Saturday, November 17, 2018

வேதக்கல்விக்கான வழிமுறை! - சாந்திபர்வம் பகுதி – 328

Rules for the study of Vedas! | Shanti-Parva-Section-328 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 155)


பதிவின் சுருக்கம் : உலகையும், தேவர்களையும் அவமதித்த முருகன்; வேலை அசைத்த விஷ்ணு; வேலை அசைக்க முடியாமல் வீழ்ந்த பிரகலாதன்; கடுந்தவம் செய்த சிவன்; சிவனின் தவத்தைப் பாதுகாத்த அக்னி; சீடர்களுக்கு வேதங்களைப் போதித்த வியாசர்; சீடர்கள் வியாசரிடம் வேண்டிய வரம்; வேத கல்வியை வழங்க வேண்டிய வழிமுறைகளை வகுத்த வியாசர் ...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "மன்னன் ஜனகனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், தூய்மையான ஆன்மாவையும், நிறுவப்பட்ட தீர்மானங்களையும் கொண்டவருமான சுகர், தன்னைத் தன்னால் {சுயத்தைச் சுயத்தால்} கண்டு, தன்ஆன்மாவை தன் ஆன்மாவிலேயே நிலைக்கச் செய்யத் தொடங்கினார்.(1) தன் நோக்கம் நிறைவடைந்த அவர், அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைந்தவராக, மேலும் ஜனகனிடம் கேள்விகளைக் கேட்காமல், காற்றின் வேகத்தில் காற்றைப் போலவே வடக்கு நோக்கி இமய மலைகளுக்குச் சென்றார்[1].(2)

[1] "அவர் அதற்கு மேலும் சாதாரண மனிதர்களைப் போல நடந்து செல்லவில்லை. பூமியில் நடந்து செல்லாமல், வானத்தின் ஊடாகச் சென்றார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அந்த மலைகள் பல்வேறு அப்சரஸ் இனங்களால் நிறைந்ததாகவும், மென்மையான பல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. ஆயிரக்கணக்கான கின்னரர்கள் மற்றும் பிருங்கராஜங்களால் {வண்டுகளாலும்} நிறைந்திருந்த அது, மதகங்கள் {நீர்க்காக்கைகள்}, கஞ்சரிதங்கள் {கருங்குருவிகள்}, பல்வேறு வண்ணங்களிலான ஜீவஜீவகங்கள் {சகோரப்பறவைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(3,4) கண்கவர் வண்ணங்களிலான பல மயில்கள் அங்கே தங்கள் கீச்சுக்குரலால் காதுக்கினியவகையில் அகவிக் கொண்டிருந்தன.(5) அன்னங்களின் கூட்டங்கள் பலவும், கோகிலங்களின் {குயில்களின்} கூட்டங்கள் பலவும், அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. பறவைகளின் இளவரசனான கருடன் அந்தச் சிகரத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தான்.(6) லோகபாலர்கள் நால்வர், தேவர்களும், முனிவர்களில் பல்வேறு வகையினரும் உலகிற்கு நன்மை செய்ய விரும்பி எப்போதும் அங்கே வந்து கொண்டிருந்தனர்.(7) உயர் ஆன்ம விஷ்ணு ஒரு மகனைப் பெறும் நோக்கத்துடன் அங்கே கடுந்தவம் செய்திருந்தான்.(8)

இங்கேதான் குமாரன் என்ற பெயரிலான தேவ தளபதி, தன் இளம் வயதில், மூவுலகங்களையும், தேவலோகவாசிகள் அனைவரையும் அலட்சியம் செய்து, தன் ஈட்டியால் {சக்தி ஆயுதத்தால் / வேலால்} பூமியைப் பிளந்தான். தன் ஈட்டியை வீசிய ஸ்கந்தன், அண்டத்திடம்,(9) "வலிமையிலோ, பிராமணர்களிடம் அதிக அன்பு கொள்வதிலோ என்னிலும் மேன்மையானவனாகவோ, பிராமணர்கள் மற்றும் வேதங்களிடம் கொள்ளும் அர்ப்பணிப்பில் என்னுடன் ஒப்பிடத்தக்கவனாகவோ, சக்தியில் என்னைப் போன்றவனாகவோ எவனாவது இருந்தால்,(10) அவன் இந்த ஈட்டி {சக்தியை / வேலைத்} தூக்கட்டும், அல்லது அசைக்கவாவது செய்யட்டும்" என்றான்.

