Tuesday, October 16, 2018

சாத்யர்களும், அன்னமும்! - சாந்திபர்வம் பகுதி – 300

Saadhyas and a swan! | Shanti-Parva-Section-300 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 127)


பதிவின் சுருக்கம் : சாத்யர்களுக்கும், அன்னப்பறவைக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கடுமொழியால் ஏற்படும் பாதிப்பு; கடுமொழியைப் பொறுத்துக் கொள்பவன் ஈட்டும் தகுதி ஆகியவற்றைச் சொன்ன அன்னப்பறவை...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, வாய்மை, தற்கட்டுப்பாடு, மன்னிக்கும்தன்மை {பொறுமை}, ஞானம் ஆகியவற்றைக் கல்விமான்கள் புகழ்கின்றனர். இவ்வறங்களில் உமது கருத்தென்ன?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பழங்கதையில் சாத்யர்களுக்கும் ஓர் அன்னப்பறவைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் சொல்லப் போகிறேன்.(2)

ஒரு காலத்தில், பிறப்பற்றவனும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமானவன் (பிரம்மன்) தங்கத்தாலான அன்னப்பறவையின் வடிவை ஏற்று, மூவுலகங்களிலும் திரிந்து கொண்டிருந்தபோது சாத்யர்களைச் சந்தித்தான்.(3)

சாத்யர்கள் {பிரம்மனிடம்}, "ஓ! தலைவா, நாங்கள் சாத்யர்கள் என்றழைக்கப்படும் தேவர்களாவோம். உன்னிடம் கேள்வி கேட்க விரும்புகிறோம். உண்மையில், விடுதலையின் அறத்தை {மோக்ஷதர்மத்தைக்} குறித்தே நாங்கள் உன்னிடம் கேட்கப் போகிறோம்.(4) ஓ! பறவையானவனே, உன்னைப் பெரும் கல்விமான் என்றும், சொல்திறமிக்கவன் என்றும், வாக்கில் ஞானம் உள்ளவன் என்றும் கேள்விப்படுகிறோம். ஓ! பறவையானவனே, அனைத்துப் பொருட்களிலும் எது உயர்ந்ததென நீ நினைக்கிறாய்? ஓ! உயர் ஆன்மா கொண்டவனே, எதனில் மனம் இன்பத்தை அடைகிறது? எனவே, ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! இறகு படைத்த படைப்புகளின் தலைவனே, எதைச் செய்தால் ஒருவன் அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபடலாம் என்று நீ கருதும் முதன்மையான செயலை எங்களுக்குப் போதிப்பாயாக" என்று கேட்டார்கள்.(6)

அன்னப்பறவை {பிரம்மன்}, "அமுதம் பருகியவர்களே, தவங்கள், தற்கட்டுப்பாடு, வாய்மை மற்றும் மனத்தை அடக்குதல் ஆகியவற்றைப் பயில வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதயத்தில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்க்கும் ஒருவன், ஏற்புடையவை மற்றும் ஏற்பில்லாதவை ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.(7) ஒருவன் பிறருடைய முக்கிய அங்கங்களுக்குத் தீங்கேற்படுத்தக்கூடாது. அவன் கொடூரப் பேச்சுகளைப் பேசக் கூடாது. அவன் ஒருபோதும் இழிந்தவர்களிடம் இருந்து சாத்திர போதனைகளைப் பெறக் கூடாது. பிறரைத் துன்பத்தில் பீடிக்கச் செய்யும் வார்த்தைகள், அவர்களை (துன்பத்தில்) எரிப்பதற்கான காரணமாகவும், நரகத்திற்கு வழிவகுக்கும் செயலாகவும் இருப்பதால் அவற்றை ஒருபோதும் பேசக்கூடாது.(8) உதடுகளில் இருந்து வார்த்தைகள் கணைகளாகப் பாய்கின்றன. (யாரை நோக்கி அவை ஏவப்படுகின்றனவோ அந்த) ஒருவன் அவற்றால் பீடிக்கப்பட்டு, உடனே எரிகிறான். அந்தக் கணைகள், இலக்காக்கப்பட்ட மனிதனின் முக்கிய அங்கத்தைத் தவிர வேறு எந்தப் பாகத்தையும் தாக்குவதில்லை. எனவே, கல்விமானான ஒருவன் அவற்றை ஒருபோதும் பிறரின் மீது ஏவக்கூடாது.(9) ஒரு மனிதன் ஒரு ஞானியை சொற்கணைகளால் ஆழமாகத் துளைத்தால், அந்த ஞானியானவன் (கோபவசப்படாமல்) அமைதியைப் பின்பற்ற வேண்டும். கோபப்படத் தூண்டப்பட்டாலும் கோபத்தின் வசப்படாத மனிதன், அவ்வாறு தூண்டுபவனின் தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அவனிடம் இருந்து அபகரித்துக் கொள்கிறான்.(10)

