Monday, December 10, 2018

ஹயக்ரீவனும் மதுகைடபர்களும்! - சாந்திபர்வம் பகுதி – 348

Hayagriva and Madhukaitabhas! | Shanti-Parva-Section-348 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 175)


பதிவின் சுருக்கம் : பிரம்மனைப் படைத்த நாராயணன்; ஹயக்ரீவ வடிவத்தை ஏற்றது; மது கைடபர்கள் என்ற அசுரர்களைக் கொன்று வேதத்தை மீட்ட வரலாறு...


ஜனமேஜயன் {அல்லது சௌனகர்}, "தெய்வீகமான பரமாத்மாவின் மகிமையை நான் உம்மிடம் இருந்து கேட்டேன். தர்மனின் இல்லத்தில், நரன் மற்றும் நாராயணரின் வடிவத்தில் பரமதேவன் பிறந்ததையும் கேட்டேன்.(1) (மூழ்கிப் போன பூமியை உயர்த்துவதற்காகப் பரமதேவன் ஏற்ற வடிவமான) வலிமைமிக்கப் பன்றியில் இருந்து பிண்டம் தோன்றியதையும் கேட்டேன். பிரவிருத்தி அறம் மற்றும் நிவிருத்தி அறம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தேவர்கள் மற்றும் முனிவர்களைக் குறித்தும் நான் உம்மிடம் இருந்து கேட்டேன்.(2) ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, நீர் எங்களுக்கு வேறு கதைகளையும் சொல்லியிருக்கிறீர். பெருங்கடலின் வடகிழக்கில் தோன்றிய வடிவமும், வேள்விக் காணிக்கைகள் மற்றும் ஆகுதிகளை உண்பவனும், குதிரைத் தலை கொண்டவனும், பெருவடிவம் கொண்டவனுமான விஷ்ணுவைக் குறித்தும் நீர் எங்களுக்குச் சொன்னீர். பரமேஷ்டி என்ற பெயரில் அறியப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனால் அந்த வடிவம் காணப்பட்டது.(3,4)


எனினும் அந்தச் சந்தர்ப்பத்தில், அதற்கு முன்பு ஒரு போதும் தோன்றியிராத பெரும்பொருளைப் போன்றவனும், அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவனுமான அந்த ஹரியின் வடிவம், சரியாக என்ன தன்மைகளைக் கொண்டிருந்தது? என்ன சக்தியைக் கொண்டிருந்தது?(5) ஓ! தவசியே, அதற்கு முன்பு ஒருபோதும் காணப்படாதவனும், அளவிலா சக்தி கொண்டவனும், குதிரைத் தலை கொண்டவனும், புனிதத்தையே சுயமாகக் கொண்டவனுமான அந்த முதன்மையான தேவனைக் கண்டதும் பிரம்மன் என்ன செய்தான்?(6) ஓ! மறுபிறப்பாளரே, இந்தப் புராதன ஞானப்பொருளைக் குறித்த இந்த ஐயம் எங்கள் மனங்களில் எழுகிறது. ஓ! புத்திமான்களில் முதன்மையானவரே, அந்தப் பரமதேவன் என்ன காரணத்திற்காக அந்த வடிவை ஏற்றான்? பிரம்மனின் முன்பு ஏன் அவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்?(7) இந்தப் பல்வேறு புனித காரியங்களைக் குறித்து எங்களிடம் உரையாற்றி நிச்சயம் நீர் எங்களைப் புனிதமடையச் செய்திருக்கிறீர்" என்றான் {ஜனமேஜயன்}[1].(8)

[1] "இந்தக் கேள்விகளைச் சௌனகரே கேட்டிருக்க வேண்டும். மேலே சில உரைகளில் வைசம்பாயனர் என்று குறிப்பிட்டாலும் அதைத் தொடர்ந்து சௌதி பேசுவதே இருக்கிறது. இந்தப் பேச்சில் "பிராமணரைக்" குறிக்கும் விளி இருக்கிறது, அதை எழுத்துப் பிழையாக நாம் எளிதில் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலி இந்த அடிக்குறிப்பைக் கொடுத்திருந்தாலும், மேலே ஜனமேஜயன் என்றே குறிப்பிட்டிருக்கிறார். பிபேக் திப்ராயின் பதிப்பிலும் ஜனமேஜயன் கேட்பதாகவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் சௌனகர் கேட்பதாகத் தொடங்குகிறது.

