Thursday, September 27, 2018

இந்திரன் விருத்திராசுரன் போர்! - சாந்திபர்வம் பகுதி – 281

The battle between Indra and Vritraasura! | Shanti-Parva-Section-281 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 108)


பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும், விருத்தாசுரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அளவிலா சக்தி கொண்டவனும், ஒப்பிலா அறிவைக் கொண்டவனும், விஷ்ணுவிடம் பெரும் பக்தி கொண்டவனுமான விருத்திரன் அறத்தின் பால் கொண்டிருந்த விருப்பம் மிகப் பெரியதாகும்.(1) அளவிலா சக்தியைக் கொண்ட விஷ்ணுவால் நிரப்பப்படும் இடத்தைப் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருக்கிறது. ஓ! மன்னர்களில் புலியே, அஃதை (அசுரனான) விருத்திரனால் எவ்வாறு (இவ்வளவு நன்றாகப்) புரிந்து கொள்ள முடிந்தது?(2) நீர் விருத்திரனின் செயல்களைக் குறித்துப் பேசினீர். நானும் முழு நம்பிக்கையுடன் உம்மைக் கேட்டேன். எனினும், (உமது பேச்சில்) ஒரு காரியம் அறிவுக்குப் பொருத்தமாக எனக்குத் தெரியாததால் (எனவே, அதற்கான விளக்கம் தேவைப் படுவதால்), உம்மைக் கேள்வி கேட்கும் ஆவல் எனக்கு வளர்ந்திருக்கிறது[1].(3)


[1] "விருத்திரன் ஓர் உறுதிமிக்க விஷ்ணு பக்தன். எனவே, அவன் தோல்விக்கோ, வீழ்ச்சிக்கோ தகுந்தவனல்ல. பிறகு எவ்வாறு இந்திரனால் அவன் வீழ்த்தப்பட்டான்? என யுதிஷ்டிரன் கேட்பதாக உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, அறவோனும், விஷ்ணுவிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும் {விஷ்ணு பக்தனும்}, உபநிஷத்துகள் மற்றும் வேதாந்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதால் கிட்டும் உண்மை அறிவைக் கொண்டவனுமான விருத்திரன், எவ்வாறு இந்திரனால் வீழ்த்தப்பட்டான்?(4) ஓ! பாரதர்களின் தலைவரே, இந்த என் ஐயத்தைத் தீர்ப்பீராக. உண்மையில், ஓ! மன்னர்களில் புலியே, எவ்வாறு விருத்திரன் சக்ரனால் {இந்திரனால்} வெல்லப்பட்டான் என்பதை எனக்குச் சொல்வீராக.(5) ஓ! பாட்டா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, (தேவர்களின் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரர்களில் முதன்மையானவனுக்கும் {விருத்திரனுக்கும்} இடையில் நடந்த) அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. அதைக் கேட்கும் ஆவல் எனக்குப் பெரிதாக இருக்கிறது" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(6)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பழங்காலத்தில், தெய்வீகப் படைகளின் துணையுடன் தன் தேரில் சென்ற இந்திரன், தன் முன்னே ஒரு மலையைப் போல நின்று கொண்டிருந்த அசுரன் விருத்திரனைக் கண்டான்.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அவன் {விருத்திரன்} முழுமையாக ஐந்நூறு யோஜனைகள் உயரத்தையும், முந்நூறு யோஜனைகள் சுற்றளவையும் கொண்டிருந்தான்.(8) மூவுலகங்கள் ஒன்றுசேர்ந்தாலும் வெல்லப்படமுடியாத விருத்திரனின் அவ்வடிவத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் ஊடுருவப்பட்டு முழுக் கவலை அடைந்தனர்.(9) உண்மையில், ஓ! மன்னா, தன் எதிராளியின் மிகப் பெரும் வடிவைத் திடீரெனக் கண்ட இந்திரனின், அடிமுனைகள் {கால்கள்} வாதத்தால் பீடிக்கப்பட்டன[2].(10) பிறகு, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போர் தொடங்கியதும், இருபுறங்களில் இருந்தும் பேரொலி எழுந்தது, பேரிகைகளும், பிற இசைக்கருவிகளும் முழங்கின.(11) ஓ! குருகுலத்தவனே, தன்னெதிரே சக்ரனை {இந்திரனைக்} கண்ட விருத்திரன், அச்சத்தை உணரவுமில்லை, போருக்காகத் தன் சக்திகள் அனைத்தையும் திரட்டும் மனநிலையிலும் இல்லை.(12)