இந்த அறைகூவலைக் கேட்ட மூவுலகங்களும் கவலையால் நிறைந்தன. அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள் "இவ்வீட்டியைத் தூக்கப் போவது யார்?" என்று ஒன்றையொன்று கேட்டுக் கொண்டன.(11) தேவர்கள், அசுரர்கள் மற்றும் ராட்சசர்கள் அனைவரும் புலன்களாலும், மனத்தாலும் கலங்கியிருப்பதை விஷ்ணு கண்டான்.(12) அந்தச் சூழ்நிலையில் எதைச் செய்வது சிறந்ததென அவன் சிந்தித்தான். ஈட்டிவீசுவதைக் குறித்த அந்த அறைகூவலைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவன் {விஷ்ணு}, நெருப்பு தேவனின் {அக்னியின்} மகனான ஸ்கந்தனின் மீது தன் கண்களைச் செலுத்தினான்.(13) தூய ஆன்மாவைக் கொண்ட விஷ்ணு, சுடர்மிக்க அந்த ஈட்டியைத் தன் இடக்கையால் பற்றி அஃதை அசைக்கத் தொடங்கினான்.(14) பெரும் வலிமையைக் கொண்ட விஷ்ணுவால் இவ்வாறு அந்த ஈட்டி அசைக்கப்பட்டபோது, மலைகள், காடுகள், கடல்களுடன் கூடிய பூமியானவள் அந்த ஈட்டியுடன் சேர்ந்து மொத்தமாகக் குலுங்கினாள்.(15)

அந்த ஈட்டியை உயர்த்த விஷ்ணு முழுத் தகுதியுடையவன் என்றபோதிலும், அவன் {விஷ்ணு} அஃதை {ஈட்டியை} அசைத்ததோடு நின்றுவிட்டான். இதன் மூலம் அந்தப் பலமிக்கத் தலைவன் {விஷ்ணு}, ஸ்கந்தனின் கௌரவத்திற்குக் குறைவு நேராமல் பார்த்துக் கொண்டான்.(16) அஃதை அசைத்த பிறகு, அந்தத் தெய்வீக விஷ்ணு, பிரஹலாதனிடம், "குமாரனின் வலிமையைப் பார். இந்த அண்டத்தில் வேறு எவராலும் இந்த ஈட்டியைத் தூக்க முடியாது" என்றான்.(17) இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரஹலாதன் அந்த ஈட்டியைத் தூக்கத் தீர்மானித்தான். அதைப் பிடித்த அவனால் அதைக் கொஞ்சமும் அசைக்கமுடியவில்லை.(18) அவன் உரக்க அலறியபடியே மயக்கமடைந்து மலையுச்சியில் இருந்து கீழே விழுந்தான். உண்மையில், அந்த ஹிரண்யகசிபுவின் மகன் {பிரஹலாதன்} பூமியில் விழுந்தான்.(19)

காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட மஹாதேவன் {ருத்ரன்}, வடக்குப்பக்கத்தில் இருந்த அந்தப் பிரம்மாண்ட மலைகளுக்குச் சென்று கடுந்தவங்களைச் செய்தான்.(20) மஹாதேவன் தவம் செய்த ஆசிரமமானது அனைத்துப் பக்கங்களிலும் சுடர்மிக்க நெருப்பால் சூழப்பட்டிருந்தது. தூய்மையடையாத ஆன்மா கொண்ட மனிதர்களால் அணுகப்பட முடியாத அம்மலை ஆத்தியம் என்ற பெயரில் அறியப்பட்டது.(21) அதைச் சுற்றிலும் பத்து யோஜனைகள் அகலத்தில், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், தானவர்களாலும் அணுகப்பட முடியாத அளவுக்கு ஒரு நெருப்பு வளையம் இருந்தது.(22) வலிமையும், சக்தியும் கொண்ட சிறப்புமிக்க நெருப்பு தேவன் {அக்னி}, ஒற்றைக் காலில் ஆயிரம் தேவ வருடங்கள் நின்றிருந்த பெரும் ஞானம் கொண்ட மஹாதேவனின் அருகில் இருந்து {அந்தத் தவத்திற்கான} தடைகள் அனைத்தையும் அகற்றுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(23) உயர்ந்த நோன்புகளைக் கொண்ட மஹாதேவன், அந்த முதன்மையான மலையின் அருகில் வசித்து, (தன் தவங்களின் மூலம்) தேவர்களைத் தகிக்கச் செய்தான்.(24)

அந்த மலைகளின் அடிவாரத்தில்தான், பெரும் தவத்தகுதியைக் கொண்ட பராசரரின் மகன் வியாசர், தமது சீடர்களுக்கு வேதங்களைக் கற்பித்தார்.(25) சுமந்து, வைசம்பாயனர், பெரும் ஞானியான ஜைமினி, பெரும் தவத்தகுதியைக் கொண்ட பைலர் ஆகியோரே உயர்வாக அருளப்பட்ட அந்தச் சீடர்களாவர்.(26)

சுகர், தம் தந்தையும், பெரும் தவசியுமான வியாசர், தமது சீடர்கள் சூழ வசித்து வந்த இனிமை நிறைந்த ஆசிரமத்திற்குச் சென்றார்.(27) ஆசிரமத்தில் அமர்ந்திருந்த வியாசர், சிதறிய தழல்களுடன் கூடிய சுடர்மிக்க நெருப்பைப் போன்றோ, பிரகாசமான சூரியனுக்கு ஒப்பாகவோ வந்து கொண்டிருக்கும் தம் மகனைக் கண்டார்.(28) சுகர் வந்து கொண்டிருந்தபோது, அவர் மரங்களையோ, மலையின் பாறைகளையோ தீண்டுவது போன்று தெரியவில்லை. புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் முழுமையாகத் தொடர்பறுந்து, யோகத்தில் ஈடுபட்டிருந்த அந்த உயர் ஆன்ம தவசி {சுகர்}, வில்லில் இருந்து ஏவப்பட்ட ஒரு கணையின் வேகத்திற்கு ஒப்பாக வந்து கொண்டிருந்தார்.(29) அரணிக் கட்டைகளில் பிறந்தவரான சுகர் தமது தந்தையை அணுகி அவரது பாதங்களைத் தீண்டினார். பிறகு வழக்கமான நடைமுறைகளின் படியே தன் தந்தையின் சீடர்களை வணங்கினார்.(30) பிறகு, மன்னன் ஜனகனுடனான தமது உரையாடலின் விபரங்கள் அனைத்தையும் தம் தந்தையிடம் பெரும் உற்சாகத்துடன் சொன்னார்.(31) பராசரரின் மகனான வியாசர், தமது பலமிக்க மகன் வந்த பிறகும், தமது சீடர்களுக்கும், தமது மகனுக்கும் கற்பிப்பதில் ஈடுபட்டவாறு அங்கே இமயத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.(32) ஒரு நாள் அவர் அமர்ந்திருந்தபோது, வேதங்களில் நன்கு திறம்பெற்றவர்களும், தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தியவர்கள், அமைதியான ஆன்மாவுடன் கூடியவர்களுமான அவரது சீடர்கள் அவரைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள்.(33) அவர்கள் அனைவரும் வேதங்களிலும், அவற்றின் அங்கங்களிலும் முழுமையாகத் திறம்பெற்றவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் தவங்களை நோற்பவர்களாகவும் இருந்தனர். கூப்பிய கரங்களோடு அவர்கள் தங்கள் ஆசானிடம் பின்வரும் வார்த்தைகளில் பேசினர்.(34)