எதில் ஈடுபட்டால், அது பிறரைக் குறித்துக் குறை பேச வழிவகுத்து, அவனுக்கு {அவர்களை} எதிரியாக்குமோ, அந்த நெருப்பு போன்ற தன் கோபத்தை, எந்த அற ஆன்மா கொண்ட மனிதன், முழு இன்பத்துடன் கூடியவனாக, வன்மத்தில் இருந்து விடுபட்டவனாக அடக்குவானோ, அவன் பிறரின் தகுதிகளை {அவர்களிடம் இருந்து} எடுத்துக் கொள்கிறான்[1].(11) என்னைப் பொறுத்தவரையில், மற்றொருவர் என்னைக் குறித்துத் தவறாகப் பேசும்போது, ஒருபோதும் நான் அவற்றுக்குப் பதிலளிக்கமாட்டேன். தாக்கப்பட்டால் தாக்குபவனை எப்போதும் நான் மன்னிக்கவே செய்கிறேன். மன்னிக்கும் தன்மை, வாய்மை, கபடமின்மை {மனநேர்மை}, கருணை ஆகியனவே (அறங்கள் அனைத்திலும்) முதன்மையானவை என அறவோர் கருதுகின்றனர்.(12) வாய்மையே வேதங்களின் புதிராகும் {இரகசியமாகும்}. தற்கட்டுப்பாடே வாய்மையின் புதிராகும். விடுதலையே {முக்தியே} தற்கட்டுப்பாட்டின் புதிராகும். சாத்திரங்கள் அனைத்தின் போதனையும் இதுவேயாகும்[2].(13) எந்த மனிதன், கிளர்ந்தெழும் பேச்சுத் தூண்டலையும் {வாக்கின் வேகத்தையும்}, மனத்தில் தோன்றும் கோபத்தூண்டலையும் {கோபத்தின் வேகத்தையும்}, (தகாத பொருள்களில் கொள்ளும்) தாகத் தூண்டலையும், வயிறு மற்றும் இன்ப உறுப்பின் தூண்டல்களையும் {ஆசைகளின் வேகத்தையும்} அடக்குகிறானோ, அவனையே ஒரு பிராமணனாகவும், முனியாகவும் நான் கருதுகிறேன்.(14) எவன் கோப வசப்படாமல் இருக்கிறானோ, அவன் கோபப்படுபவனைவிட மேன்மையானவன். எவன் துறவைப் பயில்கிறானோ, அவன் துறவில்லாதவனை விட மேன்மையானவன், எவன் மனிதத்தன்மைகளைக் கொண்டிருக்கிறானோ, அவன் அவை இல்லாதவனைவிட மேன்மையானவன். எவன் ஞானத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன் அஃது இல்லாதவனைவிட மேன்மையானவன்[3].(15)

[1] கும்பகோணம் பதிப்பில், "வசையையுண்டுபண்ணுவதும், ஆக்கிரகத்தால் அப்பிரியத்தைச் செய்வதும் ஜ்வலிக்கிறதுமான கோபத்தை அடக்குகிறவனும் கெட்ட எண்ணமில்லாதவனும், சந்தோஷமுடையவனும், அஸூயையற்றவனுமாயிருப்பவர் பிறருடைய புண்ணியத்தை அடைகின்றான்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "வேதத்தின் ரஹஸ்யம் ஸத்யம், ஸத்யத்தின் ரஹஸ்யம் அடக்கம். அடக்கத்தின் ரஹஸ்யம் மோக்ஷம். இதுவே எல்லாருடைய உபதேசமும்" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "கோபத்தை அடையாதவன் கோபிக்கின்றவனுக்கு மேலானவன். பொறுமையுள்ளவன், பொறுமையில்லாதவனுக்கு மேலானவன். மனிதன் விலங்குகளுக்கு மேலானவன், அப்படியே, ஞானவான் ஞானமில்லாதவனைக் காட்டிலும் மேலானவன்" என்றிருக்கிறது.

