Showing posts with label துவஷ்டிரி. Show all posts
Showing posts with label துவஷ்டிரி. Show all posts

Friday, January 09, 2015

சல்லியன் சொன்ன விருத்திரன் கதை! - உத்யோக பர்வம் பகுதி 9

The story of Vritra told by Salya | Udyoga Parva - Section 9 | Mahabharata In Tamil


(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 9)

பதிவின் சுருக்கம் : துவஷ்டிரியால் திரிசிரன் படைக்கப்பட்டது; திரிசிரன் தவத்தில் ஆழ்வது; திரிசிரன் தனது பதவியைக் குறி வைக்கிறான் என்றெண்ணி இந்திரன் அவனைக் கொல்வது; தனது மகனைக் கொன்ற இந்திரனைக் கொல்வதற்காக துவஷ்டிரி விருத்திரனை உண்டாக்குவது; விருத்திரன் இந்திரனை விழுங்குவது; தேவர்கள் கொட்டாவியைப் படைப்பது; விருத்திரன் வெளியிட்ட கொட்டாவியால் இந்திரன் வெளியே வந்தது; மீண்டும் போர் தொடங்கியது; இந்திரன் தோற்று ஓடியது; மந்தர மலையில் அமர்ந்து கொண்டு தேவர்கள் விஷ்ணுவை தியானித்தது...

யுதிஷ்டிரன் {சல்லியனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {சல்லியரே}, ஒப்பற்ற இந்திரன் தனது ராணியுடன் அனுபவித்த பெரிய இணையற்ற துயரம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”

அதற்குச் சல்லியன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இந்திரன் மற்றும் அவனது மனைவிக்கும் துயரம் எப்படி நேர்ந்தது என்று, முன்நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட பழங்கதையை நான் சொல்கிறேன் கேள். ஒரு முறை உயிரினங்களின் தலைவரும், தேவர்களில் முதன்மையானவருமான துவஷ்டிரி {துவஷ்டா = விஸ்வகர்மா} [1] கடுமையான தவப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இந்திரன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவன் {துவஷ்டிரி} மூன்று தலை கொண்ட ஒரு மகனை {திரிசிரனைப்}[2] படைத்தான் என்று சொல்லப்படுகிறது. பெரும் காந்தியும், உலகளாவிய வடிவமும் கொண்ட அவன், இந்திரனின் இருக்கை {பதவி} மீது ஆவல் கொண்டான்.

[1] தேவி பாகவதத்தில் விஸ்வகர்மா என்றே வருகிறது.
[2]இவனுக்கு விஸ்வரூபன் என்று பெயர் என தேவி பாகவதம் கூறுகிறது.
ஆதாரம் : http://www.sacred-texts.com/hin/db/bk06ch01.htm

சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவற்றை ஒத்திருக்கும் பரிதாபகரமான மூன்று முகங்களைக் கொண்டிருந்த அவன், ஒரு வாயினால் வேதங்களைப் படித்தான், மற்றொரு வாயினால் மதுவைக் {சூரையைக்} குடித்தான், மூன்றாவதைக் கொண்டு எல்லாத் திக்குகளையும் உறிஞ்சிவிடுவதைப் {விழுங்குவதைப்} போலப் பார்த்தான். தவப் பயிற்சி, மென்மை, தற்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு, அறப்பயிற்சிகளையும், தவத்தையும் செய்யும் வாழ்வு வாழ அவன் நோக்கம் கொண்டான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அவனது தவப்பயிற்சி திடமானதாகவும், பயங்கரமானதாகவும், மிகக் கடுமையான தன்மை கொண்டதாகவும் இருந்தது. துணிவு, உண்மை, அளவிலா ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட தவத்தைக் கண்ட இந்திரன், தனது இடத்தை அடையவே அவன் இப்படிச் செய்கிறான் என்று அஞ்சினான். பிறகு இந்திரன், “இவனைச் சிற்றின்பத்திற்கு அடிமையாக்குது எவ்வாறு? இவன் செய்யும் இத்தகு கடும் தவப்பயிற்சியை நிறுத்துவது எவ்வாறு? இந்த மூன்று தலையன் {திரிசிரன்} பலத்தில் வளர்ந்தால், இந்த முழு அண்டத்தையுமே விழுங்கிவிடுவானே” என்று ஆலோசித்தான்.