அந்தச் சீடர்கள், "உமது அருளால், நாங்கள் பெரும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறோம். எங்கள் புகழும் பரவியிருக்கிறது. நீர் எங்களுக்கு அருள ஓர் ஆதரவை நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகிறோம்" என்றனர்.(35)

அவர்களுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மறுபிறப்பாள முனிவர்  {வியாசர்} அவர்களிடம், "பிள்ளைகளே, என்ன வரத்தை நான் அருள நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்வீராக" என்றார்.(36)

தங்கள் ஆசானின் இந்தப் பதிலைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மீண்டும் தங்கள் ஆசானுக்குத் {வியாசருக்குத்} தலைவணங்கிய அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் கரங்களைக் கூப்பியபடி இந்தச் சிறந்த வார்த்தைகளை ஒரே குரலில் சொன்னார்கள்: "ஓ! தவசிகளில் சிறந்தவரே, எங்கள் ஆசான் எங்களிடம் நிறைவுடன் இருந்தால், நிச்சயம் நாங்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களே.(37,38) ஓ! பெரும் முனிவரே, நீர் எங்களுக்கு ஒரு வரத்தை அருள வேண்டுமென நாங்கள் அனைவரும் உம்மிடம் வேண்டுகிறோம். நீர் எங்களிடம் அருள்கூர்வீராக. (எங்கள் ஐவரைத் தவிர) ஆறாவது சீடன் புகழை அடைவதில் வெல்ல வேண்டாம்.(39) நாங்கள் நால்வர். எங்கள் ஆசானின் மகன் ஐந்தாவதாக அமைகிறார். வேதங்கள் எங்கள் ஐவரில் மட்டுமே ஒளிரட்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரமாகும்" என்றனர்.(40)

பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், வேதங்களின் பொருளை நன்கறிந்தவரும், அற ஆன்மாவைக் கொண்டவரும், மறுமையில் மனிதர்களுக்கான நன்மைகளை அளிக்கும் பொருட்களை நினைப்பதிலேயே எப்போதும் ஈடுபடுபவரும், பராசரரின் மகனுமான வியாசர், தமது சீடர்களின் வார்த்தைகளைக் கேட்டு, பெரும் நன்மை நிறைந்த இந்த நீதிமிக்க வார்த்தைகளைத் தன் சீடர்களுக்குச் சொன்னார்: "ஒரு பிராமணனுக்கோ, பிரம்மலோக வாசத்தை அடைய ஆவலுடன் விரும்புபவனின் மூலம் வேதக் கருத்துகளைக் கேட்க விரும்பும் ஒருவனுக்கோ வேதங்கள் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்[2].(41,42) நீங்கள் பெருகுவீராக. வேதங்கள் (உங்கள் முயற்சிகளின் மூலம்) பரவட்டும். முறையாகச் சீடனாகாத ஒருவனுக்கு வேதங்கள் ஒருபோதும் கொடுக்கப்படக்கூடாது. நல்ல நோன்புகளை நோற்காதவனுக்கும் அவை கொடுக்கப்படக்கூடாது. தூய்மையடையாத ஆன்மாவைக் கொண்டவனுக்குள் வசிப்பதற்கும் அவை கொடுக்கப்படக்கூடாது.(43) (வேத அறிவைக் கற்பிக்க) சீடர்களாக ஏற்கக்கூடிய மனிதர்களின் முறையான தகுதிகளாக இவையே அறியப்பட வேண்டும். ஒருவனுடைய குணத்தை முறையாக ஆராயாமல் எந்த அறிவியலும் அவனுக்குக் கொடுக்கப்படக் கூடாது. தூய தங்கமானது, வெப்பம், வெட்டுதல், தேய்த்தல் ஆகியவற்றின் மூலம் சோதிக்கப்படுவதைப் போலவே சீடர்களும் அவர்களுடைய பிறப்பு {குலம்} மற்றும் சாதனைகளின் மூலம் சோதிக்கப்பட வேண்டும்.(45)

