Showing posts with label புரு. Show all posts
Showing posts with label புரு. Show all posts

Sunday, June 28, 2015

"நீ மன்னனின் மகனில்லை!" என்ற திருதராஷ்டிரன்! - உத்யோக பர்வம் பகுதி 149

"You're not the son of a king" said Dhritarashtra! | Udyoga Parva - Section 149 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –78)

பதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, "ஓ! துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ! மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.


உயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ! ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.

அவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின்} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.

இதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ! ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.

பெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.

அவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீபர், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.

எனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, "உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.

உறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.

இவ்வழியிலும், ஓ! பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம்? பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.

உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.

நீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ! இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும்? இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ! மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]" என்றார் {திருதராஷ்டிரர்}."

[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.


Sunday, June 07, 2015

யயாதியை மறந்த தேவர்கள்! - உத்யோக பர்வம் பகுதி 120

Celestials forgot Yayati ! | Udyoga Parva - Section 120 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –49)

பதிவின் சுருக்கம் : யயாதி தன் மகள் மாதவிக்கு மீண்டும் சுயம்வரம் நடத்திய ; காட்டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த மாதவி, மான் போன்ற வாழ்வு முறையைத் தேர்ந்தெடுத்து கடும் நோன்பைப் பயில்வது; சொர்க்கத்தை அடைந்த யயாதி, அனைவரையும் அவமதித்தது; தேவர்கள் அனைவரும் யயாதியை மறந்து போனது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "மன்னன் யயாதி, தனது மகளை {மாதவியை} மீண்டும் சுயம்வரத்தில் கொடுக்க விரும்பி, மலர்மாலைகளால் மேனி அலங்கரிக்கப்பட்ட தனது மகள் மாதவியைத் தேரில் அழைத்துக் கொண்டு, கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஒரு துறவில்லத்திற்குச் {ஆசிரமத்திற்குச்} சென்றான். புரு, யது ஆகிய இருவரும் தங்கள் தங்கையைத் {மாதவியைத்} தொடர்ந்து அந்தப் புனிதமான ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த இடத்தில், நாகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோரும், மலைகள், மரங்கள் மற்றும் காடுகளில் வசிப்போரும், குறிப்பிட்ட மாகாணத்தின் பல மக்களும் அந்த இடத்தின் பரந்த சபையில் கூடினர்.


அந்தத் துறவில்லத்தைச் சுற்றி இருந்த காடுகள் அனைத்தும் பிரம்மனை ஒத்திருக்கும் எண்ணற்ற முனிவர்களால் நிறைந்தது. கணவனைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தபோது, அழகிய நிறம்படைத்த அந்தக் காரிகை {மாதவி}, அங்கே கூடியிருந்த மணமகன்கள் அனைவரையும் தாண்டிச் சென்று, காட்டையே தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தாள். தனது தேரில் இருந்து இறங்கி, தன் நண்பர்கள் அனைவரையும் வணங்கிய யயாதியின் மகள் மாதவி, எப்போதும் புனிதமாக இருக்கும் காட்டுக்குள் நுழைந்து, தவத் துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.

பல்வேறு வகையான உண்ணா நோன்புகள் வழியாகவும், அறச் சடங்குகள் மற்றும் கடும் நோன்புகளாலும் தனது உடலை மெலியச் செய்த அவள் {மாதவி}, மானின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டாள். வைடூரியத்தின் முளைகளுக்கு ஒப்பானவைகளும், மெலிதானவையும், பசுமை நிறம் கொண்டவையும், துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டவையும், மெதுவானவையுமான புற்களை உண்டும், இனிமையான, தூய்மையான, குளிர்ந்த, தெளிந்த, மிக மேன்மையான புனித மலைகளில் உள்ள ஓடைகளின் நீரைப் பருகி வாழ்ந்து, சிங்கங்களும், புலிகளுமற்ற காடுகளில் மான்களுடன் உலாவி, காட்டுத் தீயற்ற பாலைவனங்களிலும், அடர்த்தியான காடுகளிலும் அலைந்த அந்தக் கன்னிகை {மாதவி}, ஒரு காட்டு மானின் வாழ்வை மேற்கொண்டு, பிரம்மச்சரிய தவங்களைப் பயின்று, பெரும் அறத் தகுதிகளை ஈட்டினாள்.

