Monday, September 24, 2018

அறிவு! - சாந்திபர்வம் பகுதி – 279

Knowledge! | Shanti-Parva-Section-279 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 106)


பதிவின் சுருக்கம் : இன்ப துன்பங்களுக்குக் காரணமாக இருக்கும் அறிவைக் குறித்துச் சுக்ராச்சாரியருக்கும், விருத்திரனுக்கு இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உயர்ந்த நற்பேற்றை அடைந்தவர்களாக மனிதர்கள் அனைவரும் எங்களைக் குறித்துப் பேசுகின்றனர். எனினும் உண்மையில், எங்களைப் போல அதிகத் துக்கத்தை அடைந்தவர்கள் வேறெவரும் இல்லை.(1) ஓ! குருக்களில் சிறந்தவரே, ஓ! பாட்டா, உலகமனைத்திலும் மதிக்கப்பட்டாலும், தேவர்களால் பெறப்பட்டு மனிதர்களுக்கு மத்தியில் நாங்கள் பிறந்திருந்தாலும், ஓ! மதிப்பிற்குரிய தலைவரே, எங்கள் பங்காக நாங்கள் பெரும் துன்பத்தையே அடைந்திருக்கும்போது, பிறப்பால் உடலைப் பெறுவது மட்டுமே துன்பம் அனைத்திற்கும் காரணமாகத் தெரிகிறது. ஐயோ, துன்பத்தை அழிக்கும் துறவு வாழ்வை நாங்கள் எப்போதும் பின்பற்றப் போகிறோம்?(3) கடும் நோன்புகளைக் கொண்ட தவசிகள், (ஐந்து மூச்சுகள், மனம், புத்தி, அறிவு மற்றும் செயற்புலன்கள் பத்து என்ற) பதினேழில் இருந்தும், (மனிதனை மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த வாழ்வில் கட்டும்) முக்கியக் காரணங்களாக அமைந்த (ஆசை, கோபம், பேராசை, அச்சம், உறக்கம் {சோம்பல்} ஆகிய) யோகக் களங்கங்கள் ஐந்தில் இருந்தும், {ஒலி, தீண்டல், வடிவம், சுவை மற்றும் மணம் ஆகிய} புலன் நுகர் பொருட்கள் ஐந்தும், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய) குணங்கள் மூன்றும் சேர்ந்த எட்டில் இருந்தும் விடுபட்டு, மீண்டும் ஒருபோதும் மறுபிறப்பை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவரே, நாங்கள் அரசுரிமையைக் கைவிட்டு எப்போது துறவு வாழ்வைப் பின்பற்றப் போகிறோம்?" என்று கேட்டான்.(4,5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பெரும் ஏகாதிபதியே, அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. அனைத்திற்கும், அதனதனுக்குரிய எல்லைகள் இருக்கின்றன. மறுபிறப்புக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பது நன்கறியப்பட்டிருக்கிறது. இவ்வுலகில் எந்தப் பொருளும் நிலையானதல்ல.(6) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இஃது (உனக்கிருக்கும் செல்வாக்கு) ஒரு களங்கமென நீ நினைக்கிறாய். நமது ஆய்வுக்குரிய இக்காரியத்தில் அஃது அவ்வாறில்லை என்பது உண்மையல்ல {அஃது அவ்வாறென்பது உண்மையே}. எனினும், நீங்கள் அறம் அறிந்தவர்களாகவும், ஆயத்தமானவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, காலத்தில் நீங்கள் உங்கள் துன்பத்திற்கான முடிவை (விடுதலையை) அடையப்போகிறீர்கள்[1].(7) ஓ! மன்னா, உடலுடன் கூடிய ஜீவன், தகுதி {புண்ணியம்} மற்றும் தகுதியின்மை {பாவம்} ஆகியவற்றுக்கு (அல்லது அவற்றின் கனியாக வரும் இன்பதுன்பங்களுக்கு) உரிமையாளனல்ல. மறுபுறம், அவன் {ஜீவன்}, தகுதி மற்றும் தகுதியின்மையால் பிறக்கும் இருளில் (விருப்பு வெறுப்பைத் தன் சாரமாகக் கொண்ட அறியாமையில்) மூழ்குகிறான்[2].(8) அஞ்சனப்பொடியுடன் கூடிய காற்றானது, மனோசிலையின் தூள்களைப் பற்றி (தானே {காற்று} நிறமற்ற ஒன்றாக இருப்பினும்), தான் பற்றும் பொருட்களின் நிறங்களை ஏற்று, பல்வேறு திசைப்புள்ளிகளில் மாறுதலை ஏற்படுத்துவதைப் போலவே,(9) ஜீவனும், நிறமற்றதாக இருந்தாலும், அறியாமை மற்றும் செயல்களின் கனிகளால் பல நிறங்களை ஏற்று (களங்கமற்ற, நிலையான தன்மை கொண்ட தன் மூதாதையைக் {சித்-ஐ} களங்கமுடையதாக, மாறும் இயல்புள்ளதாகத் தோன்றச் செய்யும் வகையில்) உடலில் இருந்து மற்றொரு உடலுக்குப் பயணிக்கிறான்[3].(10)