[2] கும்பகோணம் பதிப்பில், "அப்பொழுது, இந்திரனுக்கோவென்றால், விருத்திரனுடைய உத்தமமான அந்த ரூபத்தைப் பார்த்து உடனே பயத்தினால் தொடைகள் அசைவற்றவைகளாயின" என்றிருக்கிறது.

அப்போது, மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், உயர் ஆன்மாவான விருத்திரனுக்கும் இடையில் போர் தொடங்கியது.(13) இருபுறத்தில உள்ள போராளிகளின் வாள்கள், போர்க்கோடரிகள் {பட்டஸங்கள்}, சூலங்கள், வேல்கள், தோமரங்கள், கனத்த கதாயுதங்கள், பல்வேறு அளவுகளிலான கற்பாறைகள், உரத்த நாணொலி கொண்ட விற்கள், பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்கள், நெருப்புகள், எரிகொள்ளிகள் ஆகியவற்றால் மொத்த ஆகாயமும் மறைக்கப்பட்டது.(14,15) பெரும்பாட்டனை {பிரம்மனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும், உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் அனைவரும் அப்போரைக் காண அங்கே வந்தனர்,(16) ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, சித்தர்களும், அப்சரஸ்களுடன் கூடிய கந்தர்வர்களும், தங்கள் முதன்மையான அழகிய தேர்களில் (அதே காரியத்திற்காக {போரைக் காண்பதற்காக})அங்கே வந்தனர்.(17)

அப்போது, அறவோரில் முதன்மையான விருத்திரன், ஆகாயத்தையும், தேவர்களின் தலைவனையும் அடர்த்தியான பாறைகளின் மழையால் வேகமாக மறைத்தான்.(18) இதனால் சினத்தில் நிறைந்த தேவர்கள், அப்போரில் விருத்திரனால் பொழியப்பட்ட அடர்த்தியான பாறைகளின் மழையைத் தங்கள் கணைகளின் மழையால் விலக்கினர்.(19) பிறகு, ஓ! குருக்களில் புலியே {யுதிஷ்டிரனே}, வலிமை மற்றும் பலத்தைக் கொண்டவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனுமான விருத்திரன், தன் மாயாசக்திகளின் துணையோடு மட்டுமே போரிடுவதன் மூலம் தேவர்களின் தலைவனைத் திகைக்கச் செய்தான்.(20) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, இவ்வாறு விருத்திரனால் பீடிக்கப்பட்டு மலைப்படைந்த போது {மயங்கிய போது}, தவசி வசிஷ்டர் சாமங்களைச் சொல்லி அவனது புலன்களை மீண்டெழச் செய்தார் {அவனது மயக்கத்தைத் தெளிவித்தார்}[3].(21)

