Monday, January 02, 2017

கொல்லப்பட்ட கௌரவ வீரர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 05

Kuru heroes slain! | Karna-Parva-Section-05 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் மற்றும் குருக்களில் இறந்தவர்கள் யார் எனச் சஞ்சயனிடம் கேட்ட திருதராஷ்டிரன்; கொல்லப்பட்ட குரு வீரர்களைக் குறித்துச் சொன்ன சஞ்சயன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், துயரால் இதயம் கலங்கிப் போய்த் தன் சாரதியான சஞ்சயனிடம்,(1) "ஓ! ஐயா {சஞ்சயா}, சிறுமதியாளனான என் மகனுடைய {துரியோதனனுடைய} தீய கொள்கையின் விளைவாலேயே விகர்த்தனன் மகன் {கர்ணன்} கொல்லப்பட்டான். இந்தப் புலனாய்வு என் இதயத்தின் மையத்தையே பிளக்கிறது.(2) இந்தத் துன்பக் கடலை நான் கடக்க விரும்புகிறேன். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்களுக்கு[1] மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் எவர்கள், இறந்தவர்கள் எவர்கள் என்பதை எனக்குச் சொல்லி என் ஐயங்களை விலக்குவாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.(3)


[1] "சில உரைகளில் பாண்டவானாம் Pandavaanaam என்பதற்குப் பதில் சிருஞ்சயனாம் Srinjayaanaam என்றிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவரும், பெரும் எண்ணிக்கையிலான [2] சிருஞ்சயர்களையும், பாஞ்சாலர்களையும் கொன்றவருமான சந்தனுவின் மகன் பீஷ்மர், {போர் தொடங்கிப்} பத்து நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டார்.(4) வலிமைமிக்கவரும், வெல்லப்பட முடியாத வில்லாளியும், தங்கத் தேரைக் கொண்டவருமான துரோணர், போரில் பாஞ்சாலப் படைப்பிரிவுகளைக் கொன்ற பிறகு கொல்லப்பட்டார்.(5) பீஷ்மரும், சிறப்புமிக்கத் துரோணரும் ஏற்படுத்திய பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியவர்களில் பாதியைக் கொன்ற பிறகு விகர்த்தனன் மகனான கர்ணனும் கொல்லப்பட்டான்.(6)

[2] வேறொரு பதிப்பில், "ஜயிக்கமுடியாதவரும், பிரதாபமுள்ளவருமான பீஷ்மர் பத்து தினங்களிலே ஓர் அர்ப்புதமென்னும் எண்ணுள்ள {பத்துக் கோடி} பாண்டவர் படையிலுள்ள வீரர்களைக் கொன்று தாமும் கொல்லப்பட்டார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் எண்ணற்ற எண்ணிக்கையிலான வீரர்களைக் கொன்ற பிறகு என்று இருக்கிறது. அதிகாரப்பூர்வ பதிப்பான {Critical Edition} பிபேக் திப்ராயின் (Bibek Debroy) பதிப்பில் "பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் பாண்டவர்களைப் பீஷ்மர் கொன்றார்" என்று இந்த இடத்தில் இருக்கிறது.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும்பலம் கொண்டவனான இளவரசன் விவிம்சதி, போரில் நூற்றுக்கணக்கான ஆனர்த்த {ஆனர்த்த நாட்டுப்} போர்வீரர்களைக் கொன்றபிறகு கொல்லப்பட்டான்.(7) குதிரைகளையும், ஆயுதங்களையும் இழந்தாலும், உமது வீர மகனான விகர்ணன், க்ஷத்திரியக் கடமைகளை நினைவில் கொண்டு எதிரியை எதிர்த்து நின்றான்.(8) பீமசேனன், துரியோதனனால் தனக்கு இழைக்கப்பட்ட முறையற்ற தீங்குகளை நினைவு கூர்ந்தும், தன் சொந்த சபதத்தை மனத்தில் கொண்டும் அவனை {விகர்ணனைக்} கொன்றான்.(9) பெரும் வலிமை கொண்டவர்களும், அவந்தியின் இளவரசர்களுமான விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகிய இருவரும், அடைவதற்கு மிகக் கடினமான சாதனைகளைச் செய்துவிட்டு யமலோகம் சென்றனர்.(10) தன் கூரிய கணைகளால் பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளை வென்ற அர்ஜுனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துவை {சிந்து நாட்டைத்} தலைமையாகக் கொண்ட பத்து அரசுகள் எந்த வீரனுடைய அளுகையின் கீழிருக்கின்றனவோ, உமக்கு எப்போதும் எவன் கீழ்ப்படிந்திருந்தானோ, அந்த வலிமையும், சக்தியும் மிக்க ஜெயத்ரதனைக் கொன்றான்.(12)

பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவனும், தன் தந்தையின் உத்தரவுகளுக்கு எப்போதும் கீழ்ப்படிபவனுமான துரியோதனன் மகன் {லக்ஷ்மணன்}, சுபத்ரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்[3].(13) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், போரில் மூர்க்கமானவனுமான துணிச்சல்மிக்கத் துச்சாசனன் மகன்[4] பெரும் ஆற்றலுடன் முயன்ற திரௌபதியின் மகனால் யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(14) கிராதர்கள் மற்றும் கடற்கரையில் உள்ள தாழ்ந்த நிலங்களில் வசிக்கும் பிறர் ஆகியோரின் ஆட்சியாளனும், பெரும் மதிப்புடையவனும், தேவர்களின் தலைவனுடைய அன்பு நண்பனும், க்ஷத்திரியக் கடமைகளுக்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனுமான பகதத்தன், ஆற்றலுடன் பெரிதும் முயன்ற தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான்.(15,16) ஓ! மன்னா, கௌரவர்களின் உறவினனும், துணிச்சல் மிக்கவனும், கொண்டாடப்பட்டவனுமான அந்தச் சோமதத்தன் மகன் பூரிஸ்வரவஸ், போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(17)

[3] இந்தச் சம்பவம் துரோண பர்வம் பகுதி 44ல் சொல்லப்பட்டுள்ளது.

[4] இவனது பெயர் துர்மாசனன் என்றிருப்பதாகத் துரோண பர்வம் பகுதி 46ல் உள்ள 3வது அடிக்குறிப்பில் கண்டோம். துரோண பர்வம் பகுதி 73ல் உள்ள 1வது அடிக்குறிப்பில் இவன் துச்சாசனன் மகன் என்று அழைக்கப்படுவதையும் கண்டோம். துச்சாசனன் மகன் கொல்லப்பட்டதற்கான சான்று இதுவரை வரவில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை கர்ண பர்வத்தில் தொடர்ச்சியாக வரப்போகும் பகுதிகளில் வரக்கூடும்.

க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், போரில் மிகவும் அச்சமற்ற வகையில் திரியக்கூடியவனுமான அம்பஷ்ட மன்னன் சுருதாயுஸ்[5], அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(18) ஆயுதங்களில் சாதித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், எப்போதும் கோபம் நிறைந்தவனுமான உமது மகன் துச்சாசனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கொல்லப்பட்டான்[6].(19) பல்லாயிரக்கணக்கான அற்புத யானைகளைக் கொண்டவனான சுதக்ஷிணன்[7] போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(20) கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}[8], பல்லாயிரம் பேரைக் கொன்ற பிறகு, ஆற்றலுடன் முயன்ற சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} யமலோகம் அனுப்பப்பட்டான்.(21) பல்லாயிரம் எதிரிகளோடும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனனோடும் போரிட்ட உமது மகன் சித்திரசேனன், பீமசேனனால் கொல்லப்பட்டான்.(22) எதிரிகளின் அச்சங்களை அதிகரிப்பவனும், மத்ர ஆட்சியாளனின் தம்பியும்[9], வாளும், கேடயமும் தரித்தவனுமான அந்த அழகிய போர்வீரன், சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்டான்.(23)

[5] துரோண பர்வம் பகுதி 91ல் அம்பஷ்டர்களின் மன்னன் சுருதாயுஸ் கொல்லப்படுகிறான்

[6] இன்னும் கொல்லப்படவில்லை. கர்ண பர்வத்தில் தொடர்ந்து வரும் பகுதிகளில் கொல்லப்படலாம்.

[7] துரோண பர்வம் பகுதி 91ல் காம்போஜ மன்னன் சுதக்ஷிணன் கொல்லப்படுகிறான்.

[8] துரோண பர்வம் பகுதி 45ல் கோசல மன்னன் பிருகத்பலன் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான்

[9] வேறொரு பதிப்பில் இவன் சல்லியனின் மகன் ருக்மரதன் என்று சொல்லப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "சல்லியனின் மகன் ருக்மரதன்" என்று சொல்லப்பட்டுள்ளது.