சௌதி சொன்னார், "வேதங்களுக்கு முற்றிலும் இணக்கமானதும், பெரும் பாம்பு வேள்வியில் பரிக்ஷித்தின் மகனுக்குச் {ஜனமேஜயனுக்குச்} சிறப்புமிக்க வைசம்பாயனரால் சொல்லப்பட்டதுமான புராதன வரலாற்றை நான் உமக்குச் சொல்லப் போகிறேன்.(9) குதிரைத் தலையுடன் கூடிய விஷ்ணுவின் வலிமைமிக்க வடிவைக் குறித்துக் கேட்ட பரிக்ஷித்தின் அரச மகனும் {ஜனமேஜயனும்} இதே ஐயத்தையே கொண்டு, இதே கேள்விகளையே வைசம்பாயனரிடம் கேட்டான்.(10)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மனிதர்களில் சிறந்தவரே, நீர் சொன்ன நிகழ்வின் போது வடக்குப் பெருங்கடலின் கரைகளில் படைப்பாளனான பிரம்மனால் காணப்பட்டதும், குதிரைத்தலையுடன் கூடியதுமான அந்த வலிமைமிக்க வடிவத்தை ஹரியானவன் என்ன காரணத்திற்காக ஏற்றான்?" என்று கேட்டான்.(11)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, இவ்வுலகில் இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களும், மற்றும் உயர்ந்த தலைவனின் புத்தியின் மூலம் உண்டாகும் கலவையான அடிப்படையான ஐம்பூதக் கலவையின் விளைவால் உண்டானவையே.(12) முடிவிலாத் தன்மையைக் கொண்ட பலமிக்க நாராயணனே உயர்ந்த தலைவனும் {ஈஸ்வரனும்}, அண்டப்படைப்பாளனும் ஆவான். அனைத்துப் பொருட்களின் அக ஆன்மாவாகவும், வரங்களை அளிப்பவனாகவும் அவனே இருக்கிறான். குணங்கள் அற்ற அவனே அவற்றைக் கொள்ளவும் செய்கிறான்.(13) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அனைத்துப் பொருட்களுக்கும் அழிவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக. முதலில் நிலம் எனும் பூதம் நீருடன் கலந்து அனைத்துப் பக்கங்களிலும் ஒரே பரப்பாக நீர் மட்டுமே காணப்படும்.(14) அதன்பிறகு நீரானது ஒளிக்குள்ளும், ஒளியானது காற்றுக்குள்ளும் கலக்கின்றன. பிறகு காற்றானது வெளிக்குள்ளும், வெளியானது மனத்துக்குள்ளும் கலக்கின்றன.(15) மனமானது புலப்படுவதற்குள் (அல்லது நனவுநிலை, அல்லது அகங்காரத்திற்குள்) கலக்கிறது. புலப்படுவது, புலப்படாததற்குள் (அல்லது பிரகிருதிக்குள்) கலக்கிறது. புலப்படாதது (பிரகிருதியானது) புருஷனுக்குள் (ஜீவாத்மாவுக்குள்) கலக்கிறது, புருஷன் பரமாத்மாவுக்குள் (அல்லது பிரம்மத்திற்குள்) கலக்கிறான்.(16) அப்போது ஏதும் உணரப்படாதவகையில் அண்டம் முழுவதும் இருள் பரவுகிறது. அந்த ஆதி இருளுக்குள் இருந்து (படைப்புக் கொள்கையுடன் கூடிய) பிரம்மம் எழுகிறது. அந்த இருள் ஆதியானதாகவும், அழிவில்லா தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.(17)

அந்த ஆதி இருளில் இருந்து எழும் பிரம்மம், (தன் சொந்த ஆற்றலின் மூலம்) அண்டமெனும் கருத்தாக வளர்ந்து புருஷனின் வடிவை ஏற்கிறது. அத்தகைய புருஷன் அநிருத்தன் என்றழைக்கப்படுகிறான். பாலினமற்ற அவன், பிராதானம் (உயர்ந்தது, தொடக்கம்) என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுகிறான்.(18) ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, அவன் முக்குணங்களின் கவலை, அல்லது புலப்படாதது என்ற பெயரில் அறியப்படுகிறான். அவன் ஞானத்தை மட்டுமே துணையாகக் கொண்டு நிலைத்திருக்கிறான். அந்தச் சிறப்புமிக்க, பலமிக்கவன் விஷ்வக்ஸேனன் அல்லது ஹரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறான்.(19) யோக உறக்கத்தின் வசப்படும் அவன் நீரில் தன்னைக் கிடத்திக் கொள்கிறான். பிறகு அவன், பல்வேறு வகைத் தோற்றப்பாடுகள் மற்றும் அளவிலா குணங்கள் நிறைந்த அண்டத்தைப் படைப்பது குறித்துச் சிந்திக்கிறான்.(20)

அவன், படைப்புக் குறித்துச் சிந்திக்கும்போதே தன் உயர்ந்த குணங்களை நினைவுகூர்கிறான். இதிலிருந்து அநிருத்தனின் புத்தியைப் பிரதிபலிக்கும் நான்முகப் பிரம்மன் எழுகிறான்.(21) ஹிரண்யகர்ப்பன் என்றும் அழைக்கப்படும் சிறப்புமிக்கப் பிரம்மனே உலகங்கள் அனைத்தின் பாட்டனாவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன், அநிருத்தனில் (அவனது தொப்புளில்) இருந்து எழும் தாமரைக்குள் தன் பிறப்பை அடைகிறான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், நித்தியமானவனும், அற்புதக்கூறுகளைக் கொண்டவனுமான பிரம்மன் அந்தத் தாமரைக்குள அமர்ந்தபடியே அனைத்துப் பக்கங்களில் இருக்கும் நீரைக் கண்டான்.(23) பரமேஷ்டி என்றும் அழைக்கப்படும் பிரம்மன் சத்வ குணத்தைப் பின்பற்றி அண்டத்தைப் படைக்கத் தொடங்கினான். சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட அந்த ஆதி தாமரையில் நாராயணன் பெரும் தகுதி நிறைந்த இரு நீர்த்துளிகளை விட்டான். தொடக்கமும், முடிவும் இல்லாதவனும், அழிவைக் கடந்திருப்பவனுமான நாராயணன், தன் கண்களை அந்த இரு நீர்த்துளிகளில் செலுத்தினான்.(24,25)