[3] "சில குறிப்பிட்ட சாம வேத ஸ்லோகங்களுக்கு ரதாந்தரம் என்ற மற்றொரு பெயர் உண்டு. ஒரு தேரின் உதவியுடன் மனிதர்கள் உலகைக் கடக்க இயல்வதன் காரணமாக அவை அவ்வாறு அழைக்கப்படுகின்றன. ரதம் என்றால் தேர், திரி என்றால் கடப்பது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வசிஷ்டர் {இந்திரனிடம்}, "ஓ! தேவர்களின் தலைவா, ஓ! தைத்தியர்கள் மற்றும் அசுரர்களைக் கொல்பவனே, தேவர்களில் முதன்மையானவன் நீயே. மூவுலகங்களின் பலம் உன்னில் இருக்கிறது. ஓ! சக்ரா, பிறகு ஏன் நீ இவ்வாறு சோர்வடைகிறாய்?(22) பிரம்மன், விஷ்ணு, அண்டத்தின் தலைவனான சிவன், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான சோமன், உயர்ந்த முனிவர்கள் அனைவரும் (உன்னைப் பார்த்தபடியே) அதோ நிற்கின்றனர்.(23) ஓ! சக்ரா, சாதாரண மனிதனைப் போல நீ பலவீனத்திற்கு வசப்படாதே. ஓ தேவர்களின் தலைவா, போரில் உறுதியான தீர்மானத்துடன் உன் எதிரிகளைக் கொல்வாயாக.(24) உலகங்கள் அனைத்திற்கும் குருவும், உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனுமான முக்கண்ணன் (சிவன்) அதோ உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, இந்த உன் மயக்கத்தைக் கைவிடுவாயாக.(25) பிருஹஸ்பதியால் தலைமைதாங்கப்பட்ட மறுபிறப்பாள முனிவர்கள், உனது வெற்றிக்காக தெய்வீகப் பாடல்களால் அதோ உன்னைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார் {வசிஷ்டர்}".(26)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பெருஞ்சக்தி கொண்ட வாசவன் {இந்திரன்}, உயர் ஆன்ம வசிஷ்டரால் இவ்வாறு நனவுநிலை மீண்ட போது, அவனது பலம் பெரிதும் அதிகரித்திருந்தது.(27) அப்போது பகனைத் தண்டிக்கும் அந்தச் சிறப்புமிக்கவன், தன் நுண்ணறிவைச் சார்ந்து, உயர் யோகத்தின் துணையுடன் விருத்திரனின் மாயைகளை அகற்றினான்.(28) பிறகு அங்கிரஸின் மகனான பிருஹஸ்பதியும், பெருஞ்செழிப்புடைய அந்த முனிவர்களில் முதன்மையானவர்களும், விருத்திரனின் ஆற்றலைக் கொண்டு மஹாதேவனிடம் {சிவனிடம்} சென்று, மூவுலகங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, அந்தப் பேரசுரனை அழிக்குமாறு அவனை {சிவனைத்} தூண்டினர்.(29) அண்டத்தின் சிறப்புமிக்கத் தலைவனுடைய சக்தி, ஒரு கடும் நோயின் வடிவை ஏற்று, அசுரர்களின் தலைவனான விருத்திரனின் உடலில் ஊடுருவியது.(30) உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனும், அண்டத்தைப் பாதுகாப்பவனும், சிறப்புமிக்கவனும், தெய்வீகமானவனுமான விஷ்ணு, இந்திரனின் வஜ்ராயுதத்திற்குள் நுழைந்தான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருஹஸ்பதி, பெருஞ்சக்தியைக் கொண்ட வசிஷ்டர், முனிவர்களில் முதன்மையான பிறர் அனைவரும், நூறு வேள்விகளைச் செய்தவனும், உலகங்கள் அனைத்தாலும் புகழப்படுபவனும் வரமளிப்பவனுமான வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, "ஓ! பலமிக்கவனே, தாமதமில்லாமல் விருத்திரனைக் கொல்வாயாக" என்றனர்.(33)