போரில் கர்ணனுக்கு இணையானவனும், ஆயுதங்களில் சாதித்தவனும், வலிமையும், சக்தியும், நிலைத்த ஆற்றலையும் கொண்ட கர்ணனின் மகன் விருஷசேனன், தன் மகன் அபிமன்யு கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்தவனும், தான் செய்த சபதத்தை மனத்தில் கொண்டவனுமான தனஞ்சயனால் {அர்ஜுனனால்} யமலோகம் அனுப்பப்பட்டான்[10].(24,25) பூமியின் தலைவனும், பாண்டவர்களிடம் ஆழ்ந்த வெறுப்பை எப்போதும் வெளிப்படுத்தியவனுமான சுருதாயுஷ், பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} தன் மனத்தில் உள்ள வெறுப்பைச் சொன்னதும், அவனால் கொல்லப்பட்டான்.(26) பெரும் ஆற்றலைக் கொண்டவனான சல்லியன் மகன் ருக்மரதன், ஓ! ஐயா, சகாதேவனின் தாய்மாமன் மகனாகவும், மைத்துனனாகவும் இருப்பினும், பின்னவன் {சகாதேவன்} முன்னவனை {ருக்மரதனைக்}[11] கொன்றான்.(27) பெரும் ஆற்றல், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்ட முதிர்ந்த மன்னன் பாகீரதன், கைகேயர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்திரன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.(28) பெரும் ஞானத்தையும், பலத்தையும் கொண்ட பகதத்தன் மகன், ஓ! மன்னா, பருந்தின் சுறுசுறுப்புடன் போர்க்களத்தில் எப்போதும் திரியும் நகுலனால் கொல்லப்பட்டான்.(29) பெரும் வலிமையும், ஆற்றலும் கொண்டவரான உமது பாட்டன் பாஹ்லீகரும், அவரைப் பின்தொடர்ந்தவர்களும், பீமசேனனால் கொல்லப்பட்டனர்.(30)

[10] இவன் இன்னும் கொல்லப்படவில்லை.

[11] துரோண பர்வம் பகுதி 43ல் ருக்மரதன் அபிமன்யுவால் கொல்லப்பட்டதாக இருக்கிறது. அடிக்குறிப்பு [9]க்கும் இதற்கும் முரணேற்படுகிறது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, ஜராசந்தனின் மகனும், மகதர்களின் இளவரசனும், வலிமைமிக்கவனுமான ஜெயத்சேனன், போரில் உயர் ஆன்ம சுபத்திரையின் மகனால் கொல்லப்பட்டான்.(31) ஓ! மன்னா, உமது மகன் துர்முகன், வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மற்றொரு மகன் துஸ்ஸஹன் ஆகியோரை பீமசேனன் தன் கதாயுதத்தால் கொன்றான்.(32) துர்மர்ஷணன், துர்விஷஹன், வலிமைமிக்கத் தேர்வீரனான துர்ஜயன் ஆகியோர் அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்திற்குச் சென்றனர்.(33) போரில் வெல்லப்பட முடியாத இரு சகோதரர்களான கலிங்கனும், விருஷகனும் {ரிஷபனும்}, அடைவதற்கரிய சாதனைகளைச் செய்து யமலோகத்தை அடைந்தனர்.(34) சூதனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது ஆலோசகன் விருஷவர்மன், ஆற்றலுடன் முயன்ற பீமசேனனால் யமலோகம் அனுப்பப்பட்டான்.(35)

பத்தாயிரம் யானைகளின் வலிமையைக் கொண்ட மன்னன் பௌரவனும், தன்னைப் பின்தொடர்ந்தவர்கள் அனைவருடன், பாண்டுவின் மகன் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.(36) தாக்கும் திறன் கொண்ட இரண்டாயிரம் எண்ணிக்கையிலான வசாதிகள் அனைவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட சூரசேனர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.(37) கவசம் பூண்டவர்களும், திறம்படத் தாக்க இயன்றவர்களும், போரில் மூர்க்கமானவர்களுமான அபீஷாஹர்களும், கலிங்கர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(38) போரில் மிகுந்த கோபம் நிறைந்தவர்களும், களத்தில் எப்போதும் பின்வாங்காதவர்களுமான கோகுலத்தில் வாழ்ந்து வளர்ந்த பிற வீரர்களும் (நாராயணக் கோபர்களும்) சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர்.(39) அர்ஜுனனை அணுகியவர்களான பல்லாயிரக்கணக்கான சிரேணிகள் மற்றும் சம்சப்தகர்கள் ஆகியோர் அனைவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(40)

பெரும் ஆற்றலைக் கொண்டவர்களும், உமது மைத்துனர்களுமான விருஷகன் மற்றும் அச்சலன் ஆகிய இருவரும் சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(41) வலிய கரங்களைக் கொண்டவனும், மூர்க்கமாக் செயல்படுபவனும் {உக்கிரகர்மன்}, பெயராலும், சாதனைகளாலும் பெரும் வில்லாளியுமான மன்னன் சால்வன், பீமசேனானால் கொல்லப்பட்டான்.(42) ஓ! மன்னா, போரில் ஒன்றாகப் போரிட்டவர்களும், தங்கள் கூட்டாளிக்காகப் பெரும் வீரத்துடன் போரிட்டவர்களுமான ஓகவத் {ஓகவான்} மற்றும் விருஷந்தன் {பிருஹந்தன்} ஆகிய இருவரும் யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(43) ஓ! ஏகாதிபதி, தேர்வீரர்களில் முதன்மையான க்ஷேமதூர்த்தி, போரில் கதாயுதத்துடன் கூடிய பீமசேனனால் கொல்லப்பட்டான்.(44) பெரும் வில்லாளியும், வலிமைமிக்க மன்னனுமான ஜலசந்தனும், பெரும் பேரழிவை ஏற்படுத்திய பிறகு போரில் சாத்யகியால் கொல்லப்பட்டான்.(45)