கடுஞ்சொற்களால் ஒருவன் தாக்கப்படும்போதும், பதிலுக்கு அவனும் தாக்கக்கூடாது. உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் கோபத்தைத் துறக்கும் ஒருவன், அவ்வாறு தன்னைத் தாக்குபவனை எரித்து, அவனுடைய தகுதிகள் {புண்ணியங்கள்} அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறான்.(16) எவன் கடுமொழியால் தாக்கப்படும்போது, பதிலுக்குக் கடுமொழி பேசவில்லையோ, எவன் புகழப்படும்போது, அந்தப் புகழுரைகளை ஏற்றுப் பேசுவதில்லையோ, எவன் தாக்கப்படும்போதும், பதிலுக்குத் தாக்காமலும், தாக்குபவனுக்குத் தீங்கை விரும்பாமலும் மனோவுறுதியுடன் இருக்கிறானோ, அந்த மனிதன், தேவர்களாலும் விரும்பப்படும் தோழமையையே எப்போதும் அடைகிறான்.(17) அவமதிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுப் பழித்துக் கூறப்படும் ஒருவனால், {இந்தப் பாவங்களைச் செய்த} பாவியானவன், ஓர் அறவோனைப் போலக் கருதப்பட்டு மன்னிக்கப்பட வேண்டும். இவ்வழியில் செயல்படுவதன் மூலம் ஒருவன் வெற்றியை அடைகிறான்.(18) என் நோக்கங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டாலும், அறவோரிடம் எப்போதும் நான் மதிப்புடன் காத்திருக்கிறேன் {அவர்களுக்குப் பணீவிடை செய்கிறேன்}. எனக்கு எந்தத் தாகமும் {ஆசையும்} இல்லை. என் கோபம் அடக்கப்பட்டிருக்கிறது. பேராசையில் மயங்கி நான் ஒருபோதும் அறத்தின் பாதையில் இருந்து விழ மாட்டேன். செல்வத்திற்காக (செல்வத்திற்கான வேண்டுதல்களுடன்) நான் எவரையும் அணுகுவதில்லை[4].(19) சபிக்கப்பட்டால் பதிலுக்கு நான் சபிப்பதில்லை. தற்கட்டுப்பாடே அழிவின்மையின் {முக்தியின்} வாயில் என்பதை நான் அறிவேன். நான் ஒரு பெரும்புதிரை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மனிதபிறவியை விட மேன்மையான நிலை ஏதும் இல்லை[5].(20)

[4] கும்பகோணம் பதிப்பில், "எனக்கு ஆசையும், கோபமும் மேலோங்குகிறதில்லை. நான் எதையும் அடைய விரும்பித் தர்மத்தை விட்டு விலகுகிறதில்லை. ஒன்றையும் தீய வழியில் அடைகிறதில்லை" என்றிருக்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பில், "என்னை ஒருவன் சபித்தாலும் நான் திரும்ப அவனைச் சபிக்கிறதில்லை. இவ்வுலகத்தில் அடக்கத்தை மோக்ஷத்திற்கு வாயிலாக நினைக்கிறேன். அப்படிப்பட்ட இந்த அடக்கத்தை ரஹஸ்யமான பிரம்மமாகச் சொல்லுகிறேன். மானிட ஜன்மத்தைக் காட்டிலும் மிகவும் மேலானது ஒன்றுமில்லையன்றோ?" என்றிருக்கிறது.