அந்த இரு நீர்த்துகளில் மிக அழகாகவும், பிரகாசமாகவும் இருந்த ஒரு துளி தேன்துளியைப் போலத் தெரிந்தது. நாராயணனின் ஆணையின் பேரில் அந்தத் துளியில் இருந்து தமஸ்குணத்தால் அமையப்பெற்றவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு தைத்தியன் உதித்தான். அந்தத் தாமரைக்குள் இருந்த மற்றொரு நீர்த்துளி மிகக் கடினமானதாக இருந்தது. அதிலிருந்து ரஜஸ் குணத்தைக் கொண்ட தைத்தியன் கைடபன் உதித்தான்.(26) தமஸ் மற்றும் ரஜஸ் குணங்களைக் கொண்டவர்களும், வலிமையுடன் கூடியவர்களும், கதாயுதங்கள் தரித்தவர்களுமான அந்தத் தைத்தியர்க்ள இருவரும், தங்கள் பிறப்பை அடைந்த உடனேயே அந்தப் பரந்த ஆதி தாமரைக்குள் திரியத் தொடங்கினர்.(27) மிக இனிய வடிவைக் கொண்ட நான்கு வேதங்களையும் படைப்பதில் ஈடுபட்டுவரும் அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன் அதற்குள் {அந்தத் தாமரைக்குள்} இருப்பதை அவர்கள் கண்டனர்.(28) உடல்படைந்த அந்த முதன்மையான அசுரர்கள் இருவரும், நான்கு வேதங்களையும் கண்டு, அதைப் படைத்தவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவற்றை அவனிடம் இருந்து பறித்தனர்.(29) நித்தியமான வேதங்களைப் பறித்த அந்த வலிமைமிக்கத் தானவர்கள் இருவரும், தாங்கள் கண்ட பெருங்கடலின் நீருக்குள் பாய்ந்து அதனடியை நோக்கிச் சென்றனர்.(30) தன்னிடம் இருந்த வேதங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டதைக் கண்ட பிரம்மன் துயரத்தால் நிறைந்தான். இவ்வழியில் வேதங்களைக் களவு கொடுத்த பிரம்மன், இவ்வார்த்தைகளில் உயர்ந்த தலைவனிடம் {ஈஸ்வரனிடம்} பேசினான்.(31)

பிரம்மன், "வேதங்களே என் பெருங்கண்களாகும். வேதங்களே என் பெரும்பலமும் ஆகும். வேதங்களே என் பெரும்புகலிடமாகும். வேதங்களே என் உயர்ந்த பிரம்மம் ஆகும்.(32) இருப்பினும் என்னிடமிருந்த அந்த வேதங்களை அவ்விரு தானவர்களும் பலவந்தமாக அபகரித்துச் சென்றனர். நான் படைத்த உலகங்கள் வேதங்களை இழந்து இருளில் மூழ்குகின்றன.(33) (என்னிடம்) வேதங்கள் இல்லாமல், என் சிறந்த படைப்பை இருப்புக்குக் கொண்டுவர எவ்வாறு என்னால் இயலும்? ஐயோ, (இத்தகைய செயல்பாட்டின் மூலம்) வேதங்களை இழந்ததன் விளைவால் நான் அடையும் துயரம் பெரியதாகும்.(34) என் இதயம் மிகவும் துன்புறுகிறது. அது பெருஞ்சோகத்தின் வசிப்பிடமாகிவிட்டது. என் இழப்பினால் நான் மூழ்கியிருக்கும் இந்தத் துன்பப் பெருங்கடலில் இருந்து என்னை மீட்கப் போவது யார்? நான் தொலைத்த வேதங்களைக் கொண்டுவரப் போவது யார்? என்னிடம் கருணை கொள்ள யார் இருக்கிறார்?" என்றான்.(35)

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயனே}, ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவனே, பிரம்மன் இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, திடீரென ஹரியை இவ்வார்த்தைகளில் துதிக்கும் எண்ணம் அவனுக்கு எழுந்தது. அப்போது பலமிக்கப் பிரம்மன், மதிப்புடன் தன் கரங்களைக் குவித்த படி, தன் மூதாதையின் பாதத்தைப் பற்றியபடியும், நாராயணனைக் கௌரவிக்கும் இந்த உயர்ந்த துதிகளைப் பாடினான்.(36)