இப்படியே இந்திரன் தனது மனதில் ஆலோசித்தான்; பிறகு, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பெரும் புத்திக்கூர்மையுடைய அவன் {இந்திரன்}, துவஷ்டிரியின் மகனை {விஸ்வரூபன் என்ற திரிசிரனை} மயக்க தேவ கன்னியருக்குக் கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “விரைந்து தாமதமில்லாமல் சென்று, அந்த மூன்று தலையன் {திரிசிரன்} சிற்றின்பத்தின் எல்லைவரை மூழ்கும்படி அவனை மயக்குங்கள். வசீகரமான இடுப்புகளுடன், உணர்வைத்தூண்டும் ஆடைகளில் உங்களை வரிசைப்படுத்திக் கொண்டு, கவர்ச்சியான கழுத்தணிகளில் உங்களை அலங்கரித்துக் கொண்டு, காதற்கெஞ்சல்களுடன் கூடிய சைகைகளைக் காட்சிப்படுத்துவீர்களாக! அழகுடன் கூடி அவனை மயக்கி எனது பெரும் அச்சத்தைப் போக்குவீர்களாக! ஓ! அழகிய காரிகைகளே, என் இதயத்தில் ஓய்வின்மையை {நிம்மதியற்ற தன்மையை} உணர்கிறேன். பெண்களே, என் மீது தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அச்சந்தரும் ஆபத்தைத் தவிர்ப்பீர்களாக! உங்களுக்கு நன்மையே விளையட்டும்” என்றான் {இந்திரன்}.

அதற்கு அந்தத் தேவ கன்னியர் {இந்திரனிடம்}, “ஓ! இந்திரரே, ஓ! வலனைக் கொன்றவரே, அவனிடம் நீர் அச்சங்கொள்ள ஒன்றுமில்லை என்ற அளவுக்கு நாங்கள் அவனை {திரிசிரனை} மயக்க முயற்சிப்போம். ஓ! தேவரே, தவத்தின் நிதியான இவன், அனைத்தையும் தனது கண்களாலே எரிப்பவன்போல அமர்ந்திருக்கும் அவனை {திரிசிரனை} மயக்குவதற்காக நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செல்கிறோம். அவனை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, உமது அச்சங்களுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துகிறோம்” என்றனர்.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இந்திரனால் கட்டளையிடப்பட்ட அவர்கள் அந்த மூன்று தலையனிடம் {திரிசிரனிடம்} சென்றார்கள். அங்கே வந்த அந்த அழகிய காரிகைகள், காதலின் பல்வேறு சைகளைகளைச் செய்து, தங்கள் அழகிய உருவங்களைக் காட்சிப்படுத்தி அவனை மயக்கினர். ஆனால், மிகக்கடுமையான தவத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவன்  அவர்களைப் பார்த்தாலும், ஆசைக்கு ஆளாகவில்லை. அடக்கப்பட்ட புலன்களுடன் இருந்த அவன் ஈர்ப்பினால் விளிம்பு வரை முழுமையாக இருந்த கடலைப் போல இருந்தான். தங்கள் முயற்சிகளில் சிறந்ததைச் செய்த பிறகு, அந்தத் தேவ கன்னியர் இந்திரனிடமே திரும்பிச் சென்றனர்.

