தவத்தைப் பயின்றாள்[3].(16)

[2] கும்பகோணம் பதிப்பில் இந்த இடம், "கோதீர்த்தம்" என்றும், அதன் அடிக்குறிப்பில், "ஸப்தபுரிகளில் ஒன்றாகிய மாயா என்னும் ஸ்தலத்தில் உள்ளது" என்றும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்று தேணுகம் என்றே இருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "ஆயிரத்தைந்நூறு கோடி லக்கமுள்ள வருஷங்கள் ஒரு காலால் நின்றாள்" என்றிருக்கிறது.



அவ்விடத்தில் இத்தகைய கடுந்தவத்தைப் பயின்றபிறகு, பெருஞ்சக்தி கொண்ட பிரம்மன் மீண்டும் அவளிடம்,(17) "ஓ! மரணமே, என் ஆணையை நிறைவேற்றுவாயாக" என்றான். அவனது {பிரம்மனது} கட்டளையை அலட்சியம் செய்த அந்தப் பெண், ஓ! கௌரவங்களை அளிப்பவனே, மீண்டும் ஒற்றைக் காலில் நின்றபடியே இரண்டாயிரம் கோடி வருடங்கள் கடுந்தவம் இருந்தாள். ஓ! மகனே {அனுகம்பகா}, பிறகு அவள் பத்து லட்சம் கோடி வருடங்கள் அடங்கிய நீண்ட காலத்திற்கு மான்களோடு {விலங்குகளோடு விலங்காகக்} காட்டில் வாழ்ந்து வந்தாள்[4].(18,19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அனுகம்பகா}, மீண்டும் அவள் இருபதாயிரம் வருடங்கள் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தாள். ஓ! ஏகாதிபதி, பிறகு அவள் எட்டாயிரம் வருடங்கள் முழுமையாக நீரில் கழித்தபடியே சிறந்த அமைதி நோன்பை நோற்றாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {அனுகம்பகா}, அதன்பிறகு அந்தக் கன்னிகை {மிருத்யு} கௌசிகி ஆற்றுக்குச் சென்றாள்.(20,21) அங்கே நீர் மற்றும் காற்றை மட்டுமே உண்டபடி மற்றொரு நோன்பை நோற்று தன் நாட்களைக் கடத்தினாள். ஓ! ஏகாதிபதி, அதன் பிறகு அந்த அருள்நிறைந்த கன்னிகை {மிருத்யு}, கங்கைக்கும், அதன் பிறகு மேரு மலைக்கும் சென்றாள்.(22) அங்கே அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தோடு ஒரு மரத்துண்டைப் போல முற்றிலும் அசையாத நிலையில் நின்றாள். அதன் பிறகு, தேவர்கள் பெருவேள்வி செய்யும் இமயச் சிகரத்திற்குச் சென்ற அவள், கடுந்தவத்தின் மூலம் பெரும்பாட்டனை {பிரம்மனை} நிறைவு செய்யும் நோக்குடன், தன் காலின் கட்டைவிரலால் மட்டுமே தன் கனத்தைத் தாங்கியபடி பத்தாயிரம் கோடி வருடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.(24)

[4] "காடுகளில் மான்களுடன், மான்போலவே வாழ்வது பெரும் தகுதியை {புண்ணியத்தை} அளிக்கக்கூடியதாகும். உத்யோக பர்வத்தில் வரும் யயாதியின் மகள் மாதவியின் கதை இங்கே நினைவுகூரத்தக்கத்து" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அண்டத்தைப் படைத்து அழிப்பவன் {பிரம்மன்} அங்கே சென்று மீண்டும் அவளிடம், "ஓ! மகளே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என் வார்த்தைகளை நிறைவேற்றுவாயாக" என்றான்.(25)

மீண்டும் அந்தக் கன்னிகை {மிருத்யு} பெரும்பாட்டனிடம், "ஓ! தேவா, நான் உயிரினங்களைக் கொல்லவல்லவள் அல்ல. (இந்தக் கட்டளையில் இருந்து தப்பும் வகையில்) நான் உம்மை நிறைவு செய்யவே முனைகிறேன்" என்றாள்.(26)

கொடுந்தன்மையில் அச்சமடைந்தவளாகவும், பெரும்பாட்டனின் ஆணையில் இருந்து தப்ப அவனை வேண்டிக் கொண்டிருந்தவளுமான அந்தப் பெண்ணை அமைதியடையச் செய்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, மீண்டும் அவளிடம்,(27) "ஓ! மரணமே {மிருத்யு}, எக்கொடுமையும் உனதாகாது. ஓ! மங்கலக் கன்னியே, உயிரினங்களை அழிக்கும் பணியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. ஓ! இனிய பெண்ணே, நான் சொன்னது நிச்சயம் பொய்யாகாது.(28) இப்போது நித்திய அறம் உன்னைப் புகலிடமாகக் கொள்ளட்டும். நானும் தேவர்கள் அனைவரும் உன் நன்மையை நாடுவதிலேயே எப்போதும் ஈடுபட்டிருப்போம்.(29) உன் இதயத்தில் உள்ள மற்றொரு விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன். வாழும் உயிரினங்கள் நோயால் பீடிக்கப்படும், (அவ்வாறு இறப்பவர்கள்) உன்னைப் பழி சொல்ல முடியாது.(30) நீ ஆண்களில் ஆணாகவும், பெண்களில் பெண்ணாகவும், அலியில் அலியாகவும் இருப்பாயாக" என்றான்[5].(31)