பிரம்மன், "ஓ! பிரம்மனின் இதயமே, உன்னை நான் வணங்குகிறேன். எனக்கு முன்பே பிறந்திருந்த {எனக்கு முன்னிருப்பவனே} உன்னை நான் வணங்குகிறேன். அண்டத்தின் தோற்றுவாய் நீயே. அனைத்திலும் முதன்மையான வசிப்பிடம் நீயே. ஓ! பலமிக்கவனே, அனைத்துக் கிளைகளுடன் கூடிய யோகப் பெருங்கடல் நீயே.(37) புலப்படுவது {ஸ்தூலம்} மற்றும் புலப்படாதது {ஸூக்ஷ்மம்} ஆகிய இரண்டையும் படைத்தவன் நீயே. உணரப்படமுடியாத பரப்பைக் கொண்ட மங்கலப் பாதையில் நடப்பவன் நீயே. அண்டத்தை உண்பவன் நீயே. உயிரினங்கள் அனைத்தின் உள்ளான்மா {அந்தராத்மா} நீயே. எந்தத் தோற்றுவாயும் இல்லாதவன் நீயே.(38) அண்டத்தின் புகலிடம் நீயே. தோற்றுவாயேதும் அற்றவனாக இருப்பதால் சுயம்புவாக இருப்பவன் நீயே. என்னைப் பொறுத்தவரையில் நான் உன் உற்சாகநிலையில் இருந்து உதித்தேன். உன்னில் இருந்தே நான் பிறப்பை அடைந்தேன். மறுபிறப்பாளர்கள் அனைவராலும் புனிதமானதாகக் கருதப்படும் {மானஸம் என்றழைக்கப்படும்} என் முதல் பிறவி உன் விருப்பத்தின் மூலம் அடைந்தேன். பழங்காலத்தில் {சாக்ஷுஷம் என்கிற} என் இரண்டாம் பிறவி உன் கண்களில் இருந்து உண்டானது.(39,40)

உன் அருளால் {வாசிகம் என்கிற} என் மூன்றாம் பிறப்பு உன் வாக்கில் இருந்து உண்டானது. ஓ! பலமிக்கத் தலைவா, {ஸ்ரோத்ரஜம்} என் நான்காம் பிறப்பு உன் காதுகளில் இருந்து உண்டானது.(41) ஓ! தலைவா, {நாஸத்யம் என்கிற} என் ஐந்தாம் பிறப்பு அனைத்து வகையிலும் சிறப்பான உன் மூக்கில் இருந்து உண்டானது. {அண்டஜம் என்கிற} என்னுடைய ஆறாம் பிறப்பு உன் மூலம் ஒரு முட்டையில் உண்டானது.(42) இது {பத்மஜென்மம் என்கிற} என் ஏழாம் பிறவியாகும். ஓ! தலைவா, இஃது இந்தத் தாமரைக்குள் நேர்ந்திருக்கிறது. ஓ! முக்குணமுமற்றவனே, ஒவ்வொரு படைப்பிலும் நான் உன் மகனாகவே பிறக்கிறேன்.(43) ஓ! தாமரை இதழ் கண்ணனே, உண்மையில் முக்குணங்களிலும் முதன்மையான சத்வ குணத்தால் அமைந்த உன் மூத்த மகனாக நான் பிறக்கிறேன். பரம {உயர்ந்த} இயல்பைக் கொண்டவன் நீ. உன்னிலிருந்தே உதிப்பவன் நீ.(44) உன்னால் படைக்கப்பட்டவன் நான். வேதங்களே என் கண்கள். எனவே நான் காலங்கடந்தவனாக இருக்கிறேன். இந்த யோக உறக்கத்தில் இருந்து எழுவாயாக. என் கண்களை மீண்டும் எனக்குத் தருவாயாக. நான் உனக்கு அன்பானவன், நீ எனக்கு அன்பானவன்" என்று துதித்தான் {பிரம்மன்}.(45)

பிரம்மனால் இவ்வாறு துதிக்கப்பட்டவனும், அனைத்துப் பக்கத்திலும் முகம் கொண்டவனுமான சிறப்புமிக்கப் புருஷன், தன் உறக்கத்தை உதறி, வேதங்களை (அவற்றைப் பலவந்தமாக அபகரித்துச் சென்ற தைத்தியர்களிடம் இருந்து) மீட்கத் தீர்மானித்தான். அவன், தனது யோகபலத்தைப் பயன்படுத்தி இரண்டாம் வடிவம் ஒன்றை ஏற்றான்.(46) சிறந்த மூக்கைக் கொண்ட அவனது உடல் சந்திரனைப் போலப் பிரகாசமடைந்தது. அவன் வேதங்களின் வசிப்பிடமான பெரும்பிரகாசமுடைய குதிரைத் தலை கொண்ட வடிவை ஏற்றான்.(47) ஒளிக்கோள்கள் மற்றும் விண்மீன்கூட்டங்களுடன் கூடிய ஆகாயமே அவனது தலையின் மகுடமானது. நீண்டு பாயும் அவனது தலை முடிகள் சூரியக் கதிர்களின் காந்தியுடன் இருந்தன.(48) மேலுலகமும், கீழுலகமும் அவனது இரு காதுகளாகின. பூமியே அவனது நெற்றியானது. கங்கை மற்றும் சரஸ்வதி ஆகிய ஆறுகள் இரண்டும் அவனது இடைகளாகின. பெருங்கடல்கள் இரண்டும் அவனது இரு புருவங்களாகின.(49) சூரியனும், சந்திரனும் அவனது இரு கண்களாகினர். சந்தியொளி அவனது மூக்கானது. ஓம் என்ற அசை அவனது நினைவும், புத்தியுமானது. மின்னல் அவனது நாவானது.(50)