இருளார்ந்த மேகங்களில் இருந்து {விடுபடும்} சந்திரனைப் போலப் பாவத்தில் இருந்து விடுபடும் ஞானியானவன், பிரகாசத்துடன் ஒளிர்ந்து, தன் காலத்திற்காகப் பொறுமையுடன் காத்திருப்பதன் மூலம் வெற்றியை அடைகிறான்.(21) எவன் அண்டத்தைத் தாங்கும் முதன்மையான தூணாவதன் மூலம் அனைவருடைய துதியின் பொருளாகிறானோ {புகழப்படுகிறானோ}, எவனிடம் அனைவராலும் ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே பேசப்படுகிறதோ, அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதன் தேவர்களின் தோழமையை அடைகிறான்.(22) தூற்றுபவர்கள் {அவதூறு பேசுபவர்கள்}, ஒரு மனிதனின் தகுதியின்மைகளைக் குறித்துப் பேசத் தயாராக இருப்பதைப் போல அவனுடைய தகுதிகளைப் பேச ஒருபோதும் முன்வருவதில்லை.(23) எந்த மனிதன், தன் பேச்சையும், மனத்தையும் முறையாகக் கட்டுப்படுத்தி, பரமனிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, அவனே வேதங்கள், தவங்கள் மற்றும் துறவின் கனிகளை அடைவதில் வெல்கிறான்.(24) ஞானியானவன், (பதிலுக்கு) இகழ்வதன் மூலமும், அவமதிப்பதன் மூலமும் தகுதியற்றவர்களை {புண்ணியமற்றவர்களை} ஒருபோதும் தூற்றக்கூடாது. அவன் {பிறரால் மிகைப்படப் புகழப்பட்டுப் பதிலுக்கு) பிறரை மிகைப்படப் புகழக்கூடாது. {மிகைப்படப் புகழ்வதன் மூலம்} தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளக்கூடாது.(25)

ஞானம் கொண்டவனும், கல்விமானுமான ஒரு மனிதன் அவதூறுகளை அமுதமாகக் கருதுகிறான். தூற்றப்பட்டாலும் அவன் கவலையில்லாமல் உறங்குகிறான். மறுபுறம், தூற்றியவனோ அழிவை அடைகிறான்.(26) கோபத்துடன் ஒருவன் செய்யும் வேள்விகள், கோபத்துடன் ஒருவன் தரும் கொடைகள், கோபத்துடன் ஒருவன் செய்யும் தவங்கள், கோபத்துடன் ஒருவன் அளிக்கும் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகள் ஆகியவற்றின் தகுதிகளை {புண்ணியங்களை} யமன் அபகரித்துக் கொள்கிறான். கோபமடையும் மனிதனின் உழைப்பனைத்தும் முற்றிலும் கனியற்றவையாகின்றன.(27) தேவர்களில் முதன்மையானவர்களே, இன்ப உறுப்பு, வயிறு, கரங்கள் இரண்டு, வாக்கு ஆகிய நான்கு வாயில்களையும் நன்கு கட்டுப்படுத்தும் மனிதனே அறமறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(28) வாய்மை, தற்கட்டுப்பாடு, கபடமின்மை, கருணை, பொறுமை, துறவு ஆகியவற்றை எப்போதும் பயிலும் மனிதன் வேத கல்வியில் அர்ப்பணிப்புமிக்கவனாகி, பிறரின் உடைமைகளில் பேராசை கொள்ளாமல், ஒரே நோக்கத்துடன் நன்மையானதைத் தேடி, சொர்க்கத்தை அடைவதில் வெல்கிறான்.(29) தாயின் மடியில் உள்ள நான்கு காம்புகளை உறிஞ்சிக் குடிக்கும் கன்றைப் போலவே ஒருவன் இந்த அறப்பயிற்சிகள் அனைத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். வாய்மையை விடப் புனிதமான வேறு எதுவும் இருப்பதாக நான் அறியவில்லை.(30)