அவர்கள் அனைவரும், தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} கூப்பிய கரங்களுடன் சென்று, “ஓ!, அணுக முடியாத அவனை {திரிசிரனை} எங்களால் தொந்தரவு செய்ய இயலவில்லை. ஓ! உயர்ந்த கொடை கொண்டவரே, இப்போதும் உமக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்யும்” என்றனர். உயர்ந்த மனம் கொண்ட இந்திரன் அந்தத் தேவ கன்னியரைக் கௌரவித்து அனுப்பிவிட்டு, ஓ! யுதிஷ்டிரா, தனது எதிரியை அழிக்கும் பிற வகைகளை மட்டுமே சிந்திக்கலானான். இவ்வாறே கற்றல் ஆய்வில் பதியப்பட்டுள்ள பாடங்களைக் குறித்துச் சிந்தித்து, அவனைக் கொல்வது என உறுதியாகத் தீர்மானித்தான்.

பிறகு, கோபம் பெருகிய இந்திரன், நெருப்பைப் போன்றதும், காணப் பயங்கரமானதும், பேரச்சத்தை ஈர்ப்பதுமான தனது வஜ்ரத்தை அந்த மூன்று தலையன் மீது வீசினான். வலுவாக வஜ்ரத்தால் அடிக்கப்பட்ட அவன் {திரிசிரன்} கொல்லப்பட்டு, மலையில் இருந்து தளர்ந்து விழுந்த சிகரம் போலக் கீழே விழுந்தான். வஜ்ரத்தால் கொல்லப்பட்டு, மலைபோல் கீழே கிடப்பவனைக் கண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, இறந்து கிடந்தவனின் தோற்றத்தின் பிரகாசத்தினால் எரிக்கப்பட்டு அமைதியடையவில்லை. கொல்லப்பட்டாலும், அவன் சுடர்விடும் பிரகாசத் தோற்றத்துடன் உயிருடன் இருப்பவன் போலவே இருந்தான். உயிரற்றவனாக இருந்தாலும், களத்தில் தரையில் கிடந்த அவனுடைய தலைகள் உயிருடன் இருப்பவைப் போலவே இருந்தன என்பதைச் சொல்ல ஆச்சரியமாகவே இருக்கிறது. அந்தக் காந்தியைக் கண்டு பெரும் அச்சம் கொண்ட இந்திரன் சிந்தனையில் ஆழ்ந்தபடியே இருந்தான்.

அந்த நேரத்தில், ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, தோளில் கோடரியைத் தாங்கிக் கொண்டு, அந்தக் காட்டுக்கு வந்த ஒரு தச்சன் [3], அது {அந்த மூன்று தலையன்} கிடந்த இடத்தை அடைந்தான். அச்சத்திலிருந்த சச்சியின் தலைவனான இந்திரன், தற்செயலாக அங்கே வந்த தச்சனைக்  கண்டான். அந்தப் பகனைக் கொன்றவன் {இந்திரன்} அவனிடம் {தச்சனிடம்} உடனடியாக, “எனக்காக இதைச் செய். விரைவில் இவனது தலைகளைத் துண்டிப்பாயாக” என்றான். அதற்கு அந்தத் தச்சன், “இவனது தோள்கள் அகலமாக இருக்கின்றன; இந்தக் கோடரியால் இவற்றை வெட்ட முடியாது. அல்லது, நீதிமான்களால் கண்டிக்கப்பட்டவற்றை என்னால் செய்ய முடியாது” என்றான். அதற்கு இந்திரன், “அஞ்சாதே, நான் சொல்வதை விரைவாகச் செய். எனது உத்தரவின் பேரில் உனது கோடரி வஜ்ரத்துக்கு இணையாக இருக்கும்” என்றான்.

[3] தேவி பாகவதத்தில் இவன் மரம்வெட்டி அல்லது விறகு வெட்டியெனப்படுகிறான். அவனது பெயர் தக்சன் {Taksa}என்பதாகும்.