இரண்டு இன்பலோகங்களான கோலோகமும், பிரம்மலோகமும் அவனது மேலுதடும், கீழுதடுமாகின. அண்ட அழிவை ஏற்படுத்துவதும், முக்குணங்களையும் கடந்திருப்பதுமான பயங்கரமான இரவு {காளராத்ரியானது} அவனது கழுத்தானது.(51) பல்வேறு பொருட்களைப் பல்வேறு அங்கங்களாகவும், குதிரைத் தலையையும் கொண்ட அந்த {ஹயக்ரீவ} வடிவை ஏற்றபிறகு, அந்த அண்டத்தின் தலைவன் அங்கேயே அப்போதே மறைந்து பாதாள லோகத்திற்குச் சென்றான்.(52) அந்த உலகத்தை அடைந்ததும் அவன் தன்னை உயர்ந்த யோகத்தில் நிறுவிக் கொண்டான். சிக்ஷை என்றழைக்கப்படும் அறிவியல் விதிகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட குரலைப் பின்பற்றி வேத மந்திரங்களை அவன் உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.(53) தனித்தன்மை வாய்ந்த அவனது உச்சரிப்பு அனைத்து வகையிலும் இனிமையாகக் காற்றின் ஊடாக எதிரொலித்தது. அவனது குரல் பாதாளலோகத்தின் எல்லை முதல் மறுயெல்லை வரை நிறைந்திருந்தது. அனைத்து பூதங்களின் தன்மைகளையும் கொண்ட அது பெரும் நன்மைகளை உண்டாக்கவல்லதாக இருந்தது.(54) அப்போது அந்த அசுரர்கள் இருவரும், மீண்டும் வந்து எடுத்துக் கொள்ளும் வகையில் காலத்தால் வேதங்களிடம் ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டு {ஸங்கேதத்தால் [இரகசிய மொழியால்] வேதங்களைக் கட்டி}, அவ்வொலி வருவதாகத் தென்பட்ட இடத்தை நோக்கி ஓடினர்.(55)

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே வேளையில் பாதாள லோகத்தில் இருந்தவனும், குதிரைத் தலையுடன் கூடியவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான அந்த உயர்ந்த தலைவன் {ஹயக்ரீவன்}, வேதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.(56) அவன், பிரம்மன் இருந்து இடத்தில் மீண்டும் வந்து வேதங்களை அவனிடம் கொடுத்தான். வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் கொடுத்த அந்த உயர்ந்த தலைவன் மீண்டும் தன் சொந்த இயல்பை அடைந்தான்.(57) மேலும் அந்த உயர்ந்த தலைவன், குதிரைத் தலையுடன் கூடிய தன் வடிவை {ஹயக்ரீவனைப்} பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் நிறுவினான். (இவ்வழியில்) வேதங்களின் வசிப்பிடமான அவனை நிறுவியபிறகு, மீண்டும் குதிரைத் தலைக் கொண்ட வடிவை ஏற்றான்[2].(58) மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களும், ஒலியை வெளியிடும் எவரையும் காணாது மீண்டும் அதே இடத்திற்கு விரைவாகத் திரும்பி வந்தனர். அவர்கள் தங்கள் கண்களைச் சுற்றிலும்சுழல விட்டும், வேதங்களை அவர்கள் வீசிய அந்த இடம் வெறுமையாக இருப்பதைக் கண்டனர்.(59) வலிமையானவர்களில் முதன்மையான அவர்கள் இருவரும் பெரும் வேகத்துடன் பாதாள லோகத்தில் இருந்து எழுந்தார்கள்.(60)

[2] "இந்த ஸ்லோகத்தின் பொருளைத் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது. இது முந்தைய ஸ்லோகத்திற்கு முரணாக உள்ளது. வேதங்களைப் பிரம்மனிடம் மீட்டுக் கொடுத்த பிறகு, நாராயணன் தன் சொந்த இயல்பை அடைந்துவிட்டால், பிறகு குதிரைத் தலையுடைய அவனுடைய வடிவம் எங்கே இருக்கும்?" எனக் கங்குலி இங்கே ஐயம் எழுப்புகிறார். கும்பகோணம் பதிப்பில், "தேவரும் ஹயக்ரீ ரூபத்தைத் தரிப்பவருமான ஹரியானவர் பாதாளத்தையடைந்த எல்லா வேதங்களையும் கிரகித்துத் திரும்பவும் பிரம்மாவினிடம் கொடுத்தார். ஹயக்ரீவரானவர் வேதங்களை ஸ்தாபனஞ்செய்துவிட்டுப் பிறகு ஈசான்ய ஸமுத்திரத்தில் தமது ஸ்வபாவநிலையை அடைந்தார். அதனால் ஹயக்ரீவர் வேதங்களுக்கிருப்பிடமுமானார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அதேவேளையில், ஹயசிர வடிவில் இருந்த தேவன் ஹரி, பாதாள லோகத்தில் இருந்த வேதங்களை எடுத்துக் கொண்டான். பிறகு அவற்றைப் பிரம்மனிடம் மீண்டும் கொடுத்து, தன் இயல்பான வடிவை மீண்டும் ஏற்றான். ஹயசிரன் வேதங்களின் வசிப்பிடமாக இருந்தான், மேலும், அந்த ஹயசிர வடிவத்தைப் பெருங்கடலின் வடகிழக்குப் பகுதிகளில் நிறுவினான்" என்றிருக்கிறது. கங்குலியிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் நேரும் குழப்பம் கும்பகோணம் பதிப்பில் நேரவில்லை.

