Friday, November 23, 2018

மோக்ஷமடைந்த சுகர்! - சாந்திபர்வம் பகுதி – 334

Suka attained emancipation! | Shanti-Parva-Section-334 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 161)


பதிவின் சுருக்கம் : முக்திக்கான பாதையில் சுகர் கண்ட காட்சிகள்; சுகர் முக்தியடைந்தது; சுகரைப் பின்தொடர்ந்து சென்ற வியாசர், சுகருக்காக வருந்தி அழுதது; வியாசருக்கு வரமளித்த சிவன்; சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வைக் கேட்பதால் கிட்டும் பரமகதி ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கடும் தவங்களைக் கொண்ட மறுபிறப்பாள முனிவரான சுகர், இவ்வாறு தம் வழியில் (அனைத்துப் பொருட்களிடமும்) பேசி, நான்கு வகைக் களங்கங்களை {தோஷங்களைக்}[1] கைவிட்டு, வெற்றியில் {யோக ஸித்தியில்} நிலைத்திருந்தார்.(1) எட்டுவகைத் தமஸ்களைக் கைவிட்டு, ஐந்து வகை ரஜஸ்களையும் விட்டுவிட்டார்[2]. பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர், பிறகு சத்வ குணத்தையும் கைவிட்டார். இவை யாவும் மிக ஆச்சரியமானவைகளாகத் தோன்றின.(2) பிறகு அவர் குணங்களற்றதும், ஒவ்வொரு குறியீட்டிலிருந்தும் விடுபட்டதுமான பிரம்மம் என்ற அந்த நித்திய நிலையிலேயே வசித்து, புகையற்ற நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(3)

[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸத்வ குணத்தாலுண்டானவைகளும், மோக்ஷத்திற்குத் தடையாயுள்ளவைகளுமான தர்மம், ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம் என்பவை" என்றிருக்கிறது.

[2] பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில், "எட்டுக் குணங்கள்: விழிப்புணர்வு இல்லாமை, குழப்பம், மயக்கம், புத்தியின்மை, உறக்கம், கவனமின்மை, தாமதம் செய்தல், விளைவுகளைக் காணாதிருத்தல் ஆகும். உண்மையில் ரஜஸ் குணங்கள் ஒன்பதாகும். அவை: நம்பிக்கை, தயாளம், இன்பம், துணிவாண்மை, ஆசை, கோபம், செருக்கு, வன்மம் மற்றும் அவதூறு ஆகும்.

விண்கற்கள் விழத் தொடங்கின[3]. திசைப்புள்ளிகள் அனைத்தும் எரிவதாகத் தெரிந்தன. பூமி நடுங்கினாள். இந்தத் தோற்றப்பாடுகள் அனைத்தும் மிக ஆச்சரியமானவைகளாகத் தெரிந்தன.(4) மரங்கள் தங்கள் கிளைகளையும், மலைகள் தங்கள் சிகரங்களையும் உதிர்க்கத் தொடங்கின. (இடியின்) உரத்த ஒலியானது இமய மலைகளையே பிளப்பது போலக் கேட்டது.(5) சூரியன் அந்தக் கணத்தில் ஒளியற்றவனாகக் காணப்பட்டான். நெருப்பு ஒளியை வெளியிட மறுத்தது. தடாகங்கள், ஆறுகள் மற்றும் கடல்கள் அனைத்தும் கலக்கமடைந்தன.(6) வாசவன் {இந்திரன்}, சிறந்த சுவையும், மணமும் கொண்ட மழையைப் பொழிந்தான். தூய தென்றல், சிறந்த நறுமணங்களைச் சுமந்தபடி வீசத் தொடங்கியது.(7)

[3] பெரும் மஹான் பூமியில் இருந்து செல்வதால் உண்டாகும் தீய சகுனம்.

ஆகாயத்தினூடாகச் சுகர் சென்று கொண்டிருந்தபோது, இமயத்திற்குரிய ஒன்றும், மேருவுக்குரிய ஒன்றுமென அழகிய இரண்டு சிகரங்களைக் கண்டார். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடன் நெருங்கி இருந்தன. அதிலொன்று தங்கத்தாலானதால் மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று வெள்ளியாலானதால் வெள்ளை நிறத்திலும் இருந்தன.(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனைகள் உயரமும், அதே அளவு அகலமும் கொண்டவையாக இருந்தன. உண்மையில் சுகர் வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அந்த அழகிய சிகரங்கள் இரண்டையும் கண்டார்.(9) அவர், அச்சமற்ற இதயத்துடன் ஒன்றோடொன்று கலந்திருந்த அந்த இரு சிகரங்களையும் மோதிச் சென்றார். அந்தச் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இரு சிகரங்களும் திடீரென இரண்டாகப் பிளந்தன.(10) ஓ! ஏகாதிபதி, அந்தக் காட்சியைக் காண மிக அற்புதமாக இருந்தது. அந்தச் சிகரங்கள், சுகர் செல்வதைத் தடுக்க இயலாதவையாக இருந்ததால் அவர் அவற்றைத் துளைத்துச் சென்றார். இதனால் சொர்க்கத்தில் வசித்தவர்களிடமிருந்து பேரொலி எழுந்தது.(11,12)