தச்சன் {இந்திரனிடம்}, “இந்தப் பயங்கரமான செயலைச் செய்த உன்னை நான் யாரென எடுத்துக் கொள்வது? இதை நான் அறிய விரும்புகிறேன். சரியான உண்மையை எனக்குச் சொல்” என்றான். அதற்கு இந்திரன், “ஓ! தச்சா, நான் தேவர்கள் தலைவனான இந்திரன். இதை நீ அறிவாயாக. நான் சொன்னதை மட்டும் நீ செய். ஓ! தச்சா, தயங்காதே!” என்றான். அதற்கு தச்சன் {இந்திரனிடம்}, “ஓ! இந்திரா, மனிதத்தன்மையற்ற இந்த உனது செயலுக்காக நீ எப்படி வெட்கப்படாமல் இருக்கிறாய்? ஒரு துறவியின் மகனைக் கொன்றதால் ஏற்பட்ட, அந்தணனைக் கொன்ற பாவத்தின் மீது பேரச்சம் கொள்ளாமல் எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.

இந்திரன், “பிறகு நான் சில கடுமையான அறச்சடங்குகளைச் செய்து இந்தக் களங்கத்தில் இருந்து என்னைச் சுத்திகரித்துக் கொள்வேன். எனது வஜ்ரத்தால் கொல்லப்பட்ட இவன் எனது வலிமை நிறைந்த எதிரியாவான். ஓ! தச்சா, இன்னும் நான் அமைதியடையவில்லை. இவனது தலைகளை விரைவாக வெட்டிவிடு. நான் உனக்கு அருட்கொடைகளை அளிப்பேன். வேள்விகளில், மனிதர்கள் அந்த வேள்வியின் விலங்குடைய தலையை உனது பங்காக அளிப்பார்கள். இதுவே நான் உனக்கு அளிக்கும் அருட்கொடையாகும். நான் விரும்புவதை விரைவாகச் செய்” என்றான் {இந்திரன்}.

சல்லியன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “இதைக் கேட்ட அந்தத் தச்சன், பெரும் இந்திரனின் கோரிக்கையின் பேரில்,, அந்த மூன்று தலையனின் தலைகளைத் தனது கோடரியால் உடனே துண்டித்தான். அவனது தலைகள் வெட்டப்பட்ட போது, அதிலிருந்து கவுதாரிகள், காடைகள், குருவிகள் ஆகிய பல பறவைகள் பறந்து வெளியேறின.  அவன் வேதங்களைச் சொல்லி, சோமச்சாற்றைக் குடிக்கும் வாயிலிருந்து கவுதாரிகள் வெளியேறின. ஓ! மன்னா, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அனைத்துத் திக்குகளையும் உறிஞ்சுவதுபோலப் பார்த்துக் கொண்டிருந்த வாயிலிருந்து பல காடைகள் வெளியே வந்தன. அந்த மூன்று தலையன் மது அருந்த பயன்படுத்திய வாயில் இருந்து, குருவிகளும் பருந்துகளும் பறந்து சென்றன. அந்தத் தலைகள் வெட்டப்பட்ட பிறகு, இந்திரன் தனது நடுக்கத்தில் இருந்து விடுபட்டு, இதயத்தில் மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்குச் சென்றான். அந்தத் தச்சனும் தனது வீட்டுக்குச் சென்றான். அந்த அசுரர்களைக் கொல்பவன் {இந்திரன்}, தனது எதிரியைக் கொன்ற பிறகு, தனது நோக்கம் நிறைவேறியதாகக் கருதினான்.

பிறகு உயிரினங்களின் தலைவனான துவஷ்ட்ரி {விஸ்வகர்மா}, தன் மகன் {விஸ்வரூபன் திரிசரன்} இந்திரனால் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டும் கோபத்தால் கண்கள் சிவந்து இவ்வார்த்தைகளைப் பேசினான். அவன் {துவஷ்டிரி}, "தொடர்ச்சியாகத் தவம் பயின்று, கருணையோடும், தற்கட்டுபாட்டோடும், ஆசைகளை அடக்கிக் கொண்டும் எக்குற்றமும் செய்யாதிருந்த எனது மகனை {திரிசரனை} இந்திரன் கொன்றதால், இந்திரனின் அழிவுக்காக நான் விருத்திரனை உண்டாக்குவேன். நான் கொண்டுள்ள சக்தியையும், தவப்பயிற்சியின் பலத்தையும் இந்த உலகங்கள் காணட்டும்! மனித்தன்மையற்ற, தீய மனம் கொண்ட தேவர்கள் தலைவன் இதைச் சாட்சியாகக் காணட்டும்!" என்றான்.