மனிதர்கள் மற்றும் தேவர்களுக்கு மத்தியில் திரிந்த பிறகு, பெருங்கடலைக் கடக்கும் தோணி மட்டுமே ஒரே வழிமுறையாக இருப்பதைப் போல, சொர்க்கத்தை அடைய வாய்மை மட்டுமே ஒரே வழி என்று நான் அறிவிக்கிறேன்.(31) ஒரு மனிதன் எவருடன் வசிக்கிறானோ அவரைப் போலவே, எவரை மதிக்கிறானோ அவரைப் போலவே, எவ்வாறு ஆக வேண்டும் என்று விரும்புகிறானோ அவ்வாறே ஆகிறான்.(32) ஒரு மனிதன் எந்த நல்லோனிடமோ அல்லோனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, தவத்தகுதியைக் கொண்ட எந்தத் தவசியிடமோ, கள்வனிடமோ மதிப்புடன் காத்திருக்கிறானோ, அந்த மனிதனின் பாதையிலேயே நடக்கும் அவன், மூழ்கிய சாயத்தின் வண்ணத்தை ஏற்கும் துணியைப் போல அவனது {அந்த மனிதனின்} வண்ணத்தை {குணத்தைப்} பற்றிக் கொள்கிறான்.(33) ஞானமும், நல்லியல்பும் கொண்டோரிடம் தேவர்கள் எப்போதும் உரையாடுகிறார்கள். எனவே, அவர்கள் மனிதர்கள் கொள்ளும் இன்பங்களைக் காண ஒருபோதும் விரும்புவதில்லை. (மனிதர்கள் பேணி வளர்க்கும்) இன்ப நுகர் பொருட்கள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளையும், {ஒன்றுக்கொன்று} சில பகைமைகளையும் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்த மனிதன், சந்திரனையும் காற்றையும் விட மேன்மையானவனாக ஆகிறான்[6].(34) ஒருவனுடைய இதயத்தில் குடியிருக்கும் புருஷன் {ஆத்மா} களங்கமடையாமல், அறப்பாதையில் நடக்கும்போது, தேவர்கள் அவனிடம் மகிழ்ச்சியடைகிறார்கள்.(35)

[6] "சந்திரன் அமுதத்தைக் கொண்டது. எனவே, அத்தகைய மனிதனுக்கு இணையானது; ஆனால் நிலவு வளரவும், தேயவும் செய்கிறது; எனவே, அனைத்து மாற்றங்களின் போதும் ஒரே மாதிரியாக இருக்கும் மனிதனிடம் நிலவால் இணையாக முடியாது. அதே போல, காற்றானது தான் சுமக்கும் புழுதியால் களங்கமடையாமல் இருந்தாலும், அத்தகைய மனிதனுக்கு இணையாகாது; ஏனெனில், காற்றானது மெதுவான, நடுத்தர வேகமுடைய, மிக வேகமான அசைவு எனும் மாற்றங்களைக் கொண்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுதும் தேவர்கள் ஸாதுக்களுடன் ஒற்றுமையாயிருக்கின்றார்கள். மானுஷவிஷயத்தை விரும்பவில்லை. சந்திரன் ஒரே விதமாயிருப்பதில்லை. வாயுவும் ஸமமாயிருப்பதில்லை. வளர்வதும், தேய்வதுமான விஷயத்தை எவன் அறிந்தானோ அவனே அறிந்தவன்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "தேவர்கள் எப்போதும் நல்லோருடன் உரையாடுகிறார்கள். மனித நோக்கங்களில் அவர்கள் விருப்பமுள்ளவர்களாக ஒருபோதும் காணப்பட்டதில்லை. சந்திரனையும், காற்றையும் போலப் பொருள்கள் வருகின்றன, போகின்றன என்பதை மனிதன் அறிய வேண்டும்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "சந்திரன் வளரவும், தேயவும் செய்கிறது, காற்று வருகிறது போகிறது" என்றிருக்கிறது.

இன்பப் புலன் {பிறப்புறுப்பு} மற்றும் வயிறு ஆகியவற்றில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், களவுக்கு அடிமையாக இருப்பவர்கள், எப்போதும் கடுமொழியில் பேசுபவர்கள் ஆகியோர் உரிய சடங்குகளுடன் தங்கள் குற்றங்களான பாவக்கழிவுகளைச் செய்து கொண்டாலும், தேவர்கள் அவர்களைத் தொலைவிலேயே கைவிடுகிறார்கள்.(36) இழிந்த ஆன்மா கொண்டவன், உணவில் கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவன், பாவச் செயல்களைச் செய்பவன் ஆகியோரிடம் தேவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்வதில்லை. மறுபுறம் அத்தேவர்கள், வாய்மை நோன்பைப் பயில்பவர்கள், நன்றிமறக்காதவர்கள், அறப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொள்கிறார்கள்.(37) பேச்சை விட அமைதியே சிறந்தது. அமைதியைவிட வாய்மை பேசுவது சிறந்தது. மேலும் சொல்வதாக இருந்தால், வாய்மை பேசுவதை விட அறத்தொடர்புடன் வாய்மை பேசுவது மிகச் சிறந்தது. வாய்மையும் அறமும் கொண்டிருந்தாலும் ஏற்புடையதைப் பேசுவது, அறத்தொடர்புடைய உண்மை பேச்சைவிடச் சிறந்ததாகும்" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(38)