[1] "முதல் வரியில் உள்ள எதிர்மறைகள் இரண்டும் சேர்ந்து, ஓர் உறுதியான நிலைக்கு {நேர்மறைக்கு} இணையானதாகும். செல்வாக்கு உண்டாக்கும் பற்றின் விளைவால், அது விடுதலைக்கான வழியில் மறித்து நிற்கிறது. எனவே, இந்தக் கருத்தின் அடிப்படையில் செல்வாக்கைக் குறித்து மன்னனின் கருத்துச் சரியானதே ஆகும்". எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அதிகப் பற்றுதலினாலே இந்த ராஜ்யதோஷம் அடையப்படுகிறதில்லையென்பதில்லை. ஆனாலும், தர்மத்தை அறிந்த நீங்கள் முயற்சியினாலேயே சிறிது காலத்தில் மோக்ஷத்தை அடையப்போகிறீர்கள்" என்றிருக்கிறது.

[2] "(இங்கே குறிப்பிடப்படுவது போல) ஜீவனுக்குத் தற்செயலாக நேரும் இன்ப துன்பங்களால் கலக்கமடையாமல் யுதிஷ்டிரன் விடுதலைக்கு {முக்தி அடைய} முயற்சிக்க வேண்டும் என்று பீஷ்மர் உற்சாகமளிக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "காற்று தன் மூதாதையாக வெளியை {ஆகாயத்தைக்} கொண்டுள்ளது. ஜீவன், களங்கமற்ற, நிலையான சித்-ஐ தன் மூதாதையாகக் கொண்டுள்ளது. நிறமற்ற காற்றானது, சுற்றியுள்ள பொருட்களின் வண்ணங்களைப் பற்றி, தன் மூதாதையை அவ்வண்ணங்களைக் கொண்டதாகச் செயவதைப் போலவே ஜீவனும் உண்மையில் களங்கமற்றதாக இருப்பினும், அறியாமை மற்றும் செயல்களின் களங்கங்களைப் பற்றிக் கொண்டு, களங்கமற்றதும் நிலையானதுமான தன் மூதாதை சித் அனைத்து வகைக் களங்கங்களையும் கொண்டதாக வெளிக்காட்டுகிறது. இவ்வாறே உரையில் தவிர்க்கப்பட்ட காரியங்களை ஓர் உவமையின் மூலம் உரையாசிரியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஜீவன், அறியாமையின் விளைவால் தன்னைப் பீடித்த இருளை ஞானத்தின் மூலம் விலக்குவதில் வெல்லும்போது, நிலையான பிரம்மமானது (தன் முற்றான மகிமையுடன்) வெளிப்படுத்தப்படுகிறது.(11) நிலையான பிரம்மத்திற்கு முன்னிலை மீள்வது, செயல்களின் மூலம் இயலாது எனத் தவசிகள் சொல்கின்றனர். நீயும், இந்த உலகில் உள்ள பிறரும், தேவர்களும் கூட, விடுதலையை {முக்தியை} அடைந்தவர்களை மதிக்க வேண்டும். பெரும் முனிவர்கள் அனைவரும் பிரம்மப் பண்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகுவதில்லை[4].(12) இது தொடர்பாகப் பழங்காலத்தில் (தைத்தியர்களின் ஆசானால் {சுக்ராச்சாரியரால்}) பாடப்பட்டது குறிப்பிடப்படுகிறது. ஓ! ஏகாதிபதி, தைத்தியன் விருத்திரன், தன் செழிப்பனைத்தையும் இழந்தபோது பின்பற்றிய ஒழுக்க நடைமுறையைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(13) ஓ! பாரதா, தன் புத்தியை மட்டுமே சார்ந்திருந்த அவன், தான் வீழ்த்தப்பட்டிருந்தாலும், நண்பர்களற்றவனாக இருந்தாலும், அரசுரிமையை இழந்திருந்தாலும் எதிரிகளுக்கு மத்தியில் கவலையில் ஈடுபடாமல் இருந்தான்.(14) பழங்காலத்தில் விருத்திரன் அரசுரிமையை இழந்திருந்தபோது, (அவனது ஆசானான) உசனஸ் {சுக்கிராச்சாரியர்}, "ஓ! தானவா, உன் தோல்வியின் விளைவால் நீ துயரமெதையும் வளர்க்கவில்லை என நான் நம்புகிறேன்" என்று கேட்டார்.(15)