மஹேஸ்வரன், "ஓ! சக்ரா {இந்திரா}, பெரும் படையின் துணையுடன் கூடிய பெரும் விருத்திரன் அதோ நிற்கிறான். எங்கும் செல்லவல்லவனும், பெரும் மாயாசக்திகளைக் கொண்டவனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அவனே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறான்.(34) எனவே, இந்த அசுரர்களில் முதன்மையானவன் {விருத்திரன்}, மூவுலகங்கள் ஒன்றாகச் சேர்ந்தாலும், வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். ஓ! தேவர்களின் தலைவா, யோகத்தின் துணையுடன் நீ அவனைக் கொல்வாயாக. அவனை அலட்சியம் செய்யாதே.(35) ஓ! தேவர்களின் தலைவா, பலத்தை அடைவதற்காக அவன் முழுமையாக அறுபதாயிரம் {60,000} வருடங்கள் கடுந்தவம் செய்திருக்கிறான். பிரம்மன் அவன் வேண்டிய வரங்களான,(36) யோகிகளுக்குச் சொந்தமான மகிமை, பெரும் மாயாசக்திகள், அதீத வலிமை, மிக அபரிமிதமான சக்தி ஆகியவற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.(37) ஓ! வாசவா, நான் என் சக்தியை உனக்குத் தருகிறேன். அந்தத் தானவன் இப்போது தன் பொறுமையை இழந்திருக்கிறான். எனவே, இப்போது நீ உன் வஜ்ரத்தால் அவனைக் கொல்வாயாக" என்றான் {சிவன்}.(38)

சக்ரன், "ஓ! தேவர்களில் முதன்மையானவனே, உன் அருளின் மூலம் என் வஜ்ரத்தைக் கொண்டு இந்த வெல்லப்பட முடியாத திதியின் மகனை உன் கண்ணெதிரே கொல்லப் போகிறேன்" என்றான்".(39)

பீஷ்மர் தொடர்ந்தார், "அந்தப் பேரசுரன் அல்லது தைத்தியன் {விருத்திரன்}, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட போது, மகிழ்ச்சியில் நிறைந்த தேவர்களும், முனிவர்களும் உற்சாகப் பேரொலி எழுப்பினர்.(40) அப்போது துந்துபிகள், சங்கங்கள், மத்தளங்கள், டிண்டிமங்கள், ஆகியவை ஒரே நேத்தில் முழங்ககப்பட்டன.(41) திடீரென அசுரர்கள் அனைவரும் நினைவிழப்பால் பீடிக்கப்பட்டனர். ஒரு கணத்தில் அவர்களது மாயாசக்திகளும் மறைந்து போயின.(42) முனிவர்களும், தேவர்களும் தங்கள் எதிரிகள் இவ்வாறு பீடிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டு, இந்திரன் மற்றும் ஈசானன் ஆகிய இருவரையும் புகழ்ந்து, (விருத்திரனை அழிப்பதில் தாமதிக்காதவாறு) முன்னவனை {இந்திரனைத்} தூண்டத் தொடங்கினர்.(43) அந்த மோதலின் போது, முனிவர்களால் துதிபாடல்கள் பாடப்பட்டபோது தேரில் அமர்ந்திருந்த இந்திரன் ஏற்ற வடிவமானது, அச்சமின்றி யாராலும் பார்க்க முடியாததாக இருந்தது" என்றர் {பீஷ்மர்}[4].(44)

[4] "வனபர்வத்தில் தோன்றும் விருத்திரன், இந்திரன் போருக்கும் இதற்குமிடையில் கணிசமான வேற்றுமைகள் இருக்கின்றன. பெரும் முனிவர்கள் அசுரனைக் கொல்ல வேண்டுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கதே. அவர்கள் மூவுலகங்களின் நன்மைக்காகக் கூட எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்க அனுமதிக்காதவர்கள். மேற்கண்ட கதையில், வசிஷ்டர், பிருஹஸ்பதி ஆகியோர் இந்திரனின் வெற்றியில் பெரிய பங்காற்றியிருக்கின்றனர். வனபர்வத்தில் விருத்திரனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தன் வஜ்ரத்தை சரியான குறிகூட வைக்காமல் இந்திரன் வீசுவதையும், தேவர்கள் அனைவரும் உறுதி செய்த பிறகு விருத்திரன் வீழ்ந்ததை அவன் நம்ப மறுத்ததையும் காண முடியும். இந்தக் கதை வன பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளதைவிடப் பழைய கதையாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section101.html வனபர்வத்தில் லோமச முனிவர் இக்கதையைச் சொல்கிறார்



சாந்திபர்வம் பகுதி – 281ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்