தன் தவத்திற்காக நன்கு அறியப்பட்ட அவன் {துவஷ்டிரி} கோபம் பெருகி இதைச் சொன்ன பிறகு, நீரால் தனது வாயைச் சுத்தம் செய்து கொண்டு, காணிக்கைகளை நெருப்பிலிட்டு, பயங்கரமான விருத்திரனை உண்டாக்கி, அவனிடம் {விருத்திரனிடம்}, "ஓ! இந்திரனைக் கொல்ல விதிக்கப்பட்டவனே, எனது தவச்சடங்குகளின் சக்தியால் நீ பலத்துடன் வளர்வாயாக!" என்றான். அந்த அசுரன் பலத்தால் வளர்ந்து ஆகாய விரிவில் கோபுரமாய் நின்று நெருப்பின் மகனைப் {முருகனைப்} போல இருந்தான். அவன் {விருத்திரன்}, "பிரளய நாளில் உதித்த சூரியனைப் போல நான் யாரைக் கொல்ல வேண்டும்?' என்று கேட்டான். "இந்திரனைக் கொல்!" என்பதே மறுமொழியாக இருந்தது.

பிறகு அவன் தேவலோகத்திற்குச் சென்றான். பிறகு விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. இருவரும் கோபத்தில் எரிந்தனர். ஓ! குரு குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா} அங்கே ஒரு பயங்கரமான மோதல் நடைபெற்றது. வீரனான விருத்திரன், நூறு வேள்விகளைச் செய்த தேவர்கள் தலைவனைப் பிடித்தான். பிறகு கோபத்தால் நிரம்பி, இந்திரனைச் சுழற்றி, தனது வாய்க்குள் தூக்கி எறிந்தான். இந்திரன் விருத்திரனால் விழுங்கப்பட்ட போது, பெரும்பலம் கொண்டவர்களான தேவர்களில் மூத்தவர்கள் அச்சங்கொண்டு, விருத்திரனைக் கொல்வதற்காகப் பெரும்பலமிக்க ஜிரிம்பிகாவை {கொட்டாவியின் அதிதேவதை} உண்டாக்கினார்கள்.

விருத்திரன் கொட்டாவி விட்டு தனது வாயைத் திறந்ததும், வலன் என்ற அசுரனைக் கொன்றவன் {இந்திரன்}, அவனது உடலின் பல பாகங்களைச் சுருக்கி, விருத்திரனின் வாயில் இருந்து வெளியே வந்தான். அது முதலே, மூன்று உலகங்களிலும் உள்ள அசையும் உயிரினங்களின் உயிர்மூச்சில் கொட்டாவி இணைந்துவிட்டது. இந்திரன் வெளியேறியதைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். கோபம் மிகுந்த இருவரான விருத்திரன் மற்றும் இந்திரனுக்குமிடையில் மீண்டும் அங்கே பயங்கரப் போர் மூண்டது. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அது {அந்தப் போர்} நீண்ட காலத்திற்கு நீடித்தது.

துவஷ்டிரியின் {படைப்பு தேவர்களில் ஒருவர்} பலமிக்க ஆவியை ஈர்த்தும், சுயமாகப் பலம் கொண்டும் இருந்ததால், விருத்திரனின் கையே போரில் ஓங்கியிருந்தது. இந்திரன் புறமுதுகிட்டான். அவனது பின்வாங்கலால் தேவர்கள் மிகுந்த துயரடைந்தனர். இந்திரனுடன் சேர்ந்த அவர்கள் அனைவரும் கூடத் துவஷ்டிரியின் பலத்தால் ஆட்கொள்ளப்பட்டனர். பிறகு, ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அவர்கள் அனைவரும் துறவிகளுடன் ஆலோசித்தனர். முறையாகச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து ஆலோசித்து, அதீத அச்சத்தால் நிரம்பி வழிந்தனர். அவர்கள் மந்தர மலையின் மேல் அமர்ந்து கொண்டு, விருத்திரனைக் கொல்ல எண்ணி விஷ்ணுவை மனத்தால் அடைந்தார்கள்" என்றான் {சல்லியன்}

