Thursday, December 05, 2013

நாடு திரும்பிய கிருஷ்ணன் - வனபர்வம் பகுதி 22

Krisha returned to his country | Vana Parva - Section 22 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர்; சால்வனைக் கிருஷ்ணன் கொல்லுதல்; யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு கிருஷ்ணன் துவாரகை திரும்புதல்...

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "பிறகு, பாரத குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, எனது அழகான வில்லை எடுத்து, விலையுயர்ந்த பொருட்களால் ஆன அந்தத் தேரில் இருந்தவர்களும் தேவர்களுடைய எதிரிகளும் ஆனவர்களின் தலையை எனது கணைகளால் வெட்டிப் போட ஆரம்பித்தேன்! எனது வில்லான சாரங்கத்தில் இருந்து, பாம்புகள் போன்ற வடிவம் கொண்டவையும், பெரும் உயரம் செல்லக்கூடிவையும், பெரும் சக்தி படைத்தவையுமான அழகான கணைகளை ஏவ ஆரம்பித்தேன். குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}! பிறகு என்னால் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரைக் காண முடியவில்லை. மாயசக்தியால் அது மறைந்து போயிருந்தது! நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

பாரதரே {யுதிஷ்டிரரே}, நான் அப்படி காத்திருந்த போது, பயங்கரமான முகங்களும் தலைமுடியும் கொண்ட தானவப்படையினர் பெரும் அலறல் அலறினர். பிறகு அந்தக் கடும் போரில் நான், அவர்களை அழிக்கும் நோக்கத்துடன், எனது வில்லின் நாணில் சத்தமில்லாமல் சென்று எதிரியைத் துளைக்கும் வல்லமை பெற்ற ஆயுதத்தைப் பொருத்தினேன். இதன் பிறகு அவர்கள் சத்தம் அடங்கியது. ஆனால், சத்தமிட்ட தானவர்கள் அனைவரும் சூரியன் போலப் பிரகாசிப்பதும், சத்தத்தைக் கொண்டே தாக்கும் திறன் கொண்ட எனது கணைகளால் கொல்லப்பட்டனர். ஒரு இடத்தில் சத்தம் அடங்கியதும், வலிமைவாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, வேறு இடத்தில் இருந்து அலறம் சத்தம் கேட்கத் தொடங்கியது. அங்கேயும் எனது கணைகளை அனுப்பினேன். இவ்வகையில், பாரதரே {யுதிஷ்டிரரே}, அசுரர்கள் பத்து பகுதிகளில் இருந்தும் மேலிருந்தும் கீழிருந்தும் அலற ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் மற்றும் வானத்தில் இருந்து மறைமுகமாக நின்று போரிட்டவர்களும், மந்திரங்களால் உந்தப் பட்ட பலதரப்பட்ட உருவங்களில் உள்ள எனது தெய்வீக கணைகளால் கொல்லப்பட்டனர். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு, விரும்பிய இடத்திற்கு செல்லும் திறன் கொண்ட விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேர் எனது கண்களைத் தடுமாறச் செய்து, பிராக்ஜோதிஷத்தில் மீண்டும் காணப்பட்டது!

பிறகு, அழிக்கும் சக்தி கொண்ட பல்வேறு உருவங்களில் இருந்த தானவர்கள் திடீரென பெரும் கல் மழையைப் பொழிந்தனர், கற்களின் ஊற்று என் மீது விழுந்து என்னை மூடியது. என்னைச் சுற்றி அவை (உச்சிகளும் முகடுகளும் கொண்ட) எறும்புப் புற்று போல வளர்ந்தன. எனது குதிரைகள், தேரோட்டி, கொடிக்கம்பங்கள், ஆகியவையுடன் சேர்த்து நானும் செங்குத்தான பாறைகளின் நடுவே மற்றவர்களின் பார்வையில் இருந்து மொத்தமாக மறைந்து போனேன். பிறகு, எனது படையாய் இருந்த விருஷ்ணிகுலத்தின் முதன்மையானவர்கள் பீதியால் தாக்குண்டு, திடீரென அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓட ஆரம்பித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, என்னை அந்த நிலையில் கண்டு, சொர்க்கமும் வானமும், பூமியும், "ஓ", "ஐயோ" என்ற வார்த்தைகளால் நிரம்பியன. ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, பிறகு, துயரத்தில் மூழ்கிய எனது நண்பர்கள், சோகத்துடன் அழுது, கனத்த இதயத்துடன் ஒப்பாரி வைத்தனர்! எதிரிகளின் இதயங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியன. நடுக்கமில்லாதவரே, நான் இவற்றையெல்லாம் அந்த எதிரியை வீழ்த்திய பிறகு கேள்விப்பட்டேன்! பிறகு நான், கற்களைத் துளைக்கவல்ல இந்திரனின் விருப்பமான (ஆயுதமான) வஜ்ராயுதத்தை எடுத்து, அந்த மொத்த நிறை கொண்ட செங்குத்தான் பாறைகளை அழித்தேன்.