(அதே வேளையில்), பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்த மன்னன் யயாதி, தனக்கு முன் இருந்த மன்னர்களின் நடைமுறைகளின் படி, காலத்தின் தாக்கத்திற்கு உட்பட்டான் {இறந்தான்}. மனிதர்களில் முதன்மையானவர்களான புரு மற்றும் யது ஆகிய அவனது இரு மகன்களின் சந்ததிகள் பல்கிப் பெருகின. அதன் விளைவாக அந்த நகுஷனின் மகன் {யயாதி}, இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் மரியாதையை வென்றான்.

ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, பெரும் முனிவரை ஒத்திருந்த மன்னன் யயாதி, சொர்க்கத்தில் வசித்து, பெரும் மதிப்புக்குரியவனாகி, அந்தப் பகுதிகளின் உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவித்தான். இப்படியே பெரும் மகிழ்ச்சியுடன் பல்லாயிரம் வருடங்கள் கடந்த பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் முனிவர்களுடனும், ஒப்பற்ற அரசமுனிகளுடன் மன்னன் யயாதி அமர்ந்திருந்த போது, மூடத்தனத்தாலும், அறியாமையாலும், செருக்காலும் தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரையும், மற்றும் மனிதர்கள் அனைவரையும் அவன் {யயாதி} அவமதித்தான்.

வலனைக் கொன்றவனும், தெய்வீகமானவனுமான சக்ரன் {இந்திரன்} உடனடியாக அவனது {யயாதியின்} இதயத்தைப் படித்துவிட்டான். அந்த அரச முனிகள் அவனிடம், "சீ, சீச்சீ" என்று சொன்னார்கள். நகுஷனின் மகனைக் {யயாதியைக்} கண்டவர்கள், "யார் இவன்? எந்த மன்னனின் மகன் இவன்? இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான்? எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான்? தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான்? இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான்? இவனை அறிந்தவர் யார்?" என்ற கேள்விகளைக் கேட்டனர்.

அந்த ஏகாதிபதியைக் {யயாதியைக்} குறித்து இவ்வாறு பேசிய அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மனிதர்களின் ஆட்சியாளனான யயாதியைக் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்டனர். நூற்றுக்கணக்கான தெய்வீகத் தேரோட்டிகளும், தேவலோகத்தின் நூற்றுக்கணக்கான வாயில்காப்போரும், சொர்க்கத்தின் இருக்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் என அனைவரும் இப்படிக் கேட்கப்பட்ட போது, "இவனை நாங்கள் அறியோம்" என்றே சொன்னார்கள். அவர்கள் அனைவரின் மனங்களும் தற்காலிகமாக மறைக்கப்பட்டது. அதனால் யாராலும் அந்த மன்னனை {யயாதியை} அடையாளம் காண முடியவில்லை. பிறகு அந்த மன்னன் விரைவில் தனது சிறப்புகள் அனைத்தையும் இழந்து தன் பிரகாசத்தைத் தொலைத்தான்" என்றார் {நாரதர்}.


Thursday, May 09, 2013

பூருவின் குல வரலாறு! - பகுதி 94

History of Puru's lineage! | Adi Parva - Section 94 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 30)

பதிவின் சுருக்கம் : பூருவின் குல வரலாறு; தன் வம்சத்திற்குத் தனது பெயரையே வைத்த பரதன்...

ஜனமேஜயன், "ஓ வழிபடத்தகுந்தவரே {வைசம்பாயனரே}!, பூருவின் வழித்தோன்றல்களான மன்னர்களின் வரலாறுகளைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். பெரும் வீரத்தைக் கொண்டு பெரும் சாதனைகளைச் செய்த அம்மன்னர்களை ஒவ்வொருவராக எனக்குச் சொல்வீராக.(1) பூருவின் பரம்பரையில் வந்த எந்த மன்னனும் நன்னடத்தையில்லாமலோ, வீரமற்றோ, புத்திரப்பேறு இல்லாமலோ இருந்ததாக நிச்சயமாக நான் கேள்விப்படவில்லை.(2) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! சிறந்த கல்வியும், சிறந்த சாதனைகளையும் கொண்ட அந்தப் புகழ்வாய்ந்த ஏகாதிபதிகளின் வரலாறுகளை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(3)

Thursday, May 02, 2013

இந்திரன் யயாதி பேச்சு! | ஆதிபர்வம் - பகுதி 87

The speech between Indra and Yayati! | Adi Parva - Section 87 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 23)

பதிவின் சுருக்கம் : தேவலோகத்தில் வெகுகாலம் வசித்த யயாதி; பூருவுக்குத் தான் சொன்ன நீதியை இந்திரனிடம் சொன்ன யயாதி...