[4] "இந்தச் சூத்திரங்கள் புரிந்து கொள்ள மிகக் கடினமானவையாக இருக்கின்றன. செயல்கள் நிலையற்றவை; அவற்றின் விளைவுகளும் நிலையற்றவை என்பதைச் சொல்லவே, செயல்களைச் சார்ந்து பிரம்மம் அடையப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. மாறும் இயல்பைக் கொண்ட சொர்க்கத்தின் இன்பநிலையைப் போலல்லாமல பிரம்மம் நிலையானது, நித்தியமானது என்பதால், அந்தப் பிரம்மத்தை செயல்களின் மூலம் ஒருபோதும் அடைய முடியாது. ஞானத்தைக் கொண்டு அறியாமையை விலக்குவதன் மூலமே ஜீவன் பிரம்மத்திற்கு முன்னிலைமீளும்; அல்லது, உபநிஷத்துகள் அறிவிப்பது போல, தங்க அட்டிகை எப்போதும் கழுத்தில் இருந்தாலும், எங்கும், நாடப்படும்போது கவனிப்பதைப் போல ஒருவன் அதை {பிரம்மத்தை} அடைகிறான். பிரம்மத்தை அடைந்த மனிதர்களின் கருத்தைச் சார்ந்தே பிரம்மத்தின் இருப்பையும், ஜீவன் அந்த நிலையான நிலையை அடையும் சாத்தியத்தையும் எட்ட முடியும் என்பதாலேயே அவர்களை மதிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரம்மத்துடனே இருப்பதைத் தக்க வைத்துக் கொள்வது கடினம் என்பதால்தான் தவசிகள் அதைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவைப்படும் பண்பாட்டில் இருந்து ஒருக்கணமும் ஒருபோதும் விலகுவதில்லை" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

விருத்திரன் {சுக்கிராச்சாரியாரிடம்}, "வாய்மை மற்றும் தவங்களின் துணையுடன் உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்தையும் மறைவையும் ஐயமில்லாமல் புரிந்து கொண்டு, இன்பத்திலோ, துன்பத்திலோ ஈடுபடுவதை நான் நிறுத்திக் கொண்டேன்.(16) காலத்தால் தூண்டப்பட்ட உயிரினங்கள் ஆதரவற்ற நிலையில் நரகத்தில் மூழ்குகின்றன. மேலும் சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன என்று தவசிகள் சொல்கின்றனர். இவை யாவும் தங்கள் காலத்தை அடக்கத்துடன் கழிக்கின்றன.(17) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்தைச் சொர்க்கத்திலும், நரகத்திலும் கழிக்கும் அவை, தங்கள் பங்கான தகுதிகள் {புண்ணியங்கள்} மற்றும் தகுதியின்மைகள் {பாவங்கள்} (இன்ப துன்பங்களின் மூலம்) தீர்ந்த பிறகு, காலத்தால் தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பிறப்பை எடுக்கின்றன.(18) ஆசை எனும் சங்கிலிகளால் கட்டப்பட்ட உயிரினங்கள், இடைநிலை வாழ்வுகளில் ஆயிரமாயிரம் பிறவிகளைக் கடந்து ஆதரவற்ற நிலையில் நரகத்தில் விழுகின்றன[5].(19) இவ்வாறு உயிரினங்கள் வருவதையும், போவதையும் நான் காண்கிறேன். ஒருவனுடைய செயல்களின் அடிப்படையிலேயே அவன் எதையும் அடைகிறான் என்பது சாத்திரங்களில் உள்ள பாடம்[6].(20)