தாங்கள் பிறப்படைந்த ஆதி தாமரைக்குத் திரும்பி வந்த அவர்கள், பலமிக்கவனும், வெண்ணிறத்தையும், சந்திரனுக்கு ஒப்பான காந்தியையும் கொண்டவனும், அநிருத்தனின் வடிவில் இருந்தவனுமான அந்த உண்மையான படைப்பாளனைக் கண்டார்கள்.(61) அளவிலா ஆற்றலைக் கொண்டவனான அவன் யோக உறக்கத்தின் ஆதிக்கத்தில் தன் உடலைப் பரந்த நீர்ப்பரப்பை ஆக்கிரமிக்கும் வகையில் கிடத்தியிருந்தான்.(62) பெரும் பிரகாசத்தைக் கொண்டதும், சத்வமெனும் களங்கமிலா குணத்துடன் கூடியதுமான அந்தப் பரம தேவனின் உடலானது, நெருப்பைக் கக்குவதாகத் தெரிந்த ஒரு பாம்பின் சிறந்த தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது[3].(63)

[3] கும்பகோணம் பதிப்பில், "உற்பத்தியைச் செய்தவரும், பிரபுவும், வெண்ணிறமுடையவரும், சந்திரன் போலச் சுத்தமான காந்தியுடையவரும், அநிருத்தசரீரத்திலிருப்பவரும், அளவற்ற பராக்ரமமுடையவரும், மீண்டும் தம்முடைய அளவுக்குத் தக்கபடி செய்யப்பட்டதும், ஜலத்தின் மேலமைக்கப்பட்டதும் ஸர்ப்பத்தின் உடலால் நிறைந்ததும், ஜ்வாலைகளின் பரம்பரையால் சூழப்பட்டதுமான சயனத்தில் யோக நித்திரை அடைந்தவருமான அந்தப் புருஷரையே பார்த்தார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கிட்டத்தட்ட கங்குலியில் உள்ள வர்ணனையே இருக்கிறது.

அந்தத் தலைவன் இவ்வாறு கிடப்பதைக் கண்ட அந்த முதன்மையான தானவர்கள் இருவரும், உரக்கச் சிரித்து முழங்கினார்கள். ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களுடன் கூடிய அவர்கள்,(64) "இவனே வெண்ணிறமுடைய அவன். இப்போது உறக்கத்தில் கிடக்கிறான். இவனே பாதாளலோகத்தில் இருந்து வேதங்களைக் கொண்டு வந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(65) இவன் யாருடையவன்? யார் இவன்? பாம்பின் தலையில் ஏன் இவ்வாறு உறங்குகிறான்?" என்றனர். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தானவர்கள் இருவரும் யோகத்துயிலில் இருந்த ஹரியை விழிப்படைச் செய்தனர்.(66)

இருப்பில் உள்ளவற்றில் முதன்மையானவன் (நாராயணன்) இவ்வாறு விழிப்படையச் செய்யப்பட்டதும், அந்தத் தானவர்கள் இருவரும் தன்னோடு போரிடும் நோக்கம் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். தன்னோடு போரிட ஆயத்தமாக இருக்கும் அந்த முதன்மையான அசுரர்கள் இருவரையும் கண்ட அவனும் அவர்களது அசையை நிறைவு செய்வதில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(67) அதன் பேரில் ஒரு புறம் அவர்கள் இருவரும் மறுபுறம் நாராயணன் என அவர்களுக்கிடையில் போர் நடைபெற்றது. அசுரர்களான மதுவும், கைடபனும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்களின் உடல்வடிவங்களாக இருந்தனர். பிரம்மனை நிறைவு செய்வதற்காக நாராயணன் அவ்விருவரையும் கொன்றான். அது முதல் அவன் மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.(68) அந்தப் பரம்பொருளானாவன், அவ்விரு அசுரர்களுக்கும் அழிவை ஏற்படுத்தி, பிரம்மனிடம் வேதங்களை மீட்டுத் தந்து, பிரம்மனின் துயரை விலக்கினான்.(69) பிறகு பிரம்மன், ஹரியின் துணையுடனும், வேதங்களின் உதவியுடனும் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தையும் படைத்தான்.(70) இதன்பிறகு, படைப்பு தொடர்புடைய முதன்மையான வகையிலான புத்தியைப் பெரும்பாட்டனுக்கு அருளிய ஹரி, தான் எங்கிருந்து வந்தானோ அந்த இடத்திற்குச் செல்வதற்காக அங்கேயே அப்போதே மறைந்து போனான்.(71) இவ்வாறே, குதிரை தலை கொண்ட வடிவை ஏற்ற நாராயணன் {ஹயக்ரீவன்}, மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்களையும் கொன்றான் (கொன்ற பிறகு, பிரம்மனின் பார்வையில் இருந்து மறைந்தும் போனான்). எனினும், அண்டத்தில் பிரவிருத்தி அறத்தை உண்டாக்கும் நிமித்தமாக மீண்டும் அவன் அவ்வடிவை {ஹயக்ரீவ வடிவத்தை} ஏற்றான்.(72)