அந்த மலையில் வசித்து வந்த கந்தர்வர்கள் மற்றும் பிறர் அந்த மலை பிளக்கப்பட்டதையும், சுகர் அதைக் கடந்து சென்றதையும் ஆரவாரத்துடன் கண்டனர். உண்மையில், ஓ! பாரதா, அந்தக் கணத்தில் "நன்று, நன்று" என்ற வார்த்தைகள் எங்கும் கேட்டன.(13) கந்தர்வர்கள், முனிவர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்கள் கூட்டத்தினாலும், வித்யாதரர் குலங்கள் அனைத்தினாலும் அவர் துதிக்கப்பட்டார்.(14) ஓ! ஏகாதிபதி, ஊடுருவமுடியாத அந்த அரணை சுகர் இவ்வாறு துளைத்துச் சென்ற அக்கணத்தில், சொர்க்கத்திலிருந்து பொழியப்பட்ட தெய்வீக மலர்களால் ஆகாயம் நிறைந்திருந்தது.(15) அற ஆன்மா கொண்ட சுகர் அப்போது, மலர்ந்திருக்கும் சோலைகள் மற்றும் காடுகள் பலவற்றினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பகுதியின் கீழே பேரழகுடன் ஓடிக் கொண்டிருக்கும் தெய்வீக ஓடையான மந்தாகினியை {தேவ கங்கையை} உயர்ந்த பகுதியில் {வானத்தில்} இருந்து கண்டார்.(16) அந்த நீரில் அழகிய அப்சரஸ்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடையற்றிருந்த அந்த விண்ணுலகவாசிகள், உடலற்றவராக இருந்த சுகரைக் கண்டு வெட்கமேதும் அடையவில்லை.(17)

சுகர் பெரும்பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்த அவரது தந்தை வியாசர், அன்பால் நிறைந்தவராக அதே விண்பாதையில் அவரை {சுகரைப்} பின்தொடர்ந்து சென்றார்.(18) அதேவேளையில் சுகர், காற்றுப் பகுதிக்கு {வளிமண்டலத்திற்கு}[4] மேலிருக்கும் ஆகாயப்பகுதியில் சென்று, தமது யோக ஆற்றலை வெளிப்படுத்தி, பிரம்மத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார் {பிரம்மத்தோடு கலந்தார்}.(19) கடுந்தவங்களைக் கொண்ட வியாசர், உயர்ந்த யோகத்தின் நுண்பாதையைப் பின்பற்றி, சுகர் முதலில் பயணம் தொடங்கிய இடத்தைக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அடைந்தார்.(20) அதே வழியில் சென்ற வியாசர், எதன் ஊடாகச் சுகர் கடந்து சென்றாரோ, அந்த மலைச்சிகரம் பிளந்து கிடப்பதைக் கண்டார். தீவில் பிறந்த அந்தத் தவசியைச் சந்தித்த முனிவர்கள், அவரது மகனின் சாதனைகளை அவருக்குச் சொல்லத் தொடங்கினர்.(21) எனினும் வியாசர், தமது மகனின் பெயரைச் சொல்லி உரக்க அழைத்து, தாமுண்டாக்கிய ஒலியால் மூவுலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அழுது புலம்பத் தொடங்கினார்.(22)

[4] "வளிமண்டலத்தின் உயரம் முடிவற்றதல்ல என்பதை முனிவர்கள் அறிந்திருந்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சுகரோ வாயுவைக் காட்டிலும் மேலான ஆகாயமனத்தைச் செய்து தம்முடைய பெருமையைக் காண்பித்துக் கொண்டு அப்பொழுது எல்லாமாகிவிட்டார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சுகர், காற்று பாயும் பகுதிக்கு மேலிருக்கும் வானத்திற்கு உயர்ந்தார். தன் சக்திகளை வெளிப்படுத்திய அவர், தம்மை அனைத்து உயிரினங்களோடு அடையாளப்படுத்திக் கொண்டார் {கலந்தார்}" என்றிருக்கிறது.

அதே வேளையில், அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அவற்றின் ஆன்மாவாக ஆனவரும், எங்கும் நிறைந்த நிலையை அடைந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான {தர்மாத்மாவுமான} சுகர், எதிரொலியின் வடிவில் "போ" {Bho} என்ற ஓரசையைச் சொல்லித் தமது தந்தைக்குப் பதிலளித்தார்.(23) இதனால், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மொத்த அண்டமும் "போ" என்ற ஓரசையைச் சொல்லிச் சுகரின் பதிலை எதிரொலித்தது.(24) அந்நேரத்தில் இருந்து, மலைக்குகைகளிலோ, மலைச்சாரல்களிலோ ஒலிகள் ஒலிக்கப்படும்போது அவை சுகரின் பதிலைச் சொல்வது போல இன்னும் {இப்போது வரை} அதை (போ என்ற ஓரசையை} எதிரொலிக்கின்றன.(25) சுகர், இவ்வழியிலேயே ஒலி முதலிய குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, மறையும் வகையில் தமது யோக ஆற்றலைக் காட்டி உயர்ந்த நிலையை அடைந்தார்.(26)