(பெரும் வடிவைக் கொண்ட) கழுதைகள் பூட்டப்பட்ட வாகனத்தைக் கொண்டவனும், ராட்சசர்களின் இளவரசனுமான அலாயுதன், பெரும் ஆற்றலுடன் முயன்ற கடோத்கசனால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டான்.(46) சூதனான ராதையின் மகன் {கர்ணன்}, அவனது தம்பிகளான வலிமைமிக்கத் தேர்வீரர்கள், கைகேயர்கள், மாலவர்கள், மத்ரகர்கள், கடும் ஆற்றலைக் கொண்ட திராவிடர்கள், யௌதேயர்கள், லலித்தர்கள், க்ஷுத்ரகர்கள், உசீனரர்கள், மாவேலலகர்கள், துண்டிகேரர்கள், சாவித்ரிபுத்திரர்கள், கிழக்கத்தியர், வடக்கத்தியர், மேற்கத்தியர், தெற்கத்தியர் ஆகியோர் அனைவரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினால் கொல்லப்பட்டனர்.(47-49) பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், கூட்டங்கூட்டமான குதிரைகள், பெரும் எண்ணிக்கையிலான தேர்வீரர்கள், பெரும் யானைகள் பலவும் கொல்லப்பட்டன.(50) கொடிமரங்கள், ஆயுதங்கள், கவசம், ஆடை, ஆபரணங்கள், விடாமுயற்சி, உயர்ந்த பிறப்பு, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட வீரர்கள் பலரும் அந்தப் போரில் உழைப்பால் களைப்பெதையும் அறியாதவனான பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டனர். அளவிலா வலிமை கொண்ட பிறர், தங்கள் எதிரிகளைக் கொல்ல விரும்பி அதே போன்ற விதியையே அடைந்தனர்.(51-52) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இவர்களும், ஆயிரக்கணக்கான இன்னும் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்தவர்களும் போரில் கொல்லப்பட்டனர். நீர் என்னிடம் கேட்டதற்கு இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.(53) 

இவ்வாறே அர்ஜுனனும், கர்ணனும் போரிட்ட போது அழிவு ஏற்பட்டது. போரில் விருத்திரனை மகேந்திரன் கொன்றதைப் போலவும், ராவணனை ராமன் கொன்றதைப் போலவும்,(54) நரகன், அல்லது முரணைக் கிருஷ்ணன் கொன்றதைப் போலவும்; மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பயங்கரப் போரைச் செய்த பிறகு, போரில் வெல்லப்பட முடியாதவனும், சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் கூடியவனுமான வீர கார்த்தவீரியனைப் பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்} கொன்றதைப் போலவும்;(55,56) (அசுரன்) மஹிஷனை ஸ்கந்தன் கொன்றதைப் போலவும், (அசுரன்) அந்தகனை ருத்திரன் கொன்றதைப் போலவும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெல்லப்பட முடியாதவனும், தார்தராஷ்டிரர்களுக்கு வெற்றியில் நம்பிக்கை ஏற்படுத்தியவனும், பாண்டவர்களுடன் ஏற்பட்ட பகைமைக்குப் பெரும் காரணமானவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான கர்ணனை, அவனது சொந்தங்கள் அனைவருடன் சேர்த்து அர்ஜுனன் ஒரு தனிப்போரில் கொன்றான். (57,58)

ஒரு காலத்தில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன் சாதிப்பான் என்பதை நன்கு சிந்திக்கும் நண்பர்கள் உமக்குத் தெரிவிக்கத் தவறவில்லையெனினும் {தெரிவித்தார்கள் எனினும்}, அவனால் {அர்ஜுனனால்} இயலும் என்று நீர் எதை நம்பாதிருந்தீரோ அதை இப்போது அவன் சாதித்துவிட்டான். பேரழிவு நிறைந்த அந்தப் பேரிடர் இப்போது வந்துவிட்டது.(59) ஓ! மன்னா, பேராசைமிக்க உமது மகன்களுக்கு நல்லாசிகளைக் கூறி, அவர்களின் தலைகளில் நீர் தீமைகளை {பாவத்தைக்} குவித்துவிட்டீர். அத்தீமைகளின் கனியே இப்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது" {என்றான் சஞ்சயன்}.(60)
----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 5-ல் உள்ள சுலோகங்கள் : 60

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்