ஆனால் எனது குதிரைகள், அந்தக் கற்களின் நிறையால் துன்பப்பட்டு, மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு நடுங்கத் தொடங்கின. பிறகு என்னைக் கண்ட எனது நண்பர்கள், மேகங்களைக் கலைத்துக் கொண்டு உதிக்கும் சூரியனைக் கண்டவர்கள் போல மகிழ்ச்சியடைந்தனர்.  பிறகு, பாறைகளின் பாரத்தைத் தாங்காமல், கிட்டத்தட்ட தங்கள் கடைசி மூச்சை சுவாசித்துக் கொண்டிருந்த குதிரைகளைக் கண்ட எனது தேரோட்டி, அந்த சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைச் சொன்னான். "ஓ விருஷ்ணி குலத்தவரே, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேருக்குச் சொந்தமான சால்வன் (அவ்விடத்தில்) அமர்ந்திருப்பதைப் பாரும். அவனை அலட்சியம் செய்யாதீர்! நன்கு முயற்சி செய்யும்! சால்வனிடம் நீர் கொண்டுள்ள மென்மையையும், கருத்துகளையும் கைவிடும்! வலிமைவாய்ந்த கரம் கொண்டவரே, சால்வனைக் கொல்லும். கேசவரே, அவனை வாழ விடாதீர்! வீரரே, உமது நண்பரல்லாதவரை (எதிரிகளை) அழிப்பவரே, அனைத்து முயற்சிகளையும் கைக்கொண்டு ஒரு எதிரி கொல்லப்பட வேண்டும். பலம் வாய்ந்த மனிதனின் காலடியில் அமர்ந்திருக்கும் ஒரு பலவீனமான எதிரியைக் கூட அந்தப் பலவான் அலட்சியம் செய்யக் கூடாது. நம்மிடம் போர்புரியத் துணிந்தவன் குறித்து சொல்லவும் வேண்டுமா?