[5] "இடைநிலை வாழ்வுகள் என்பன, விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் புழுக்கள் முதலிய வாழ்வுகளாகும்.

[6] கும்பகோணம் பதிப்பில்,"ஜீவர்கள் காலமாகிற கட்டில் கட்டப்பட்டுத் தம் வசமற்று ஆயிரம் திரியக்ஜன்மங்களையும் நரகத்தையுமடைந்து மறுபடியும் வெளியில் வருகின்றனர். நான் இவ்விதம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற பிராணிகளைப் பார்த்தவன். வினைக்குத்தக்க பயனுண்டாகுமென்று சாஸ்திரத்தில் காணப்படுகிறது" என்றிருக்கிறது.

உயிரினங்கள் மனிதர்களாகவோ, இடைநிலை விலங்குகளாகவோ, தேவர்களாகவோ பிறப்பை எடுத்து நரகத்திற்குச் செல்கின்றன. தங்களுக்குத் தகுந்த வகையில் முற்பிறவிகளில் செயல்பட்ட உயிரினங்கள் அனைத்தும், காலனின் விதிகளுக்கு உட்பட்டு, இன்ப துன்பங்களையும், ஏற்புடையவற்றையும், ஏற்பில்லாதவற்றையும் அடைகின்றன. தங்கள் செயல்களின் அளவுக்குத்தக்க இன்ப துன்பங்களை அனுபவிக்கும் உயிரினங்கள், செயல்களின் அலகுகளால் அளக்கப்படும் பழைய பாதையின் மூலம் எப்போதும் மீண்டும் வருகின்றன" என்றான் {விருத்திரன்}.(21,22)

அப்போது சிறப்புமிக்கவரான உசனஸ் {சுக்ராச்சாரியர்}, படைப்பின் உயர்ந்த புகலிடத்தைக் குறித்து இவ்வாறு பேசிக்கொண்டிருந்த அசுரன் விருத்திரனிடம், "ஓ! தைத்திய புத்திமானே, ஓ! குழந்தாய், இத்தகைய மூடக் கற்பனைகளை நீ ஏன் சொல்கிறாய்?" என்று கேட்டார்.(23)

விருத்திரன், "வெற்றியின் மீது கொண்ட பேராசையின் காரணமாக நான் செய்த கடுந்தவங்களையும், நீரும் தவசிகள் பிறரும் அறிவீர்.(24) பிற உயிரினங்கள் இன்புறும் பல்வேறு சுவைகளையும், பல்வேறு மணங்களையும் என் சக்தியால் அபகரித்த நான், மூவுலகங்களையும் பீடித்துக் கொண்டிருந்தேன்.(25) பிரகாசமான பல்லாயிரம் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட நான் (என் தெய்வீகத் தேரில்), எந்த உயிரினத்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாக, எவனுக்கும் அஞ்சாதவனாக வானத்தில் திரிந்திருந்தேன்.(26) என் தவங்களின் மூலம் பெருஞ்செழிப்பை அடைந்தேன், என் செயல்களால் நான் அஃதை இழந்தேன். எனினும், என் மனோவுறுதியைச் சார்ந்திருந்த நான் இந்த மாற்றத்தினால் துயருறவில்லை.(27)