அளவிலா சக்தி கொண்ட தமது மகனின் மகிமையையும், பலத்தையும் கண்ட வியாசர், அந்த மலைச்சாரலில் அமர்ந்து, துயரத்துடன் தமது மகனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்.(27) தெய்வீக ஓடையான மந்தாகினியில் {தேவ கங்கையின்} கரைகளில் விளையாடிக் கொண்டிருந்த அப்சரஸ்கள் அனைவரும், அந்த முனிவர் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டு, வெட்கத்தால் இதயம் இழந்தவர்களாகக் கலக்கமடைந்தனர்.(28) அம்முனிவரைக் கண்டதும், அவர்களில் சிலர் தங்கள் நிர்வாணத்தை மறைக்க ஓடைக்குள் குதித்தனர், சிலர் புதர்களில் நுழைந்தனர், சிலர் விரைவாகத் தங்கள் ஆடைகளை எடுத்தனர்.(29) (அவர்களில் எவரும் அவரது மகனைக் கண்டு கலக்கக் குறியீடுகளைக் காட்டவில்லை). இந்த அசைவுகளைக் கண்ட முனிவர் {வியாசர்}, தமது மகன் {சுகர்} பற்றுகள் அனைத்தில் இருந்து விடுதலை அடைந்ததையும், தாம் அவற்றில் இருந்து விடுபடாததையும் புரிந்து கொண்டார். இதனால் அவர் மகிழ்ச்சி மற்றும் வெட்கம் ஆகிய இரண்டாலும் நிறைந்தார்.(30)

வியாசர் அங்கே அமர்ந்திருந்தபோது, மங்கல தேவனும், பிநாகைபாணியும் {பிநாகை என்ற வில்லைத் தரித்தவனும்}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் பலரால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்டவனும், பெரும் முனிவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனுமான சிவன் அங்கே வந்தான்.(31) தமது மகனைக் குறித்த கவலையில் எரிந்து கொண்டிருந்தவரும், தீவில் பிறந்தவருமான {துவைபாயனருமான} அம்முனிவருக்கு ஆறுதலளிக்கும் வகையில் மஹாதேவன் {சிவன்},(32) "நெருப்பு {அக்னி}, பூமி {பிருத்வி}, நீர் {அப்பு}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்} ஆகியவற்றின் சக்தியைக் கொண்ட மகனை முன்பு நீர் வேண்டினீர்.(33) உமது தவங்களால் அதே போன்றவொரு மகன் உண்டானான். என் அருளால் அவன் தூயனாகவும், பிரம்ம சக்தியால் நிறைந்தவனாகவும் இருந்தான்.(34) புலன்களை முழுமையாக அடக்காதவர்களாலோ, தேவர்களில் எவராலோ கூட வெல்ல முடியாத உயர்ந்த கதியை அவன் அடைந்திருக்கிறான். ஓ! மறுபிறப்பாள முனிவரே, அந்த மகனுக்கான ஏன் நீர் வருந்துகிறீர்? எவ்வளவு காலம் மலைகள் இருக்குமோ, எவ்வளவு காலம் பெருங்கடல் இருக்குமோ, அவ்வளவு காலம் உமது மகனின் புகழ் மங்காதிருக்கும்.(36) ஓ! பெரும் முனிவரே, என் அருளால், உமது மகனுக்கு ஒப்பான ஒரு நிழல்வடிவம், உம்மைவிட்டு ஒருக்கணமும் அகலாமல், உமதருகிலேயே இருப்பதை நீர் இவ்வுலகில் காண்பீர்" என்றான்.(37)

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க ருத்திரனாலேயே இவ்வாறு ஆதரிக்கப்பட்ட அம்முனிவர், தம் அருகிலேயே தமது மகனின் நிழலைக் கண்டார். இதனால் மகிழ்ச்சியில் நிறைந்த அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றார்.(38) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, சுகரின் பிறப்பு மற்றும் வாழ்வு குறித்து நீ கேட்ட அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(39) தெய்வீக முனிவரான நாரதரும், பெரும் யோகியான வியாசரும், பழங்காலத்தில் இக்காரியம் குறித்து உரையாடல்களில் கேட்கப்பட்ட போது, இவையனைத்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(40) எந்த மனிதன் அமைதிநிலைக்குத் தன்னை அர்ப்பணித்து, விடுதலை {முக்தி} குறித்த நேரடி தொடர்புடைய இந்தப் புனித வரலாற்றைக் கேட்பானோ, அவன் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவான்" என்றார் {பீஷ்மர்}.(41)

சாந்திபர்வம் பகுதி – 334ல் உள்ள சுலோகங்கள் : 41

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்