[2] கும்பகோணம் பதிப்பில், "(இந்த வேதமானது) பிரம்மலோகத்தில் நிலைத்ததான வாஸத்தை நன்கு விரும்புகிறவனும், பரப்ரம்மத்தை விசாரிக்க விருப்பமுடையவனுமான பிராம்மணனுக்கு எப்பொழுதும் உபதேசிக்கத்தக்கது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், பிரம்மலோகத்தில் வசிக்க நிச்சயம் விரும்புபவனுமான ஒரு பிராமணனுக்கே அவை எப்போதும் கொடுக்கப்பட வேண்டும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் பதிப்பில் உள்ளது போன்றே இருக்கிறது.

நிறுவப்படக்கூடாத பணிகளிலோ, ஆபத்து நிறைந்த பணிகளிலோ உங்கள் சீடர்களை நீங்கள் ஒருபோதும் நிறுவக்கூடாது. ஒருவனுடைய ஞானமானது, எப்போதும் அவனுடைய புத்தி மற்றும் கல்வியில் அவனுடைய தளரா உழைப்பு ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கதாகும்.(46) சீடர்கள் அனைவரும் அனைத்துக் கடினங்களையும் {சிரமங்களையும்} வெல்லட்டும், அவர்கள் அனைவரும் மங்கலமான வெற்றியை அடையட்டும். அனைத்து வகைகளை {வர்ணங்களைச் சார்ந்த} மனிதர்களுக்கும் நீங்கள் சாத்திரங்களைக் கற்பிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அவ்வாறு கற்பிக்கும்போது, ஒரு பிராமணனை முன்னே வைத்துக் கொண்டு அவனிடம் மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும்[3].(47) இவையே வேத கல்வியின் விதிகளாகும். மேலும் இதுவே உயர்ந்த பணியாகவும் கருதப்படுகிறது. வேதங்களைக் கொண்டு தேவர்களைத் துதிக்கும் நோக்கத்திற்காகவே சுயம்புவால் அவை படைக்கப்பட்டன.(48) புத்தி மயக்கத்தின் மூலமாக எந்த மனிதன், வேதமறிந்த ஒரு பிராமணனை நிந்திக்கிறானோ, அத்தகைய தீய பேச்சின் விளைவால் அவன் நிச்சயம் அவமானத்தை அடைவான்.(49) அறவிதிகள் அனைத்தையும் அலட்சியம் செய்து ஞானத்தை வேண்டுபவன், அறவிதிகளை அலட்சியம் செய்து ஞானத்தைப் போதிப்பவன் ஆகிய இருவரும் வீழ்கிறார்கள். மேலும், இத்தகைய வேண்டலும், இத்தகைய போதனையும் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நீடிக்க வேண்டிய பற்றுக்குப் பதிலாக, நம்பிக்கையின்மையையும், ஐயுணர்வையுமே நிச்சயம் உண்டாக்கும்.(50) வேதங்களைக் கற்கவும், கற்பிக்கப்படவும் வேண்டிய வழி குறித்த அனைத்தையும் நான் இப்போது உங்களுக்குச் சொன்னேன். இந்த அறிவுரைகளை உங்கள் மனத்தில் கொண்டே நீங்கள் உங்கள் சீடர்களிடம் செயல்பட வேண்டும்" என்றார் {வியாசர்}".(51)

[3] கும்பகோணம் பதிப்பில், "புத்திக்கும் படிப்புக்கும் தக்கபடி வித்தை பயன்படும். எல்லாரும் ஸங்கடங்களைத் தாண்டட்டும். எல்லாரும் மங்களங்களைப் பார்க்கட்டும். பிராம்மணனை முன்னே வைத்துக் கொண்டு நாலு வர்ணங்களையும் கேட்கும்படி செய்ய வேண்டும்." என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 328ல் உள்ள சுலோகங்கள் : 51

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்