சாத்யர்கள், "இவ்வுலகம் எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது? எக்காரணத்தால் ஒருவன் ஒளிரத் தவறுகிறான்? எக்காரணத்தால் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகின்றனர்? எக்காரணத்தால் மக்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்?" என்று கேட்டனர்.(39)

அன்னப்பறவை {பிரம்மன்}, "உலகமானது அறியாமை (எனும் இருளால்) மறைக்கப்பட்டிருக்கிறது. வன்மத்தின் விளைவால் மனிதர்கள் ஒளிரத் தவறுகின்றனர் {புகழடையத் தவறுகின்றனர்}. பேராசையால் தூண்டப்படும் மக்கள் தங்கள் நண்பர்களைக் கைவிடுகிறார்கள். பற்றின் விளைவால் மனிதர்கள் சொர்க்கத்தை அடையத் தவறுகின்றனர்" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}.(40)

சாத்யர்கள், "பிராமணர்களில் எவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்? பலருக்கு மத்தியில் வசித்தாலும் அவர்களில் அமைதியின் நோன்பை எவனால் மட்டுமே நோற்க முடியும்? அவர்களுக்கு மத்தியில் பலவீனனாக இருந்தாலும் எவன் மட்டுமே பலவானாகக் கருதப்படுகிறான்? அவர்களுக்கு மத்தியில் எவன் மட்டுமே சச்சரவில் ஈடுபடுவதில்லை?" என்று கேட்டனர்.(41)

அன்னப்பறவை, "பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே, பலருக்கு மத்தியில் வசித்தாலும் அமைதியின் நோன்பை நோற்பதில் வெல்கிறான். பிராமணர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே பலவீனனாக இருந்தாலும், பலவானாகக் கருதப்படுகிறான். அவர்களுக்கு மத்தியில் ஞானம் கொண்டவன் மட்டுமே சச்சரவுகளைத் தவிர்ப்பதில் வெல்கிறான்" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}[7].(42)

[7] "அறியாமை விலகிய மனிதனின் தகுதிகளைக் காட்டுவதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமென உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே குறிப்பிடுகிறார்.

சாத்யர்கள், "பிராமணர்களின் தெய்வீகத்தன்மை எதிலிருக்கிறது? எதில் அவர்களது தூய்மை இருக்கிறது? எதில் அவர்களது தூய்மையின்மை இருக்கிறது? எதில் அவர்களின் மனிதத்தன்மை இருக்கிறது?" என்று கேட்டனர்.(43)

அன்னப்பறவை, "வேத கல்வியிலேயே பிராமணர்களின் தெய்வீகத்தன்மை இருக்கிறது. அவர்களது நோன்புகளில் அவர்களின் தூய்மை இருக்கிறது. அவதூற்றில் {பரநிந்தனையில்} அவர்களது தூய்மையின்மை இருக்கிறது. மரணத்தில் அவர்களது மனிதத்தன்மை இருக்கிறது" என்றது {அன்னப்பறவை / என்றான் பிரம்மன்}"[7].(44)

பீஷ்மர் தொடர்ந்தார், "சாத்யர்கள் (மற்றும் அன்னப்பறவைக்கு) இடையில் நடைபெற்ற சிறந்த உரையாடலை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். உடலே (பருவுடன் மற்றும் நுண்ணுடல் ஆகிய இரண்டும்) செயல்கள் மற்றும் இருப்பு, அல்லது ஜீவன் ஆகியவற்றின் பிறப்பிடமாக இருக்கிறது என்பது உண்மை".(45)

சாந்திபர்வம் பகுதி – 300ல் உள்ள சுலோகங்கள் : 45

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்