*********************************

தொடர்புடைய பதிவுகள்
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Wednesday, February 19, 2014

தனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்! - வனபர்வம் பகுதி100

Dadhicha gave his bones! | Vana Parva - Section 100| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

விருத்திரனைத் தலைமையாகக் கொண்ட காலகேயர்கள் தேவர்களை விரட்டுவது; தேவர்களுக்குப் பிரம்மன் விருத்திரனைக் கொல்லும் உபாயத்தைச் சொல்லல்; தேவர்கள் ததீச முனிவரை அடைந்து அவரது எலும்புகளை இரந்து கேட்டல்; ததீசர் தனது உடலைத் துறத்தல்; ததீசரின் எலும்புகளைக் கொண்டு துவஷ்டிரி வஜ்ராயுதத்தை உருவாக்குதல்...

யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், "ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, சிறப்புமிக்கப் பெரும் புத்திகூர்மையுள்ள முனிவரான அகஸ்தியரின் சாதனைகளை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.

லோமசர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அகஸ்தியரின் அற்புதமான இயல்புக்கு மிக்க வரலாற்றைக் கேள். ஓ ஏகாதிபதி, கட்டுக்கடங்கா சக்தியும் பராக்கிரமும் படைத்த அம்முனிவரை {அகஸ்தியரைப்} பற்றிக் கேள். கிருத யுகத்தில் கடுமையான தானவர்களில் குறிப்பிட்ட இனங்கள் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருந்தனர். காலகேயர்கள் என்ற பெயர் கொண்ட அவர்கள் கடும் பராக்கிரமத்துடன் இருந்தார்கள். அவர்கள் தங்களை விருத்திரனுக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, வித்தியாசமான ஆயுதங்களுடன் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை எல்லாத் திக்குகளிலும் துரத்தினர்.

பிறகு தேவர்கள் அனைவரும் விருத்திரனுடைய அழிவைத் தீர்மானிக்க இந்திரனின் தலைமையில் பிரம்மனிடம் சென்றார்கள். கரங்கள் கூப்பி நின்ற அவர்களைக் கண்ட பரமேஷ்டி {பிரம்மா} அவர்களிடம், "தேவர்களே, நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பது உட்பட அனைத்தும் என்னால் அறியப்பட்டிருக்கிறது. இப்போது விருத்திரனைக் கொல்லும் வழியை உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். ததீசர் {Dadhicha} என்ற பெயரில் உயர் ஆன்மா கொண்ட ஒரு பெரும் முனிவர் இருக்கிறார். நீங்கள் அனைவரும் ஒன்றாக அவரிடம் சென்று ஒரு வரத்தைக் கேளுங்கள். பெரும் திருப்தி கொண்ட இதயத்துடன், அற ஆன்மா கொண்ட அந்த முனிவர் {ததீசர்} அந்த வரத்தை உங்களுக்குக் கொடுப்பார். வெற்றியில் விருப்பம் உள்ள நீங்கள் அனைவரும் அவரிடம் {ததீசரிடம்} சென்று, "மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் எங்களுக்கு உமது எலும்புகளைத் தர வேண்டும்" என்று சொல்லுங்கள்.

அவர் {ததீசர்} தனது உடலைத் துறந்து, அவரது எலும்புகளை உங்களுக்குத் தருவார். அந்த எலும்புகளைக் கொண்டு, ஆறு பக்கங்கள் {ஆறு படிகள்} கொண்ட, பயங்கரமான சத்தத்துடன் மிகப் பலம் வாய்ந்த எதிரியையும் அழிக்கவல்ல வஜ்ரம் என்ற கடும் ஆயுதத்தைச் செய்யுங்கள். அந்த ஆயுதத்தைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} விருத்திரனைக் கொல்வான். அனைத்தையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் இவற்றை விரைவாகச் செய்யுங்கள்" என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் இருந்து வந்து, நாராயணனைத் தலைமையாகக் கொண்டு ததீசரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.