வைசம்பாயனர் சொன்னார், "அந்த மன்னர்மன்னன் தேவலோகத்தில் தேவர்களின் இல்லத்தில் வசிக்கும்போது, தேவர்களாலும், சாத்யர்களாலும், மருத்துகளாலும், வசுக்களாலும் மதித்து நடத்தப்பட்டான்.(1) புனிதமானக் கடமைகளைச் செய்து, தனது மனத்தைத் தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அந்த ஏகாதிபதி {யயாதி} தேவலோகத்திலிருந்து, பிரம்மலோகத்திற்கு அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தான்.  அவன் தேவலோகத்தில் வெகு காலத்திற்கு வசித்ததாக நாம் கேள்விப்படுகிறோம்.(2) ஒருநாள் அந்த மன்னர்களில் சிறந்தவன் யயாதி, இந்திரனுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அந்த பூலோக அதிபதி {யயாதி}, இந்திரனால் பின்வருமாறு கேட்கப்பட்டான்.(3)

Wednesday, May 01, 2013

தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு! | ஆதிபர்வம் - பகுதி 85

The Son who obeys the father, shall be his heir! | Adi Parva - Section 85 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 21)

பதிவின் சுருக்கம் : பூருவிடம் இருந்து மீண்டும் முதுமையைப் பெற்றுக் கொண்ட யயாதி; பூருவை அரியணையில் அமர்த்த விரும்பிய யயாதி; பூருவின் பட்டமேற்பை ஏற்றுக் கொண்ட பிராமணர்களும் பிற வர்ணத்தாரும்...

வைசம்பாயனர் சொன்னார், "அந்தச் சிறந்த ஏகாதிபதியான நகுஷ மைந்தன் யயாதி, பூருவின் இளமையைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவு கொண்டான். அதன்பிறகு அவன் தனது சக்திக்கு உட்பட்ட இன்பங்களைக் காலத்திற்குத் தகுந்தவாறு அனுபவித்தான்.(1) எனவே, அவன் பெரும் இன்பத்தைப் பெற்றான். ஓ மன்னா {ஜனமேஜயா}! அறத்திற்கெதிரான எந்தச் செயலையும் அவன் செய்யவில்லை.(2) தேவர்களை வேள்விகளாலும், பித்ருக்களை தனது சிரார்தங்களாலும் மகிழ்வித்தான். ஏழ்மையானவர்களுக்கு உணவு கொடுத்து மகிழ்வித்தான், வைசியர்களைக் காத்து மகிழ்வித்தான், சூத்திரர்களை அன்பால் மகிழ்வித்தான். எல்லாக் குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனைகளைக் கொடுத்தான்.(3,4) யயாதி, குடிமக்களின் எல்லாப் பகுதிகளையும் மனநிறைவு கொள்ளச் செய்து அவர்களைக் காத்து மற்றுமொரு இந்திரனைப் போல இருந்தான்.(5)

Monday, April 29, 2013

யயாதியின் முதுமையை ஏற்ற பூரு! | ஆதிபர்வம் - பகுதி 84

Puru took the decrepitude of Yayati! | Adi Parva - Section 84 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 20)

பதிவின் சுருக்கம் : யயாதியின் மூப்பைப் பெற்றுக் கொள்ள மறுத்த முதல் நான்கு மகன்கள்; அந்த மகன்கள் நால்வரையும் சபித்த யயாதி; முதுமையை ஏற்றுக் கொண்ட பூரு...

வைசம்பாயனர் சொன்னார், "யயாதி முதுமையால் பலவீனமடைந்து தனது தலைநகருக்குச் சென்று, தனது மூத்த மகன் யதுவை அழைத்து,(1) "அன்புக் குழந்தாய்! உசானஸ் என்று அழைக்கப்படும் காவியரின் சாபத்தால், பலவீனமடைந்து, தோல் சுருக்கம் ஏற்பட்டு, தலை மயிர் வெண்மையாகி முதுமை என்னை ஆட்கொண்டது. ஆனால், நான் இன்னும் எனது இளமையின் இனிமையில் மனநிறைவுகொள்ளவில்லை.(2) எனவே, ஓ யதுவே! எனது பலவீனத்துடன் கூடிய முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயாக. உனது இளமையைக் கொண்டு நான் இன்பம் அனுபவிப்பேன்.(3) ஆயிரம் வருடங்கள் கடந்ததும், உனது இளமையை உனக்குத் திருப்பி அளித்து, எனது முதுமையையும் பலவீனத்தையும் பெற்றுக் கொள்கிறேன்" என்றான்.(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்