ஆகையால், மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, ஓ தலைவா, விருஷ்ணி குலத்தின் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, அனைத்து முயற்சிகளையும் கைக்கொண்டு அவனைக் கொல்லும். மேலும் தாமதிக்காதீர்! மென்மையான திட்டங்களால் அழிக்கப்படக்கூடியவன் இவன் இல்லை. உம்மிடம் போரிட்டுக் கொண்டு துவாரகையைப் பாழாக்கி இவன், உமக்கு நண்பனாக முடியாது என்பது எனது கருத்து" என்றான் {தேரோட்டி}. கௌந்தேயரே {யுதிஷ்டிரரே}, எனது தேரோட்டியின் இவ்வார்த்தைகளைக் கேட்டும், அவன் சொன்னது உண்மை என்பதை அறிந்து, சால்வனைக் கொல்லும் நோக்கிலும், விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரை அழிக்கும் நோக்கிலும் போரில் (புத்துணர்ச்சியுடன்) ஈடுபட்டேன். வீரரே, தாருகனிடத்தில், "சற்றுப் பொறு" என்று சொல்லி, எனது வில்லின் நாணில் எனது விருப்பத்திற்குரிய ஆயுதமான தெய்வீகம் கொண்டதும், கட்டுப்படுத்தப்பட முடியாததும், கலங்கடிக்கப்பட முடியாததும், சக்தியால் வெடித்துச் சிதறுவதும், அனைத்தையும் துளைக்கும் சக்தி பெற்றதும், பெரும் பிரகாசமுடையதும் எனக்குப் பிடித்தமான ஆயுதமும் ஆன  எரிந்து கொண்டிருந்த நெருப்பாயுதத்தை {ஆக்னேயாஸ்திரத்தை} பொருத்தினேன்.
"விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரையும் அதில் இருக்கும் அனைத்து எதிரிகளையும் அழி" என்று சொல்லி அந்தக் கணையை அடித்தேன். யக்ஷர்களையும், ராட்சசர்களையும், தானவர்களையும், அசுத்தமான குலங்களில் பிறந்த மன்னர்களையும் சாம்பலாக்குவதும், கூர்மையானதும், களங்கமற்றதும், அழிவுக்கடவுளான யமனைப் போன்றதும், ஒப்பற்றதும், எதிரிகளைக் கொல்வதுமான பெரும் சக்தி பெற்ற சக்கரமான சுதர்சனத்தை எனது கரத்தின் பலத்தாலும், மந்திரங்களை உச்சரித்தும் கோபத்துடன் ஏவினேன். விண்ணில் எழுந்த அது யுகத்தின் கடைசியில் பிராகசத்துடன் மின்னும் இரண்டாவது சூரியனைப் போல இருந்தது. ஒளியிழந்த சௌப நகரத்தை அடைந்து, வாளால் நெடும் மரத்தை அறுப்பது போல நகரத்துக்குள் நுழைந்தது.

சுதர்சனத்தின் சக்தியால் இரண்டாகப் பிளந்து மகேஸ்வரரின் கணைகளால் அசைக்கப்பட்ட திரிபுரா நகரம் போல விழுந்தது. சௌப நகரம் இப்படி விழுந்த பிறகு, சக்கரம் மீண்டும் எனது கைகளை அடைந்தது. மீண்டும் அதை {சுதர்சனத்தை} எடுத்து, பெரும் சக்தியுடன் அதைச் சுழற்றி, "சால்வனிடம் செல்" என்று சொல்லி வீசினேன். பெரும் எடை கொண்ட  கதையைச் என்மீது வீசுவதற்காக  சுழற்றிக் கொண்டிருந்த சால்வனை அந்தச் சக்கரம் இரண்டாகப் பிளந்தது. அதன் சக்தியால் அந்த எதிரியைப் பொசுக்கியது. அந்த வீரன் கொல்லப்பட்ட பிறகு, இதயம் வருந்திய தானவப் பெண்மணிகள், "ஓ" என்றும் "ஐயோ" என்றும் அலறிக் கொண்டு எல்லாப்புறமும் ஓடினர். எனது தேரை சௌப நகரத்தின் முன்பாக எடுத்துச் சென்று, நான் மகிழ்ச்சிகரமாக எனது சங்கை எடுத்து ஊதி எனது நண்பர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை ஊட்டினேன். அரண்மனைகளுடனும், வாயில் வழிகளுடனும் மேரும் மலையின் சிகரம் போல இருந்த அவர்களின் நகரம் மொத்தமாக அழிந்து பொசுங்கியது. தானவர்கள் அனைவரும் அச்சத்தால் ஓடிவிட்டனர். இப்படி சௌப நகரத்தை அழித்து, சால்வனைக் கொன்ற நான் ஆனர்த்த நாட்டிற்குத் திரும்பும் எனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினேன். மன்னா {யுதிஷ்டிரரே}, இதன் காரணமாகவே என்னால் யானையின் பெயர் கொண்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வர முடியவில்லை. எதிரி வீரர்களை அழிப்பவரே! ஓ வீரரே, நான் வந்திருந்தால், சுயோதனன் {துரியோதனன்} உயிருடன் இருக்க மாட்டான். பகடையாட்டமும் நடைபெற்றிருக்காது. நான் இப்போது என்ன செய்ய? அணை உடைந்த பிறகு நீரைத் தேக்குவது என்பது சிரமமாகும்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தக் கௌரவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, இப்படிப் பேசிய வலிமை நிறைந்த கரங்கள் கொண்ட ஆண்மக்களில் முதன்மையானவனும், அனைத்து அருளையும் கொண்டவனுமான மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, பாண்டவர்களை வணங்கி, விடைபெறத் தயாரானான். வலிமை நிறைந்த கரம் கொண்ட அந்த வீரன் மரியாதையுடன் நீதிமானான யுதிஷ்டிரனை வணங்கினான். மன்னனும் {யுதிஷ்டிரனும்} பதிலுக்கு வணங்கினான். பீமன், அவனது {கிருஷ்ணனின்} தலையில் இருந்த கிரீடத்தை முகர்ந்து பார்த்தான். அர்ஜுனனால் கட்டி அணைத்துக் கொள்ளப்பட்டான். இரட்டையர்கள் அவனை {கிருஷ்ணனை} மரியாதையுடன் வணங்கினர். அவன் தௌமியரால் முறையாக மதிக்கப்பட்டான், திரௌபதி கண்ணீரால் அவனை வழிபட்டாள். *சுபத்திரையையும், அபிமன்யுவையும் தங்கத் தேரில் ஏறச் செய்து, பாண்டவர்களால் வணங்கப்பட்டு கிருஷ்ணனும் அந்தத் தேரில் ஏறினான். யுதிஷ்டிரனைச் சமாதானம் செய்த பிறகு, கிருஷ்ணன், சைப்பியம், சுக்ரீவன் என்ற குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போலப் பிரகாசித்த தனது தேரில் ஏறி துவாரகைக்குச் சென்றான். தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த அவன் சென்றதும், பிரிஷாதனின் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், தன்னுடன் திரௌபதியின் மகன்களை அழைத்துக் கொண்டு, தனது நகரத்திற்குத் {காம்பில்யத்திற்குத்} திரும்பினான்.