அந்த ஆசிரமம் சரஸ்வதி நதியின் அக்கரையில் வித்தியாசமான மரங்கள் மற்றும் கொடிகள் சூழ இருந்தது. அங்கே இருந்த வண்டுகளின் ஒலி சாம வேதம் ஒலிக்கு நிகராக இருந்தது. அங்கே ஆண் கோகிலம் {குயில்} மற்றும் சகோரப் பறவைகளின் இசை நிறைந்திருந்தது. எருமைகளும், பன்றிகளும், மான்களும், சமரங்களும் புலி குறித்த பயமின்றி இன்பமாகத் திரிந்தன. மதம் பெருகிய யானைகள் ஓடையில் மூழ்கி, பெண் யானைகளுடன் விளையாடிக் கொண்டு அந்த இடத்தைத் தங்கள் பிளிறல்களால் நிரப்பின. அந்த இடம் சிங்கங்கள் மற்றும் புலிகளின் கர்ஜனையாலும் நிறைந்திருந்தது. அந்தக் காட்டின் அச்சுறுத்தும் ஏகாதிபதிகளான அவை குகைகளிலும் குறுகிய பள்ளத்தாக்குகளிலும் அவ்வப்போது அழகாகக் காணப்பட்டன. இப்படித் தேவர்கள் நுழைந்த அந்தத் ததீசரின் ஆசிரமம் சொர்க்கத்தைப் போல இருந்தது.

அங்கே ததீசர் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருப்பதையும், பெருந்தகப்பனைப்போல இருப்பதையும் அவர்கள் {தேவர்கள்} கண்டனர். தேவர்கள் அனைவரும் அந்த முனிவரின் பாதங்களைப் பணிந்து வணங்கி, பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்கச் சொன்ன அந்த வரத்தை அவரிடம் {ததீசரிடம்} இரந்து கேட்டனர். பிறகு மிகவும் திருப்தியடைந்த ததீசர், தேவர்களில் முதன்மையானவர்களிடம் {இந்திரனிடம்}, "தேவர்களே, உங்களுக்கு எது நன்மையோ அதை நான் செய்வேன். எனது உடலை நானே துறக்கிறேன்" என்று சொன்னார். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர் {ததீசர்}, இப்படிச் சொன்னவுடன் தனது உயிரைத் துறந்தார். மரித்த அந்த முனிவரிடம் இருந்து, ஏற்கனவே {பிரம்மனால்} வழிகாட்டப்பட்டது போல எலும்புகளை எடுத்தனர். பிறகு இதயம் மகிழ்ந்த தேவர்கள், {தேவலோக தச்சர்களில் ஒருவனான} துவஷ்டிரியிடம் {Twashtriசென்று, அவனிடம் வெற்றியின் வழிகள் குறித்துப் பேசினர்.

அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட துவஷ்டிரி மகிழ்ச்சியில் மூழ்கி, (அந்த எலும்புகளைக் கொண்டு) மிகக் கவனத்துடன் கடுமையான ஆயுதமான வஜ்ரத்தை {Vajra} உருவாக்கினான். அதைத் தயாரித்த பிறகு மிக மகிழ்ச்சியுடன் இந்திரனிடம், "ஓ மேன்மையானவனே, ஆயுதங்களில் முதன்மையான இதைக் கொண்டு தேவர்களின் எதிரிகளைச் சாம்பலாக்கு. ஓ தேவர்கள் தலைவனே {இந்திரா}, எதிரிகளைக் கொன்ற பிறகு மகிழ்ச்சியாகத் தேவலோகத்தையும், உன்னைத் தொடர்பவர்களையும் ஆட்சி செய்" என்றான் {துவஷ்டிரி}. துவஷ்டிரியால் இப்படிச் சொல்லப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும் உரிய மரியாதைகளுடனும் வஜ்ரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்