[5] "இதன் மூலம் மரணதேவி நீக்கமற நிறைந்திருக்கும் பிரம்ம நிலையை அடைவாள் என உரையாசிரியர் விளக்குகிறார். சுயம்பு, கொடுமையில் இருந்து அவளைப் பாதுகாக்கவும், அவளது அச்சங்களைத் தணிப்பதற்காகவும் அளிக்கும் வரம் இஃது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மன்னா {அனுகம்பகா}, இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை உயர் ஆன்மாவும், தேவர்கள் அனைவரின் அழிவில்லாத் தலைவனுமானவனிடம் இறுதியில் கூப்பிய கரங்களுடன், "நான் உமது கட்டளைக்குக் கீழ்ப்படிய இயலாதவளாக இருக்கிறேன்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.(32)

அந்தப் பெருந்தேவன் {பிரம்மன்}, மனம் இரங்காமல், மீண்டும் அவளிடம், "ஓ! மரணமே {மிருத்யு} மனிதர்களைக் கொல்வாயாக.(33) ஓ! மங்கலப் பெண்ணே, இதனால் நீ எக்கொடுமையையும் ஈட்டாத வகையில் நான் விதிப்பேன். கூப்பிய உன் கரங்களுக்குள் நீ இன்னும் ஏந்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்ணீர் துளிகள் பயங்க நோய்களின் வடிவை ஏற்று, காலம் நேர்கையில் அவையே மனிதர்களை அழிக்கும்.(34) உயிரினங்களுக்கு முடிவு நேரும்போது, நீ அவற்றிடம் இருக்கும் ஆசை மற்றும் கோபத்தை விரட்டுவாய். அளவிலாத் தகுதி {புண்ணியம்} உனதாகும். முற்றிலும் பாகுபாடற்ற ஒழுக்கம் கொண்ட நீ எந்தக் கொடுமையையும் {பாவத்தையும்} ஈட்டமாட்டாய்.(35) இதைச் செய்வதன் மூலம் நீ கொடுமையில் மூழ்காமல் அறம் மட்டுமே நோற்றவளாவாய். எனவே, ஆசை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிரினங்களைக் கொல்லத் தொடங்கி, உன் பணியில் உன் இதயத்தை நிலைநிறுத்துவாயாக" என்றான்.(36)

இவ்வாறு சொல்லப்பட்டவளும், மரணம் {மிருத்யு} என்ற பெயரில் அழைக்கப்படுபவளுமான அந்தப் பெண், பிரம்மனின் சாபத்திற்கு அஞ்சி, "சரி!" என்று அவனுக்குப் பதிலளித்தாள். அக்காலத்தில் இருந்து அவள், உயிரினங்களின் இறுதிக் காலத்தில் ஆசை மற்றும் கோபத்தை விரட்டத் தொடங்கி, அதன் மூலம் அவற்றின் உயிர்மூச்சை நிறுத்தினாள்.(37) மரணம் சிந்திய கண்ணீரே மனிதர்களின் உடலைப் பீடிக்கும் நோய்களாயிற்று. எனவே, உயிரினங்கள் அழியும்போது ஒருவன், புத்தியின் துணையுடன் இதைப் புரிந்து கொண்டு, துன்பவசப்படாமல் இருக்க வேண்டும்.(38) ஓ! மன்னர்களில் சிங்கமே! அனைத்து உயிரினங்களும் கனவுகளற்ற உறக்கத்தில் புலன்கள் மறைந்து, விழிப்புநிலையில் மீண்டும் தோன்றுவதைப் போலவே அவற்றின் உடல்களின் அழிவில், அவை மறு உலகத்திற்குச் சென்று மீண்டும் இங்கே திரும்ப வேண்டிருக்கிறது.(39) பயங்கர சக்தி, வலிமையான ஆற்றல் மற்றும் செவிடாகச் செய்யும் முழக்கம் ஆகியவற்றைக் கொண்ட காற்று {வாயு} என அழைக்கப்படும் பூதமே, அனைத்து உயிரினங்களிலும் உயிராக இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களின் உடல்கள் அழியும்போது, பழைய உடலில் இருந்து தப்பும் அந்தக் காற்று {வாயு} பல்வேறு புதிய உடல்களில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. இதன் காரணமாகவே காற்றானது {வாயுவானது}, திரள் உடலில் அமைந்துள்ள பிற பூதங்களில் இருந்து வேறுபட்டு புலன்களின் தலைவனாக அழைக்கப்படுகிறது.(40) தேவர்களும் கூடத் தகுதிகள் {புண்ணியங்கள்} தீரும்போது) பூமியில் அழியத்தக்க {இறப்புடைய} உயிரினங்களாகப் பிறப்பை எடுக்கின்றனர். அதே போலவே அழியத்தக்க உயிரினங்களும் கூட (போதிய தகுதியை {புண்ணியத்தை} அடையும்போது) தேவர்களின் நிலையை அடைவதில் வெல்கின்றன. எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அனுகம்பகா}, உன் மகனுக்காக வருந்தாதே. உன் மகன் சொர்க்கத்தை அடைந்து, அங்கே பேரின்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.(41) ஓ! ஏகாதிபதி {அனுகம்பகா}, இவ்வாறே சுயம்புவால் மரணம் {மிருத்யு} படைக்கப்பட்டாள், மேலும் இவ்வழியிலேயே அவள் உயிரினங்களின் காலம் முடிவுக்கு வரும் வேளையில் அவை அனைத்தையும் முறையாக அழிக்கிறாள். அவள் சிந்திய கண்ணீரே நோய்களாகி, உயிரினங்களின் இறுதி வேளை வரும்போது அவை அனைத்தையும் அபகரித்துச் செல்கிறாள்" என்றார் {நாரதர்}".(42)

சாந்திபர்வம் பகுதி – 258ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்