சேதி நாட்டு மன்னன் திரிஷ்டகேது {சிசுபாலன் மகனான திருஷ்டகேது}, தனது தங்கையை {**கரேணுமதி = நகுலனின் மனைவி, சிசுபாலனின் புதல்வியை} அழைத்துக் கொண்டு, பாண்டவர்களிடம் விடைபெற்று அழகான நகரமான சுக்திமதிக்கு சென்றான். பாரதரே, குந்தி மகன்களின் அனுமதியைப் பெற்ற அளக்கமுடியாத சக்தி கொண்ட கேகயர்களும் பாண்டவர்கள் அனைவரையும் மரியாதையுடன் வணங்கிய பிறகு கிளம்பிச் சென்றனர். ஆனால் அந்தணர்களும், யுதிஷ்டிரனின் நாட்டில் வாழ்ந்த வைசியர்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொள்ளப்பட்டும், பாண்டவர்களை விட்டு விலகவில்லை. மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பரத குலத்தின் காளையே, காம்யக வனத்தில் அந்த உயர் ஆன்மா கொண்டவர்களைச் சூழ்ந்திருந்தவர்கள் இயல்புக்கு மிக்கவர்களாகத் தெரிந்தார்கள். பிறகு யுதிஷ்டிரன், உயர்ந்த மனம் கொண்ட அந்தணர்களை வணங்கி, உரிய நேரத்தில் தனது மக்களிடம், "தேரைத் தயார் செய்யுங்கள்" என்று சொன்னான்.

---------------------------------------------------
*சுபத்திரையையும், அபிமன்யுவையும்....

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222
பாண்டவர்களின் பிள்ளைகள் - ஆதிபர்வம் பகுதி 223

** கரேணுமதி = நகுலனின் மனைவி....... என்று ஆதிபர்வம் 95ம் பகுதியில் வருகிறது. மேலும், 15வது பர்வமான ஆசிரமவாச பர்வத்தின்  முதல் பகுதியிலும் வருகிறது.

அறம் வளர்க்கும் குல வரலாறு - ஆதிபர்வம் பகுதி 95

நகுலன் சேதி நாட்டு இளவரசி கரேனுமதியை மனைவியாகக் கொண்டு, அவளிடம் நிராமித்ரா என்ற மகனைப் பெற்றான். 


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்