(பழங்காலத்தில்) சொர்க்கங்களின் உயர் ஆன்ம ஆட்சியாளனான பேரிந்திரனுடன் {மஹேந்திரனுடன்} போரிட விரும்பிய நான் அந்தப் போரில் சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், ஹரி {பாவங்கள் அனைத்தையும் அபகரிப்பவன்},(28) வைகுந்தன் {தடையில்லாத சமர்த்தன்}, புருஷன் {பரிபூர்ணன்}, அனந்தன் {முடிவற்றவன்}, சுக்லன் {சுத்தன்}, விஷ்ணு {வியாபகன்}, சநாதனன் {அனாதியானவன் / மிகப் பழமையானவன்}, முஞ்சகேசன் {பழுத்த தர்ப்பை போலப் பொன்னிறமான மயிரைக் கொண்டவன்}, ஹரிஸ்மஸ்ரு {மஞ்சள் நிற மீசையுடையவன் [தாடியுடையவன்]}, அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டன் {பிதாமஹன்} என்றும் எவன் அழைக்கப்பட்டானோ, அந்த நாராயணனைக் கண்டேன்.(29)

அந்தப் பெரும் ஹரியின் காட்சி கிட்டியதற்கான அந்தத் தவத்தோடு கூடிய வெகுமதிகள் (அனுபவிக்கத்தக்க வகையில்) என்னிடம் இன்னும் எஞ்சியிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஓ! சிறப்புமிக்கவரே, அது தீராமல் எஞ்சியிருப்பன் விளைவாலேயே நான் உம்மிடம் செயல்களின் கனிகளைக் குறித்துக் கேட்கும் விருப்பம் கொண்டேன்[7].(30) (மனிதர்களின்) எந்த வகையில் {வர்ணத்தில்} உயர்ந்த பிரம்ம செழிப்பு நிறுவப்பட்டிருக்கிறது? மேலும் அநத உயர்ந்த செழிப்பு எவ்வகையில் வீழ்ச்சியடையும்?(31) எவனிடம் இருந்து உயிரினங்கள் தோன்றி வாழ்கின்றன? எவன் மூலம் அவை செயல்படுகன்றன? எந்த உயர்ந்த கனியை அடைவதன் மூலம் ஓர் உயிரினம் நித்தியமாகப் பிரம்மத்துடன் வாழ்வதில் வெல்லும்?(32) எந்தச் செயலின் மூலம், அல்லது அந்த அறிவின் மூலம் அந்தக் கனியை அடைய முடியும்? ஓ! கல்விமானான பிராமணரே, இவற்றை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {விருத்திரன்}".(33)

[7] "தவங்கள் தகுதிமிக்கவை {புண்ணியம் நிறைந்தவை} ஆகும். எதிர்பார்க்கும் பலன்களைத் தரவல்ல கடுந்தவங்களின் போக்கிலேயே நான் ஹரியைக் கண்டேன். அதன் விளைவாலும், நான் செய்த பெரும்தவங்கள் பிறவற்றின் விளைவாலும் நான் அனுபவிக்கத்தக்க வெகுமதிகள் கிடைத்தன. எனினும், அந்த வெகுமதிகளின் முழுக் கொள்ளவும் அறுவடை செய்யப்படாமல்; எஞ்சியவை இனி நான் அனுபவிக்கத்தகுந்தவையாக இருக்கின்றன என்ற தெரிகிறது. ஏனெனில் நான் செயல்களின் கனிகளைக் குறித்து உம்மிடம் கேட்கப் போகிறேன். என் விசாரணை புனிதமானதும், மங்கலம் நிறைந்ததுமாகும். அதைக் கேட்பதிலேயே அதன் வெகுமதியும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

{பீஷ்மர் தொடர்ந்தார்}, "ஓ! மன்னர்களில் சிங்கமே, ஓ! மனிதர்களில் காளையே, தானவர்களின் இளவரசனால் {விருத்திரனால்} இவ்வாறு கேட்கப்பட்ட பிறகு தவசி உசனஸ் {சுக்கிராச்சாரியர்} என்ன சொன்னார் என்பது என்னால் தொகுத்துரைக்கப்படும்போது உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சிதறாத கவனத்துடன் கேட்பாயாக" {என்றார் பீஷ்மர்}.(34)

சாந்திபர்வம் பகுதி – 279ல் உள்ள சுலோகங்கள் : 34

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்