இவ்வாறே அருள் நிறைந்த ஹரியானவன் பழங்காலத்தில் குதிரை தலை கொண்ட அந்த மகத்தான வடிவத்தை ஏற்றான். அவனது அனைத்து வடிவங்களிலும், பலத்துடன் கூடிய இந்த வடிவமே மிகப் பழமையானதாகக் கொண்டாடப்படுகிறது.(73) நாராயணன் குதிரைத் தலை தரித்த இந்த வரலாற்றை அடிக்கடி கேட்பவன், அல்லது மனத்தால் பாராயணம் செய்பவன் ஒருபோதும் வேதங்களையோ, பிற சாத்திரங்களையோ மறக்கமாட்டான். குதிரை தலை கொண்ட சிறப்புமிக்கத் தேவனைக் கடுந்தவங்களுடன் துதித்த முனிவர் பாஞ்சாலர் (காலவர் என்று வேறு பெயரால் அழைக்கப்படுபவர்) தேவனால் (ருத்திரனால்) சுட்டிக்காட்டப்பட்ட பாதையில் சென்று கிரம அறிவியலை அடைந்தார்[4].(75) ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேதங்களுக்கு இசைவானதும், நீ என்னிடம் கேட்டதுமான ஹயசிரஸின் பழங்கதையை நான் உனக்குச் சொன்னேன்.(76) அண்டத்தின் காரியங்களைச் சீரமைக்க அந்தப் பரம தேவன் என்னென்ன வடிவங்களை ஏற்பானோ, அவற்றை அவன் தன் உள்ளார்ந்த சக்திகளைப் பயன்படுத்தி உடனே ஏற்கிறான்.(77) அனைத்து செழிப்பையும் கொண்ட அந்தப் பரமதேவனே வேதங்களின் கொள்ளிடமாவான். அவனே தவங்களின் கொள்ளிடமும் ஆவான். பலமிக்க அந்த ஹரியே யோகமுமாவான். சாங்கிய தத்துவத்தின் உடல்வடிவமாகவும் அவனே இருக்கிறான். அவனே நாம் கேள்விப்படும் முதன்மையான பிரம்மமுமாக இருக்கிறான்.(78)

[4] "வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் இந்த ஸ்லோகத்தின் அபத்தமான பதிப்பையே தந்திருக்கின்றனர். கே.பி.சின்கா, இவரைப் பாஞ்சால மன்னனாக எடுத்துக் கொண்டு, நாராயணன் அருளால் மன்னன் பாஞ்சாலன் தன் நாட்டை அடைந்தான் என்று இந்த ஸ்லோகத்தின் மூலம் பொருள் கொள்கிறார். பர்துவான் மொழிபெயர்ப்பாளர், வழக்கம் போலவே கிரமம் என்பதைக் கதி அல்லது முடிவு என்று தவறான பொருள் கொண்டிருக்கிறார். உண்மையென்னவெனில், இந்த ஸ்லோகம் ஏற்கனவே சாந்தி பர்வம் 343ம் பகுதியில் 100 முதல் 102ம் ஸ்லோகங்கள் வரை சொல்லப்பட்டதையே மீண்டும் சொல்கிறது. கிரமம் என்பது, வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை ஒன்றில் இருந்து மற்றொன்றாகப் பிரிக்க உதவும் அறிவியலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பாஞ்சால தேசத்தரசன் கடுமையான தவத்தினால் தேவரான ஹயக்ரீவரை ஆராதித்து அந்தத் தேவரால் மார்க்கமுபதேசிக்கப்பட்டுக் கிரமத்தை அடைந்தான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "முனிவர் பாஞ்சாலர் {காலவர்}, கடுந்தவங்கள் செய்து, ஹயசிர வடிவை ஏற்ற தேவனை வழிபட்டு, ராமரால் {பரசுராமரால்} போதிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றிச் சிக்ஷையைக் கற்றார்" என்றிருக்கிறது.

வாய்மை நாராயணனையே தன் புகலிடமாகக் கொண்டுள்ளது. ரிதம் {கர்ம பயன் / செயற்கனி} நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. திரும்பி வராத நிவிருத்தி அறமும் நாராயணனையே தன் உயர்ந்த வசிப்பிடமாகக் கொண்டுள்ளது.(79) பிரவிருத்தியின் அடிப்படையிலான மற்றொரு அறமும் இணையாக நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. பூமி என்ற பூதத்திற்குரிய குணங்கள் அனைத்திலும் முதன்மையானது மணமாகும். அந்த மணமும் தன் ஆன்மாவாக நாராயணனையே கொண்டுள்ளது.(80) ஓ! மன்னா {ஜனமேஜயா}, நீரின் குணங்கள் (பல்வேறு வகையான) சுவைகள் என்றழைக்கப்படுகின்றன. இந்தச் சுவைகளும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன. ஒளியின் முதன்மைக் குணம் வடிவமாகும். வடிவமும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(81) காற்றின் குணமான தீண்டலும் நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. காற்றின் {ஆகாயத்தின் என்றிருக்க வேண்டும்} குணமான ஒலியும் பிறவற்றைப் போன்றே நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(82) புலப்படாததன் (பிருகிருதியின்) குணமான மனமும், நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. தெய்வீக ஒளிக்கோள்களின் நகர்வுகளால் கணக்கிடப்படும் காலமும் அதே போல நாராயணனையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது.(83)

புகழ், அழகு மற்றும் செழிப்பின் தலைமைத் தேவர்களும் அதே உயர்ந்த தேவனையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்டுள்ளனர். சாங்கியம் மற்றும் யோக தத்துவங்கள் இரண்டும் நாராயணனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டுள்ளன.(84) பரம்பொருளே இவை அனைத்தின் காரணமான புருஷனாக இருக்கிறான். மேலும் அவன் அனைத்தின் காரணமான பிரதானனாகவும் (அல்லது பிரகிருதியாகவும்) இருக்கிறான்.(85) அனைத்துப் பொருட்களும் சார்ந்திருக்கும் அடித்தளம் அவனே. செயல்படுபவன் அவனே, அண்டத்தில் காணப்படும் பலவகைகளின் காரணம் அவனே. அண்டத்தில் செயல்படும் பல்வேறு வகைச் சக்திகள் அவனே. ஐந்தாவதாக, மக்களால் பேசப்படும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் புலப்படாத ஆதிக்கம் அவனே.(86) பரந்த பயன்பாட்டில் உள்ள இத்தகைய காரணங்களின் துணையுடன் பல்வேறு காரியங்களை ஆய்வு செய்வதில் ஈடுபடுவோர் மேலே சொல்லப்படும் ஐந்து காரணங்களுடனும், அனைத்துப் பொருட்களின் இறுதிப் புகலிடத்துடனும் ஹரியையே அடையாளம் காண்கின்றனர்.(87) உண்மையில், உயர்ந்த யோகபலத்துடன் கூடிய நாராயணனே ஒரே தத்துவமாக இருக்கிறான். ஆன்மாவை அறிந்தவர்களான பிரம்மன், உயர் ஆன்ம முனிவர்கள், சாங்கியர்கள், யோகியர், யதிகள் உள்ளிட்ட உலகவாசிகள் அனைவரின் பொதுவான எண்ணங்களும் கேசவனால் முழுமையாக அறியப்படுகின்றன, ஆனால் இவர்கள் எவராலும் அவனது எண்ணங்கள் ஒருபோதும் அறியமுடியாது.(88,89)

தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் எந்தச் செயலும், கொடுக்கப்படும் எந்தக் கொடையும், செய்யப்படும் எந்தத் தவமும்,(90) தனது உயர்ந்த விதிகளில் நிறுவப்பட்டிருக்கும் அந்த விஷ்ணுவையே புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. உயிரினங்கள் அனைத்தின் வசிப்பிடமாக இருப்பதாலேயே அவன் வாசுதேவன் என்ற பெயர் சூட்டப்பட்டான்.(91) அவன் மாற்றமில்லாதவன். அவன் பரமன் {உயர்ந்தவன்}. அவன் முனிவர்களில் முதன்மையானவன். அவன் உயர்ந்த பலத்தைக் கொண்டவன். அவன் முக்குணங்களையும் கடந்தவன் எனச் சொல்லப்படுகிறான். (அந்த அறிகுறியுமின்றி வேகமாக ஓடும்) காலமானது, அடுத்தடுத்த பருவகாலங்களின் வடிவில் வெளிப்படும்போது இவ்வாறே குறியீடுகளை ஏற்கிறது. அவன் குணங்களற்றவனாக இருந்தாலும், (தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக) குணங்களை ஏற்கிறான்.(92) உயர் ஆன்மாவைக் கொண்டவர்கள் கூட அவனது இயக்கங்களை {செயல்பாடுகளைப்} புரிந்து கொள்வதில் வெல்வதில்லை. ஞானத்தையே தங்கள் ஆன்மாக்களாகக் கொண்ட முதன்மையான முனிவர்கள் மட்டுமே குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்தப் புருஷனைத் தங்கள் இதயங்களில் காண்பதில் வெல்கிறார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(93)

சாந்திபர்வம் பகுதி – 348ல் உள்ள சுலோகங்கள் : 93

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்